top of page

கண்மணி... என் கண்ணின் மணி -36-2

அத்தியாயம்: 36-2


/*


பிறை தேடும் இரவிலே உயிரே

எதை தேடி அலைகிறாய்

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

அன்பே நீ வா


இருளில் கண்ணீரும் எதற்கு..

மடியில் கண்மூட வா..

அழகே இந்த சோகம் எதற்கு..

நான் உன் தாயும் அல்லவா..



விழியின் அந்த தேடலும்

அலையும் உந்தன் நெஞ்சமும்

புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்


பிறை தேடும் இரவிலே உயிரே

எதை தேடி அலைகிறாய்

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

அன்பே நீ வா


*/



கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து… வேலன் தினகர் இருவருமாக உள்ளே வந்தவர்கள்… நட்ராஜைப் பார்த்து


“முதலாளி… மணி அக்கா உங்கள கூப்பிடுது போங்க…” என்றபடி


“சார் நீங்களும் தான் “ என்று தினகர் பார்த்திபனைப் பார்த்துச் சொல்ல… பார்த்திபனும் நட்ராஜும் அங்கிருந்து கிளம்பினர்…


அவர்களை கிளப்பி விட்டுவிட்டு… தன்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த… தினகரையும் வேலனையும் பார்த்த ரிஷி புரியாத பார்வையுடன்


“என்னடா நடக்குது… “ உரிமையான மிரட்டலுடன் அவர்களைக் கோபிக்க…


“சொல்றோம் அண்ணாத்த… அதுக்குள்ள அவசரப்பட்டா என்ன அர்த்தம்”


கேட்டபடியே… ரிஷியிடம் ஏதேதோ பேசி நேரத்தைக் கடத்தியபடி இருக்க… அப்போது… வேலன் அலைபேசியில் அழைப்பு ஒலி வந்து உடனேயும் நின்று போக..


“ஓகே தல… சிக்னல் வந்துருச்சு இப்போ போலாம் வாங்க” தினகர் ரிஷியை அழைத்தான்…


”எங்கடா… என்னங்கடா… சொல்லுங்கடா… சொல்லிட்டு எதுவா இருந்தாலும் பண்ணுங்கடா” புரியாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்த ரிஷியை இருவருமாக கையைப் பிடித்து இழுக்க… ஒரு கட்டத்தில் தனது கேள்விகளுக்கு இருவரிடமிருந்தும் பதில் கிடைக்காது என்பதை உணர்ந்தவனாக


“சரி சரி கையை விடுங்க… வர்றேன்….” என்ற ரிஷி கைகளை அவர்களிடமிருந்து விடுவித்தபடி… அவர்களோடு கூட நடந்தான்… அந்த அறை முன் வரும் வரை ரிஷியும் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி ஒன்றும் புரியாமல் வந்தான் தான்…


ஆனால் அறை வாசலில் நின்ற போது… கண்கள் அங்கிருந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பலகையில் இருந்த போது… அவனுக்கு தன்னை எதற்காக அழைத்தார்கள் என்பது தெரியாமல் போகுமா!!???…“மேனேஜிங் டைரெக்டர்” எழுத்துக்கள் தாங்கிய பலகை அவனைப் பார்த்து புன்னகைத்த போது…


அதைப்பார்த்த அந்த நொடியில் இருந்தே உணர்ச்சி வசப்படாமல் இருக்க தன்னை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்து இருந்தான் ரிஷிகேஷ் என்ற ’ஆர்கே’…


மனதில் உணர்வுகளை மறைத்து பழக ஆரம்பித்தவனுக்கு… இன்றும் அது சாதாரணமாக வந்திருக்க.. முகத்தை இயல்பாக வைத்தபடி உள்ளே போனான் ரிஷி …


அங்கு பார்த்திபனும்… நட்ராஜும் ரிஷியை வரவேற்க… கூடவே அந்த அலுவலகத்தின் இன்னும் முக்கியமான சில நபர்களும் இருக்க… கண்மணி மற்றும் ரித்விகா சற்று தள்ளி நின்றனர்…


ரிஷியுடன் கூடவே உள்ளே வந்த தினகரும் வேலனும் அங்கு இத்தனை வருடம் வேலை செய்த உரிமையிலும்… ரிஷியின் கூடவே இருந்த பெருமையுடனும் பேச ஆரம்பித்தன்ர்


”அண்ணாத்த… இனி நீங்க வெறும் ஆர்கே இல்லை… ஆர்கே இண்டஸ்ட்ரீஸ் மேனேஜிங் டைரக்டர்…” என்றபடி ஆராவரம் செய்ய… கூடியிருந்த அந்த சிறு கூட்டமும் ஆமோதிப்பாக கைதட்டி உற்சாகமாக ரிஷியை வாழ்த்த… ரித்விகாவைத்தான் கையில் பிடிக்க முடியவில்லை… அவளுக்கு தன் அண்ணனின் உயர்வில் அவ்வளவு ஆனந்தம்… உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள்…


ஆனால் கண்மணியோ!!! அந்த சந்தோஷத்தில் உற்சாகத்தில் எல்லாம் கலந்து கொள்ள வில்லை… ஆர்ப்பரிக்கவும் இல்லை… அமைதியாக நின்று கொண்டிருந்தாள்…

அவள் விழிகள் ரிஷியி என்பவனிடம் மட்டுமே… அவன் முக மாற்றங்களை… அவன் கண்கள் காட்டும் உணர்வுகளை மட்டுமே கண்மணி பார்த்துக்கொண்டிருக்க… கண்மணிக்கு நேர்மாறாக ரிஷியின் கண்களோ அனைவரையும் சுற்றி வந்தது… கண்மணி என்பவளைத் தவிர… அவள் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றாள் என்பது தெரிந்தும்.. உணர்ந்தும்


அதே போல அவனுக்கு தெரியாதா என்ன… இவை எல்லாமே கண்மணியின் ஏற்பாடு என்று… இருந்தும் கண்மணியின் பார்வையைத் தவிர்த்தான்… கண்டிப்பாக கண்மணியைப் பார்த்தால் உணர்ச்சி வசப்பட்டு விடுவோம் என்று கண்டிப்பாக அவனுக்குத் தெரியும்… தெரிந்தே அவளைத் தவிர்த்தான் ரிஷி


உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டதால்… பேச வார்த்தைகளின்றி அனைவரின் முன் அமைதியாக நின்றவனிடம்… நட்ராஜ்தான் அருகில் வந்தார்…


“ரிஷி… இது உனக்கான இடம்… உட்காருப்பா” என்று அங்கிருந்த நாற்காலியைக் காட்டி அமரச் சொல்ல… ரிஷி இப்போது மீண்டும் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான்… அந்த அறையின் வண்ணத்தில் இருந்து… மேஜை… நாற்காலி… அறை அமைக்கப்பட்ட அமைப்பு என… ஒவ்வொன்றும் அவனுக்கு பழகிய வகையில்… அதாவது… அவனது கண்மணி இல்லத்தை மாடியறை அமைப்பையே பிரதி எடுத்தது போல… அதே நேரம்… உயர் தரமாக வடிவமைக்கப்பட்டிருக்க… இப்போது கண்மணியைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை ரிஷியால்… அவனின் அந்த சில நொடி ஆழப்பார்வைக்கு அவனின் மனைவியும் அதே பதிலடி பார்வை கொடுக்காமல் இருப்பாளா.…


கண்மணியிடம் சரணடைந்தது சில நொடிகள் தான்…


தன்னிலை மீண்டு ரிஷி அனைவரையும் பார்த்து பேச ஆரம்பிக்கப் போக… கண்மணி இப்போது அவளாகவே அவன் முன் வந்து…


“ரிஷிக்கண்ணா… இது என்னோட கிஃப்ட்…“ கண்மணியின் குரலில் பெருமிதமும்… குதூகலமும் கூடவே குழந்தையின் துள்ளலும் மட்டுமே…


இங்கிருக்கும் அத்தனையுமே அவளது ஏற்பாடு… இதில் பரிசுப் பொருள் என்று தனியாக வேறா…. மனைவியை உரிமையோடு பார்த்தபடி புன்னகையுடன் கையை நீட்டினான் ரிஷி…


அவன் நீட்டிய கையில்… அவனுக்காகவே வாங்கி வந்த பேனாவைப் பரிசளித்தாள் அவள் மனைவி….


“தேங்க்ஸ்…” என்றபடியே அதைப் பெற்றுக் கொண்டவனிடம்… இப்போது பார்த்திபன் அவன் கையில் வைத்திருந்த காகிதங்களை நீட்டினான்… கையெழுத்து போடுமாறு… அதை வாங்கிய ரிஷி கையெழுத்துப் போட குனிய… அங்கிருந்த அத்தனை கண்களும்… ரிஷி அவன் மனைவி கண்மணி கொடுத்த பேனாவில் தான் மேனேஜிங் டேரக்டராக முதல் கையெழுத்து போடுவான் என்று எதிர்பார்க்க…


அவனோ…


கண்மணி கொடுத்த பேனாவைத் தன் சட்டைப் பையில் மாட்டியவன்… மேஜையில் இருந்த மற்றொரு பேனாவை எடுத்து கையெழுத்துப் போட ஆரம்பித்தான்…


ரிஷியின் இந்த செயலில்… அங்கிருந்த மற்ற அனைவருக்கும் சட்டென்று ஒரு மாதிரி ஆகி விட்டிருந்தது… ஆனால் கண்மணியின் முகமோ சிறிதளவு கூட மாறவில்லை… மாறாத அதே புன்னகையுடன் தன்னவனை கண்களில் பெருமிதத்தைத் தேக்கிப் பார்த்துக் கொண்டிருக்க… இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு ஜோடிக் கண்களும்… அங்கு நிம்மதியுடன் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தது…


அது வேறு யாருமல்ல… நட்ராஜ்… தன் மகளின் குதூகலத்தை… அவள் கண்களின் ஆனந்தத்தை… ரிஷியின் மனைவியாக அவள் பெருமிதத்தை… எல்லாம் நட்ராஜ் அமைதியாக பார்த்தபடி இருந்தார்…


தான் தொலைத்த தன் மகளை திரும்ப பார்க்கவே முடியாதோ என்ற நிராசையில் இருந்தவருக்கு… இதோ ரிஷி என்பவனால் பழைய கண்மணியாக அவள் மெது மெதுவாக மீண்டு வந்து கொண்டிருக்க… மகள் மருமகன் இருவரையும் உளம் நிறைந்த பூரிப்போடு இருவரையும் தன் மனக்கண்களில் உள்வாங்கிக் கொண்டிருந்தார்…


----

பார்த்திபன் காட்டிய அத்தனை இடங்களிலும் கையெழுத்து போட்டு ரிஷி நிமிர… ரித்விகா அவனை அழைத்தாள்….


“அண்ணா உனக்கு அடுத்த சர்ப்ரைஸ்… நீ எதிர்பார்க்காததது…” என்று கையில் இருந்த போனை எடுத்து யாருக்கோ அழைக்க…


ரிஷியோ … அங்கு நடந்து கொண்டிருந்தது அதிகப்படியாகத் தோன்ற


“ஹேய் என்னது இது…. என்ன ஆகிருச்சுன்னு ஆளாளுக்கு எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறீங்க…”


கண்மணி இப்போது…


“ரிஷி… உங்களுக்கு இதெல்லாம் சாதாரண விசயம் தான்… வெயிட்…கெஸ் பண்ணுங்க… யாரா இருக்கும்…”


கண்மணி கேட்டவுடன் புருவம் சுருங்க அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே…


“அம்மா… ஹாய்” என்ற அலைபேசியைப் பார்த்து பேசிய ரித்விகாவின் குரலில் திடுக்கிட்ட ரிஷி… ரித்விகாவைப் பார்க்கவும் இல்லை அவள் கையில் இருந்த அலைபேசியைப் பார்க்கவும் இல்லை… முதலில் பார்த்தது… தன் மனைவியைத்தான்… இவ்வளவு நேரம் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருந்தவனால்… அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை…


கண்மணியிடம் அவன் கண்கள் பல கதைகள் பேச… கண்மணி அவனை கண்களாலேயே சமாதானப்படுத்திக் கொண்டிருக்க… மற்றவர்களின் கவனமோ ரித்விகாவின் வீடியோ காலில் இருந்தது…


கண்மணி ரிஷியை அங்கு கவனிக்க சொல்லி சைகை காட்ட… இப்போது ரிஷியின் கவனம் ரித்விகாவிடம் … அவள் கையில் இருந்த அலைபேசியை நோக்கிச் சென்றது….


அதே போல கைகளைக் கட்டியபடி அங்கு நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தாலும்… கண்மணியின் கவனம் எல்லாம் ரிஷி என்ற ஒருவனிடத்தில் மட்டுமே குவிந்திருந்தது… இதற்கெல்லாம் ரிஷியின் உணர்வுகள் என்ன… என்பதை மட்டுமே அவளின் கண்கள் நகல் எடுத்துக் கொண்டிருந்தது….


“அம்மா… நாம இப்போ எங்க இருக்கோம்னு தெரியுமா…” என்ற ரித்விகா… வேகமாக அறைக்கு வெளியே சென்றவள்…


“மேனேஜிங் டேரக்டர்” போர்ட் பார்த்தீங்களா… இப்போ நாம பேசப் போறது யார்கிட்டேன்னா…. தொகுப்பாளர் பேசுவது போல பேச ஆரம்பித்தபடி… உள்ளே வந்தவள்…


“மிஸ்டர் ரிஷிகேஷ் தனசேகர்” என்று அங்கிருந்த மேஜையில் இருந்த பெயர் பலகையைக் காட்டியவள்…


“இப்போ ஆர்கே இண்டஸ்ட்ரீஸின் மேனேஜிங் டைரக்டர் மிஸ்டர் ரிஷிகேஷ் தனசேகர் கிட்ட மிஸஸ் லட்சுமி தனசேகர் பேசலாம்” என்றபடி தன் அண்ணனின் அருகில் வந்து அவனோடு சேர்ந்து நின்றவள்… ரிஷியிடம் பேசும்படி சொல்ல…


அலைபேசியில் இருந்த ரிஷியின் அன்னை லட்சுமியோ சந்தோஷத்தின் மொத்த குத்தகையாளர் ஆகி இருந்தார்… வார்த்தைகள் வரவில்லை அவருக்கு… கண்ணீர் மட்டுமே…


அதுவரை தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி நின்றவன்… தன் அன்னையை அவர் கண்ணீரைப் பார்த்தவுடன் அவனுக்கும் கண்கள் கலங்கி விட… இதுவரை தன் உணர்வுகளை அடக்கி வைத்திருந்தவனால் இப்போது முடியவில்லை…


“அம்மா” என்றபடி கண் கலங்க… ரிதன்யா இப்போது இடையில் வந்து ரிஷிக்கு வாழ்த்துக்கள் சொல்ல… ரிஷி தன்னைச் சமாளித்தபடி தன் தங்கையிடம் பேச ஆரம்பித்திருந்தான் இப்போது…


இலட்சுமியின் கண்கள் தன் மகளுடன் பேசிக் கொண்டிருந்த தன் மகனை மட்டுமே பார்த்தபடி இருந்தது… கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவனா இவன்… அந்த குழந்தைத்தனம் போனது கூட பெரிதில்லை… ஆனால் இந்த இருபத்து ஆறு வயதிலேயே… அந்த வயதுக்கு மீறிய தோற்றத்தினனாக ரிஷியின் முகம் முதிர்ந்திருக்க… தாயாக அவரது உள்ளம் துக்கம் கொண்டது


சின்ன விசயத்தைக் கூட அனுபவித்து ரசித்து… துள்ளல் போடும் மகன்… இன்று சிறு உதட்டுச் சுழிப்பில் அனைத்தையும் கடந்து விடுகிறானே…


இதோ இன்றும் அப்படியே… தனசேகர் என்னும் அணைக்குள் கட்டுண்டு கிடந்த தன் மகன்… அணை உடைந்த காட்டாற்று வெள்ளமாக ஓடிக் கொண்டிருக்கின்றானோ… நினைத்த போதே அவரது கண்களில் கண்ணீர் வெள்ளமாக பெருகியது…


அன்று தன் மகன் இந்த மாதிரி பொறுப்பாக ஆவானா என்று ஏங்கிய தாயின் மனம்… இன்று பெருமை கொண்டாலும்… மகனின் இந்த வளர்ச்சியை எல்லாம் பார்த்தும் முழுவதுமாக சந்தோஷமும் பட முடியவில்லை…


தன்னிடம் ரிஷி காட்டிக் கொள்ளாவிட்டாலும்… அவன் தன்னை எந்த அளவுக்கு வருத்திக் கொள்கிறான் என்று அவருக்குத் தெரியாதா என்ன?


தன் கணவன் மட்டும் இருந்திருந்தால் இவ்வளவு துன்பங்களை எல்லாம் தன் மகன் அனுபவித்திருக்க மாட்டான் என்று கணவனை நினைத்தும் மனம் சுணங்கியது…


இதற்கிடையே … ரிஷி ஓரளவு தன்னை சமாளித்து முகத்தை மாற்றினாலும்… அவன் முகம் முற்றிலுமாக மாறாமல் இருக்க… கண்மணி அதை உணர்ந்தவளாக வேகமாக ரிஷியின் அருகே வந்து…


“அத்தை உங்க ரிஷிக்கண்ணாவுக்கு இது ஆரம்பம் தான்… அவர் இதுக்கும் மேல பெரிய இடத்துக்குப் போவார்… அப்போ நீங்க அவர் பக்கத்துல இருந்து வாழ்த்து சொல்வீங்க… சீக்கிரம் நடக்கும் பாருங்க…” என்றவள் ரிஷியின் முகத்தைப் பார்த்து…


“கொஞ்சம் சிரிங்க” என்று கைஜாடை காட்டியபடி… அவனையும் பேசச் சொல்ல…


கண்மணியின் வார்த்தைகளில் இருந்த மற்றதை எல்லாம் விட்டு விட்டு… இலட்சுமி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்ற வார்த்தைகளை மட்டும் பிடித்துக் கொண்டவனாக


“ஆமாம்மா…” என்று மட்டும் ரிஷி சொல்ல… இலட்சுமியும் இப்போது அனைத்தையும் மறந்து மகனின் வெற்றியை மட்டுமே நினைத்து முகம் மலர்ந்து பேச ஆரம்பிக்க… ரிஷியின் முகமுன் இப்போது புன்னகையைப் பூச ஆரம்பிக்க… கண்மணியும் இப்போது நிம்மதி ஆனபடி… அவனை விட்டு விலகி மீண்டும் தன் பழைய இடத்திலேயே வந்து நின்றும் கொண்டாள்…


சில நிமிடத்தில் தாயிடம் பேசி முடித்துவிட்டு அழைப்பை துண்டித்த ரிஷி… அந்த மேசையில் இருந்த ‘ரிஷிகேஷ் தனசேகர்’ என்ற பெயர் பலைகயை எடுத்தான்… அதையே சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்தவன்


“ரிஷிகேஷ் தனசேகர்” சத்தமாகவே படித்துப் பார்த்தவன்… இப்போது நட்ராஜை மட்டுமே பார்த்தான்… அதன் பின் அங்கிருந்த அனைவரையும் பார்த்தவன்… அனைவர் முன்னிலையிலும் பேச ஆரம்பித்தான்


“தனசேகர் என்னோட அப்பா… இன்னைக்கு உயிரோட இல்லை… ” என்றவன் கண்கள் சில நொடிகள் தனசேகர் மறைந்த அன்றைய தினத்துக்கு நொடியில் பயணித்து மீள… அன்றைய துக்கம் அவன் முகத்தில் இன்றும் அப்பட்டமாக தெரிந்தது…


தன் துக்கத்தை அடக்கியபடி…. ரிஷி பேச ஆரம்பித்தான்…


“தனசேகர்… அந்த ஒரு மனுசன் போன பின்னால் ரிஷின்ற ஒருத்தனுக்கு எல்லாமே போய்ருச்சுனு கூட சொல்லலாம்… கிட்டத்தட்ட அனாதைனு கூட வச்சுக்கலாம்… ஹ்ம்ம்.. என் அம்மா கூட என்னை வெறுத்து தள்ளி வச்சுட்டாங்க… உலகமே என்னைத் தள்ளி வச்சுட்ட மாதிரி… தனியாளா நின்ன மாதிரி ஃபீல்.. அப்போ எனக்காக ஒருத்தர்… தெரியலை என் அப்பாவே எனக்காக அனுப்பினாரான்னு கூட தெரியலை… நட்ராஜ் சார்… எனக்கு என் அப்பாக்கு அப்புறம் எல்லாமா இருக்கிறவர்… யாருமே என்னை நம்பாதப்போ… அம்மாகூட நம்பாத ஒருத்தனை… நம்புனது இவர்தான்… அவர் இல்லைனா நான் இன்னைக்கு இங்க இல்லை… என்னை நான் நம்புற அளவை விட இவர் என் மேல வச்சுருக்க நம்பிக்கை தான் அதிகம்” என்று தழுதழுத்தவின் குரலில்… நட்ராஜ்… அருகில் போய் ஆதுரமாக தட்டிக் கொடுக்க…


“ப்ச்ச்… சார் நான் ஓகே தான்… என்னை பேச விடுங்க “ என்றவன்… அவரைப் பார்த்து


“இந்த சோ கால்ட்ட் போஸ்ட் லாம் நான் உங்ககிட்ட என்னைக்குமே எதிர்பார்த்தது இல்லை சார்… என்னைக்குமே எதிர்பார்க்க மாட்டேன்… எப்போதுமே நான் உங்க ரிஷிதான் சார்…” என்றவனிடம்…


“ரிஷி… எனக்கு உன்னைப் பற்றி தெரியாதா… ஆர்கே இண்டஸ்ட்ரீஸ் ஃபார்மா ஆரம்பிக்கும் போதே இதை உன் பேருக்கு மாற்ற சொன்னேன்… மணி தான்… ரிஷியோட இலட்சியம் வேறப்பா… அவருக்கு இங்க போஸ்டிங் மாதிரி கொடுங்க… அதுவும் கூட அவர் ஏதாவது பெருசா பண்ணும் போது… அவருக்கு கொடுக்கனும்… அப்போதான் அவருக்கும் பெருமை… பார்க்கிறவங்களுக்கும் அவர் யார்னு தெரியும்னு… சொன்னுச்சு… இந்த பல்க் ஆர்டர் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடியும் போது அதே மாதிரி பண்ணியாச்சு… இதெல்லாம் உனக்கு ஏற்கனவே பண்ணியிருக்கனும்” என்று சொல்ல…


”தல செண்டிமெண்டா பேசிச்சுன்னு பார்த்தா… அடுத்து முதலாளியும் ஆரம்பிச்சுட்டாரு” என்று வேலன் சத்தமாகச் சொல்ல


அதைக் கேட்ட ரிஷி அவனையும் மீறி சன்னச் சிரிப்பு சிரிக்க...


“ஹான்… அதேதான்… ஹப்பா… இந்த ஃபாதர் இன் லா.. சன் இன் லா… லா லா லவ்… தாங்க முடியல” என்று ரித்விகாவும் கண்மணியின் காதுக்குள் கிசுகிசுத்தபடி… கண்மணியைப் பார்க்க…


கண்மணியிடமிருந்தோ பதில் வரவில்லை… அவள் கவனம் எல்லாம் ரித்விகாவிடம் இருந்தால் தானே… பதில் வருவதற்கு…


“அடக்கடவுளே இவங்க அதை விட.. எங்க அண்ணா மில்லி மீட்டர் சிரிச்சா… உலக அதிசயம் மாதிரி இவங்க மெய்மறந்துருவாங்க…” தனக்குள் சொல்லிக் கொள்ளத்தான் முடிந்தது ரித்விகாவால்


வேலன் சொன்னவுடனே… நட்ராஜும் அமைதியாகி விட ரிஷி இப்போது…


”டேய் ரொம்ப கலாய்க்காதீங்கடா… அவரே எப்போதாவது தான் பேசுவார்… நீங்க இப்படி ஓட்டினா…” என்று தன் முதலாளிக்காக பேச ஆரம்பித்தவன்… சட்டென்று


“அப்புறம்… நட்ராஜ் எனக்கு எப்படியோ… அதே மாதிரி என்னோட லைஃப்ல முக்கியமானவங்க… வேலனும் தினாவும்” என்று நிறுத்த…


வேலனும் தினகரும் இதை எதிர்பார்க்கவில்லை போல… அதுவரை தங்களுக்கு பேசி அனைவைரையும் ஓட்டிக் கொண்டிருந்தவர்கள்… சட்டென்று அமைதியாகி விட… அவர்களைப் பார்த்து புன்னகைத்தவன்…


“என்னடா அமைதி ஆகிட்டீங்க… உண்மையத்தான் சொல்றேன்… என்னைலாம் இந்த உலகத்துல மனுசனா கூட யாரும் மதிக்கலை… லைக்… என் அப்பா அம்மாவைப் பொறுத்தவரை… நான் குழந்தை… என்னைச் சுத்தி இருக்கிறவங்கள என்னை பிடிச்சிருந்துச்சுன்னா… நான் ஜாலியான ஒரு பையன்… அதே பிடிக்காதவங்கன்னா… பொறுப்பில்லாத பையன்… இப்படித்தான் என்னைப் பற்றின பார்வை.. அதெல்லாம் நான் கண்டுக்கிட்டது இல்ல…”


என்று தோளைக் குலுக்கியவன்…


“அப்படிப்பட்ட என்னையும் ஒரு ஹீரோவா பார்த்தீங்கன்னா… அது நீங்க ரெண்டு பேர் மட்டும் தாண்டா… நம்மளையும் ரெண்டு பேர் ஹீரோ வொர்ஷிப் பண்றாங்க… அவங்களுக்காகவது நாம ஒழுங்கா நடக்கனும்னு… என்னோட ஆக்டிவிட்டீஸ்லாம் பார்த்து பார்த்து நடப்பேன்… நான் யார்க்கும் பயந்தது கிடையாது,… உங்களுக்காகத்தாண்டா நான் பயந்ததே…” என்று பொய்யான நக்கலுடன் சொன்னவன்…


“சாரி ஜோக்ஸ் லாம் விட்டுட்டு பார்த்தா … உங்க கூட இருக்கு போது நான் உங்க மொக்க டிஸ்கஷன்ல எல்லாம் கலந்துக்க மாட்டேன் தான்… சிரிக்க மாட்டேன் தான்… ஆனா அதை ரசிப்பேண்டா… ” என்ற போதே


“அண்ணாத்த… இப்போனாச்சும் சொன்னியே…” என்று தினா சொல்ல


வேலனோ…


“அதுக்கெல்லாம் காரணம் மணி அக்கா தான்… உங்க கிட்ட வேலைக்கு சேர்றதுக்கு முன்னாலேயே… நீங்க ஒரு டெர்ரஸ் பீஸ் அப்படி இப்படினு சொல்லி… அவர்கிட்ட ஒழுங்கா வேலை கத்துக்கங்க… அவர ஃபாலோ பண்ணுனீங்கன்னாலே… அவர் சொல்றதை கேட்டாலே.. நீங்களும் முன்னேறி வந்துருவீங்கன்னு சொல்லித்தானே வேலைக்கே சேர்த்து விட்டாங்க” என்று சொல்ல…


கண்மணியை அத்தனை பேரும் பார்க்க…


கண்மணி அதற்கு பதில் சொல்ல வில்லை… மாறாக ரிஷி புன்னகையுடன்


“அவ ஏன் அப்படி சொன்னான்னு தெரியுமா?… உங்க வயசுல இந்த மாதிரி பொறுப்பில்லாம இருந்தா என்ன நிலைமை ஆகும்னு அவளுக்கு தெரியும்.. அதுக்கு நடமாடும் மாடலா நான் இருந்தேனே… சோ உங்கள என்கிட்ட விட்டா… கண்டிப்பா நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துருவேன்னு நினச்சுருப்பா… ஆனா உங்ககிட்ட என்னைப் பற்றி ஓபனா சொல்ல முடியுமா… அதுதான் எனக்கு கொஞ்சம் பில்டப் கொடுத்து சொல்லிருப்பா… நீங்களும் நம்பிட்டீங்க..” ரிஷி கண் சிமிட்டி சொல்ல…


வேலன் ஆவென்று பார்க்க… தினகர் இப்போது…


“ஓ அப்படியா விசயம்…. அப்போ நாங்கதான் ஏமாந்திட்டோமா” பொய்யான கவலைத் தொணியில் சொன்னவன்…


”அண்ணாத்த அதுல மட்டும் இல்லை… உங்களப்பத்தின இன்னொரு விசயத்துலயும் நாங்க மணி அக்காவை நம்பி ஏமாந்துட்டோம்” என்று முகத்தைப் பாவமாக வைத்தபடி சொல்ல


ரிஷியும் கண்மணியும் தங்களுக்குள்ளே புரியாத பாவனையை பறிமாறியபடி பார்த்துக் கொண்டனர்…


இப்போது வேலன் தொடர்ந்தான்…


“ஆர் கே அண்ணாத்த மணி அக்காவை மேரேஜ் பண்றதுக்கு முன்னால… 12 மணி நேரம் ஃபேக்டரியிலயே குடித்தனம் நடத்துவாரு… அவர் மணி அக்காவை மேரேஜ் பண்ணப் போறேன்னு சொன்னப்போ…. நானும் வேலனும் அவ்ளோ சந்தோசப் பட்டோம்… ஹப்பா… இனி மனுசன் கொஞ்சம் ஃப்ரீ ஆவார்னு… ஆனால்” என்ற போதே…


ரிஷிக்குப் புரிந்து விட்டது அடுத்து அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது… அவனை எப்படி நிறுத்துவது என்று ரிஷி புரியாமல் விழிக்க…


“ஆமாடா… அவர் அம்மா தங்கைனு லாக் ஆகி இருந்தார்… இப்போ அவர் ஃப்ரீ ஆகி… அவரோட ஃபுல் கான்செண்ட்ரேஷன் எல்லாம் பிஸ்னஸ் ல மட்டுமே.. இதுல நீ என்ன ஏமாந்த… நான் என்ன ஏமாத்திட்டேன்” கண்மணி அவனிடம் விடாமல் பேசினாள்… கண்மணியின் குரல் வழக்கம் போல உயர்ந்திருக்க


ரிஷி அவளை அமைதியாக இருக்கும் படி சொன்னவன்


“கண்மணி… அவனுங்க… அந்த ஃப்ரீய சொல்லலம்மா… பனிரெண்டு மணி நேரம் ஆஃபிஸ்ல இருந்த நான்… இப்போ மொத்தமா ஆஃபிஸ்ல குடித்தனம் பண்றேனாம்… அதைச் சொல்றாங்களாம்… அவங்க நம்மள கிண்டல் பண்றாங்களாம்… 24 ஹவர்ஸ் இங்கேயே இருக்கேனாம்… நான் என்ன பண்றேன் இவனுங்க சொன்ன மாதிரி 24x7 ஹவர்ஸ் இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் டூயூட்டிக்கு ஆர்டர் போட்றேன்… நீ முதலாளியா கன்சிடர் பண்ணும்மா” என்று மனைவியோடு சேர்ந்து தினகரையும் வேலனையும் கிண்டல் செய்ய…


”டேய் என்னங்கடா நடக்குது இங்க…. “ என்ற ரீதியில் தினகரும் வேலனும் திருதிருவென்று விழிக்க… பார்த்திபன் கூட இப்போது சிரித்து விட்டான்…


அலுவலக தோரணையோடு ஆரம்பித்த நிகழ்வு…. முடியும் போது குடும்பத்தினர் வீட்டு நிகழ்ச்சி போல முடிந்ததை பார்த்திபனால் உணர்ந்து கொள்ள முடிந்தது…


ஏனோ… ரிஷி, நட்ராஜ்,தினகர், வேலன் இவர்களுக்கு இடையே நுழைய முடியாமல் பார்த்திபன் அமைதியாக நின்றிருந்தான்…


ரித்விகா அவளது மொபைலில் மூழ்கி விட… கண்மணி என்ன நினைத்தாளோ பார்த்திபன் தனியே நின்றிருக்க… அவனருகில் வந்தவள்… பொதுப்படையாக பேச ஆரம்பிக்க…


பேசிக் கொண்டிருந்த பார்த்திபன் ஒரு கட்டத்தில்… மற்ற நால்வரையும் பார்த்தபடி… அவளிடம்…


“அர்ஜூன் இந்த அளவுக்கு இறங்க மாட்டான்னு அவன விட்டு விலகிட்டியா கண்மணி” கேட்க


கண்மணி இந்தக் கேள்வியை அவனிடம் எதிர்பார்க்கவில்லையோ என்னவோ??… திடுக்கிட்டு பார்த்திபனைப் பார்த்தாள் தான்…


இருந்தும் தன்னைச் சமாளித்து கொண்டவளாக… பார்த்திபனைக் கூடப் பார்க்காமல்… ரிஷியைத் தான் இருந்த இடத்திலேயே இருந்து பார்த்தபடி பார்த்திபனுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தாள்


“உங்களுக்கு அப்படி தோணுதா என்ன… ” இப்போது பார்த்திபனைப் பார்த்தாள்


“ஆனால் வந்ததுலருந்து உங்க பார்வை அப்படி சொல்லலையே பார்த்திபன் சார்… அந்த அர்ஜூனை விட இவன் என்ன பெரிய ஆளா என்ன… அப்படீன்ற மாதிரியேதானே இருந்துச்சு… யெஸ்… எனக்காக அர்ஜுன் எந்த அளவுக்கும் இறங்கி வர தயாரா இருந்தார்… என் அப்பா விசயத்தை தவிர…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே… ரித்விகா வர… அமைதி ஆனாள் கண்மணி


“அண்ணி… இந்த போட்டோவை உங்க வாட்சப் ப்ரொஃபைலா வைக்கவா…” என்றவளை கண்மணி முறைக்க…


“சரி வைக்கல… நான் அண்ணா மொபைல்ல வைக்கப் போறேன்…” என்று அவளை விட்டு கடந்தவள்… மீண்டும் திரும்பி


“உங்க போட்டோவை வைக்கல தாயே… நானும் எங்க அண்ணனும் மட்டும் இருக்கிற போட்டோவைத்தான் வைக்கப் போறேன்… முறைக்காதீங்க “ என்று போய்விட…


“ஏய்… உங்க அண்ணன் திட்டப் போறாரு” என்று கண்மணியும் அவள் பின்னாலேயே போய் விட


பார்த்திபன் யோசனையுடன் தான் இருந்தான் இப்போதும்… கண்மணி-ரிஷியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு கணித்திருந்தது இப்போதும் மாறவில்லை தான்… ஆனால் இன்று நேரடியாக இருவரையும் பார்த்த பின் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தோன்றியது பார்த்திபனுக்கு… ரிஷிக்கு கண்மணி என்பவள் எப்படியோ… ஆனால் கண்மணிக்கு ரிஷி என்பவன் மிகவும் முக்கியமானவன் என்பதுதான் அது…

2,526 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page