top of page

கண்மணி... என் கண்ணின் மணி -35-3

Updated: May 25, 2021

அத்தியாயம்: 35-3


/*


அன்பே அன்பே அன்பே

உன் துக்கத்தை விட்டு விண்ணை தொட்டு

உன் பேரை நிலவில் வெட்டு


நான் சொல்லும் சொல்லை கேளாய்

நாளைக்கு நீயே வெல்வாய்


கலங்காதே மயங்காதே

உன் கனவுக்கு துணை இருப்பேன் இந்த பூமி உடைந்தாலும்

உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்


ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

*/



கண்மணியின் எண்ணமெங்கும்… மீண்டும் ரிஷி அழைக்கும் போது… அவனிடம் என்ன பேசுவது… எதைக் கேட்பது…



‘என்னிடம் இன்னும் என்னவெல்லாம் மறைத்து வைத்திருக்கின்றாய் என்றா…’



’அன்றே சொன்னானே… உனக்குத் தேவையான விசயங்களைச் சொல்லி விட்டேன் என்று’



தேவையான விசயங்கள் என்று அவனே பிரித்து சொல்லி முடித்து விட்டான்… அதற்கு மேலும் அவனிடம் கேட்பது முறையாகுமா… யோசித்தபடியே கடலைப் பார்த்தபடி கடல் அலைகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ….



யோசனையோடு அலைபாய்ந்து கொண்டிருந்த கண்மணியின் கண்களின் மணிகளில் கடல் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க… மனதிலோ அவளவனின் எண்ணங்கள் மட்டுமே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது



பெண் மனம் மட்டும் தான் ஆழ்கடலா… இல்லை என்று சொல்கின்றதே இதோ தன்னவனின் மனம்…



“தன் தந்தையைப் பற்றி அறிந்தும்… இந்த அளவுக்கு இன்னும் பாசம் வைத்திருப்பானா… தந்தை எனும் போதே ரிஷியின் முகமும்… கண்களும்… காட்டும் உணர்வுகள்… என் அப்பா போல என் குடும்பத்தைக் காக்க வேண்டும்… இது அவன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்… இப்படிப்பட்ட அப்பாவுக்காகவா… ஒன்றுமே புரியவில்லை…



ரிஷியின் மாற்றம்…. அவன் தந்தைக்கு அவர் பங்குதாரர்களால் நேர்ந்த ஏமாற்றத்தினால் மட்டுமா… யோசிக்க யோசிக்க ‘இல்லை’ என்று இப்போது தோன்றியது…



யாரிடமே காட்ட முடியாத சொல்ல முடியாத வேதனை ஏதோ ஒன்று அவன் அடிமனதின் அடி ஆழத்தில் இருக்கின்றது… இப்போது கண்மணிக்கு புரிந்தது… அதே நேரம் யாருக்குமே தெரியாமல் தனக்குள்ளேயே அதைப் புதைக்க எண்ணுகிறான் என்பதும் புரியாமல் இல்லை…



யோசித்தபடியே இருந்தவள்… தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள்…



“ரிஷியிடம் எதையும் கேட்க கூடாது… அவனாகச் சொன்னால் கேட்டுக் கொள்வோம்… ” என்பதை…



அதேநேரம் தனது மாமனார் தனசேகரையும் அவளால் சிறிதளவு கூட தவறாக நினைக்கத் தோன்றவில்லை… காரணம் இல்லாமலும் இல்லை ரிஷியின் குடும்பத்தோடு இருந்த இத்தனை நாட்களில்… தனசேகர் இறந்த போதிலும்… அவருடைய நினைவுகளை… அவருடைய வார்த்தைகளை மனைவியாக… மகளாக… மகனாக… அந்தக் குடும்பம் பகிரும் போது… கண்மணிக்கு தனசேகர் மேல் மரியாதை தானாகவே வந்திருக்க… அது ஏனோ இப்போதும் மாறவில்லை…


அதற்கு ரிஷியும் ஒரு காரணமாக இருந்தான் என்று தோன்றியது..


ஒரு வேளை… தன் குடும்பத்தின் முன் தந்தையைப் பிடிப்பது போல நடிக்கிறானோ… எங்கோ இடிப்பது போல இருந்தது… மீண்டும் யோசனைக்குப் போனவளை யோசிக்க விடாமல்… அலைபேசியின் அழைப்பு மீண்டும்… வேறு யாரிடமிருந்து…. ரிஷியிடமிருந்து தான்….



இப்போது… கண்மணி யோசனையை எல்லாம் விட்டுவிட்டு… உடனே எடுக்க…



“என்னம்மா… கால் வந்தது… உடனே கட் பண்ணிட்ட… நான் பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கிற… இந்த டைம் கால் பண்ண மாட்டியே… அம்மா எங்க… ரிது ரித்வி எங்க… யாருக்கும் ஒண்ணும் இல்லையே” படபட வென்று ரிஷியிடமிருந்து வார்த்தைகள் வந்தது…



எதுவானாலும் அவன் முதல் கவலை… அவன் குடும்பம் மட்டுமே … இப்போதும் அது வெளிப்பட



அப்போதுதான் தன் தவறை உணர்ந்தவளாக…



“ப்ச்ச்… ரிஷி… நீங்க பதட்டப்படும் அளவுக்கு ஒண்ணுமில்ல… சும்மாத்தான் போன் பண்ணினேன்… ” என்றவளுக்கு அப்போதுதான் ரிஷியின் குரல் மாற்றம் புரிய…



“ஏன் டல்லா பேசுறீங்க…”


“இல்லையே… நான் நார்மலாத்தான் பேசுறேன்…” என்று அவன் குரலைச் சரிப்படுத்திக் கொண்டு…. சொல்ல



அவன் சொன்ன விதமே தன்னைக் கண்டு கொண்டுவிட்டாள் என்று தெரிந்துகொண்டு வேண்டுமென்றே உற்சாகமாகப் பேசுவது போல குரல் உயர்ந்தது போலத் தெரிந்தது…



கண்மணிக்கா தெரியாமல் போகும்….


“சரி விடுங்க… இங்க இருந்து உங்க ஊருக்கு வர… 5 ஹவர்ஸ் ஆகுமா என்ன…” மிரட்டும் தொணியில் கண்மணி கேட்க



அவளின் மிரட்டலை ரசித்து…. சிரித்தவன்…



“ரவுடி… நீ வந்தாலும் வருவ…”





“அவ்ளோலாம் உன் சொர்ணாக்கா வேலைய காட்ட வேண்டாம்… வீடியோ கால் வா… ஜஸ்ட் செகண்ட் தான்… ”



“5 மினிட்ஸ்” என்றபடி…. தோதான இடம் பார்த்து அமர்ந்தவள்… மீண்டும் அவளாகவே கால் செய்ய…



எடுத்தவன்… அவனையும் மீறி அவளை ஆராய்ந்தான்…



உண்மையிலேயே கண்மணிதான் மிகவும் சோர்வாகத் தெரிந்தாள்… காலையில் வீட்டை விட்டு கிளம்பியவள் பின் எப்படி இருப்பாள்… அவளைப் பார்த்தபடியே



“நான் டல்லா பேசுறேனா… கொஞ்சம் கேமராவை உன் பக்கம் திருப்பி பாரு… நீ தான் டல்லா இருக்க… ஏன்” அக்கறை என்ற வார்த்தை இப்போது ரிஷியின் முறையாக இருக்க…



“சும்மா… டையர்ட் தான்… வீட்டுக்கு போய் ரெஃப்ரெஷ் பண்ணேன்னா சரி ஆகிருவேன்… ப்ச்ச்… அதுவா முக்கியம்… நீங்க… சொல்லுங்க…” என்றபோதே…



அவளிடம் தன் வலது கையை உயர்த்திக் காட்ட… அதில் கட்டுப் போடப்பட்டிருந்தது…



அதைப்பார்த்த கண்மணியின் முகம் இப்போது முற்றிலும் மாறி இருக்க…. அவள் முகம் போன விதத்தில்



”ஒண்ணுமில்லம்மா.. நீ இவ்ளோ ஃபீல் பண்றதுக்கு… இப்போதான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தேன்… உன்னை மாதிரி ரஃப் டைப் ஃபர்ஸ்ட் எயிட்லாம் இல்லை… எவ்ளோ அன்பா ஃபர்ஸ்ட் எயிட் பண்ணாங்க தெரியுமா… அந்த நர்ஸ்” ரிஷி வேண்டுமென்றே அவளிடம் வம்பிழுக்க…



அவள் பேசாமல் அவனையே பார்த்தவள்…



“என்னாச்சு இதுவரை கண்மணியின் குரலில் இந்த மாதிரி ரிஷி உணர்ந்ததில்லை… …” அவள் கேட்ட விதமே ரிஷிக்கு வலியெல்லாம் மறந்தது போல் இருந்தது…


“பயப்படுகிற மாதிரிலாம் இல்ல கண்மணி… அன்னைக்கு மாதிரியேதான்… என் மேல எனக்கே கோபம் வருகிற மாதிரி… “ என்று சொல்லாமல் நிறுத்தி விட…


முறைத்தவள்…



“இன்னைக்கு என்ன… டேபிளா… பைக் கண்ணாடியா” கண்மணியின் குரலில் வழக்கமான அதிகாரம் வந்திருக்க…



”இன்னைக்கு சம்பவம் கொஞ்சம் பெருசு… சோ முகம் பார்க்கிற கண்ணாடி” அவன் சிரித்தான் தான்… இவள் தான் வலியோடு பார்த்தாள்…



மௌனம் மட்டுமே அங்கு ஆட்சி செய்ய… அதை முதலில் உடைத்தவனாக



“சரி சொல்லுங்க மேடம்… எதுக்காக கால் பண்ணுனீங்க…” என்று ரிஷிதான் ஆரம்பித்தான்… ஆரம்பித்தவன்…



“ஹேய் நான் சொல்லவா… உனக்கு டெலிபதி சொன்னுச்சு… நான் கஷ்டப்படுறேன்னு… அப்படின்னுதானே சொல்லப் போற…” ரிஷி கண் சிமிட்டிக் கேட்க



இமைக்காமல் பார்த்தவள்… பதில் சொல்லாமல் வைத்து விட்டாள்… அவளையுமறியாமல் ஏதாவது கேட்டு விடுவோமோ என்ற பதட்டத்தில்…



ரிஷி மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டே இருக்க… எடுக்கவே இல்லை கண்மணி… தயங்கினாள்… பயந்தாள்… அர்ஜூன் அவளிடம் சொன்ன தகவல்களை எல்லாம் கேட்டு விடுவோமோ என்று….



அதனாலேயே ரிஷியிடம் வந்த அழைப்புகளை எல்லாம் பார்த்தபடியே இருக்க… ஒரு கட்டத்தில்… அவனோடு பேச முடியாமல்… அதே நேரம் அவனின் இடை விடாத அழைப்புகளை நிறுத்த வேண்டும் என்று யோசித்தவள்



கேட்க ஆயிரம் இருந்தும்… வாய் வார்த்தையாக அவனிடம் கேட்க முடியாமல் அவனுக்கு பாடல் வரிகளை மட்டும் அனுப்பி வைத்தாள்…


/* உதிரா உதிரா

வினவல் கோடி என்னில்

உதிரா உதிரா

விடைகள் யாவும் உன்னில் */




ரிஷி உடனடியாக மீண்டும் மெசேஜ் அடித்தான்…



“போனை எடு கண்மணி… நான் அங்க வர்றதுக்கும் அதே 5 ஹவர்ஸ்தான்”



அவன் மனைவி மிரட்டிய அதே வார்த்தைகளைப் போட… எடுபடபடவில்லை….



கண்மணி எடுக்கவில்லை அப்போதும்



“ஏய்… ஒழுங்கா போனை எடுடி… கை வேற வலிக்குது... டைப் பண்ண முடியல… ”



இப்போது வேறு வழி இல்லாமல் இவளாகவே மீண்டும் போன் செய்ய…



போனை எடுக்காததால் கோபமாகப் பேசுவான் என்றுதான் கண்மணி எதிர்பார்த்திருந்தாள்…



ஆனால் அவனோ..


“மேடம் உங்களுக்கில்லாத தகுதி வேறு யாருக்கு வரும்… அதுவும் டீச்சர் மேடம் வேற… கேள்வி கேட்க ஃபுல் ரைட்ஸ் இருக்கே…” சொன்னவன் சிரித்தபடியே….



“விடை தானே … சொல்லிறலாம்.. “ என்று இழுத்தபடியே



”அது சரி… மேடம் சாங்க எங்க பிடிச்சீங்க… சாங்க் நாலு வரி கேட்டுட்டு அனுப்பக் கூடாதுங்க மேடம்… ”



கண்மணி புரியாமல்…



”சாங்க் பைட்ஸ் கேட்டேன்… அனுப்பிட்டேன்” என்றாள் குழந்தைப் பாவத்தில்


“ஒகே… அதை விடு… திடீர்னு… என்ன… என்ன என்கிட்ட கேள்வி இருக்கு உன்கிட்ட” கிண்டல் தொணி மறைந்து ரிஷியின் குரலில் மாற்றம் வர… சுதாரித்தவளாக…



“சும்மா… சாங்க் நல்லா இருந்துச்சு… நல்லா இருக்கா நல்லா இல்லையா… ஏன் அனுப்பக் கூடாதா “ கண்மணியின் குரலில் நயனம் அவளறியாமலேயே வர…



ரிஷியோ இங்கு புருவம் சுருக்கினான்… தெரிந்து இந்தப் பாடலை அனுப்பி இருக்கிறாளா.. இல்லையா என்று…



ஒன்று மட்டும் புரிந்தது… கண்டிப்பாக முழுப்பாடலும் தெரியாமல்தான் அனுப்பி இருக்கிறாள் என்று…



அதே நேரம்… என்னை பற்றி திடீரென்று ஏன் இவளுக்கு இப்படி ஒரு ஆராய்ச்சி… என்ன கேள்விகள் … இவளுக்கு…



நெற்றிச் சுருக்கம் ரிஷியின் யோசனையின் தீவிரம் சொல்ல… மௌனித்தான் ரிஷி



கண்மணியோ…



“உங்களுக்கு யாரை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்…” சம்பந்தமில்லாமல் ரிஷியிடம் கேட்க



யோசனையை விட்டுவிட்டு…



“ஏன்” ரிஷியின் குரல் ஒலிக்க…



“பதில்…” கண்மணி அதட்டிய அதட்டலில்…



“நீன்னு வச்சுக்க…”



“உண்மை கேட்டேன் ரிஷிக்கண்ணா…”



நொடிக்கும் குறைவான அழகான மென்னகை புரிந்தான் ரிஷி… மனம் விட்டு…



ஆனால் அடுத்த நொடியே… அந்தக் குரலில் அப்படி ஒரு இறுக்கம்….



“என் அப்பா…”



“அப்போ இனி… இந்த மாதிரி கையை உடைக்கிற அளவுக்கு கோபம் வந்தால்… மாமா அந்தக் கண்ணாடி மேல இருக்கிற மாதிரி நெனச்சுகங்க… ஒகே வா… நான் லைனக் கட் பண்றேன்…. கிளம்பறேன்… நோ டிஸ்டர்பன்ஸ்… போன் பண்ணீங்கன்னா அவ்ளோதான்… கை வலிக்குதுன்னு சொன்னாலும்… எடுக்க மாட்டேன் ரிஷிக்கண்ணா… பை பை” என்று வைத்தவளின் குரலில்… குறும்பு… விளையாட்டு… உரிமை… மிரட்டல் எல்லாம் ஒன்றாகக் கலந்திருக்க… அது ரிஷிக்கும் கடத்தப்பட்டிருக்க


கண்மணியின் மொபைலில் அடுத்து உடனே இந்த குறுஞ்செய்தி வந்திருந்தது….


“மேத்ஸ் டீச்சரம்மா… மேத்சைத் தவிர… மத்த சப்ஜெக்ட் எல்லாம் படிக்கச் சொல்லிருக்கீங்க அந்தப் பாட்ல… நான் கொஞ்சம் வீக் ஸ்டூடண்ட்மா… டைம் எடுக்கும்… வெயிட் பண்ணுவீங்களா” ஸ்மைலிகளுடன் ரிஷி அனுப்பி இருக்க



கண்மணி… புரியாமல் விழித்தாள்… முதன் முறையாக….



அப்படி எப்போது நாம் சொன்னோம்… சப்ஜெக்ட்லாம் படிக்கனுமா… என்று யோசித்தபடியே…. வேகமாக அந்தப் பாடலை முழுவதுமாகக் கேட்கப் போக…



மீண்டும் ரிஷியே அடித்தான்… போன் செய்யக் கூடாது என்று இவள் மிரட்டலை அவன் மதிக்கவே இல்லை போல



கண்மணியும்… அப்படி சொன்ன ஞாபகமே இல்லாமல் சட்டென்று எடுத்தவள்.. புன்னகையோடே….


“டைம் என்ன… திடீர்னு என்ன அரசியாருக்கு கடற்கரை உலா… “ ரிஷி இப்போது கேட்க…


அவன் குரலில்… நக்கலை விட… அக்கறை மட்டுமே …



“சும்மாதான்… ஏன் அரசர் மட்டும் தான்… நாடு நாடு விட்டு போக வேண்டுமா…” கண்மணியும் ரிஷியைப் போலவே பேச ஆரம்பிக்க….



மறு முனையில் ரிஷியின் சிரிப்புச் சத்தம் மட்டுமே… கண்மணியும் தன் பாணியில் பேசிய விதத்தில்…



”ஒகே.. ஒகே… கிண்டல் எல்லாம் போதும்… வீட்டுக்கு கிளம்பு… டைம் ஆகிருச்சு…” என்றவன்…



“அரசியாரின் தைரியம் எங்களுக்குத் தெரியும்… நகர்வலம் முடிந்து… அரண்மனையிலும் உங்களுக்காக மக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்… தாங்கள் அவர்களைப் பார்த்துக் கொள்வீர்கள் என்றுதான்… இவ்விடம் வந்திருக்கின்றேன்” ரிஷி புன்னகையுடன் சொன்ன விதத்தில்



“கிளம்பிட்டேன் ரிஷி” என்ற கண்மணி



“அரசர் சொல்லைத் தட்டுவாரா அவரின் அரசியார்….” என்று அவன் பாணியிலேயே சொல்லி விட்டுத்தான்… போனைக் கட் செய்தாள்… அழைப்பைக் கட் செய்தவள்… அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்பவும் தயாரானாள்


கடற்கரைக்கு அர்ஜூனோடு வந்த போது இருந்த கண்மணியின் முகபாவம் இப்போது முற்றிலும் மாறாகி… புன்னகையுடன் எழுந்தவள்… ரிஷியைப் பற்றிய கவலைகளை… அவள் அறிந்த அவன் அறிந்த ரகசியங்களை தன் மேல் ஒட்டியிருந்த மணல் துகள்களைப் போல அங்கேயே தட்டியும் விட்டுச் சென்றிருந்தாள்…


----


அதே நேரம் ரிஷிக்கோ…



கண்மணியுடன் பேசிவிட்டு வைத்தவனின் முகம் சற்று முன் பூசியிருந்த புன்னகையை இப்போது தொலைத்திருந்தது…


அருகில் இருந்த சத்யாவும் அவன் முக பாவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்…



வந்தது ரிஷியின் மனைவி கண்மணியின் அழைப்பு என்று தெரியும்… போனில் பேசிக் கொண்டிருந்த வரை ரிஷியின் முகம் புன்னகையைப் பூசியிருந்த… அந்த முகத்தில் மீண்டும் யோசனை குடியேறி இருக்க… ரிஷியின் கண்களோ மேஜையில் வைத்திருந்த காகிதங்களில் பதிந்திருந்தது…



ரிஷி போனை வைத்துவிட்டான் என்பது தெரிந்தே அவன் அருகில் சத்யா வந்திருந்தான்…



கண்களை பேப்பரில் பதித்திருந்தவன்… நிமிராமலேயே



“சத்யா… இதெல்லாம் பத்திரமா எடுத்து வைங்க… தென் ஹர்ஷித்தோட டீடையில்ஸ் பற்றி யாரோ விசாரிச்சங்கன்னு சொன்னீங்கள்ள… அதை விசாரிங்க” என்றவன்….



யோசனையோடேயே நிமிர்ந்தான் …



“ஹர்ஷித் பற்றி யார் வேணும்னாலும் தெரிஞ்சுக்கலாம்… ஆனால் அது எங்க வீட்டுக்கு மட்டும் தெரியக் கூடாது… முக்கியமா அம்மாக்கு… “ என்றவன் முகம் நொடிகளில் ஆயிரம் வேதனைகளைத்தான் பிரதிபலித்தது…



சத்யாவும் அதை உணர்ந்தவனாக…



”ஆர் கே… அதை நான் பார்த்துக்கறேன்… அடுத்து நாம என்ன பண்ணப் போகிறோம்… “ ரிஷியை உடனடியாக மாற்றும் கேள்வியைக் கேட்க… ரிஷியின் முகம் இன்னும் கடுமையைப் பூச ஆரம்பித்தது



சற்று முன்தான் யமுனா விசயமாக திருமூர்த்தியை மிரட்டி… இங்கே வரவழைத்து அவனிடம் கையெழுத்தினை வாங்கி அனுப்பி வைத்திருந்தான் ரிஷி…



அந்த திருமூர்த்திக்கு அறுவைச்சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை… அவரை அந்த அளவு பாடுபடுத்தி… அதிலும் இங்கேயே வரவழைத்து… கதற வைத்து… அதன் பின் கையெழுத்து வாங்கி … அதன் பின்தான் யமுனாவின் புகைப்படங்களை... இன்னும் சில ஆதாரங்களை அவர் முன் அழித்தான்…



தான் இந்த அளவு கொடூரமானவனாக… மனசாட்சி இல்லாத அரக்கனாக எப்படி மாறினோம்... யோசிக்க மட்டுமே காலம் அவகாசம் கொடுத்தது



மாறி ஆக வேண்டிய நிலை மாறிவிட்டான்… ஆனால் இப்போதும் பழைய ரிஷியாக வாழவே ஆசைப்படுகிறான்… முடியவில்லையே… இதை எல்லாம் விட அவனது தேவதை… அவனிடம் முதன் முதலாக கேட்டது…



‘அந்த கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்த ரிஷி’… தேடினாலும் கிடைப்பானா… தன்னைக் கண்ணாடியில் பார்த்தவனுக்கு ’இல்லை… கிடைக்கவே மாட்டான்’ என்ற விடைதான் கிடைத்தது…



எல்லாம் சேர்ந்த ஆத்திரம்… கோபம்… கடைசியில் அவனது கைகள் கண்ணாடியைப் பதம் பார்க்க… சேதரம் கண்ணாடிக்கு மட்டுமா இருந்திருக்கும்…. கைகளுக்கும் தானே…



கட்டுப்போட்ட தன் கையைப் பார்த்தபடியே யோசித்துக் கொண்டிருந்தவன்… சத்யாவின் கேள்வியில் கவனம் வைத்தவனாக



“ஹ்ம்ம்… எவ்ளோதான் நாம எல்லோரையும் மிரட்டினாலும்… கேசவன் கிட்ட தான் 70% ஷேர் இருக்கு… கேசவன் கிட்ட நாம நேரடியா நெருங்க முடியாது… “



“தெரியும் ஆர்கே…. ஆனால் அவர்கிட்டயே மோத முடியாதுனும் போது… அவர் பையன் கார்ப்பரேட் கூட டை-அப் வச்சுருக்கவர்… அவர வச்சு எப்படி” சத்யா இழுத்தபடி…



“அதுக்கெல்லாம் நாம இன்னும் பெரிய ஆளாகனும் ஆர் கே… நாம ஒருத்தவங்க இருக்கோம்ன்ற அடையாளம் காட்டவே வருசக் கணக்காகும் “ என்று கவலையோடு சொன்னவனிடம் கண்சிமிட்டிய ரிஷி…



“இப்போ பெரிய ஆளாகிறது… பாப்புலர் ஆகிறதுக்கெல்லாம்… ஷார்ட் கட் இருக்கு சத்யா… வெயிட் பண்ணுங்க… என்ன நட்ராஜ் சார் கருணை காட்டனும்… அது மட்டும் தான் என் கவலை… “ சத்யாவின் குழப்பமான முகத்தைப் பார்த்தபடியே தொடர்ந்தான் ரிஷி



”நாம அந்த கேசவன்ற கிழட்டு நரி கூட மோத வேண்டாம்… மோதினாலும் வேஸ்ட் தான்… அந்த கேசவனுக்கு அவர் பையன் மேல பெரிய நம்பிக்கை… அவன் தான் அவரோட எல்லா நடவடிக்கைக்கும் பின்னால இருக்கிறவன்… எங்க அப்பா கூட பெருமையா சொல்வாரு… “ என்று நிறுத்தியவன்…



”கொஞ்சம் கஷ்டம் தான்… ஆனால்… இப்போ நான் எடுத்து வைக்கிறது பெரிய அடிதான்… இதுல நான் மட்டும் இன்வால்வ் ஆகல… நட்ராஜ் சாரும்… அவர வச்சுத்தான் அந்த கேசவோட பையன தரை மட்டமாக்கனும்….”



எதை எதையோ நினைத்து பேசிக் கொண்டிருந்தவனிடம்…



“சார் இது ரீசண்ட் போட்டோஸ்… இது இன்னைக்கு வந்த மேகசின் ல இருந்து எடுத்தது” என்று சத்யா காட்ட…



ரிஷியின் முகம் சுருங்கியது…



காரணம் கேசவனின் மகன் ஆதவனுடன் கை குலுக்கிக் கொண்டிருந்த விக்கியைப் பார்த்து…



அதே நேரம் பெரிதாக ஆச்சரியமும் படவில்லை ரிஷி…



’வாகனத்துறையில் நவீன தொழில்நுட்பம்… இணைகிறது’ என கேசவனின் கம்பெனியின் பெயரும்… கார்ப்பரேட் நிறுவனத்தின் பெயரும் தலைப்பில் இருக்க



கண்கள் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தது….



விக்கியின் கண்டுபிடிப்பை மூலதனமாக வைத்துதான் அந்த கார்ப்பரேட் நிறுவனம்… கேசவனின் கம்பெனியோடு இணைந்திருக்க…



ரிஷியின் உதடுகள் இல்லையில்லை முகம் முழுவதுமே சந்தோஷத்தில் விரிந்தது… தான் போட்டு வைத்த திட்டம் இவ்வளவு சுலபமாக முடியப் போகிறதா என்ற எண்ணத்தில்….



அந்த ஆதவனை வீழ்த்த பெரும் போராட்டம் பட வேண்டும் என்று நினைத்திருக்க… அருகில் இருந்த விக்கியையும் அவன் கண்டுபிடிப்பையும் நினைத்த போது…



மனதுக்குள் ஆயிரம் உற்சாகம்…



கேசவனின் மகன் ஆதவன் இவன் போட்ட திட்டத்தை சுலமாக்கும் வழியை அல்லவா காட்டியிருக்கின்றான்…



இந்த ஐந்து வருடங்களாக அவன் உழைத்த போதும்… திட்டமிட்ட போதும் எதற்குமே சரியான தீர்வு கிடைக்காத நிலையில்… இப்போது அவன் திரும்பிய திசை எங்கும் அவனுக்கான வரவேற்பு கம்பளம்… தானாகவே வழிகளின் தடைகள் நீங்கிக் கொண்டிருந்தன…



அந்த சந்தோஷத்தில் கண்களில் அவனையுமறியாமல் பிரகாசம் வந்திருக்க… அதே நேரம் அவனது அலைபேசியில் செய்தி வந்திருந்தது…



“அரசரே… அரண்மனைக்கு வந்து விட்டேன்…” அனுப்பி இருந்தாள்… குறும்பான ஸ்மைலிகளோடு அவளது தேவதை…. அவளுக்காக படைக்கப்பட்டவள்… அவனது அதிர்ஷ்ட தேவதை…



சந்தோஷத்தில் ரிஷியின் கண்களில் அவனையுமறியாமல் பளபளத்தது…. எழுந்தவன்… அவன் எப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அவனது தந்தையின் அந்த முக்கியமான டைரியை எடுத்தவன்… தான் அந்த டைரியைப் படிக்க வேண்டும் என்று அவன் தந்தை அடையாளமாக வைத்து சென்றிருந்த அந்த முக்கியமான குறிப்பை அவனையுமறியாமல் கைகள் தழுவின….



அது வேறெதுவும் இல்லை… கண்மணியைக் காட்டி தந்தையிடம் அவன் அன்று காட்டிய நாளிதழின் கண்மணியின் புகைப்படம் இருந்த பக்கங்கள்… ரிஷிக்கு அவன் தந்தையின் டைரியை மற்ற டைரிகளிடமிருந்து வித்தியாசப்படுத்திய குறிப்பு…



அப்போது தெரியவில்லை ரிஷிக்கு… ஏன் கண்மணியை முதன் முதலில் சந்தித்த போது தெரியவில்லை… அவளோடு பழகிய நாட்களிலும் புரியவில்லை… என்னைத் திருமணம் செய்து கொள் என்று கேட்டபோது புரியவில்லை… ஏன் அவளைத் திருமணம் செய்த போதும் கூடப் புரியவில்லை… ஆனால் இப்போது மெல்ல மெல்ல எல்லாம் புரிய ஆரம்பித்தது…. அவளோடு அவன் வாழ ஆரம்பித்த போது… கண்மணி அவன் மேல் அவள் காட்டிய புரிதலில்… அவன் குடும்பத்தின் மேல் அவள் காட்டிய அன்பில்…. கண்மணி அவனுக்காகவே படைக்கப்பட்ட தேவதை என்று…. புரிந்து கொண்டான் ரிஷி…




கண்மணிக்கும் தனக்குமான நினைவுகளில் அவன் இதழ் விரிந்தது அர்த்தப் புன்னகையோடு




முதன் முதலாக ரிஷி தன் வாழ்க்கையில் பொறுப்பாக ஒரு செயல் செய்திருக்கின்றான் என்றால் அது கண்மணியின் தந்தை நட்ராஜை மருத்துவமனையில் சேர்த்த செயல் தான்…



நீ சிறுபெண்… உனக்கு ஒன்றும் தெரியாது… எனக்கு எல்லாம் தெரியும்… நான் பார்த்துக் கொள்கிறேன்… என்று கண்மணியை ஒன்றும் தெரியாத சிறுமியாக பாவித்து…. நட்ராஜை ஹாஸ்பிட்டலில் சேர்த்தது முதல்… அங்கிருந்து அவர் வீட்டுக்கு செல்லும் வரை எல்லாவற்றையும் ரிஷி பார்த்துக் கொண்டானே… கண்மணி நினைத்திருந்தால் அவனை தடுத்திருக்கலாம்… ஆனால் அவள் செய்யவில்லை…



இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால்…. அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று இவன் அவளையும் சேர்த்து பார்த்துக் கொண்டானே… கண்மணியும் அவனிடம் எதுவுமே தெரியாத சிறுமி போல அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியபடி நடந்து கொண்டாளே…



என்ன நடந்தாலும்… எப்படி நடந்தாலும் விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொள்ளும் தான் அன்று மட்டும் ஏன் பொறுப்பாக நடந்து கொண்டோம்…



எல்லாம் தெரிந்தும்… அறியாத தெரியாத சிறுமி போல நான் சொல்வதெற்கெல்லாம் சம்மதம் சொல்லி… கண்மணி ஏன் நடந்தாள்…



இன்னும் சொல்லப் போனால்… அவளது குண இயல்புக்கு அவள் இவனிடம் மட்டுமே பணிவாக பேசி இருக்கின்றாள்… அவளது வயதுக்கு மீறிய அனுபவத்தை புத்திசாலித்தனத்தை கண்மணி இவனிடம் காட்டவே இல்லை.,



ரிஷி பள்ளிச் சிறுமியாக பாவித்து அவளிடம் அனுசரனையாக நடக்க… கண்மணியும் ரிஷியிடம் அப்படியே நடந்தாள்… அன்று மட்டும் அல்ல… பெரும்பாலும் ரிஷியிடம் கண்மணி அப்படித்தான் நடந்து கொண்டிருந்தாள்:…



தேவதை கதை கேட்ட போதெல்லாம்

நிஜமென்று நினைக்கவில்லை நேரில் உன்னையே பார்த்த பின்புதான்

நம்பி விட்டேன் மறுக்கவில்லை…”



அந்த அறையில் இருந்த தொலைக்காட்சியில் பாடல் ஒலிக்க… ரிஷியின் கண்கள் அதில் நிலைத்தது…


கடவுளை நம்பாதவனின் மனம்… தேவதை என்ற வார்த்தையில் மையம் கொண்டிருக்க…



ரிஷி புரிந்து கொண்டான் கண்மணி என்பவள்… அவனுக்கான…. அவனுக்காக வந்த தேவதை… என்பதை…



முதன் முதலாக ரிஷி பொறுப்பானவனாக உணர்ந்த அதே புள்ளியில் தான் கண்மணி என்பவளும் அவளின் வயதுக்குறிய சிறுமியாக அவளை உணர்ந்தது… அது ரிஷிக்கும் தெரியவில்லை… கண்மணிக்கும் இன்று வரை தெரியவில்லை…



என்ன!!!.. ரிஷி தன் மன உணர்வுகளை கண்மணியிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை… ஏனோ காட்டும் தருணம் வாய்க்கவில்லை… காத்திருந்தான் தருணத்துக்காக



ஆனால் கண்மணி என்பவளோ அவளை உணராமலேயே…. ரிஷி என்பவனிடம் எதிர்பார்ப்பற்ற அன்பைக் காட்டிக் கொண்டிருந்தாள்… அவள் உணரும் காலமோ காலத்தின் கையிலே… காத்திருந்தது காலம் அவளுக்காக



----

/*

அன்பே அன்பே உன் அன்பு சொல் வேண்டும் இன்னும் சொல்வேன் என் ரத்தம் ஊர வேண்டும்


பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு பொன்னும் முத்தும் நான் கொட்டித்தர வேண்டும்


ஒரு பார்வை சிறு வார்த்தை

எந்தன் உயிருக்கு கவசமடி இறந்தாலும் உயிர் ஊட்டும்

உந்தன் விரல்கள் ஸ்பரிசமடி

வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும் என்றும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்


ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

*/

3,259 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page