top of page

கண்மணி என் கண்ணின் மணி -66

Updated: Jan 8, 2022

அத்தியாயம் 66


/*விழியில் ஒரு கவிதை நாடகம்

வரையும் இந்த அழகு மோகனம்

நினைவில் இந்த தலைவன் ஞாபகம்

நிலவுகின்ற பருவம் வாலிபம்


தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்

கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்


இனி ஆதி அந்தம் எங்கும்

புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது


ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை...

மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது

என்னை நானே நினைப்பது ஏது

இந்த வானம் பூமி யாவும் மயங்கிட

ஓர் பூ மாலை அதில் தேன் இவ்வேளை...*/



காலை 8 மணி சிட்னி இண்டெர் நேஷனல் ஏர்போர்ட்


நட்ராஜ் மற்றும் கார்லா குடும்பத்தினரை… ஏர்போர்ட்டுக்கு வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு… ரிஷி மட்டுமே ஏர்போர்ட்டுக்குள் வந்திருந்தான்… அதற்கு காரணமும் இருந்தது…


நட்ராஜுக்கு இவன் அளவுக்கு பெரிதாக அடி இல்லையென்றாலும்… முந்தைய தினம் தான் அடிப்பட்டிருக்க… இன்னும் நெற்றியில் கட்டுடன் தான் இருந்தார்… ஏற்கனவே கோபத்தில் தான் வருவாள் கண்மணி… ரிஷிக்கும் தெரியும்… இதில் அவள் தந்தையையும் இந்தக் கோலத்தில் பார்த்தால்… இன்னுமே அவளுக்கு குழப்பம் ஆகும்… அதனாலேயே காருக்கு வருவதற்கு முன்னாலேயே அவளை… அவள் கோபத்தை எல்லாம் சமாளித்துக் கூட்டி வர வேண்டும்… என்று முடிவெடுத்தவன்… மற்றவர்களை எல்லாம் விட்டு விட்டு தனியே வந்தவன்… இதோ அவளுக்காக அவள் வருகைக்காகக் காத்திருந்தான்… அவள் வரும் விமானம் வந்து விட்ட தகவலும் அங்கு ஒலிபரப்பட்டிருக்க… அவனையுமறியாமல் அவனுக்குள் ஒரே பரபரப்பு.


கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு தன்னவளைப் பார்க்கப் போகிறான்… திடீரென மீண்டும் பதின்ம பருவத்துக்குப் போன உணர்வு ரிஷிக்கு வந்திருக்க…


அவனுக்குள் ஏதேதோ உணர்வுகள்… உற்சாகப் பந்துகளாய் அவனின் ஒவ்வொரு அணுவும் அவனுக்குள் துள்ளிக் குதிக்க ஆரம்பித்திருக்க… உறக்கமா வந்திருக்கும்… உறக்கம் தழுவாத கண்களில் அவனவள் நினைவுகள் மட்டுமே அவனைத் தழுவி இருந்தன… எப்போதுடா… அவளைக் கண்களில் நிரப்புவோம் என்றபடியே பேருக்கு படுத்திருந்தவன்… அதிகாலையிலேயே எழுந்து… என்ன செய்வதென்று தெரியாமல்… என்னென்னவோ செய்து நேரத்தைக் கடத்தி…. இதோ இங்கும் வந்து விட்டான்…


கண்மணியைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சி… அவள் தன்னோடு இருக்கப் போகிறாள் என்ற உற்சாகம் இது எல்லாமே ஒருபக்கம் இருந்தாலும்… அவள் அவளின் கடந்தகாலம்… இவற்றையும் தனக்குள் ஒருபக்கம் வைத்திருந்தான் தான்… அவளாகச் சொல்லும் வரை… தானும் கேட்கப்போவதில்லை… அது தேவையும் இல்லை… என்று நேற்றே முடிவெடுத்திருக்க… அந்த எண்ணங்களை நேற்றே ஒதுக்கியும் விட்டான்...


அதே நேரம் அந்த துரை மற்றும் மருதுவுக்கு முடிவு கட்டிவிட்டுத்தான்… தன் மனைவியிடம் கணவனாக நெருங்குவது!!! என தனக்குள் முடிவெடுத்தும் இருந்தான் ரிஷி… ஆனால் அவனால் கண்மணியை இனி விட்டு விலகி இருக்க முடியாது… மனதளவிலும்…. உடலளவிலும்… அப்படி இருக்க… தான் எடுத்திருக்கும் இந்த முடிவு எந்த அளவுக்கு சாத்தியம் ஆகும் எனத் தெரியவில்லை…


எப்படியோ தன் மனைவிக்கு நடந்த அநியாயத்துக்கு கணவனாக ஒன்றையும் செய்யாமல்… அவளை நெருங்கக் கூடாது… அவளிடம் உரிமை எடுக்கக் கூடாது.. இதுதான் கண்மணி கிளம்பி விட்டாள் என்று தெரிந்ததும் அவன் எடுத்த முடிவு…


இந்த ஆறு வருடங்களில் ரிஷியாகத்தான் வாழ்ந்திருந்தான் ரிஷிகேஷ் உணர்வுகள் மறந்து மரத்து… ஆனால் மனைவியோடு இங்கு கடக்கப் போகும் இந்த இரு வாரங்கள் அவனால் அப்படி இருக்க முடியுமா அதுவும் கண்மணியின் ரிஷியாக… அவனுக்கே சவாலான விசயம் தான்… நினைத்தபடி பெருமூச்சை விட்டபோது… அவனைச் சுட்ட அவன் மூச்சுக் காற்றின் வெப்பமே… அவனின் ஏக்கத்தை, தாபத்தை ரிஷிக்கே உணர வைத்ததுதான்…


“எப்படியோ சமாளிக்க வேண்டும்” கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து… ஒரே மூச்சில் குடித்து முடித்தவன்… தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதே… அதோ… அவனின் கண்மணி… வந்துவிட்டாள்… அவனை நோக்கி…


மிக மிகச் சாதாரணமாக வந்திருந்தாள்… சல்வார் அணிந்திருந்தவள்.. கூந்தலை குதிரைவால் போல உயர்த்திக் கட்டியிருந்தாள்… கையில் ஹேண்ட் பேக்… அவன் பார்க்கும் அதே ’கண்மணி’ இல்ல கண்மணியாக ஆஸ்திரேலியாவிலும்…. பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை


ஆனால் அவன் கொடுத்த இளம் சிவப்பு நிற மூக்குத்தி அவனின் கண்மணியாக அவனிடம் புதிதாகப் பதிவு செய்திருக்க…. அதில் மெய்மறந்தவனாக…. அவளைப் பார்த்து கைகளைக் கூட அசைக்க முடியாமல்… அவளையே பார்த்துக் கொண்டிருக்க… கண்மணியும் இவனைத் தேட ஆரம்பித்து… அவள் பார்வை வட்டத்தில் ஒரு கட்டத்தில் இவனும் விழுந்திருக்க… நொடியில் சட்டென்று அவள் கண்களில் அப்படி ஒரு பளபளப்பு… அடுத்த நொடியே அப்படிப் பார்த்தது அவள்தானா எனும் அளவுக்கு இயல்பாக அவனைப் பார்த்தபடியே வந்தவளை பார்த்து ரிஷியின் உதடுகள் பெரிதாக விரிந்தன…


இதயத்தில் இருந்த ரிஷியின் உயிர்… அதன் கூட்டை மாற்றி அவன் கண்மணிகளுக்குள் ’கண்மணி’யாக இடம் மாறி இருந்தது… அவளைப் பார்த்த அந்த நொடிகள்…


“அப்பா எங்கே” இவன் அருகில் வந்து நின்றவள்… நட்ராஜைத் தேடியபடியே கேட்க…


“என்னது அப்பாவா???…” இப்போது ரிஷியின் உறைந்திருந்த இதயம் மட்டுமில்லை மூளையும் அதன் வேலையைப் பார்க்க ஆரம்பிக்க… அவளைப் பார்த்து முறைத்தவன்

“ஒருத்தன் உனக்காக கால் கடுக்க ரெண்டு மணி நேரம் … வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… அது கூட விடு… மூணு மாசமாச்சு என்னைப் பார்த்து… இவ்வளவுதானாடி உன் ஃபீல்…” அதிர்ந்து கேட்டவனின் டீஷர்ட் காலரை எட்டிப் பிடித்து தன் அருகே இழுத்தவள்… அவன் முன் நெற்றிக் கேசத்தைக் கைகளால் விலக்கி அவன் காயத்தைப் பார்த்து… அவனை முறைக்க..


“நான் போகலை… அவனுங்கதான் முதல்ல வம்பிழுத்தாங்க…” வெளியில் சென்ற சிறுவன் போல… சண்டை போட்டு காயத்தோடு வந்து அம்மாவிடம் புகார் சொல்லும் சிறு குழந்தை பாவனையுடன் சொன்னவனிடம்…


“அப்போ இது என்ன” இடது கைக் கட்டைக் காண்பித்தவள்… இப்போது அவன் டிஷர்ட்டை விட்டபடி அவனைத் தள்ளி விட… அவளுக்காக வேண்டுமென்றே தள்ளாடி நின்றவன்...


“ஏர்போர்ட்ல எல்லாரும் பார்க்குறாங்கடி…”


”சார்க்கு எல்லாரும் பார்க்கிறாங்கன்னு… பொண்டாட்டி பக்கத்தில இருக்கும் போதும்... அவ கூட பேசும் போதும் மட்டும் தான் தெரியும்… ஷோவை ஊரே பார்த்துச்சே… அப்போ என்னாச்சு” என்றபடியே

“லக்கேஜ பிடிங்க…” - அவன் கையில் தன் ட்ராலியைத் தள்ளியவள்… அவனுக்காக காத்திருக்காமல் அவனைத் தாண்டி முன்னே போக…

“ஓய்.. முதலாளி பொண்ணா வந்துருக்கேன்னு காட்றியாடி…” தன் கைகளுக்கு ட்ராலியை இடமாற்றியவன்… இரண்டே எட்டுகளில் வேகமாக அவளை அடைந்தவன்…


“சரி விடு… முதலாளிப் பொண்ணுக்கு வேலை பார்த்து… பொண்டாட்டிகிட்ட வசூல் பண்ணிறலாம்…” உல்லாசமாக கண் சிமிட்டியவனின் காயம் பட்ட கையிலேயே அடிபோட்டவளிடம்


“ஆ… அம்மா… அடிக்கிறாளே…“ போலியாகக் கதறியபடியே அவளைப் பார்த்தவன்… அடுத்த நொடிஅதிர்ந்த பார்வையில்…


”கண்மணி… எங்கடி நான் கொடுத்த மூக்குத்தி… போட்டேன் போட்டேன்னு சொன்ன… எங்க காணலை” அவன் பதற்றம் கண்மணிக்குமே தொற்ற…

வேகமாக அவளையும் மீறி… அவளது விரல்கள்… அவளது மூக்கைத் தொட்டுப் பார்க்க… மூக்குத்தி அதன் இடத்தில் இருந்ததுதான்…


“பொய் சொல்லி இருக்கின்றான்..” உணர்ந்தவளாக முறைத்தபோதே…


அவள் புறம் குனிந்தவன்…


“உன்னைத்தான் சொல்லிருக்கேன்ல… கோபப்பட்ற மாதிரி நடிக்காதேன்னு… மூக்கு சிவந்து மூக்குத்தி இருக்கிறது கூடத் தெரியாமல் போகுது…” கண்ணடித்தான் உரிமையாக…


கண்மணியும் இப்போது இயல்புக்கு வந்து புன்னகைக்க முயலும் போதே…


“ஆர் யூ ஆர்கே… ஹேய் RK” என்ற படி ஒரு கூட்டம் அவனைச் சூழ்ந்துகொள்ள… அந்தக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டான் ரிஷிகேஷ்…


கண்மணி கொஞ்சம் கூட அவனையும் கண்டு கொள்ளாமல்… அந்தக் கூட்டத்தையும் கண்டு பிரமிக்காமல்… அங்கு நிற்காமல் முன்னே செல்ல… ரிஷியும் எப்படியோ அந்தக் கூட்டத்தைச் சமாளித்து… கண்மணியிடம் சென்றிருக்க… இருவருமாக நட்ராஜ் மற்றும் கார்லா காத்திருந்த இடத்திற்கும் வந்து சேர்ந்திருந்தனர்…


---


ஃபேபியோவும் கார்லாவும் கண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தனர்… கண்மணி ரிஷியையும் நட்ராஜையும் விட்டு விளாசிக் கொண்டிருக்க…


அதிர்ச்சியாக…. திறந்த வாய் கூட மூடாமல்… கண்கள் விரித்து அவள் பேசும் விதத்தை நம்ப முடியாத பாவனையில் பார்த்துக் கொண்டிருந்தனர்… அதை விட… ரிஷியும் நட்ராஜும்… அவள் முன் வாயையே திறக்காமல் இருந்த நிலை…. இன்னுமே அவர்களுக்கு ஆச்சரியம்


கார்லா-ஃபேபியோ இவர்கள் எல்லாம் இருக்கின்றார்கள் என்றெல்லாம் கண்மணி நினைக்கவும் இல்லை… அப்படி நினைத்தாலும் அதைப்பற்றி அவளுக்கு கவலையுமில்லை… அதே போல் தான் ஆஸ்திரேலியாவில் அதாவது நாடு விட்டு இன்னொரு நாட்டில் இருக்கிறோம் என்பதையும் அவள் பொருட்படுத்தவே இல்லை…


நட்ராஜின் தலைக்காயத்துக் காரணம் குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார் மழுப்பலாகச் சொல்லி முடிக்க… அதைச் சொன்ன பின் கண்மணியிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் இருப்பார்களா…


“ரெண்டு பேரும் ஆஸ்திரேலியாக்கு… ஷோ பண்ண வந்தீங்களா இல்லை மாத்தி மாத்தி அடி வாங்குறதுக்காக வந்தீங்களா… தலையில அடிப்பட்டுகிட்டு எவ்ளோ கூலா பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்..…” என்று ஆரம்பித்தவள் தான்… நிறுத்தவில்லை…


“ஏன்ப்பா நீங்க சொல்லை… எனக்கு ஒண்ணு புரியல… ரிஷி உங்களுக்கு அடிபட்டதைப் பார்த்து… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருமா என்ன… இல்லை அவ்ளோ வீக்கான பொண்ணா நான்… பார்த்து பதறி… அப்படியே அழுது ஓடி வர்றதுக்கு… சொல்லாம மறச்சுருக்கீங்க… இங்க வந்தா அப்பாக்கு இப்படி…” தன் தந்தையைக் கவலையோடு பார்த்தவள்


”இவருக்கு அடிப்பட்டதை நீங்களும் சொல்லலை…” என்றபடியே கண்வனைக் கண்களால் எரித்தபடியே…


”முதலாளிக்கு அடிப்பட்டதை சிஷ்யப்பிள்ளையும் சொல்லலை… என்ன ஒரு ஒற்றுமை” எண்ணையில் கடுகு பொறிந்தார்ப் போல படபடவெனப் பேசிக் கொண்டிருக்க…


ரிஷி மற்றும் நட்ராஜ் மறுவார்த்தை என்ன… மூச்சு கூட வராமல் அமைதியாக நின்றிருந்தனர் அவள் முன்னே…


ஃபேபியோவோ கண்மணியிடம் பேசலாமா வேண்டாமா என்ற தோரணையில் நின்றிருக்க… கார்லாவோ அதை விட…


ரிஷிதான் மெதுவாக வாயைத் திறந்தான்


”ப்ச்ச்… பதறி வரமாட்டேன்னு தெரியும்… அட்லீஸ்ட் திட்றதுக்காவது வருவேன்னு” ரிஷி சொல்லி முடிக்கவில்லை…


“பேசாதீங்க…” விரல் காட்டி எச்சரித்தவளிடம்


“சரி பேசலை… எவ்ளோ வேணும்னாலும் ஹோட்டல் ரூம்ல வந்து திட்டு… வாங்கிக்கிறோம்… ஃபேபியோ… கார்லா… வந்திருக்காங்க… அவங்ககிட்ட கொஞ்சம் பேசு” என்று கண்மணியைத் திசை திருப்பி விட… கண்மணியும் இப்போது கொஞ்சம் நார்மலாகி இருக்க… ஃபேபியோ மற்றும் கார்லாவிடம் தன் பார்வையை மாற்றி இருக்க…


“Does She speak English???…” கார்லாவும் கார்லாவின் தந்தையும் கண்மணியிடம் எப்படி பேசுவது எனத் தயங்கிக் கேட்க


“தெரியும் தெரியும்… லாங்க்வேஜ் மட்டும் இல்லை… எல்லா ஆக்செண்ட்டும் தெரியும்… பேசுங்க… “ என்றவன் தன்னை முறைத்த கண்மணியிடம் திரும்பி…


“தமிழ்ல மூணு நாலு. ஸ்லாங்க்ல பேசுவன்னு தெரியும்.. இங்க்லீஷ்ல மட்டும் விட்டு வச்சுருப்பியா என்ன…” என்ற போதே… அவனை அலட்சியப்படுத்தியவளாக… கார்லா மற்றும் ஃபேபியோவிடம் தன்னை அறிமுகப்படுத்தியபடி பேச ஆரம்பிக்க…


ரிஷி அவள் கொண்டு வந்திருந்த லக்கேஜை எல்லாம் காரில் ஏற்ற ஆரம்பித்திருந்தான்…

---


ரிஷி காரை ஓட்ட… அவனது அருகில் கார்லா அமர்ந்திருக்க… கண்மணி, நட்ராஜ் மற்றும் ஃபேபியோ மூவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்…


“ரிஷி… இவ்ளோ பயப்படுவீங்களா நீங்க” அவனின் ஆக்ரோஷத்தையும் பாசத்தையும் மட்டுமே பார்த்திருந்த கார்லா ரிஷியிடம் கேட்க…


ரிஷி சிரித்தான் அவளிடம்…. அதுவும் அனுபவித்து….


”அப்படியா… நான் பயப்படலை கார்லா… அவ பேசுறதைக் கேட்டு ரசிச்சுட்டு இருந்தேன்… அது எனக்கும் என் மாமாவுக்கும் மட்டுமே கிடைத்த வரம்… உன்னை மாதிரியேதான் நானும் நட்ராஜ் சார்ட்ட கேட்பேன்… அவர் சிரிச்சுட்டே போவார்.. அப்போலாம் நினைப்பேன்… என்ன இவர் சூடு சொரணை இல்லாமல் இருக்கார்னு… ஆனால் அதை அனுபவிக்கும் போதுதான் தெரியுது… அதோட சுகம்… அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணி இருக்கனும்“ என்று புளங்காகிதம் அடைந்தவனாக அனுபவித்து சொன்னவன்… தங்கள் பின்னால் அமர்ந்து வந்த கண்மணியை காதலோடு பார்க்க… அவனை புரியாமல் பார்த்தவளோ கார்லாதான் தான்…


கண்மணி நட்ராஜோடு மட்டுமே பேசியபடி வந்து கொ…


தன்னைக் கவனிக்காத பாவனையோடு வந்தவளை… ரிஷி நன்றாகவேப் பார்த்துக்கொண்டு வர…


ஓட்டுனராக சாலையில் கவனம் வைக்காத அவனின் பார்வையைப் பாராமல் பார்த்தபடியே, தந்தையோடு பேசிக் கொண்டு வந்த கண்மணிக்கே ஒரு கட்டத்தில் பயம் வந்திருந்தது… ஒழுங்காக ஹோட்டல் போய்ச்சேருவோமா என்று....


அவள் கண்களின் பயத்தை அவனுமே கண்டுகொண்டவன்… நக்கல் சிரிப்பு சிரித்தபடி… ”நான் ஒழுங்கா ஓட்டனும்னா… முன்னே வா…” என கண்களாலேயே சைகை செய்திருந்தான் அவளிடம்…


தன் அப்பாவிடம் பேச வேண்டுமென்று பின்னால் அமர்வதாகச் சொல்லி பின்னால் அமர்ந்தவள் கண்மணிதான்… அதே போல கார்லாவை முன்னால் சென்று அமரவும் சொன்னதும் அவள்தான்… இவன் இப்படி ஓட்டுகிறானே…. இப்போது என்ன செய்வது… என்று கண்மணி யோசித்துக் கொண்டிருக்கும் போதே… ரிஷி காரை நிறுத்தி இருந்தான்…


என்ன ஏதென்று சொல்லாமல் திடீரென காரை நிறுத்தி இருந்தவனை அனைவரும் கேள்வியாகப் பார்க்க… அவர்களை… அவர்கள் கேட்ட கேள்விகளையும் அலட்சியம் செய்து… எனக்கென வந்தது என்று இலகுவான பாவனையில் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவன்… கண்மணியையும் முன்னே வா என்று வார்த்தையால் சொல்லவில்லை…


“நான் காரை நிறுத்தி விட்டேன்… நீ முன்னே வர வேண்டும்” என்ற பிடிவாதச் செய்தி அவன் அமர்ந்திருந்த விதமே கண்மணிக்கு சொல்லாமல் அறிவித்திருக்க… கண்மணியின் பிடிவாதம் பற்றி சொல்ல வேண்டுமா என்னா… அவளும் எனக்கென்ன என தன் பாட்டுக்கு அமர்ந்திருக்க… வழக்கம் போல இவர்களுக்கு இடையே மாட்டியவர்கள் மற்றவர்கள் தான்…


ரிஷி யாருக்காகவும் யாரையும் விட்டுக் கொடுப்பான்… ஆனால் கண்மணியிடம் மட்டுமே தன் பிடிவாதத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டான்… அவளையும் விட மாட்டான்… அவள் மட்டுமே… அவளிடம் மட்டுமே அவன் பிடிவாதம்…


கண்மணியின் பிடிவாதம்- யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாள்… ஆனால் ரிஷிக்காக மட்டுமே தன் பிடிவாதங்களை எல்லாம் விட்டுக் கொடுப்பவள்… அவனிடம் பிடிவாதம் பிடிப்பாளா… அவளுடைய ரிஷிக்கண்ணாவுக்காக மட்டுமே அவள் இருக்க… அவள் பிடிவாதம் அவனிடம் வெல்லுமா???… பின் இருக்கையில் இருந்து இறங்கி இருந்தாள்…


ரிஷியின் முகத்தில் இப்போது மலர்ச்சி… கண்மணியும் தன்னவனின் மலர்ச்சியைத் தன் கண்களில் நிறைத்துக் கொண்டபடியே அவன் அருகில் வந்து அமர…. கார்லா இப்போது பின்னால் வந்து அமர்ந்திருந்தாள் இதழில் உறைந்த புன்னகையோடு….


இப்போது ரிஷியும் காரை ஸ்டார்ட் செய்திருந்தான்….


முதன் முதலாக தன் அருகில் தன் மனைவி… உளம் நிறைந்த மகிழ்ச்சியில்… வானம் தொட்ட உற்சாகத்தில்… மற்றவர்களை எல்லாம் மறந்தவனாக… உச்சகட்ட வேகத்தை எட்டி இருக்க… எப்படியோ…. ஹோட்டலையும் வந்து அடைந்தார்கள்….


ரிஷி-கண்மணி மற்றும் நட்ராஜை ஹோட்டலில் இறக்கி விட்டு… ஃபேபியோ.. கார்லா சென்றுவிட…


“மாமா… நீங்க அவளக் கூப்பிட்டுடு ரூமுக்கு போங்க.. நான் லக்கேஜ் எடுத்துட்டு வர்றேன்… ” என்று கண்மணியை நட்ராஜோடு முன்னே அனுப்பி இருந்தான் ரிஷி…


---


ரிஷியும் நட்ராஜும் முன்னர் தங்கி இருந்த அறைக்கு தன் மகளை நட்ராஜ் அழைத்துச் செல்லவில்லை…


இப்போது ரிஷிக்கும்-கண்மணிக்கு பதிவு செய்திருந்த புதிய அறையில் மகளை விட்டு விட்டு அவரது அறைக்குச் சென்று விட… கண்மணி கட்டிலில் அமர்ந்தபடி… அந்த அறையினை பார்வையால் வட்டமிட்டுக் கொண்டிருந்தாள்….

இந்த அறை அவன் முதலில் தங்கி இருந்த அறை இல்லை என்பது அவளுக்குமே தெரிந்தது தான்… வீடியோ காலில் அவள் பார்த்த அறை இது இல்லை என்பது பார்க்கும் போதே தெரிந்தது… இன்னுமே சொல்லப் போனால்… சாதாரண ஹனிமூன் சூட் கூட இல்லை… அது ஆடம்பரமான ப்ரெசிடென்சியல் சூட்…


“நான் வருகிறேன் என்று தெரிந்த பின் இந்த அறையைப் புக் செய்தானா” யோசித்தபடியே அமர்ந்திருந்தவள்… பிறகு எழுந்து அங்கிருந்த கிச்சன்.. பிரைவேட் ஏரியா… அவள் நின்ற உயரத்தில் இருந்து கீழே தெரியும் நகரின் அழகு என ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்து முடித்தவள்… மீண்டும் ஹாலுக்கே வந்து பழையபடி கட்டிலிலேயே அமர்ந்தபடி கண்வனுக்காக காத்திருக்க ஆரம்பித்திருக்க… கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து… பூட்டிய அறைக்கதவு திறக்கப்பட… வேகமாகத் திரும்பிப் பார்க்க… ரிஷிதான்…


---


கண்மணி கொண்டு வந்திருந்த பெட்டிகளை எல்லாம் அறைக்குள் தள்ளி… கதவை சாத்தியபடி… அறையை நோக்கி திரும்பியவன்… அப்போதுதான் கண்மணி அறையில் அமர்ந்திருந்ததையே பார்த்தவன் போல… ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தியவனாக


“மேட்… டம்…. நீங்க என்ன என் ரூம்ல இருக்கீங்க… தப்பா வந்துட்டீங்களா… முதலாளி ரூம் டௌன் ஃப்ளோர்ல …” என்று கதவருகில் சாய்ந்து நின்றபடியே மொத்த நக்கலையும் குத்தகைக்கு எடுத்தவனாக ரிஷிகேஷ் பேசிக் கொண்டிருக்க…


கண்மணி கட்டிலை விட்டு எழுந்தவள்… அவனை நோக்கி வர…


”தெரியாம வந்துட்டீங்க போல முதலாளி மேடம்… நான் வேணும்னா கூட்டிட்டு போய் விடவாங்களா மேட்…” என்று முடிக்கவில்லை… அவன் அருகே வந்திருந்தவள்…. அவனை இறுக்கமாக அணைத்திருக்க… அடுத்து அவள் கேட்டது ரிஷியின் வார்த்தைகளை அல்ல… வார்த்தைகள் இன்றி மௌனமான அவனின் இதயத் துடிப்பை மட்டுமே…


அவனது கைகள் அவளை அணைக்கவில்லை… அவளை தனக்குள் அடக்கவும் இல்லை… மாறாக அவன் அவளுக்குள் அடங்க துடித்தான் என்பதே உண்மை… அந்தத் துடிப்பு அவன் இதயக் கூட்டில் தலை சாய்த்து சரணடைந்திருந்த அவன் கண்மணிக்கும் புரிய… தன் கைகளை உயர்த்தி அவன் தலையை வளைத்து தன் உயரத்துக்கு கொண்டுவந்தவள்… அவன் காயம்பட்ட நெற்றியில் தன் இதழைப் பதிக்க… ஈரம் கொண்ட அவள் இதழ்களின் ஸ்பரிசம் அவனுக்கு இலேசான வலியைக் கொடுக்க… இருந்தும் அவளை விலக்காமல் கண்களைச் சுருக்கி அந்த வலியையும் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்தான்…


கண்மணி இப்போது தன் நிலை வந்து…. மெல்ல விலகப் போக எத்தனிக்க அதை நொடியில் உணர்ந்த அவன் உடனே அவளை தனக்குள் கொண்டு வர ஆரம்பித்திருந்தான் கண்மூடிய மோனநிலையிலேயே…… அவளை விலக விடாமல் இப்போது அவன் காயம் படாத கை அவள் இடையை இறுகப்பற்ற… விலக நினைத்தவளோ இப்போது தன் இதழின் ஸ்பரிசத்தின் அழுத்தததைக் கூட்டி இருக்க… உலகின் மொத்த இன்பமும் அவன் ஒரு கைப்பிடிக்குள்… அதை என்றுமே விடக்கூடாது என்பதைப் போல அவளைத் தன்னோடு இறுக்க ஆரம்பித்திருந்தவன் ரிஷிகேஷ்….


“எந்த ஒரு விசயத்தோடும்… அட்டாச் ஆகக் கூடாதுன்னு ரொம்ப ரொம்ப எச்சரிக்கையா இருந்தேன் கண்மணி… நான் எதையும் சார்ந்திருக்கக் கூடாது… எதையும் ஈஸியா விட்டு விலகனும்… எப்போதும் இதை மைண்ட்ல வச்சுட்டுத்தான் சுத்திட்டு இருந்தேன்”


“ஹ்ம்ம்ம்…” என்றவளின் கண்கள் அவனைப் பார்த்திருக்க… அவள் இதழோ… தன் பதிவை அவன் நெஞ்சத்திற்கு மாற்றி இருந்தது….


ரிஷியின் இதயமோ தடதடக்க ஆரம்பித்திருந்தது… இதமான அவளின் இதழ் ஒற்றலில்


“டோட்டலி அடிக்டட்… அதுவும் ரவுடி பொண்ணுகிட்ட.. மொத்தமா சரண்டர்… “ வார்த்தைகள் மட்டுமே வெளி வர… கண்களை மூடி இருந்தவன் ஒரு கரத்தாலேயே பற்றி அவளைத் தன் உயரத்துக்கு தூக்கியும் இருக்க… கண்மணியும் அவனுக்குள் இயல்பாக அடங்கி இருக்க… மொத்தமாய் தன் இதழ் முத்தங்களை வாறி வழங்கிக் கொண்டிருந்தான் வள்ளலாக… அவள் முகமெங்கும்…


கண்மணி… அவள் தேகம் அறிந்த ஒரே இதழ் ஸ்பரிசம்… அவள் கணவனின் இதழ் ஸ்பரிசம் மட்டுமே… ரிஷி அவன் ஒருவனுக்காக மட்டுமே என தாய்… தந்தை… அவர்கள் அன்பு கூட… இதழ் கூட என யாருமே தீண்டாமல் … யாருமே அண்டாமல்… சுயம்புவாக வளர்ந்தவள்… எங்கோ தனசேகர்-இலட்சுமி மகனாக வாழ்ந்து கொண்டிருந்த ரிஷியை காந்தமாக தன்னை நோக்கி வரவழைத்தவள்… இன்று அவனை நோக்கி வந்து அவனிடம் மட்டுமே சரணடைந்திருந்தாள் மொத்தமாக… அவனையும் தன்னிடம் சரணடைய வைத்திருந்தாள்… ரிஷியின் கண்மணியாக


---


தன்னவளோடு வந்து… அங்கிருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தான் ரிஷி… அப்போதும் கண்மணியை தன்னை விட்டு இறக்காமல்…. தன் மடியிலேயே வைத்துக் கொண்டபடியேதான் அமர்ந்தவன்…


“அம்மு… எல்லார்கிட்டயும் போன் பண்ணிப் சொல்லிரு… உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்கடா” என்று தன் பாக்கெட்டில் இருந்து தன் அலைபேசியை எடுத்து அவளிடம் கொடுக்க… முதலில் இலட்சுமியிடம் ரித்விகாவிடம் பேசி விட்டு… அடுத்து தன் தாத்தா பாட்டியையும் அழைத்து… அவர்களிடம் தான் வந்து சேர்ந்து விட்ட விபரம் சொல்லி முடித்தவள்… கணவனை நோக்கினாள் இப்போது… என்ன என்று கண்களாலேயே கணவனும் மனைவியை நோக்க


“அர்ஜுன் கிட்டயும் பேசனும்…” என்றவளிடம்…


“நம்பர் என்கிட்ட இல்லையே…” என்ற ரிஷியும் இயல்பாகச் சொல்ல… அவளோ அர்ஜூன் எண்களை ரிஷியின் அலைபேசித் திரையில் அழுத்த… அர்ஜூனும் எடுத்திருந்தான்…


எண்ணில் இருந்து வந்திருக்க… அர்ஜுனுக்கு யாரிடமிருந்து வருகிறது எனத் தெரியவில்லை


“கண்மணி… அர்ஜூன்” இவள் சொல்ல… அர்ஜூன் மௌனித்தான்… சில நொடிகள்… அவள் வார்த்தைகளில்… அவள் சேர்த்துச் சொன்ன தங்கள் பெயர்களில்


அவன் மௌனம் புரியாதவளாக…


“அர்ஜூன் லைன்ல இருக்கீங்களா.. நான் சேஃபா வந்து சேர்ந்துட்டேன்” என்றவளிடம்


“ஹ்ம்ம்.. சேஃபா இரு… எதுனாலும் போன் பண்ணு” என்று அர்ஜூன் அவளிடம் சொல்ல…


“சேஃபான இடத்துலதான் இருக்கேன்… நீங்க என்னை நினைத்து வொரி பண்ணிக்க வேண்டாம்…” என்று வைத்து விட்டு… கணவனைப் பார்க்க…


ஏதாவது நக்கலாக… அர்ஜுனைப் பற்றி ரிஷி பேசுவான் என்று நினைத்திருக்க… அவனோ அப்படி ஏதும் பேசாமல்… அவளையும் விடாமல்… அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன்… பின் மெதுவாக நிதானமாக


”கண்மணி இந்த வார்த்தைக்கு அடுத்து… அடுத்து என்ன… ஈஸ்ட், வெஸ்ட்…நார்த்.. சௌத்… என எல்லாப் பக்கமும்… ரிஷிகேஷ் மட்டும் தான் வரணும்… மைண்ட்ல வச்சுக்கோ இனிமேல யார் கிட்ட பேசினாலும்… என்ன…” தாம்பத்திய இலக்கணத்தின் முதல் அதிகாரத்தை கணவனாக அதிகாரமாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தான்…


”ஈஸ்ட் வெஸ்ட்… நார்த் சௌத்… இதுமட்டும் இல்லை… இன்னும் 4 கிராஸ் டேரக்ஸ்ன்லயும் கண்மணிக்கு அப்புறம் ரிஷிகேஷ் தான்… புரிஞ்சுகிட்டேன்…. புரிஞ்சுகிட்டேன்… போதுமா… ஆனால் எனக்கு இப்போ பசிக்குது ரிஷி” என்று வாய்விட்டு சொல்ல… சிரித்தவன்… மெல்ல அவளிடமிருந்து கைகளை விலக்கியபடி….


“ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா… கீழ போகலாம்…” என்க… அவன் சொல்வதை எல்லாம் கேட்கும் நல்ல பிள்ளை அவள் என்பது போல தலை ஆட்டியவளாக அவனை விட்டு எழுந்தவள்… தன் துப்பட்டாவை அவன் தோள்களில் போட்டவளாக.. அவன் கன்னத்தில் மீண்டும் அழுத்தமாக இதழ் பதித்து விட்டுத்தான் அங்கிருந்து சென்றாள்…


---

குளித்து முடித்து… உடை மாற்றி… கூந்தலை உலர்த்தியபடியே வெளியே வந்தவள்… ரிஷியைப் பார்க்க… ரிஷி இன்னுமே அதே இடத்தில்… அந்த சோஃபாவிலேயேதான் அமர்ந்திருந்தான்…


அமர்ந்திருந்தான் என்று சொல்வதை விட… அமர்ந்திருந்தபடியே உறங்கியிருந்தான்… அவளின் துப்பட்டாவைக் கண்களில் கட்டியபடி…


உறங்கிக் கொண்டிருந்த அவன் முன்னே போய் நின்றவள்…


நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் கணவனை எப்படி எழுப்புவது என்று யோசனையுடன் அவனையே அவன் உறங்கும் அழகையே மனைவியாக ரசித்துக் கொண்டிருக்க… சட்டென்று அவன் கரங்கள்… அவளைத் தன்புறம் இழுத்து… அவன் மடிமீது விழவைத்து தன்னோடு அணைத்துக் கொள்ள… புத்தம் புது மலராக அவன் மீது விழுந்தவளின் ஈரக் கூந்தலும் அதன் வாசமும்… கூடவே அவள் தேகத்தின் வாசமும் என மொத்தமாக அவனை நோக்கி இழுக்க… கரங்கள் தானாகவே அவள் இடைதொட… ரிஷியே எதிர்பார்த்திருக்காத ஸ்பரி்சம்… அவனவளின் வெற்றிடையின் ஸ்பரிசம் அவன் கரங்கள் உணர… சட்டென்று கண்களை மூடி இருந்த துப்பட்டாவை கண்களில் இருந்து எடுக்க… அவன் கண்கள் கண்டதோ மனைவியின் புது அவதாரம்…


வைட் பேண்ட்… வைட் டீசர்ட்… என அதன் மேல் மெல்லிய லினன் பீச் வண்ண பிளேசர் வகை ஓவர் கோட்… நவீன மங்கையாக அவன் மீது வீழ்ந்திருந்தவளின் ஈரத் கூந்தல் அவன் முகத்தின் மேல் விரவியிருக்க… புருவம் சுருங்கி விரிந்து… அப்பட்டமாக வியப்பைக் காட்டி இருக்க… அவன் அகமோ… அவனுக்கான அவள் மீதான அத்துமீறலின் உரிமைக்கு பச்சைக் கொடி காட்டி இருக்க…. அவன் கைகள் உரிமையாக மெல்லிய அவள் டீஷர்ட்டை விலக்கி இன்னுமே அவள் இடையில் பதிய வைக்கப் போக… சட்டென்று அவன் கையைத் தட்டி விட்டவளை முறைத்தவனாக…


“நேத்து நைட் தூங்கவே இல்லம்மு…. உன்னாலதான் தூங்கலை… இப்பவும் தூங்க விட மாட்டேங்கிற” என்று கிறக்கமாகச் சொன்னவன்… இப்போது அவளை அணைத்தபடியே நன்றாக அமர்ந்து… அவளையும் கட்டிக் கொள்ள…


”கண்மணி” என்ற போதே அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை… ஆனால் அவளுக்கு கேட்க…


”ஹ்ம்ம்… சொல்லுங்க ரிஷி” என்றவளிடம்…


“ரிஷிக்கண்ணா… சொல்லு “ கிறக்கத்தோடு திருத்தினான் ரிஷி….


“என்ன ரிஷிக்கண்ணா” என்ற போதே…


“நீ என்னை மிஸ் பண்ணுனியா…. “ என்று தாபம் வழிந்த குரலில் கேட்க…


“இல்லையே…” என்றபடி அவன் முகத்தையேப் பார்க்க… தாபம் வழிந்த அவன் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிய… பாவமாய் முகம் மாறி இருக்க


குறும்பாகச் சிரித்தவள்…


“இன்னும் அதே ரிஷிதான் நீங்க… மாறிட்டேன் மாறிட்டேன்னு மேடை போட்டுச் சொன்னாலும்… மாறலை ரிஷிக்கண்ணா நீங்க… “ என்றவளின் குறும்புப் பார்வையில்…


“உன்னை…” என்று அவளை தன் அருகே கொண்டு வந்திருக்க… தன்னைப் பார்த்து அலைபாய்ந்த அந்தக் கண்களின் களைப்பை கண்டுகொண்டவன்… அதற்கு மேல் அவளிடம் வம்பளக்கவில்லை…


“வா.. வா… டையர்டா இருக்க… சாப்பிடப் போகலாம்… எழுந்திரு” நிமிடத்தில் மாறி இருந்தவன்… வேகமாக அவளை விட்டு எழ முயற்சிக்க… அவளோ அவனை எழ விடாமல்… அவனிடம் இன்னுமே ஒண்ற…


”கொஞ்சம் இறுக்கிப் பிடித்தாலே தாங்க மாட்ட போலடி… அவ்ளோ டையர்டா இருக்க… வா… என் வேகம்லாம் தாங்க மாட்ட தங்கம்… சாப்பிட்டு வருவோம்… பார்த்தால் ஒழுங்காவே நீ உன்னைப் பார்த்துகிட்ட மாதிரியே தெரியல… இந்த இலட்சணத்தில... எங்களப் பார்க்க நீங்க வந்தீங்களா???” என்றபடியே அவளை வலுக்கட்டாயமாக தன்னை விட்டு தள்ளி அமர வைத்து விட்டு எழ… தன்னை விட்டு எழுந்தவனை நிறுத்தும் விதமாக…. கண்மணி இப்போது வேகமாக அவன் கையை பிடிக்கப் போக… ஆனால் அவன் போட்டிருந்த அவள் துப்பட்டாவில் அவள் கை பட்டு விட…


ரிஷி மனதுக்குள் சிரித்தபடி அதே நேரம் இறுக்கமாக முகத்தை வைத்தபடியே….


“மேடம்… கொஞ்சம் என்னை விடறீங்களா… இல்லை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” வேண்டுமென்றே சீண்ட


“விடலைனா என்ன பண்ணுவீங்க ரிஷிக்கண்ணா” என்றவள்…. தான் பிடித்திருந்த அவள் துப்பாட்டாவின் முனையைத் தன் புறம் இழுத்தாள்… அவன் சீண்டலை நொடியில் புரிந்தவளாக… அவளும் அவன் சீண்டலுக்கு ஈடு கொடுக்க… ரிஷி விடுவானா என்ன…. வேண்டுமென்றே… அவள் மேல் விழுந்திருக்க… அவனைத் தாங்க முடியாமல் கண்மணி திணறினாள்தான்… இருந்தும் சமாளித்தவளாக… அவனைத் தாங்கிக்கொண்டு அவனைப் பார்க்க


“என்ன சொர்ணாக்கா… பேச்சுல மட்டும் தான்… ரவுடி.. ரவுடியிசம் எல்லாம் போல…” கண் சிமிட்டியவனின் தாபப்பார்வையில் முதன் முறையாக… அந்த அறையின் ஏசிக் குளிரையும் தாண்டி… குப்பென்று அவளைச் சுற்றி வெப்பம் சூழ்ந்தது போல் இருக்க..… ரிஷியின் கரங்களோ அவளைச் சுற்றி வளைத்திருக்க… அவள் இதழ்களோ ரிஷியின் மிக மிக அருகில்…


இதழ் தீண்டத்தான் விரல்கள் முதலில் பயணித்தன... ஆனால்....


சில மணி நேரங்களுக்கு முன் ரிஷி அவளிடம் கிண்டலுக்குச் சொல்லி இருந்தான்… அவள் அணிந்திருந்த மூக்குத்தி காணவில்லை என்று… அது இப்போது உண்மையாகவே நடந்திருக்க…


ரிஷியின் விரல்கள்... தன் பயணத்தை மாற்றி... இதழைத் தாண்டி மெல்ல உயர்ந்து அவள் மூக்குத்தி கல்லை தொட்டுப் பார்க்க ஆரம்பித்திருக்க…. அவன் கண்களோ…. தன்னவளை… அவள் கண்களைப் பார்க்க நினைக்க… முதன் முதலாக ரிஷி மனதில் தடுமாற்றம்…


அவன் தேடிய… தேடிக் கொண்டிருக்கும் பார்வை… அதைக் கண்மணியிடமும் உணராமல் போய் விடுவோமோ… தன்னவளிடம் ஏமாறத் துணிவில்லாமல்… அவள் கண்களைப் பார்க்கத் தயங்கியவனாக… பார்வையை துடித்துக் கொண்டிருந்த அவள் இதழில் மாற்றியவன்…. மெல்ல அதன் துடிப்பை அவன் உதடுகளால் அடக்கத் துடித்தவன்… மெதுவாகப் ஒற்ற நினைத்த போதே… அவன் எடுத்து வைத்திருந்த தீர்மானம் அவன் மண்டைக்குள் ஓங்கி ஒலிக்க… சட்டென்று நிமிர்ந்தவன்…. தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு… எழுந்தவனாக தலைக் கேசத்தைக் கோதியபடி… தன்னை மீட்டுக் கொண்டவனாக


“அம்மு… மாமா… வெயிட் பண்ணுவாங்க…. வா போகலாம்” என்று அவள் எழுவதற்கு தோதாக உதவி செய்ய கை நீட்ட…


நீட்டிய கரங்கள் தான் அவனுக்கு நினைவிருந்தது… அதன் பின் ரிஷி அவனையே மறந்திருக்க மற்றதெல்லாம் ஞாபகம் இருக்குமா என்ன????!!!!


கண்மணி இதழ்கள்…. அவள் இதழ்களின் ஒவ்வொரு வரிகளும் அவன் இதழ்களின் ஒவ்வொரு வரிகளோடு சேர்த்து ஒரே வரிசைகளாக மாறி மாற்றி கொண்டிருக்க… கொண்டிருக்க... ரிஷிகேஷ் என்னும் 27 வயது ஆண்மகன்… கண்மணி என்னும் 23 வயது பெண்ணவளின்… சிறு இதழ் வசியத்திற்கே தன் மொத்த இளமையையும் தொலைத்து நிராயுதபாணியாக அநியாயமாகத் தோற்றுப் போயிருந்தான்……


தோற்றானோ!!!… தொலைந்தானோ!!!… அதைப் பற்றி எந்தக் கவலையுமின்றி… தன் கண்ணின் மணியானவள் தன்னை மொத்தமாக களவாட ஏதுவாக… கண் மூடி அவளிடம் தன்னை அர்ப்பணித்திருக்க…. கண்மணி அவனை வென்று கொண்டே இருந்தாள் ரிஷியின் கண்மணியாக… அவன் தோற்றுக் கொண்டே இருந்தான் தன் கண்ணின் மணியாக மாறி இருந்தவளிடம்.… நொடிகள்... நிமிடங்கள்... கடந்தும்… ஏன் காலம் முழுதுமே…


அதே நேரம் ரிஷியின் அலைபேசியும் ஒலிக்க… ஸ்வரங்கள் அதன் அலைவரிசையில் இருந்து மாறிய உணர்வு இருவருக்கும்… கண்மணி மெல்ல அவனை விட்டு விலக நினைக்க… ரிஷியோ இப்போது அவளை விலக விடவில்லை… மாறாக அவளை அணைத்தபடியே… அலைபேசியை எடுத்துப் பார்க்க... நட்ராஜ்…


”மாமாதான்… பசி தாங்க மாட்டார்…. டேப்லட் வேற போடனும்… கீழ போகலாம்டா…” என்ற போது அவன் குரலே அவனிடம் இல்லை…


ஒரு மாதிரியான குற்ற உணர்ச்சி… அவளே அவனை எடுத்துக் கொள்ள நினைத்த போது… இவன் வேண்டுமென்றே அவளை அவள் மோனநிலையைத் தவிர்த்தது போன்ற உணர்வு அவனுக்குள் தோன்ற…. அவளைப் பார்த்தவன்… அவள் இன்னுமே அப்படியே இருக்க… தாங்க முடியவில்லை அவனால்… விலகிய அடுத்த நிமிடமே… அவளை மீண்டும் தன்னோடு அணைத்துக் கொண்டவன் சட்டென்று அழுத்தமாக அவளின் இதழில் முத்தமொன்றைக் கொடுத்து…. அவளை ஆற்றுப்படுத்தி… இயல்புக்கு கொண்டு வர வைத்து பின் உடனடியாக விலக்கியவன்… அடுத்த சில நிமிடங்களில் தன் மனைவியோடு அந்த அறையை விட்டும் வெளியேறி இருக்க… இப்போது அந்த அறை அதன் குளிர்ச்சியை மீண்டும் தனக்குள் தக்கவைத்திருந்தது தற்காலிகமாக!!!…


/*மலையில் விழும் அருவி போலவே

மனதில் எழும் அலைகள் கோடியே

உனக்கு வரும் உணர்ச்சி போலவே

எனக்கும் வரும் இனி தோழியே


முதல்முதல் தொடுவது

தினம்தினம் வளர்வது


முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்

சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்...


சுகம் பாதி பாதி ஆகும்

ஒரு போதை வந்து சேரும் பொழுதிது

ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை…*/

2,856 views4 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page