top of page

கண்மணி... என் கண்ணின் மணி-57

Updated: Dec 3, 2021

அத்தியாயம் 57 :


அழுகை என்ற உணர்ச்சி… கண்மணிக்கு அந்நியமாகப் போயிருந்ததோ என்னவோ… ஓவென்று கதறி அழவேண்டும் போல இருக்க… அவளால் அது முடியவே இல்லை… அழுகைக்கு கூட பழக்கம் இருக்க வேண்டும் போல….


தூரமாக தூக்கிப் போட்டிருந்த அலைபேசியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் கண்மணி…. கோபத்தை அடக்கினாளா… கோபத்தைக் காட்டத் துடித்தாளா… அழுகையை அடக்கினாளா… அழ நினைத்தாளோ… எதுவுமே அவளுக்கு தோன்றவில்லை…


ரிஷியோடு பேசினால்… தன் கவலை எல்லாம் போய் விடும் என எவ்வளவு சந்தோசத்தோடு… நம்பிக்கையோடும் அவன் அழைப்பை எடுத்தாள்…. மற்றதெல்லாம் மறந்து விட்டு…


ஆனால்… அவனோ?????…


அமைதியாக வெறித்தாள்… சற்று தள்ளி கேட்பாரற்றுக் கிடந்த அலைபேசியை… அதன் நிலை தன் நிலையை நினைவுபடுத்துவது போல் இருக்க… வேகமாக தன் பார்வையை அதிலிருந்து விலக்கி… தன் தாயின் புகைப்படத்தில் மீண்டும் தன் பார்வையை வைத்திருந்தாள்


அலைபேசி் அழைப்பு அப்படியே இருந்தது இருமுனையிலும் அணைக்கப்படவில்லை… கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்கும் மேலாக அதே நிலையில் தான் இருந்தது… கட் செய்யாமல்தான் இவளும் தூக்கி எறிந்திருந்தாள்… அவனுமே இன்னும் கட் செய்ய வில்லை போல… ஆனால் அடுத்த சில நிமிடங்களில் கண்மணியின் அலைபேசி… தானாக அதன் உயிரை நிறுத்தி இருந்தது… அதன் சார்ஜ் இல்லாத காரணத்தால்…


அந்த அலைபேசியின் நிலைதான் கண்மணிக்கும்… அவளின் மொத்த சக்தியும் அவளுக்கு வடிந்தார்ப் போல உணர்வு… எத்தனை உற்சாகம் அவள் குரலில் அவனோடு பேச ஆரம்பித்த போது…


---


”ரிஷி… நான் வீட்டுக்கு வந்துட்டேன்…” என்றவள் தன் குரலில் மற்றதெல்லாம் மறைத்து உற்சாகத்தை வரவைத்தவளாக அவனிடம் பேச ஆரம்பிக்க…


எதிர்முனையில் பலத்த நிசப்தம்… அழைத்தவன் அவன்தான்… ஆனால் அவனுக்கு முன்னேயே இவளும் பேசி விட்டாள் தான்… இன்னும் என்ன…


“சாரி… வந்த உடனேயே போன் பண்ணலாம்னு தான் நினைத்தேன்… சாரி ரிஷிக்கண்ணா “ இப்போது நிசப்தம் மட்டுமே


“அத்தை… நான் வருவேனோ மாட்டேனோன்னு டேப்லட் கூட எடுத்துக்க்காம முழிச்சுட்டு இருக்காங்க ரிஷிக் கண்ணா…” தன் அத்தையைப் பற்றி செல்ல புகாரை வைக்க அப்போதும் ரிஷியின் புறம் மௌனம் மௌனம் மட்டுமே


ரிஷியின் மௌனம் எப்போதுமே கண்மணிக்கு பிடிக்காது… அவன் அப்படி இருந்தால்… அவன் மனதில் ஏதோ ஒன்று இருந்து அவனை அரித்துக் கொண்டிருக்கிறது என்பது அவள் மட்டுமே உணர்ந்தது…


“ரிஷிம்மா… ஓகே தானே… என்னாச்சும்மா” எனும் போதே அந்த வார்த்தைகளை முடிக்கக் கூட விடவில்லை அவன்…


”விக்கிய அடிச்சியாடி” பட்டென்று தெறித்து விழுந்தன வார்த்தைகள்… ரிஷியிடமிருந்து… ஆக்ரோஷமாகவே..


கண்மணிக்கும் புரிந்தது… இதற்கு காரணம் யார் என்று… விக்கியே ரிஷியிடம் சொல்ல வேண்டாமென்று சொல்லியும்… ரிதன்யா ரிஷியிடம் சொல்லி இருக்கின்றாள் என்பது…


இனி இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது… அறைந்தது உண்மைதானே…


“ஆமாம்… அவர்” என ஆரம்பிக்கும் போதே… அவளைப் பேசவே விடாமல்


“போய் ரிதன்யாக்கிட்ட அவன் நம்பர் வாங்கி சாரி கேளு.. முதல்ல…” சொன்னவனிடம்…


“எதுக்கு….” கேட்டவளின் குரலில் அவளையுமறியாமல் மிரட்டல் தொணி வந்திருந்ததுதான்…


”அவர் பேசினதுக்கு நான் அறைந்தேன்… அவ்ளோதான்…” தன் நிலைப்பாட்டை அவனுக்கு சொல்லி முடிக்க


“என்ன வேணும்னாலும் அவன் பேசி இருக்கட்டும்… அதை நீ என்கிட்டதானே சொல்லிருக்கனும்… அதை விட்டுட்டு… உனக்கு யார் கை நீட்ற உரிமைலாம் கொடுத்தது… 27 வயசுப் பையனை… கை நீட்டி அடிக்கிறது சாதாரண விசயமா… உன்னை ரவுடின்னு சொல்வேன் தான்… அதெல்லாம் எங்கூட மட்டும் தான் இருக்கனும்… எங்கிட்ட மட்டும் தான் இருக்கனும்” நிதானமான குரலில் ரிஷி சொன்னாலும் அழுத்தமான கண்டிப்பு மட்டுமே இருக்க


”உன் அப்பா… உன் தாத்தா பாட்டி… இவங்கள்ளாம் உன்னைக் கேள்வி நீ என்ன செய்தாலும் கேட்காமல் இருக்கலாம்… அதுக்காக நானும் அப்படியே இருப்பேன்னு எதிர்பார்க்காத… விக்கி கிட்ட மன்னிப்பு கேட்கிற…”


”ரிஷி” இடை மறித்திருந்தாள் கண்மணி…


“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது… விக்கி உங்க ஃப்ரெண்ட்னா அது உங்களோட… நான் அதுக்கு அசிங்கபட முடியாது… நான் போனை வைக்கிறேன்” கண்மணியும் கறாராகவே சொல்ல…


“ஏய்… என்னடி… பேசிட்டு இருக்கேன் நான்… போனை வைக்கிறேன்னு தெனாவெட்டா சொல்ற…” என்று ரிஷியும் எகிற ஆரம்பிக்க…


“நீங்க வைக்கும் போதெல்லாம் தப்பு இல்லை அப்படித்தானே… ப்ச்ச் ரிஷி நான் வைக்கிறேன்… எனக்கு உங்ககிட்ட இப்படிலாம் பேசவே பிடிக்கலை… ப்ளீஸ் வைக்கிறேன்… நாளைக்கு பேசுறேன்… ஆனால் மன்னிப்பு மண்ணாங்கட்டினா… சாரி… பேசாதீங்க ”


இப்போது ரிஷி…


“உனக்கு சாரி கேட்கிறதுல அவ்ளோ பிரச்சனை… அப்படித்தானே கண்மணி… நடு ரோட்ல வச்சு அவனை அடிச்சுருக்க… அவன் எனக்காக மட்டும் தான் உன்னை பேசாம விட்ருக்கான்… அவன் எவ்ளோ கோபக்காரன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் கண்மணி…”


”இருந்துட்டு போகட்டும்… அது அவனோட… எவன் வந்தாலும் சமாளிச்சுப்பேன்… எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுங்க… உங்க தங்கச்சி எத்தனையோ தடவை என்னை இன்சல்ட் பண்ணிருக்காங்க… அப்படி பண்ணும் போதெல்லாம்… அவகிட்ட பேச முடியாமல் அவளுக்கு பதிலா சாரி கேட்டுட்டு வந்து என்கிட்ட நிற்பீங்கதானே… ஃப்ரெண்ட் அவ்ளோ முக்கியம்னா… வேதனைப் படுறார்னா… இன்னைக்கு பொண்டாட்டிக்குப் பதிலா ஃப்ரெண்ட் கிட்ட சாரி சொல்லிருங்க… நான்… கேட்க முடியாது”


”கண்மணி… கண்மணி“ என்று மட்டும் ரிஷி சொல்லி நிறுத்தியவன்.. தலையைக் கோதியவனாக…


”ஏன்டி புரிஞ்சுக்க மாட்ற… ரிதன்யாவும் நீயும் ஒண்ணா எனக்கு… அவ எனக்கு தங்கை… ஒரு லிமிட் இருக்கு… உன்கிட்ட எனக்கு அது இல்லை…. புரியுதா புரியலையா உனக்கு”


“புரியல… போதுமா… புரிஞ்சுக்கவும் விரும்பல… உங்களுக்காக, உங்க தங்கை குடும்பம்னு பொறுத்துக்கலாம்… உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சகிச்சுக்கனும்னு… இந்த கண்மணிக்கு தலை எழுத்து இல்லை… இன்னைக்கு விக்கினு வந்து நிப்பீங்க… நாளைக்கு இன்னொருத்தன்… இன்னும் எத்தனை ஃப்ரெண்டோ… சோ அதை நீங்க புரிஞ்சுக்கங்க… இதுதான் கண்மணி… இப்படித்தான் நான்”


“ஓ அப்படிங்களா மேடம்… நீங்க கண்மணி மட்டும் இல்லை… கண்மணி ரிஷிகேஷ்… என் பொண்டாட்டி இப்படித்தான் இருக்கனும்னு நினைக்கிறது தப்பா…. அதை உங்ககிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணக் கூடாதா… ”


கண்மணி ஏதோ பேச வரும் போதே…


“நீ என்னை சாதாரண ரிஷிகேஷ்… உங்க அப்பாகிட்ட வேலை பார்க்கிறவன்னு மட்டமா நினைக்கலாம்… என்கிட்ட எதையும் எதிர்பார்க்காமல் இருக்கலாம்… ஏன் உன் புருஷனா கூட நினைக்காமல் இருக்கலாம்… அது உன்னோட பிரச்சனை… ஆனால் என் மனைவியா… என் ஃப்ரெண்டுக்கு நீ ரெஸ்பெக்ட் கொடுக்கனும்.. விக்கிகிட்ட மன்னிப்பு கேட்கணும்… இது என்னோட எக்ஸ்பெக்டேஷன் இல்லை… ஆர்டர்… யோசிச்சுக்கோ…”


கண்மணியின் புருவம் சுருங்கியது…


“விக்கி கிட்ட மன்னிப்பு கேட்கலைனா” கண்மணி நிறுத்த


“நான் உன் கூட பேசுற கடைசி கால் இதுவாகத்தான் இருக்கும்…” ரிஷியும் அதிரடியாகவேப் பேசினான்…


நிதானித்தவள்…


“ஓ… புரியுது… ஆனால் உங்களுக்கு எப்படி உங்க வைஃப்னா எக்ஸ்பெக்டேஷன் இருக்குமோ… எனக்கு என் ஹஸ்பெண்ட் எப்படி இருக்கனும்னு எக்ஸ்பெக்டேஷன் இருக்கும் தானே… கேட்டுக்கங்க…”


“விக்கி, நான் மன்னிப்பு கேட்கிறது இதெல்லாம் இருக்கட்டும்… அந்த விக்கி… எனக்குப் பிடிக்கலை… அவனோட ஃப்ரெண்ட்ஷிப் எனக்குப் பிடிக்கலை… அந்த விக்கி இதுவரை எங்க இருந்தானோ… சாரி சாரி… இருந்தாரோ அங்கேயே இருக்கட்டும்… அப்படியே இருக்கட்டும்… அதாவது அவரோட ஃப்ரெண்ட்ஷிப் கட் ஆனது கட் ஆனபடியே… இது ரிஷியோட மனைவியா என்னோட எக்ஸ்பெக்டேஷன் மிஸ்டர் ரிஷி…. நான் உங்களுக்கு ஆர்டர் போடறேன்னு கூட வச்சுக்கலாம்… “


“என்ன மிரட்டறியா…” ரிஷி சிரித்தபடி நிதானமாகக் கேட்டாலும்… கோபம் மட்டுமே அதன் இறுதி வடிவமாக இருக்க


“மிரட்டறதுல்லாம் மத்தவங்க கிட்ட… மத்தவங்களும் நீங்களும் ஒண்ணா… யோசிச்சுட்டு பேசுங்க… விக்கி… மன்னிப்பு இதைத் தவிர பேசனும்னா… பேசலாம்… இல்லை… “ என்று கண்மணி நிறுத்தி இருக்க…


”சோ நான் சொல்றதைக் கேட்க மாட்ட…”


“இதே கேள்வி நானும் கேட்கலாம்ல” கண்மணியும் தன் பிடிவாதத்தில் இருக்க


”விக்கிகிட்ட மன்னிப்பு கேட்க மாட்ட… இதுதான் உன் முடிவு… அப்படித்தானே…”


மௌனமாகவே இருக்க


“வைடி போனை” என்று ரிஷி கடுப்போடு கத்தினான் தான்… ஆனாலும் அவன் போனை வைக்கவில்லை


என்னதான் சண்டை போட்டாலும்… அவனையுமறியாமல் பேச்சுவாக்கில் கடைசி அழைப்பு எனச் சொல்லி இருக்க… அவனுக்கும் உள்ளுக்குள் உதறல் வந்திருந்ததுதான்…. வைத்தால் தானே கடைசி அழைப்பாக இருக்கும் என்று நினைத்து விட்டானோ??? என்னவோ போனக் கட் செய்யாமல் வைத்திருக்க


“நீங்க தானே போன் போட்டீங்க… அப்போ நீங்களே கட் பண்ணுங்க” கண்மணிக்கும் அதே நிலைதான் போல…


இப்போது இரண்டு பேருக்குமே விக்கி என்பதெல்லாம் மறந்திருக்க…. இருவருக்குமே அவர்கள் பேசிய வார்த்தைகளில்தான் மனம் நின்றிருந்தது…


விக்கி விசயத்தை விட்டு விட்டு அவன் வேறு ஏதாவது பேசுவானா என்று இவள் எதிர்பார்த்திருக்க…


“ரிஷிக்கண்ணா” என்று அழைத்து எப்படியாவது தன்னை சமாளிப்பது போல ஏதாவது பேசுவாளா… என அவன் மனமோ எதிர்பார்க்க…


ஏமாற்றம் தான் இருவருக்குமே கிடைத்தது… இருவருமே அமைதியாகவே இருக்க… இப்போது ரிஷி இறங்கி வந்திருந்தான் தானாகவே…



”ரவுடி… இப்போ என்னடி பிரச்சனை உனக்கு… உன்னை… உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல” புலம்பலாக ஆரம்பிக்க


“அப்போ ஏதாவது நல்ல ஹாஸ்பிட்டல் பார்த்து ஒரு டாக்டர் கிட்ட போங்க… அங்க ஏதாவது தீர்வு கிடைக்கும்” பட்டென்று கண்மணி சொல்ல…


அதைக் கேட்ட ரிஷிக்குமே ஒரு நிமிடம் அவள் சொல்ல வந்தது புரியவில்லை தான்… புரிந்து கொண்ட போதோ… அவனையும் மீறி முகம் மாறியதுதான் ஆனால் கோபத்தில் அல்ல… ஏனோ அவள் அதிகப்படியாகப் பேசியது கோபத்தை ஏற்படுத்தாமல் கொஞ்சம் அவனை இலகுவாக்கியது தான்…


“ஹ்ம்ம்.. கை மீறுறது மட்டுமில்லாமல்… இப்போ வாயும் மீறுது… டாக்டர் கிட்ட நான் போகனுமா… இன்னும் 2 வீக்ஸ் தான்… வந்து இதுக்கு எப்படி பதில் கொடுக்க முடியுமோ அப்படி பதில் கொடுக்கிறேன்” ரிஷியின் குரல் முற்றிலுமாக தணிந்திருக்க…


கண்மணி அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை…


”எனக்கு உங்ககிட்ட எந்தப் பிரச்சனையும் இல்லை ரிஷி… அதிலும் உங்ககிட்ட சண்டை போடனும்னு ஆசையும் இல்ல ரிஷி…. அதேபோல வேற யாரைப் பற்றியும் பேசி நம்ம உறவைக் கேள்விக் குறியாக்கவும் விரும்பலை… இவ்வளவு சொல்லியும்.. அந்த விக்கிதான் உங்களுக்கு முக்கியம்னா… நீங்க சொன்ன மாதிரி… கடைசி காலாவே இருந்துட்டு போகட்டும்…“ கண்மணி மிகத் தெளிவாக அவள் நிலையில் இருக்க…


ரிஷிக்கு ரத்தம் மொத்தமும் உச்சியில் ஏறி கொதித்தாற்ப் போல நிலை… சற்று முன் தணிந்திருந்த அவன் உக்கிரத்தின் உச்சத்தில் இருந்தான்… விக்கியெல்லாம் அவன் உக்கிரத்தின் காரணம் அல்ல…


அவன் ’கடைசி அழைப்பு’ என்று சொன்ன போது வராத கோபம், ஆத்திரம் ஆவேசம் எல்லாம்… அவளது சொன்ன போது வார்த்தைகளில் அந்த சொற்கள் வந்த போது அனைத்து வந்திருக்க… அவனால் கண்மணியின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை… அறைக்குள் கோபாவேசாமாகவே வந்தவன்…. அடுத்த நொடி அலைபேசியை அவனது படுக்கையில் எறிந்திருக்க… இங்கு கண்மணியும் தூக்கித் தூரப் போட்டிருந்தாள் அலைபேசியை… ஆனால் இருவருமே அவர்களது அழைப்பைக் கட்செய்யவில்லை…


”அது எப்படி அவள் சொல்லலாம்… நான் ஏதோ… ஒரு ஃப்ளோல வாய் தவறிச் சொன்னா… அதைப் பிடிச்சுட்டு அவளும் சொல்வாளா…” அர்த்தமில்லாத சிறுபிள்ளைத்தனமான கோபமே இப்போதும் அவனுக்குள்…


தன் அலைபேசியைப் பார்த்தபடியே இருந்தவன்…


“நான் கால் கட் பண்ணல… போனையே ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைக்கிறேன்… உன் அப்பா போன்ல வந்து ரிஷிக்கண்ணா… ரிஷிம்மான்னு… வருவேல்ல… அப்போ இருக்குடி உனக்கு” என்றபடி அவளது அழைப்பை அணைக்காமல்… நேரடியாக போனை அணைத்து வைத்தான்… அறிவாளிக் கண்மணியின் அறிவாளிக் கணவனாக…


ஆனாலும் மனம் அமைதி அடையவில்லை… அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இருந்தவன்… உறங்கிக் கொண்டிருந்த நட்ராஜின் அலைபேசியை வேறு பார்த்தபடிதான் இருந்தான்…


இவன் அப்படி இருக்க… காலையில் இருந்து அலைந்த அலைச்சலா… களைப்பா… மழைநீரில் நனைந்ததா… உடல் வேறு அனலாக கொதிக்க கண்கள் இரண்டும் எரிய ஆரம்பித்திருக்க கண்மணிக்கு மனதின் கவலையையும் மீறி உறக்கம் வர ஆரம்பிக்க… தான் அமர்ந்திருந்த இடத்திலேயே… அப்படியே தலை சாய்த்து படுத்தவள்… அடுத்த நொடி உறங்கியும் இருந்தாள்….


---


சிட்னி-ஆஸ்திரேலியா டிசம்பர் 24 - காலை மணி 11


“ரிஷி… ரிஷி” நட்ராஜ் சாரின் குரல் ரிஷியின் காதின் அருகே கேட்க… படபடவென எழுந்தவனுக்கு… அடுத்த நொடி அதிகாலையில் கண்மணியோடு நடத்திய வாக்குவாதம் தான் வர… மற்றதெல்லாம் மறந்து….


“போன் பண்ணிட்டா” மனதுக்குள் எண்ணியவனுக்கு... முகம் புன்னகையைத் தழுவ முயல… இருந்தாலும் அடக்கியபடி… சாதரணமாக எழுவதைப் போல எழுந்து அமர்ந்தவன் மணியைப் பார்க்க… அதுவோ 11 என்று காட்ட…


நாளையும் அதற்கடுத்த மறுநாளும்… கிறிஸ்மஸ் பார்ட்டி வித் டே அவுட் வைத்திருக்க… ரிஷியும் நட்ராஜும் செல்வதாக முன்னமே திட்டமிட்டதுதான்…


“ஓஎம்ஜி… ஃபேபியோ(Fabio) பார்ட்டிக்கு லேட் ஆகிருச்சு” என மணியைப் பார்த்தபடியே சொல்லிக் கொண்டு நட்ராஜைப் பார்த்தான்… அவர் கையில் அலைபேசி இருக்க… அதைத் தராமல் இருக்க


“மணியா…” என்றபடி கைகளை நீட்டியவனிடம்


“இல்லை… மிஸ்டர். ஃபேபியோ… உங்க போனுக்கு ட்ரை பண்ணினாராம்… உங்கள பேசச் சொன்னாரு” நட்ராஜ் சொன்னபோதே ரிஷிக்கு மற்றதெல்லாம் கேட்கவில்லை… கண்மணியின் அழைப்பு வர வில்லை என்று தெரிந்த போதே அவனுக்கு மற்றதெல்லாம் காதில் விழ வில்லை…


கண்மணியும் ரிஷியும் வழக்கமாக பேசிக் கொள்ளும் நேரம் தான்… அவளுக்கு அதிகாலை… இவனோ ஷூட் இல்லையென்றால்… கேரேஜ் செட்டில் இருப்பான்…


இந்தியா கால் இல்லை எனும் போதே… மனநிலை மாறி இருக்க அமைதி ஆனவன் எழாமல் தலையில் கைவைத்தபடி கட்டிலிலேயே படுத்திருக்க…


“உடம்பு ஏதும் சரி இல்லையா… சீக்கிரம் எழுந்துருச்சுருவீங்களே தம்பி…” என்றவர் அவன் நெற்றியில் கை வைத்துப் பார்க்க… சாதரணமாகத்தான் இருக்க… அவரிடம் ஏதும் காட்டிக் கொள்ளாமல் இப்போது எழுந்தவனாக குளியலறைக்குச் சென்றவன்… வெளியே வர…


வந்தவனிடம்


“ரிஷி… நீங்க போய்ட்டு வாங்க… நான் இங்கயே இருந்துக்கறேன்” நட்ராஜ் … அவனிடம் பேச ஆரம்பித்தார்…


”ஏன்… என்னாச்சு…. நம்ம ஸ்பான்சர் அவரு… அவர் முதன் முதலா வைக்கிற பார்ட்டி… நாம போய்த்தான் ஆகனும்” கண்ணாடி முன் நின்றபடியே தலை முடியை ஹேர் ட்ரையரால் உலர்த்தியபடியே கேட்ட போதே…. கண்மணி அன்று சொன்னது ஞாபகத்துக்கு வர… கொஞ்சம் சுதாரித்து நட்ராஜிடம் திரும்ப…


“எனக்கு கொஞ்சம் தனியா இருக்கனும் ரிஷி… “ என்றவரின் நிலையை ரிஷியும் இப்போது புரிந்து கொண்டவனாக


”சரி விடுங்க…” என்றவன்… ஒன்றுமே சொல்லாமல் அவரது அலைபேசியை வாங்கியவன்… அவர்களது ஸ்பான்ஸர் ஃபேபியோவுக்கு அழைத்து…. தாங்கள் இருவருமே வரவில்லை என சொல்லி விட… நட்ராஜ் அதிர்ந்து பார்த்தவராக…


“அந்தப் பாப்பா… ஃபீல் பண்ணுமே தம்பி…. “ கார்லாவை நினைத்து நட்ராஜ் சொல்ல…


புன்னகைத்தான் ரிஷி…


“இண்டெர்வியூக்கு அப்புறம்… கார்லா மேல சார்க்கு திடீர்னு அக்கறைலாம் வருது…” என்றான் நட்ராஜை சரியாக கணித்து…


நட்ராஜ் பதில் பேசவில்லை… ரிஷி தொடர்ந்தான்


“அந்த பாப்பாலாம் அவ்ளோ அடமண்ட் கிடையாது… சொன்னா கேட்டுக்கும்…”


“நீங்க பெத்து வளர்த்து வச்சுருக்கீங்களே… அந்தப் பாப்பா இல்லையில்லை அந்த ரவுடிக்குத்தான் பிடிவாதம்… திமிர்… எல்லாம்… அதிகம்” இதை வெளியில் சொல்லவில்லை மனதுக்குள் சொல்லிக் கொண்டவனாக…


“எனக்குமே மூட் இல்லை சார்… மூட் இல்லாமல் பார்ட்டி போய் வேஸ்ட் தான்…” என்றபடி அமர்ந்தவன்…


“வீட்ல இருந்து கால் பண்ணாங்களா… யாரும்… என் போன் ஸ்விட்ச் ஆஃப்… அதுதான் கேட்டேன்” என்று எதேச்சையாக கேட்பது போல ரிஷி நட்ராஜிடம் கேட்க…


”மணி… காலையிலேயே போன் பண்ணிரும்… பண்ணலை… போட்டாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வந்துச்சு… நீங்க ரித்விக்கு பண்றீங்களா” என்று நட்ராஜ் சொல்ல..


அவரிடம் வேறெதுவும் பேசாமல்


“கொஞ்சம் லேட் ஆகட்டும்… பண்றேன்…” என்று அவரிடம் முணங்கியவனாக தங்கள் அறையை விட்டு வெளியேறி இருந்தான் ரிஷி…


என்னதான் ரிஷி இயல்பாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும்… அவன் முகமே அவன் சரி இல்லை என்பதை நட்ராஜுக்கு காட்டிக் கொடுக்க… கட்டிலில் அவன் அப்படியே விட்டு விட்டுப் போன அலைபேசியை பார்த்தபடி நின்றிருக்க… வெளியே போனவன் அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் அறைக்குத் திரும்பி இருக்க… ரிஷி எப்போதும் போல் இல்லை… என்பதை மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது அவரால்


ஏனென்று தெரியவில்லை என்றாலும்… தன்னால் தானோ… தான் கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு வர மாட்டேன் என்பதால் தானோ யோசித்தபடியே… தானும் வருவதாகச் சொல்லி… ரிஷியை அழைக்க… ரிஷியோ… அப்போதும் மறுத்து விட… அதே நேரம் உம்மென்று அவன் அமர்ந்திருக்க…


இப்போது ஓரளவு அவராலும் புரிந்து கொள்ள முடிந்தது… ரிஷியின் முகவாட்டத்திற்கு தன் மகள் தான் காரணம் என்பது… தன் மகளிடம் பேச முயன்றார்… அதுவும் முடியவில்லை…


எப்போதுமே அவர் ஆண்டின் இறுதி வாரங்களில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார்தான்… அதே போல வருடத்தின் முதல் நாளில் தன்னை மீட்டெடுத்துக் கொளவார்தான்…


இன்று அந்தத் தனிமையை மகள் - மருமகனுக்காக ஒதுக்கி வைத்தவர்… அப்படி கூட சொல்ல முடியாது… மருமகனின் மன மாற்றத்துக்காக… அவனை வெளியே அழைத்து செல்ல நினைத்தவர்… தன் மனைவியின் ஞாபகங்களை அவனிடம் பயன்படுத்தினார்…


“ரிஷி… என்னமோ தெரியல… பவி ஞாபகம் அதிகமா வருது… அவ குரல்… அவ வீடியோலாம் பார்த்த பின்னால… சுத்தமா முடியலை… என்னை எங்காவது கூட்டிட்டு போறியா… ’மணி’ முகத்தைப் பார்த்து என்னோட கஷ்டமெல்லாம் மறந்துருவேன்… மணியும் இல்லை… மூச்சு முட்ற மாதிரி இருக்குப்பா” நட்ராஜ் அவராகவே ரிஷியிடம் வந்து கேட்க…


மனைவியோடு சண்டை… அவளின் வழக்கமான ’ரிஷிக்கண்ணா’ அழைப்பு… அது கேட்க முடியவில்லை… அதற்கே இந்தப்பாடு அவனுக்கு…. ரிஷியால் அவர் நிலையை உணர முடிந்தது… அவனது மாமனார் வந்து கேட்டபோது மறுக்க முடியவில்லை… தன் நிலையெல்லாம் மறந்து அவருக்காக வெளியே கிளம்ப… நட்ராஜும் நிம்மதி ஆகி இருந்தார்


அடுத்த நிமிடம் மாமா- மருமகன்… இருவருமே வெளியே கிளம்பியிருந்தனர்… அப்போதும் தன் அலைபேசியை வேண்டுமென்றே அறையில் வைத்து விட்டுத்தான் கிளம்பினான் ரிஷி…. நட்ராஜுக்கும் அவன் வேண்டுமென்றே விட்டு விட்டு வருகிறான் என்பது புரிந்ததால் அவரும் கேட்கவில்லை



---

சென்னை -இந்தியா… டிசம்பர் -24 காலை மணி 10…


”நீங்க இங்கயே தூங்கிட்டிங்கன்னு… நான் கண்டுக்காமல் விட்டுட்டேன் அண்ணி… ஏன் அண்ணி…“ ரித்விகா கண்மணி அருகே அமர்ந்தபடி கவலையோடு அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தபடி சொல்ல..


“நானும் மாத்திரையப் போட்டுட்டு தூங்கிட்டேன்… உடம்பு சரி… இல்லைனு …. ஒரு வார்த்தை… சொல்ல மாட்டியா…. கண்மணி…” இலட்சுமி தட்டுத் தடுமாறி வார்த்தைகளை கோர்த்து… கண்மணியைத் திட்டிக் கொண்டிருக்க… எழவே முடியாதவளால் பேச மட்டும் முடியுமா என்ன…


“இல்ல அத்தை… படுத்தேன் அவ்ளோதான் தெரியும்…” என்று இருமியபடி சொல்லிக் கொண்டிருந்தவள்… பார்வை அவளையுமறியாமல் அலைபேசி கிடந்த இடத்தை நோக்கிச் செல்ல… அது அங்கே இல்லை…


ரித்விகா அவள் பார்வையை உணர்ந்தவளாக…


“சார்ஜ் போட்ருக்கேன் அண்ணி…” என்று மட்டும் சொல்ல… அதற்கு மேல் பேசாமல் எழ முயற்சிக்க… அவளால் முடியவே இல்லை


தலை முழுவதும் அப்படி ஒரு பாரம்… அவள் உடம்பு சூட்டை அவளாலே தாங்கிக் கொள்ள முடியாதபடி உடம்பு அனலாக கொதிக்க… ரித்விகாதான் அவளுக்கு உதவினாள்…


குளியலறைக்குச் சென்று… பல் துலக்கி… முகத்தை அலம்பி விட்டு வந்தவளுக்கு அப்போதுதான் தோன்றியது…


இலட்சுமி அவள் அத்தை… அந்த வீட்டில் இருந்து இவ்வளவு தூரம் வந்திருந்தது… ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்வதே அவருக்கு பரம பிரயத்தனமாக இருக்கும்… அதைக் கூட விட்டுவிடலாம்… ரித்விகா அழைத்து வந்திருக்கலாம் என்று… ஆனால் அதோடு மட்டுமல்லாமல்… நான்கு வார்த்தைகள் தொடர்ந்து பேசுவதே பெரிய விசயம்… அவர் பேசியது ஏனோ ஓரளவு சரளமாக இருந்தது போல் தான் தோன்றியது…


அவரை முழுமையாகப் பார்த்துக் கொள்வது கண்மணிதான்… இலட்சுமியின் சிறு மாற்றத்தைக் கூட கண்மணியால் உணர முடியும்… அப்படி இருக்க… இன்று கண்மணியால் நன்றாகவே உணர முடிந்ததுதான்… அதே நேரம் அவள் வெளிக் காட்டிக் கொள்ள வில்லை…


இலட்சுமி அவராக அறியும் வரை… அவரை உணர்ச்சி வசப்படுத்த வேண்டாம் என்று விட்டவளாக… வெளியே வர…


”அம்மா இன்ஸ்ட்ரக்‌ஷன் சொன்னாங்க… நானே வைத்தேன்… வருங்கால டாக்டர் ரித்விகா பிரிப்பரேஷன்….” ரித்விகா பெருமையாகச் சொன்னபடி… சூடான சூப்பு நிறைந்த பாத்திரத்தை அவள் முன் வைக்க


அவளின் தோரணையைப் பார்த்து கண்மணிக்கு சிரிப்புதான் வந்தது…. அவள் இருந்த நிலையையும் மீறி…


அடுத்த அரை மணி நேரத்தில்… ரித்விகாவுக்கு சிறப்பு வகுப்பு இருக்க… கண்மணியால் அவளைப் பள்ளிக்கு கூட்டிச் சென்று விட முடியாது என்பதால்… ரிதன்யா அழைத்துக் கொண்டு போய் பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பி இருந்தாள்… ரிதன்யாவும் வீட்டில் தான் இருந்தாள்… ஆனால் கண்மணியின் அருகே வரக் கூட இல்லை… ரிதன்யா அறையை விட்டு வெளியே வரவே இல்லை… அதனால் தன் தாயின் நடை.. பேச்சில் இருந்த மாறுபாட்டை அவளும் உணரவில்லை…


அதேபோல இதுநாள் வரை அந்த வீட்டில் நடந்து கொண்டிருந்ததை எல்லாம் இலட்சுமி பார்வையாளராக இருந்து பார்த்து வந்தவர் தானே… இதுவரை அனைத்தையும் பார்த்திருந்திருக்க மட்டுமே முடிய… ரிதன்யாவின் மேல் அத்தனை கோபம் வந்திருந்தது அவருக்கு… ஆனால் அதே நேரம் தன் மகளின் மீதான கோபத்தை விட மாறாக மருமகளுக்கான பரிதவிப்பே இருக்க… தன் கவனத்தை எல்லாம் உடல்நிலை சரியில்லாத மருமகளின் மீது வைத்திருந்தார்…


கண்மணியால் அன்று முழுவதுமே எழ முடியாமல் துவண்டு போயிருக்க… இதுவரை தன்னை மருமகளாக இல்லாமல் ஏன் மகளாகக் கூட இல்லாமல்… தாயாக இருந்து தன்னைத் தாங்கிய தனது மருமகளை… இலட்சுமி தான் அவள் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்… அவரால் முடியவில்லை என்றாலும்… ரிதன்யாவை வேலை வாங்கி… கண்மணிதான் முக்கியம் என்பது போல மருமகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்… கண்மூடித்தனமான ஆத்திரம் ரிதன்யாவுக்கு வந்ததுதான்… தாயின் கண்மணி மீதான அக்கறையில்…


ஆனாலும் இலட்சுமி கேட்டதெல்லாம் செய்தாள் தான்… தாயின் மீதிருந்த மரியாதை… பாசத்தில்… கோபமோ… ஆத்திரமோ… அளவுக்கு மீறி வந்து விட்டால்… மற்றதெல்லாம் பார்க்கத் தோணாதோ என்னவோ… தாய் வார்த்தைகள் தடுமாற்றமின்றி பேசியதை… அவரது செயல்களில் ஒரு சுறுசுறுப்பு வந்ததை… அவளால் உணரவே முடியவில்லை…


இலட்சுமியே தன்னை உணராத நிலை தான்…

அதே நேரம்… மகன் வழக்கமாக பேசும் நேரம் வர… அவன் அழைக்க வில்லை என்பதை… உணர்ந்தவராக… தன் மகனுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு… அவரே மகனின் எண்களை அழைத்துப் பார்க்க ஆசை வந்திருக்க… அழைத்தும் பார்க்க… அவனது அலைபேசியோ அவருக்குப் பதில் கொடுக்கவே இல்லை…


கண்மணியும் அவரைப் பார்த்தபடிதான் இருந்தாள்… தன் உடல் அசதியையும் மீறி… இலட்சுமியை கண்காணித்துக் கொண்டேதான் இருந்தாள்…. தன் அத்தை ரிஷியைத்தான் அழைக்க முயல்கிறார் என்பதை உணர்ந்தவளாக…


“அப்பா நம்பர்க்கு கால் பண்ணுங்க… அவர் உங்க ‘ரிஷிக்கண்ணா’ கிட்ட கொடுப்பார்… அவர்கிட்ட நீங்க பேசும் போது… ’ரிஷிக்கண்ணா’ன்னு பேசுங்க… ” என்ற போதே… இலட்சுமியின் முகம் சொல்ல முடியாத மீளாத்துயரைக் காட்ட …


கண்மணி புன்னகைத்தாள்… இப்போது கண்மணியும் மறைக்கவில்லை…


“அத்தை… உங்களுக்குத் தெரியலையா… உங்களால சரளமா பேச முடியுது… ”


கண்மணி சொன்ன போதே… இலட்சுமியால் நம்பமுடியாமல் தன் மருமகளைப் பார்த்தவர்… உணர்வுகளை அடக்க முடியாமல் திணற…


“அத்தை… நான் காலையிலேயே பார்த்துட்டேன்… நீங்க ஃபீல் பண்றீங்களான்னு வெயிட் பண்ணினேன்… நீங்களே அவருக்கு போன் ட்ரை பண்ணபோதே உங்களுக்கு புரியலையா அத்தை …” என்றவள்… இலட்சுமியை யோசிக்க விடமாலேயே


”அவருக்கு உங்க கையால ட்ரை பண்ணுங்க… “


”பேசுங்க…” என்றபடி… அவரை ஊக்குவித்தவள்… எதிர்முனையில் அழைப்பு ஒலி போக…


“ரிஷிக்கண்ணா”- அது முக்கியம் என்று இலட்சுமியின் அருகில் அமர்ந்தவள்… நேற்றிரவு நடந்த வாக்குவாதம் மனவருத்தம் அனைத்தையும் அத்தனையும் மறந்து… கணவனின் முகம் பார்க்க காத்திருந்தாள்… அவன் வெகுநாட்களாக ஏங்கிய அவன் அன்னை குரலில் செல்லமாக அவன் பெயர் சொல்லி அழைக்க ஏங்கிய குரல்… அதைக் கேட்டு… அந்த அழைப்பைப் பார்த்து அவன் முகம் பூசும் புன்னகையைப் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருந்தாள்…


எதிர்முனையில்…


மகளின் அலைபேசியில் இருந்து வந்த அழைப்பைப் பார்க்க… நட்ராஜும் ஆவலாக எடுக்க… அது மகள் இல்லாமல் ரிஷியின் தாயாக இருக்க… நட்ராஜ்… ரிஷியை அழைத்து கொடுக்க…


எண்ணைப் பார்த்தவன்… மனைவியின் எண்ணாக இருக்க… மனமெங்கும் சந்தோசம்… அதே நேரம் அந்த காணோளி அழைப்பில் அன்னையும் இருக்க…


”ரிஷிக்கண்ணா” என்று இலட்சுமி அழைக்க… ஒரு நொடி அதிர்ந்து… கண்மணியைப் பார்க்க… அவளும் அவனைப் பார்த்தபடியேதான் இருந்தாள்…. நொடிப் பொழுதுதான்



கண்மணி இப்போது… ரிஷியிடமிருந்த தன் பார்வையை மாற்றி….


“அத்தை… நீங்கதான் சோல் ப்ராப்ரைட்டர் ஆஃப் ’ரிஷிக்கண்ணா’… பேசுங்க“ என்றவாறு…. தாயும் மகனும் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்தவளாக… அந்தக் காணொளிக் காட்சியின் பார்வை வட்டத்தில் இருந்து விலகி மறைந்திருந்தாள்… ஆனாலும் தன் கணவனை.. அவன் மலர்ந்த முகம் காட்டும் உணர்ச்சி மாற்றங்களைப் பார்ப்பதற்கு தோதாக இடம் பார்த்தும் அமந்தாள் அவன் அறியாமல்…

2,163 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page