top of page

கண்மணி... என் கண்ணின் மணி -38-2

அத்தியாயம் 38-2


/*டிங் டாங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன். உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன். நீ கேட்டது ஆசையின் எதிரொலி

ஆ.. ஆ.. நீ தந்தது

காதலின் உயிர்வலி!*/


மகிளா… பிரேம்…. மகிளாவின் தாய் கோதை… நட்ராஜ்…. என ரிஷியின் வீட்டில் சந்தோச கொண்டாட்ட களை வந்திருந்தது… பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று கூடிய தருணம் என்று தோன்றும்படிதான் இருந்தது அங்கு நடந்த ஒவ்வொரு உணர்ச்சி வயமான நிகழ்வுகளும்..


மகிளாவின் தந்தை நீலகண்டன் கூட வந்திருந்தார்… அனைவரும்… ஏன் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையே வரும் போது அவர் எப்படி வராமல் போக முடியும்… வந்தும் விட்டார்… மற்றவர்களிடம் எல்லாம் பேசியவர்… ரிஷியோடு மட்டும் பேசவில்லை… பேசப் வில்லை என்பதை விட பேசப் பிடிக்கவில்லை… ஆக பேருக்கு வந்து இலட்சுமியைப் பார்த்து விட்டு உடனே கிளம்பியும் விட்டார்… ரிஷியும் பேருக்கு அவரை வரவேற்றவன் அதன் பின் கண்டுகொள்ளவில்லை… அவர் மேல் பெரிதான வெறுப்பும் இல்லை விருப்பும் இல்லை… அவர் வயதுக்கு மரியாதை கொடுத்தான்… அவ்வளவே…


கிட்டத்தட்ட நண்பகல் 12 மணி….


மகிளா… ரிதன்யா சமையலறையில் இருக்க… கோதை லட்சுமியுடன் இருக்க…. ரிஷி, பிரேம், நட்ராஜ் இவர்கள் மூவரும் வெளியே மாமரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்… வேலன்… தினகர் கூட அங்கு தான் இருந்தனர்…


வெகு நாட்களுக்குப் பிறகு… கிளீன் ஷேவ்… இறுக்கமற்ற முகமென ரிஷி… இலகுவான பாவனையில் இருந்தான்… அவனது முகத்தில் இதமான புன்னகை ஒட்டிக் கொண்டிருக்க… பேசும் போது கூட புன்னகை மாறாமல் பேசிக் கொண்டிருக்க… வேலன் தினகர் இருவருமே ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள தலையாகிய ’ஆர்கே’ வை…


அவன் இயல்பான சிரிப்பை பார்க்க வேண்டிய தவமிருந்த ஒரு முக்கியமான நபர் மட்டுமே அங்கு இல்லை… அது யார் என்று சொல்ல வேண்டுமா என்ன… கண்மணியே… ரிஷியின் சந்தோசத்தைப் பார்க்க முடியவில்லை… பரவாயில்லை… இனி அவன் வாழ்க்கையில் அடுத்தடுத்து சந்தோஷ நிகழ்வுகள் மட்டுமே… ரிஷியின் புன்னகை அவளுக்காக இன்றி வேறு யாருக்காக… காத்திருந்தது ரிஷியின் புன்னகை முகமும் அவன் கண்மணிக்காக


ரிஷிக்கு இப்போதும் கனவு போல் தான் இருந்தது… தாயின் உடல்நிலை இந்த அளவுக்கு சரி ஆகிவிடும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்காதவனுக்கு இலட்சுமி அவராகவே நடந்து வந்த காட்சியை இப்போது கூட நனவென்று நம்ப முடியவில்லை… ஆக இன்னுமே அவனால் நடந்ததை நம்ப முடியவில்லை… ஆனால் கண்மணி மட்டுமே சொல்வாள்… லட்சுமிக்கான சிகிச்சைகளை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவள் அவள் தானே… காலையும் மாலையும்… லட்சுமி செய்ய வேண்டிய பயிற்சிகளை எல்லாம் லட்சுமியை செய்ய வைத்து விட்டுத்தான் அவளின் அடுத்த வேலையே இருக்கும்… லட்சுமியின் முன்னேற்றங்களை ஒவ்வொரு நாளும் அவனிடம் சொல்லாமல் இருக்க மாட்டாள்.. சொல்பவள் கூடவே கண்டிப்பாக அத்தை மீண்டும் பழைய நிலைக்கு வருவார்கள் என்றும் நம்பிக்கையோடு சொல்வாள்… அப்போதெல்லாம் ரிஷி நம்பவில்லை… அவன் ஆறுதலுக்காக கண்மணி சொல்கிறாள் என்று நினைத்துக் கொள்வான் ரிஷி… ஆனால் இதோ அவள் சொன்னபடி நடந்து கொண்டிருக்கிறதே…


தன் அன்னையின் கால்களுக்கு பலம் வந்தது போல… அவரது கரங்களும்… வார்த்தைகளும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பும் என்று ரிஷிக்கு முதன் முதலாக… அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருக்க… அப்படி ஒரு நிம்மதி கலந்த சந்தோசம் அவனுக்குள்… அதுவும் வெகுநாட்களுக்குப் பிறகு… வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும்… அந்த நிம்மதி தந்த சந்தோஷம் புன்முறுவலாக அவன் முகத்தில் உறைந்து விட்டிருந்தது… ஆக வெகு நாட்களுக்குப் பிறகு ரிஷியின் கண்களில் புன்னகை குடியேறி இருக்க… அந்த கண்களில் ஜீவன் மீண்டும் வந்திருந்தது..


கண்மணியையும் ரித்விகாவையும் அழைத்து லட்சுமியைப் பற்றி சொல்லலாம் என்று முதலில் நினைத்தான் தான்… ஆனால் அதன் பின்… தன் தங்கையை, அவள் குணத்தை யோசித்தவன்… அந்த முடிவைக் கைவிட்டு விட்டான்


தாயின் உடல்நிலை சரி ஆனதைக் கேட்டால், அவன் தங்கை உடனே மீண்டும் சென்னைக்கு வர வேண்டும் என்று அடம்பிடிப்பாள்… அப்படிப்பட்ட ஆள் தான் அவள்… உடனே தன் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று கண்மணியை தொந்தரவு செய்வாள் என்றே தோன்றியது ரிஷிக்கு…


ஆம்… தாயைப் பார்ப்பதை விட அந்த ஊட்டி டூரெல்லாம் ரித்விகாவுக்கு பெரியதாகவே இருக்காது.. எப்படி ஊட்டிக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தாளோ அதைவிட பலமடங்காக இங்கு திரும்பி வரவும் அடம்பிடிப்பாள்… என்று ரிஷிக்குத் தோன்ற


ரித்விகா அப்படி அடம் பிடித்தால் கண்மணியும் வேறு வழியின்றி … மகிழுந்தோ… இல்லை பேருந்தோ பிடித்து இருவருமாக தனியாக வர வேண்டும்… அவர்கள் இருவரும் அப்படி தன்னந்தனியாக வருவதில் ரிஷிக்கு உடன்பாடில்லை… இந்தக் காரணத்தினால் ரித்விகா மற்றும் கண்மணியிடம் சொல்லாமல் விட்டு விட்டான்… அது மட்டும் இன்றி… அவர்கள் சுற்றுலா முடிந்து வரும்போது அவர்களுக்கு எதிர்பாரா சந்தோஷமாக இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டான் ரிஷி…


அதேபோல் பிரேம்-மகிளா இவர்கள் வீட்டுக்கு வந்தது கூட சூழ்நிலைக்கு அசாதாரணமாக இல்லை… இலட்சுமியின் உடல்நிலை சரியாகி விட்டதை கேள்விப்பட்டு எதார்த்தமாகப் பார்க்க வந்தது போல ஆகி விட்டது… பிரேம்-மகிளா முதன் முதலாக வந்த போது வீட்டின் தலைவி கண்மணி இல்லாமல் போனது கூட இப்போது பெரிதாக தெரியவில்லை… கண்மணி இல்லாமல் அவர்கள் விருந்துக்கு வருவது சரியாக இருக்காது என்று ரிஷி எதை நினைத்து கவலைப் பட்டானோ அதுவும் பெரிய விசயமாக ஆக வில்லை….


ஆக எல்லாமே இயல்பாக நடந்து கொண்டிருக்க… ரிஷிக்குத்தான் அங்கு இருக்க முடியாத சூழ்நிலை… முக்கியமான வாடிக்கையாளர் சந்திப்பு…


“பிரேம் எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங்… லஞ்ச் முடிந்தவுடன்… கிளம்பிடுவேன்.. உங்களுக்கு கம்பெனி கொடுக்க முடியாத நிலை” எனத் தர்மசங்கடத்துடன் பிரேமிடம் ரிஷி சொல்ல…


“அதப் பாருங்க ப்ரோ… நான் எங்க போகப் போகிறேன்… ஈவ்னிங் வந்து கூட பேசிக் கொள்ளலாம்.” என்று பிரேமும் ரிஷியைக் கிளம்பச் சொல்லி விட்டான்…


ரிஷி அங்கிருக்க முடியாத சூழ்நிலை ஆகிவிட… மருமகனுக்குப் பதிலாக வீட்டுத் தலைவனாக நட்ராஜ் அன்றைய பொறுப்பை ஏற்க… ரிஷியும் கிளம்ப ஆயத்தமானான்…


என்னதான் பிரேம் சொன்னாலும்… ரிஷிக்கு அவனுடன் இருக்க முடியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்தது…. ஆனால் பிரேம் நட்ராஜோடு தீவிரமாகத் தன்னை மறந்து அளவளாவிக் கொண்டிருந்த காட்சியைப் பார்க்க அந்தக் கவலையும் அவனையும் விட்டு மறைந்திருந்தது…


நட்ராஜுடன் பேசிக் கொண்டிருந்த பிரேமுக்கோ….. நட்ராஜுக்கு கனரக வாகனங்கள் பற்றி தெரிந்த விசயங்கள்… அவனை ஆச்சரியப்படுத்த… பிரேம் அவருடன் இயல்பாக உரையாட ஆரம்பிக்க… அவன் தன் தொழிலுக்குத் தேவையான குறிப்புகளைக் கேட்டறிய இப்படியாக அவனது நேரம் பயனுள்ளதாகவும் போக ஆரம்பித்திருந்தது…


இதற்கிடையே ரிஷிக்கு தாமதமாக… மணியைப் பார்த்தபடியே… சமையல் முடிந்து விட்டதா எனப் பார்க்கப் போக… ரிதன்யாவும்… மகிளாவும்… சமையலறையை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர்… மகிளாவா!!! என்று ரிஷியே ஆச்சரியப்படும் வகையில் அத்தனை உணவு பதார்த்தங்கள்…


கண்டிப்பாக ரிதன்யாவெல்லாம் காரணம் இல்லை என்று தெரியும்… அதனால் அவனையுமறியாமல்


“மகி…“ அழைத்தவன் ஆச்சரியத்தில் கண்களை விரிக்க… மகிளா அவனைப் பார்த்த ஒரே பார்வையில்… தானாகவே அடங்கினான் ரிஷி…


காரணம்


“இதெல்லாம்… இது போல பொறுப்பாக என்னால் எதுவும் செய்ய முடியாது… இந்தக் குடும்பத்தைத் தாங்க முடியாது என்று தானே என்னைத் தள்ளி வைத்தாய்… இப்போது என்ன சொல்கிறாய்” என்ற கேள்வியைத் தாங்கிய குற்றம் சாட்டிய பார்வையே மகியின் பார்வை முழுவதும்… அதன் வீச்சைத் தாங்காமல் வேறு புறம் திரும்பியவன்… நொடியில் தன்னைச் சமாளித்தபடி…


“லேட்டாகிருச்சு… அதுதான் வந்தேன்” என்றான் மகிளா ரிதன்யா இருவரிடமும் பொதுவாக…


சொன்னவன் அதற்கு மேல் அங்கு இருக்காமல்… சமையலைறையை விட்டு வெளியே வந்து விட்டவன்… தன் தாய் இருந்த அறைக்குள் வந்து விட… கூடவே மகிளாவும் ரிதன்யாவும் அவனோடு வந்தனர்…


ரிதன்யாதான் ஆரம்பித்தாள்…


“அத்தை… ரித்விகா மட்டும் தான் மிஸ்ஸிங்… அவ மட்டும் இருந்திருந்தா… அவளைக் கையில பிடிச்சுருக்கவே முடியாது… ஆனா நான் இதைச் சொல்லியே ஆகணும்…. மகிளா வீட்டுக்கு வர்றான்னு சொன்ன உடனேயே… எல்லாமே மாறின மாதிரி ஃபீல் அத்தை… ஏதோ பழைய வாழ்க்கைக்கே திரும்பினா மாதிரி… மறுபடியும் நாம அதே மாதிரி ஆகமுடியுமா???” என்ற போதே ரிதன்யாவின் குரல் உள்ளே போய்விட… உடனே மகிளா தன் தோழியைச் சமாதானப்படுத்த… அந்த சமாதானத்தில் இன்னுமே ரிதன்யா உடைந்து விட்டாள்…


”இல்ல மகி… உன்னை நான்… நான் மட்டும் இல்லை இங்க எல்லோருமே மிஸ் பண்றோம்… நீ நம்ம குடும்பத்தோட மறுபடியும் இப்படி பேச ஆரம்பிப்பேன்னு நினைக்கக் கூட இல்லை… பாரு… நீ இந்த வீட்டுக்கு மறுபடி வந்து நின்னதுக்கே… இந்த அளவு சந்தோசம் திரும்பி வந்துருக்குன்னு… நீ இந்த வீட்டு மருமகளா வந்திருந்தா எப்படி இருந்திருக்கும்” ரிதன்யா மறுபடி மறுபடி… தன் இடத்திலேயே தான் நின்றிருந்தாள்…


”நீ ரொம்ப நல்ல பொண்ணு… உன் மனசுக்கு ஏத்த மாதிரி பிரேம் அண்ணா கெடச்சுட்டாரு… ஆனால்” என்று ரிதன்யா ஆரம்பித்த போதே போதே ரிஷியின் முகம் சட்டென்று மாறி விட்டது…


தங்கையின் வார்த்தை ஓட்டம்… ஒரே நொடியில் அவனது முகத்தில் கருங்கல்லின் இறுக்கத்தைக் கொண்டு வர… அதைப் பார்த்த இலட்சுமி… மகளைக் கண்டிக்க வார்த்தைகள் வெளிவிட முடியாமல் பார்வையாலேயே கண்டிக்க ஆரம்பிக்க…


ரிஷிக்கு அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்கவில்லை… ஏனோ அங்கிருந்த அத்தனையும் அந்நியமான தோற்றம்… வேகமாக மணியைப் பார்ப்பது கைக்கடிகாரத்தைப் பார்த்தவனாக…


“எனக்கு ரொம்ப லேட் ஆகிருச்சு… எனக்கு க்ளைண்டோட லஞ்ச் மீட்டிங் … அதைச் சொல்லத்தான் வந்தேன்… நான் கிளம்புறேன்… ஈவ்னிங் சீக்கிரம் வர ட்ரை பண்றேன்” என்று படபடத்தான்…


படபடத்தவன்… அதற்கு மேல் அங்கு நிற்க வில்லை… நிற்கவில்லை என்பதைக் காட்டிலும் இருக்கப் பிடிக்க வில்லை என்பதே உண்மை.. ஆனால் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை… அதற்கும் காரணம் இருந்தது…


கண்மணியைப் பற்றி அவன் யாருக்கும் விளக்கம் கொடுக்க நினைக்கவில்லை… அவனுக்கு அது தேவையும் இல்லை… அவளைப் புரிந்து கொள்ள உண்மையிலேயே ஞானம் வேண்டும்… அது இல்லாதவர்களைப் பற்றி அவனுக்கு கவலையுமில்லை… கவலை இல்லை என்றாலும் கூட கோபம் இல்லாமல் இல்லை… சாதராண கோபம் என்றால் சட்டென்று காட்டி விடலாம்… ஆனால் அவனுக்குள் எரிமலை வெடிக்க ஆரம்பிக்கத்தான் செய்தது…


ஆனால் சேதாரத்தை விரும்பாமல்… லாவாக்களை தனக்குள் அடக்கி ஆள ஆரம்பித்திருந்தது.. ரிஷி என்னும் எரிமலை… ஆக பெரிதாகக் கோபம் இருப்பது போலவும் காட்டிக் கொள்ளாமல் சூழ்நிலையை கையாள முயற்சிக்க… விலகி வந்து விட்டான் ரிஷி…


வெளியே வரவேற்பறைக்கு ரிஷி வர… அவனை அழைத்தபடியே மகிளா ஓடி வந்தாள்…


“ரிஷி மாமா” மகியின் குரலில் சட்டென்று நின்று ரிஷி திரும்பி பார்க்க…


“சாப்ட்டுட்டுப் போ ரிஷி மாமா… ப்ளீஸ் ” என்றவள் கெஞ்சலான பார்வையில் ரிஷி கொஞ்சம் கரைந்தவனாக


“டைம் ஆகிருச்சுமா…” என்ற போதே…


”பரவாயில்ல… லஞ்ச் மீட்டிங்னு இப்போ சொல்ற… பொய்தான சொல்ற மாமா நீ… எனக்கு உன்னைப் பற்றி தெரியாதா” என்ற போதே சற்று முன் மகிளாவின் வார்த்தைகளில் கரைந்த மனம் இப்போது மாறி… முகம் கோபத்தைக் காட்ட


”ஒகே கோபப் படாத… அவங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ண மாட்டாங்களா” என்று அவன் கைகளைப் பிடித்து இழுத்து சாப்பிட அழைக்க அவன் அருகே வர…


சட்டென்று அவளை விட்டு நகர்ந்தவன்…


“உண்மையிலேயே லஞ்ச் மீட்டிங் தான் மகி… ஆனால் உங்களுக்காக அதைக் கேன்சல் பண்ண நினைத்தேன்… இப்போ ரொம்ப லேட் ஆனதுனால வேற வழி இல்லாம கிளம்புறேன்” என்றபோதே மகிளா முகம் தொங்கிப் போனவளாக…


“நான் சமைச்சது மாமா… என்னைத்தான் தள்ளி வச்சுட்ட… என்னோட சமையலைக் கூட சாப்பிட மாட்டியா… உனக்குப் பிடிச்சதா செலெக்ட் பண்ணி குக் பண்ணேன் மாமா…” விட்டால் மகிளா அழுது விடுவாள் போல… இல்லை… அழுகிறாள் என்றே தோன்றும்படி குரலே மாறி இருக்க…


“ஹேய் லூசு… வா…” என்றவன் அவளைப் பார்க்க… அவள் அசையாமல் இப்போது அப்படியே நின்றிருக்க… இப்போது ரிஷியே அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தவன்…


”இப்போ என்ன… நீ சமைச்சதெல்லாம் நான் சாப்பிடனும் அவ்வளவு தானே… இன்னைக்கு டைம் இல்ல… சோ எல்லாத்தையும் டேஸ்ட் பண்றேன்… போதுமா“ என்ற படி அனைத்து உணவு வகைகளையும் ஒவ்வொன்றாக நிமிடத்தில் சுவைத்துப் பார்த்தவன்… ஒவ்வொரு வகைக்கும்… அதன் சுவைக்கும் அவளைப் பாராட்டவும் மறக்கவில்லை…


“கண்டிப்பா ஒருநாள் நானும் கண்மணியும் உங்க வீட்டுக்கு வருகிறோம்… அப்போ எனக்கும் அவளுக்கும் பிடிச்சதை லிஸ்ட் போட்டு அனுப்புறேன்.. நீயும் சமைத்து வை… நானும் நிதானமா… அனுபவிச்சுச் சாப்பிடறேண்டா… இப்போ பை…” என்றவன்…


அவளை விட்டு கடக்கும் போது


“அழுதழுது எல்லாத்தையும் சாதிக்கிறதை மாத்திக்கப் பழகு மகிளா… அற்ப விசயங்களுக்காக நீ அழுதழுது காரியம் சாதிச்சேன்னா… பெரிய விசயங்களுக்காக நீ அழுகிறது முக்கியம் இல்லாமல் போயிரும்…” என்று அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் சொல்லிவிட்டு… அதற்கு மேல் அங்கு நேரத்தைக் கடத்தாமல் வெளியேறி இருந்தான்…


---

”அண்ணி வாங்க…. வாட்டர் ரைட் போதும் அண்ணி… எனக்கு ஒரு மாதிரி இருக்கு… தலை சுத்துது… வாங்க வெளில போகலாம் ” திடீரென்று ரித்விகா கத்திச் சொல்ல…


அதுவரை அந்த தண்ணீர் உலகத்தில் தன்னை மறந்து… குழந்தையாக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த கண்மணி… ரிதன்யாவின் குரல் வந்த விதத்தில்.. சட்டென்று ரித்விகாவைத் திரும்பிப் பார்க்க… அருகில் அமர்ந்திருந்த ரித்விகாவின் முகம் இயல்பாக இல்லை


கண்மணி அப்போதுதான் சுயம் உனர்ந்தவளாக… சுதாரித்தவள்


“ரிதிம்மா… என்ன பண்ணுது” என்றவாறே… சட்டென்று அவளோடு அங்கிருந்து வெளியேற… ரித்விகா ஒரு மாதிரியான அசதியான பாவத்தில் இருக்க… அவளது நனைந்த உடலை துடைத்து விட்டவள்… நடுக்கம் ஓரளவு போக மாற்று உடுப்பைக் கொடுக்க…. ரித்விகாவும் இப்போது ஓரளவு சரி ஆகி இருந்தாள்…


“இப்போ எப்படி ரிதிம்மா இருக்கு… இதெல்லாம் ஒத்துக்காதுன்னு சொல்லிருக்கலாம்ல…. நாம அவாய்ட் பண்ணிருக்கலாம்ல” கண்மணி கவலையோடு கேட்டாள்…. கண்மணியே இதை எதிர்பார்க்கவில்லை…


ஊட்டிக்கு செல்வதற்கு முன் இடையில் இருந்த தீம் பார்க்கில் அவர்கள் நேரத்தை செலவிட்டிருக்க… அங்குதான் ரித்விகாவுக்கு இந்த நிலைமை… தன் அண்ணியின் கவலை படிந்த முகம் பார்த்து அதைத் தாங்காத ரித்விகா…


“இல்லண்ணி… அதெல்லாம் இல்ல… எப்போது என்ஜாய்தான் பண்ணுவேன்… இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கு… இப்போ ஓகே” என்று கண்மணியிடம் ரித்விகா சமாளித்தாலும் அவள் முகம் வாடித்தான் இருந்தது…


அதன் பிறகு அவர்கள் எந்த விளையாட்டிற்கும் செல்லவில்லை… கண்மணியின் மடியிலேயே படுத்து சில நிமிடங்களில் உறங்கியும் விட்டாள் ரித்விகா…

கிட்டத்தட்ட அடுத்த ஒரு மணி நேரம்… மற்றவர்கள் வரும் வரை காத்திருந்தாள் கண்மணி… ஒருவாறாக அனைவரும் வர… ரித்விகாவை எழுப்பியவள்… பேருந்தில் மீண்டும் ஏறினாள்… இப்போது ரித்விகாவை வேறு இருக்கைக்கு அனுப்பாமல்… கண்மணி தன் அருகே வைத்துக் கொள்ள… பேருந்து அங்கிருந்து ஊட்டியை நோக்கி… பயணமெடுக்க… மாணவர்கள் அனைவரும் பாட்டுக்கு பாட்டு… என ஆரம்பிக்க… பயணம் உற்சாகமாக மாறி இருந்தது


இப்போது ரித்விகாவும் இயல்பு நிலைக்குத் திரும்ப மற்றவர்களின் உற்சாகம் அவளுக்குள்ளும் வர…


“அண்ணி… உங்களுக்கு பாட்டெல்லாம் தெரியுமா” என்று ரித்விகா கண்மணியிடம் கேட்க… கண்மணியோ உதட்டைப் பிதுக்கினாள்


”மேத்ஸ் ”ஃபார்முலா மட்டும் தெரிஞ்சு வச்சுருக்கக்கூடாது அண்ணி… இதுவும் தெரிஞ்சு வச்சுக்கனும்… இப்போ நீங்க எங்க டீம் ஆச்சே… ஆனா உங்களுக்கு ஒண்ணும் தெரியலேன்னா… எப்படி வின் பண்றது” என்ற செல்லச் சிணுங்கலாக ரித்விகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே


“மாதவி மிஸ்… சினி சாங்க்ஸ்லாம் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சுருப்பாங்க… வேணும்னா அவங்க டீம் கூட ஜாயின் பண்ணிக்க… கண்டிப்பா ஜெயிப்ப” என்று கண்மணி ரித்விகாவை அந்த அணிக்கு மாற்றி விட்டாள்… ரித்விகாவும் அங்கு சென்று விட்டாள்…


கண்மணியும் ஒரு அணியில் இருந்தாள்… தனக்குத் தெரிந்த பாடல் என்று ஏதாவது வந்தால் சொல்ல நினைப்பாள் தான்… ஆனால் தெரிந்த பாடல் வந்தால் தானே… அதே நேரம் கண்மணியின் அணியும் நன்றாக விளையாட அந்த விளையாட்டில் கலந்து கொண்டாள் என்பதை விட… அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவள்… அனைவரையும் ஆச்சரியமாகவும் பார்க்க ஆரம்பித்தாள்…


காரணம்… இதுதான் போட்டி… பாடல்களின் இடையே வரும் வார்த்தைகளைச் சொல்ல… எதிரணி பாடலின் முதல் வரியைச் சொல்ல வேண்டும்… இரண்டும் குழுக்களுமே ஒருவருக்கொருவர் சளைக்காமல் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டு வர…


வகுப்பில் கணக்குப் பாடத்தில் கேட்டால் ஒரு சின்ன சூத்திரம் கூடத் தெரியாமல் இருக்கும் மாணவர்கள் தான்… இங்கு பாடலைக் கண்டுபிடிப்பதில் திறமைசாலிகளாக இருக்க… அவளையுமறியாமல் அவள் கணவன் ஞாபகம் வந்து போனது… கணினியோ… அலைபேசியோ… பெரும்பாலும் அவன் காதில் ஹெட்செட் இருக்கும்… ஏதாவது பாடல் கேட்டபடியேதான் அவன் வேலை செய்வான்… அவனது பாடல் வரிசைகள் என்று பார்த்தால் அந்தக் காலப் பாடல் முதல் இந்தக் காலப் பாடல் வரை இருக்கும்…

அவன் மனநிலையை மாற்ற உதவும் காரணியாக இசையை உபயோகப்படுத்துகிறானோ என்று கூட கண்மணிக்கு சில சமயம் தோன்றும்… அதே போல அவன் கேட்கும் பாடல்களை எல்லாம் இவளும் கேட்டுப் பார்த்திருக்கின்றாள்… கேட்ட போதும் இவளால் ரசிக்க முடியவில்லை… விட்டுவிட்டாள்…


இப்படியாக கண்மணி யோசித்துக் கொண்டிருக்க… திடீரென்று கண்மணி இருந்த குழுவில் சலசலப்பு


காரணம்… ரித்விகா அணி… சில புள்ளிகள் அதிகமாகப் பெற்று இவர்கள் அணியை விட முன்னேறி இருந்தது…


அதன் பின் கண்மணி அணியில் இருந்த நபர்களும் கடினமான பாடல்களை எடுத்து விட… போட்டி சூடு பிடித்துப் போய்க்கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் இரண்டு அணிகளும் சமநிலையில் இருக்க… அடுத்து சில நிமிடங்களில் போட்டி முடியப் போகும் தருணம்… ரித்விகா வழக்கம் போல தன் கையில் இருந்த கடினமானப் பாடல்களை எல்லாம் இடையில் இருந்து போட சளைக்காமல் எதிர் கொண்டனர் கண்மணி அணியினரும்..


ரித்விகாவுக்கு இப்போது தோன்றியது… பேசாமல் அண்ணியோடு அந்த அணியிலேயே இருந்திருக்கலாம் என்று… இப்போது நினைத்து என்ன பிரயோஜனம்.. கடைசியாக தன் அணியை வெற்றி பெற வைக்க வழக்கம் போல தன் துருப்புச்சீட்டு பாடலை வெளியே எடுத்து விட்டாள்…


“விடுமோ விடுமோ ஆசை…

வாரோதோ வளை ஓசை…”


ரித்விகா இந்த வரிகளைப் பாடி விட்டு…, தன் எதிர் அணியைக் கெத்தானப் பார்வை பார்த்து வைக்க…


ரித்விகா நினைத்தது போல அந்த அணியும் பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் திணற…


”கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி

என் விழி பூத்தது உன்னாலே”


பாடலின் முதல் வரியைப் பாடியது வேறு யாருமல்ல கண்மணியே…


“ஹேய்… கண்மணி மிஸ்… சூப்பர்…” கூட்டமாக கோஷம் இட்டனர் அத்தனை பேரும்..


”மிஸ் அவங்க பேர்ல இருந்த பாட்டுனால கண்டுபிடிச்சுட்டாங்க” என்று இவர்கள் அணி ஆர்ப்பரிக்க… ரித்விகா தன் அண்ணியைப் பார்த்து முறைக்க… கண்மணியே இப்போதுதான் உணர்ந்தாள் அவள் உணர்ச்சி வசப்பட்டதை… அதைவிட ரித்விகா அணி தோற்று விட்டதையும் உணர்ந்தாள் அதுவும் தன்னால்… ரித்விகாவின் அனல் பார்வையைத் தவிர்க்க வழி தெரியாமல்… இருக்கையின் சன்னலின் புறம் திரும்பியவள்… வெளியே தெரிந்த காட்சிகளை பார்ப்பது போல போல வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள் கண்மணி…


ஒரு வழியாக… விளையாட்டு எல்லாம் முடிந்து… கண்மணி அருகே வந்து மீண்டும் அமர்ந்த ரித்விகா…


“அண்ணி… வின் பண்ணுன்னு என்னை அங்க அனுப்பிட்டு… நீங்களே என்னை வாறிட்டீங்க… போங்க உங்க பேச்சு காய்” பொய்க்கோபத்துடன் தன் அண்ணியுடன் சண்டை போட ஆரம்பிக்க


‘ஹைய்யோ… ரிதி செல்லம்.. தெரிஞ்ச சாங்க்… அதிலும் எனக்குத் தெரிஞ்சது மத்த யாருக்கும் தெரியலை… உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டேன்டா… அப்புறம் தான் தெரிந்தது… சாரிடா ரிதிம்மா” என்றபோதே


“பரவாயில்லை விடுங்க… அதெல்லாம் இருக்கட்டும்… உங்க பேர்ல சாங்க்ஸ் இருந்தால் மட்டும் கேட்பீங்களா என்ன” என்ற போதே


“அப்படிலாம் இல்லை… இப்போ ரீசண்டா இந்த சாங்க் தெரியும்” என்று தன்னையுமறியாமல் சொல்லி விட்டு மீண்டும் வெளியே பார்க்க ஆரம்பிக்க…


ரித்விகா விட்டால் தானே


“அது என்ன… இந்த சாங் மட்டும்… பின்னாடி ஒரு சீனே இருக்கும் போல” என்ற போதே… அப்போதுதான் கண்மணி தான் மாட்டிக் கொண்டதையே உணர… அவள் மட்டுமல்ல ரிஷியுமே… நாக்கைக் கடித்தாள்… தவறு செய்து மாட்டிக் கொண்டது போல…


“நீங்க முழிக்கிறதைப் பார்த்தால்… வெறும் ஒரு சீன் இல்ல போல … பெரிய சீனே இருக்கும் போல” என்று ரித்விகா கிடுகிப்பிடி போட…


கண்மணியோ வெகுநேரம் யோசித்தவளாக…


“அது… அந்த சாங்க் மிடில்ல வரும் ஃப்ளூட் மியுஸிக் பிடிக்கும்… அப்படி இந்த சாங்க் தெரியும்…” என்று எப்படியோ சமாளித்து முடிக்கும் போதே, ரித்விகா அந்தப் பாடலை நெட்டில் போட ஆரம்பித்தவள்…


“எந்த செகண்ட்ல அந்த ஃப்ளூட் மியூஸிக் வரும்”


இப்போதுதான் இன்னுமே கண்மணி மாட்டிக் கொண்டாள்…


“ஹ்ம்ம்… சொல்லுங்க அண்ணி”


கண்மணியையே செல்லமாக அதட்டும் ஒரு உறவு என்றால் அது ரித்விகா மட்டுமே


”ஃபர்ஸ்ட் சரணத்துக்குப் பின்னால.. செகண்ட் சரணம் ஸ்டார்ட் ஆகும் போது”


மென்று முழுங்கியவளாக… கண்மணியும் அந்த புல்லாங்குழல் ஒலி வரும் நிமிடத்தைச் சொல்ல… ரித்விகாவும் கேட்டுப் பார்த்தாள் தான்…




முதலில் ஒன்றும் தெரியவில்லை விட்டு விட்டாள்… ஆனால் மீண்டும் அந்த பாடலின் இடையே வரும் புல்லாங்குழலின் ஒலியைக் கேட்க…அது அவள் அடிக்கடி கேட்கும் ஒலியைப் போலத் தோன்ற…


“அண்ணி… இது அடிக்கடி கேட்கிற மியூஸிக் மாதிரி இருக்கே… எங்க… அதுவும் ரீசண்ட் டேஸ்ல… இது யாரோட ரிங் டோன் மாதிரி இருக்கே” என்று கண்மணியிடம் அடுத்தடுத்து கேள்வியாகக் கேட்டபடியே யோசிக்க ஆரம்பிக்க.. முதன் முதலாக, கண்மணியின் முகத்தில் தவறு செய்து பிடிபட்ட பாவம் வந்திருக்க… அதை மறைக்க பெரும் பாடு பட்டது அவளுக்கே வெளிச்சம்


ரித்விகா… இந்த அளவு ஆராய்வாள் என்று கண்மணி நினைத்துப் பார்க்கவே இல்லை…


ரித்விகாவின் முகத்தில் திடீரென்று ஒளி வட்டம் தோன்ற…


“ஹான்…. அண்ணாவோட ரிங்டோன் தானே இது… கண்டு பிடிச்சுட்டேன்” என்று கத்த… என்ன சொல்வது… என்ன செய்வது என்று தெரியாமல் கண்மணி அசடு வழிய… ரித்விகாவோ தன் அண்ணியைப் கண்சிமிட்டினாள்…


“இப்போ தெரியுது… எங்க அண்ணா உங்க மேல வச்சுருக்க லவ் உங்களுக்கெல்லாம் தெரியாதுண்ணு… சொல்வீங்களே… அதுக்கு இப்போ அர்த்தம் தெரியுது அண்ணி… கதை இப்படிப் போகுதா” என்று இழுத்த போதே


வேகமாகக் கண்மணி


“அம்மா தாயே… உங்க அண்ணாக்கு இந்த சாங்க் தெரியுமான்னு தெரியாது… அவர்கிட்ட இப்படி கேட்டு உளறி வைக்காத”


“ஓ… அப்போ அண்ணா உங்க பேர்ல வர்ற சாங்க்னு தெரியாமல்தான் வச்சுருக்காரா…” ரித்விகாவும் உண்மையிலேயே சந்தேகம் வந்து கேட்க…


“அப்படித்தான் நினைக்கிறேன்… நீ சொல்வியே அவருக்குத்தான் ஃப்ளூட் மியூஸிக் பிடிக்கும்னு.. அதுனால இருக்கலாம்… என் பேர்ல ஆரம்பிக்கிற பாட்டுனு தெரிந்திருந்தால் வைத்திருப்பாரா” என்று கண்மணி பேச்சை மாற்ற


“அது என்னவோ உண்மைதான்” ரித்விகாவும் ஒத்துக் கொண்டாள்… அப்படித்தான் நினைத்தாள் ரித்விகாவும்… தன் அண்ணனுக்கு இந்தப் பாடல் தெரியாது என்றே நினைத்து விட்டாள்… அன்றொரு நாள் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் வழியில் தன் அண்ணனோடு இந்தப் பாடல் பாடியதெல்லாம் அவள் ஞாபகத்திலேயே இல்லை…


அதற்குப் பிறகு இந்தப் பாடலைப் பற்றி ஆராயாமல் விட்டுவிட்டு அவளும் வேறு பேச்சுக்குக்குத் தாவ… கண்மணி இப்போதுதான் பெருமூச்சு விட்டாள் நிம்மதியாக..


காரணம் ரிஷி இந்த இந்த பாடல் ஒலியை அழைப்பு மணியாக வைத்திருக்க…. கண்மணி எப்படியோ கண்டுபிடித்திருந்தாள் அழைப்பு மணியின் பாடலை…


அந்தப் பாடலைக் கண்டுபிடித்த போதோ… அதன் முதல் வரி ‘கண்மணி’ … என்று ஆரம்பிக்க… அதிர்ச்சியில் கண்மணியே உறைந்து விட்டாள் தான்… ஆனால் ரிஷியிடம் காட்டிக் கொள்ளவில்லை…


அதுமட்டுமல்லாமல் இவள் அந்த ரிங்டோனைப் பற்றி தெரிந்து வைத்திருந்தது,,, ரிஷிக்குக் கூடத் தெரியாது… அதேபோல் ரிஷி ஏன் இதை வைத்திருக்கின்றான் கண்மணிக்கும் தெரியாது… தன் பெயரில் ஆரம்பிக்கும் பாட்டு என்று தெரிந்து வைத்திருக்கின்றானா இல்லை…??? தெரியாமல் வைத்திருக்கின்றானா…??? இவளுக்கும் இன்று வரை சந்தேகமே!!!…


/*சொல்லாத காதல் சொல்ல சொல்லாகி வந்தேன் நீ பேச இமை நீ பேச! சொல் ஏது இனி நான் பேச! கனவுகளே.. கனவுகளே பகலிரவாய் நீள்கிறதே! இதயத்திலே உன்நினைவு இரவுபகல் ஆழ்கிறதே!*/


2,472 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page