top of page

கண்மணி... என் கண்ணின் மணி -38-1

அத்தியாயம் 38-1


/*

அதிகாலை நேரம்

கனவில் உன்னைப் பார்த்தேன்

அது கலைந்திடாமல்

கையில் என்னை சேர்த்தேன்


விழி நீங்கிடாமல்

நீந்துகின்ற தென்றலே..ஹோய்..

உன்னை சேர்ந்திடாமல்

வாடும் இந்த அன்பிலே..ஹோய்..

லல..லாலலால..லாலலால... */


அதிகாலை சூரிய உதயம்… மெல்ல மெல்ல பிராகாசிக்க ஆரம்பித்த சூரிய கதிர்கள்… ரிஷியை ஆக்கிரமிக்க ஆரம்பிக்க… அந்த இதமான இளம் சூடை அனுபவித்தபடி தன் இரு சக்கர வாகனத்தில் உல்லாசமாக வந்து கொண்டிருந்தான் ரிஷி ‘கண்மணி’ இல்லத்தை நோக்கி…


கண்மணி மற்றும் ரித்விகாவோடு… பள்ளிக்குச் சென்றவன்… இருவரையும் பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான் …


வெகுநாட்களுக்குப் பிறகு… பைக் பயணத்தை அனுபவித்தபடி… ரசித்தபடி… சீட்டி அடித்தபடி வந்து கொண்டிருந்தான்… இதோ ’கண்மணி’ இல்லத்திற்கும் வந்து விட்டான்…


வண்டியை எப்போதும் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியவன்…. வண்டியை விட்டு இறங்க நினைக்க… சில வருடங்களாக இல்லாத… அவனது பழக்கம்… மீண்டும் வந்திருந்தது…


அதாவது வண்டியை விட்டு இறங்கும் போதே… கண்ணாடியில் தன்னைப் பார்த்து சரி செய்து விட்டு… அந்த இடத்தை விட்டு நகர்வது…


இன்று அவனையுமறியாமல் அந்தப் பழக்கம் வந்து விட… கண்ணாடியைப் பார்த்து தன் முன் தலைக் கேசத்தைக் சரி செய்தவன் ஒரு முறை தன்னையேப் பார்க்க… அவனுக்கே அவன் அந்நியனாகத் தெரிந்தான்…


முகமெங்கும் தாடி… உர்ரென்ற முகம்… தன்னையேப் பார்க்கப் பிடிக்காமல் சில அடி தூரம் போனவன்… மீண்டும் திரும்பி வந்து தன்னையேப் பார்த்தவன்…


“கொஞ்சம் சிரியேண்டா… உனக்காக இல்லாட்டியும் நீ சிரிக்கிறத பார்க்கறதயே ஒருத்தி வாழ்க்கையா வாழுறா… அவளுக்காகவாது..” என்று மனசாட்சி சாட… இப்போது கண்மணியின் முகம் தான் அவன் முன் வந்து நின்றது..கூடவே முந்தைய நாள் இரவின் நினைவுகளும்


நள்ளிரவில் ரிஷிக்கு திடீரென்று விழிப்புத் தட்ட… கண் விழித்துப் பார்க்க… கண்மணி அங்கிருந்த நாற்காலியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்… அதைப் பார்த்த ரிஷிக்கு ஒரு நிமிடம் தூக்கி வாறிப் போட்டதுதான்…


”தன் அருகில் இவ்வளவு இடம் இருக்கும் போது… இங்கு வந்து படுக்காமல் ஏன் இப்படி உட்கார்ந்தபடி உறங்குகிறாள்…” யோசனை வந்த போதே… அவன் உணர்ந்து கொண்ட உண்மை அவனையே சுட்டது…


ஆம்! கண்மணி எதார்த்தமாக அவனை நெருங்கும் போதெல்லாம்… இவன் தள்ளி தள்ளி விலகி நின்ற வழக்கம்… இப்படி அவளை முடிவெடுக்க வைத்து விட்டதா???.. அதாவது தன்னருகே உறங்குவதைத் தவிர்த்திருக்கிறாள்…


சட்டென்று எழுந்து அமர்ந்து விட்டான் ரிஷி… அவள் அருகே வரும் போதெல்லாம் தான் முன்னெச்சரிக்கையாக அவளை விட்டு விலகி நிற்கும் பாவனை… தன் மனைவியை எந்த அளவு பாதித்து இருக்கிறது… அதை அவளும் உணர்ந்து… எந்த அளவு தன்னால் இங்கிதமாக நடக்க முடியுமோ அந்த அளவு நடந்து கொண்டிருக்கின்றாள்… உணர்ந்து கொண்டான்…


உணர்ந்து கொண்டவன்… தன்னையே தலையிலடித்துக் கொண்டவனாக அவளருகே சென்றவன்…


“நான் ஒரு லூசுடி… ஆனால்.. என்னை விட நீ லூசா இருக்கியே?!!” அவளருகில் நின்றபடி உரத்த குரலில் பேச ஆரம்பித்தவன்… கண்மணியைப் பார்க்க… அவளிடமிருந்தோ எந்த ஒரு அசைவும் இல்லை…


அவளின் ஆழ்ந்த நித்திரையை உணர்ந்தவன்… சில நிமிடங்கள் அவளையே பார்த்தபடி அமர்ந்து விட்டான்… உறங்கும் போது அந்த முகத்தில் தெரிந்த குழந்தைத்தனத்தில்… இவளுக்கா நாம் ‘சொர்ணாக்கா’ என்று பெயர் வைத்தோம் என்றுதான் ரிஷிக்குத் தோன்றியது… தனக்குள் சிரித்துக் கொண்டபடியே… மனைவியை ரசிக்க ஆரம்பித்திருந்தான் ரிஷி…


விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சமும்… இலேசாக காற்றில் அசைந்த கேசமும் போட்டி போட்டபடி… கண்மணியின் முகத்தின் மீது உறவாடிக் கொண்டிருந்தன…


ரிஷி அவள் முகத்தில் அசைந்து அவள் தூக்கத்தைக் கெடுக்க நினைத்த கேசத்தை சரி செய்து விட்டு அவளைப் பார்க்க… இப்போது தெளிவாகத் தெரிந்த கண்மணியின் நெற்றியில் ஆங்காங்கே ஈர முத்துக்கள்… அவனையுமறியாமல் அந்த அறையின் மேலே ஓடிக் கொண்டிருந்த காற்றாடியில் பார்வை பதிந்து… மீண்டும் மனைவியிடம் வந்து நின்றது… கூர்ந்து கவனித்தன அவனது கண்மணிகள் அவனது ’கண்மணி’யை


புடவையோடே உறங்கியிருந்தாள்… அதுவும் பள்ளிக்கு அணிந்து சென்ற புடவை…


நேற்று வந்ததில் இருந்து… புடவையைக் கூட மாற்றக் கூட நேரம் இல்லையா இவளுக்கு… நினைத்தப்போதே…


“இவனும் …இவன் தங்கைகளும் நேற்று ஆடிய ஆட்டம்…” ஞாபகத்திற்கு வர…


“நம் குடும்பத்தோடு போராடவே இவளுக்கு நேரம் சரியாக இருக்க… இதற்கெல்லாம் நேரம் இருக்குமா”


தன்னையே திட்டிக் கொண்டவன்… அவளருகே குனிந்தான்… காற்றை உள்ளிழுத்து வாயை அழுந்த மூடியவன்… தன் மொத்த உடல் பலத்தை எல்லாம் தன் கைகளில் கொண்டு வந்தான்… அப்போதுதான் அவன் அவளைத் தூக்கும் அழுத்தம் கூட அவள் உணர முடியாது… என்பதால் அப்படி செய்து... அதே போல் அவளைத் தூக்க… கண்மணியாலும் உணர முடியவில்லை… அப்படியே உணர்ந்திருந்தாலும் காற்றில் மிதப்பது போல்தான் அவளுக்கு இருந்திருக்கும்


”தாய்மை கொண்ட கைகளுக்கு மட்டுமே உரித்தான பழக்கம்… குழந்தை தூங்கும் போது அது உணராமல் இடம் மாற்றும் தாயின் பழக்கம்…” அப்படி குழந்தையை ஏந்தும் அன்னையைப் போலவே கண்மணியைக் கையாண்டாண் ரிஷி என்றால் மிகையாகாது


கண்மணியும் எழ வில்லை… எப்படி அவள் உணராமல் தூக்கினானோ அப்படியே படுக்கவும் வைத்தவன்… தானும் அவளருகே படுத்தபடி… இப்போது அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வை அரும்புகளைத் துடைத்து விட்டவன்… தன் வலிமையான கரங்களில் அவள் தலையைச் சாய்த்தபடி… தன் மற்றொரு கரத்தை அவள் மேல் போட்டுக் கொண்டவனாக… அடுத்த சில நிமிடங்களியே ரிஷி மீண்டும் கண் அயர்ந்தான் …


எத்தனை மணி நேரங்கள் கடந்திருக்கும் என்று தெரியவில்லை… கண்மணியின் அலைபேசி அடிக்க… வித்தியாசமான அலார்ம் அழைப்பில் முதலில் விழித்தவன் அவன் தான்… சட்டென்று கண்களைத் திறந்து… கண்மணியைப் பார்க்க அவள் இமைகளுக்குள் அவளின் கண்மணிகள் மெல்ல மெல்ல அசைய… பட்டென்று தன் இமைகளை மூடிக் கொண்டான்…


கண்மணி சில வினாடிகளுக்குப் பின் கண் விழித்ததை அவள் அசைவின் மூலமாகவே உணர்ந்து கொண்டான் ரிஷி… ஆனாலும் ரிஷி எழவே வில்லை… தூங்குவது போலவே பாசாங்கு செய்தபடி படுத்திருக்க… அடுத்த சில நிமிடங்களில்… நிமிடங்கள் கூட இல்லை… சில நொடிகளில் அந்த அறையை விட்டு கண்மணி வெளியேறி இருந்தாள்…


அடுத்து இவன் கீழே இறங்கி வந்த போது கூட… பள்ளிக்குச் சென்ற போதோ… ஏன் பேருந்தில் ஏறும் போதோ… கண்மணியிடம் பெரிதாக வித்தியாசம் இல்லை… இவனும் கண்டுகொள்ளவில்லை… பேருந்தும் கிளம்பி விட… பைக்கில் சாய்ந்து நின்றபடியே கை அசைத்தபடியே வழி அனுப்பி வைத்தான் ரிஷி மனைவிக்கும் தங்கைக்கும்…


பேருந்தும் கிளம்பி சில அடி தூரம் சென்றுவிட..


’சரி நாம் இனி வீடு திரும்பலாம்’ என்று ரிஷி பைக்கில் ஏறப் போகும் போது… கண்மணியிடம் இருந்து அழைப்பு வர… இப்போதுதானே ஏற்றி விட்டோம்… அதற்குள்ளாக என்ன அலைபேசியில் அழைப்பு என்று யோசித்தபடியே… சற்று தூரத்தில் சென்ற பேருந்தை நோக்கியவனாக…. கண்மணி அமர்ந்திருந்த சன்னலோர இருக்கையைப் பார்த்தபடியே… அலைபேசியை எடுத்து காதில் வைக்க…


கண்மணியை தலையை வெளியே நீட்டியபடியே… அவனைப் பார்த்து கை அசைக்க…


“என்ன” என்று இங்கிருந்து ரிஷி தலை அசைத்து கேட்டான்…


“கை வலிக்குதா ரிஷிம்மா… சாரி…” குரல் காதில் ஒலிக்க… கண்மணியின் மொத்த முகமும் அவனைப் பார்த்தபடி அவன் புறமாக திரும்பி இருக்க…


கண்கள் கலங்கி விட்டன ரிஷிக்கு… சட்டென்று இமை தட்டி தன்னைச் சரிபடுத்திக் கொண்டாலும் ஈரத்தை விழிகள் உணரத்தான் செய்தன…


“ஆனால் தேங்க்ஸ்” அலைபேசியில் பேசிய போது முடிக்காத வார்த்தையை அலைபேசி குறுஞ்செய்தியில் முடித்திருந்தாள் கண்மணி…


“யார் இவள்???... எங்கிருந்து வந்தாள்???… எதற்காக என்னை இப்படி தாங்குகிறாள்… என் சந்தோசம் மட்டுமே அவள் சந்தோசமாக அவள் கொண்டிருக்கின்றாளே???” தன்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தவளை… வார்த்தைகளின்றி… பார்த்தபடியே இருந்தவன் இமைக்க மறந்தது மட்டும் அல்ல… தன்னையே மறந்தும் நின்றான்…


அப்போது கண்மணியை நினைத்து தன்னை மறந்து நின்றவன்… இப்போது அதே கண்மணியை நினைத்து கண்ணாடியில் தெரிந்த தன்னை மறந்து சிரிக்க… அவன் சிரிப்பு அவன் முகத்தில் தெரிந்தால் தானே… முகமெங்கும் தாடி… அது அவனது சிரிப்பையே மறைத்திருந்தது... தன்னையேத் திட்டிக் கொண்டவன்… முதல் வேலையாக இன்று முகச்சவரம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தும் கொண்டபடியே… வீட்டை நோக்கி நடந்தவனின் கைகளில் இருசக்கர வாகனத்தின் சாவி… நர்த்தனமாடத் தொடங்கி இருக்க.. உல்லாசமாக நடந்து வந்தவனின் கண்களில் ‘நட்ராஜ்’ கேட்டின் அருகே போய்க் கொண்டிருப்பது கண்களில் பட…


சாவியோடு நர்த்தனம் புரிந்து கொண்டிருந்த விரல்களுக்கு ஓய்வு கொடுத்தவனாக…


”சார்… சார்..” என்று அழைத்தபடியே அவர் அருகில் போய் நின்றவன்… அவர் எங்கு போகிறார் என்று அனுமானித்தவனாக…


”10 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க… டீ சாப்பிட கடைக்கு எல்லாம் போக வேண்டாம்” என்றபடியே… அவரைப் பேசக் கூட விடாமல் நட்ராஜை மீண்டும் அவர் வீட்டை நோக்கி அனுப்பியவன்… தன் வீட்டினுள் நுழைந்தான்…


லட்சுமியும் ரிதன்யாவும் இன்னும் எழ வில்லை… ரிதன்யா விடுமுறை நாட்களில் தாமதமாக எழுவாள் என்பது ரிஷிக்கு தெரிந்த விசயம் தான்… அதிலும் இத்தனை சீக்கிரம் என்றால் அது நடக்குமா…


ரிஷி சமையலறைக்குள் நுழைந்து… தேநீர் தயாரிக்க ஆரம்பித்துவிட… என்ன ஒரு ஆச்சரியம் !!!!


”அண்ணா நான் டீ போடவா” என்றபடியே… ரிதன்யா அங்கு பிரசன்னம் ஆகி இருந்தாள்… அந்த அதிகாலையில்


தங்கையின் திடீர் வரவைக் கண்டு ரிஷியின் முகம் ஒரு நிமிடம் யோசனையில் சுருங்கினாலும்… காட்டிக் கொள்ளாமல்…


“ரிதும்மா… இன்னைக்கு ஒரு நாள் நல்ல டீ சாப்பிடலாம்னு இருக்கேன்… கொஞ்சம் மனசு வைம்மா” என்று சின்ன குறு நகையோடு தன் தங்கையை வாற… முறைக்க ஆரம்பித்தவள்… உண்மையை மறுக்க முடியாமல் முடிவில் புன்னகைத்தவளாக…


“சரி விடு… எனக்கும் நல்ல டீ சாப்பிட ஆசை இல்லாமல் இருக்குமா… ” என்றபடி அடுப்பு மேடையில் ஏறி அமர்ந்து கொண்டவள்… தன் அண்ணனைப் பார்த்தபடி பேச்சு கொடுக்க ஆரம்பித்து விட்டாள்…


ரிஷி சொன்னது போலவே… அடுத்த சில நிமிடங்களில் தேநீர் தயாரித்து… முதலில் நட்ராஜிடம் கொடுத்து விட்டும் வர… ரிதன்யா… தன் அண்ணனுக்கும் தனக்கும் என தனித் தனி கோப்பையில் டீயை மாற்றி வைத்திருந்தாள்


ரிஷி மீண்டும் திரும்பி வந்தவுடன் அவனுக்கு ஒரு கோப்பையைக் கொடுத்து விட்டு… அவளும் தனக்கான கோப்பையை கையில் எடுத்தவளாக… தன் சகோதரன் போட்ட தேநீரின் ஒரு மிடறை சுவைத்தவள்…


“வாவ்… அண்ணா… செம்ம… இந்த ’R’ போட்ட டீயும் விளங்கல… உங்க ’K போட்ட டீயும் சொல்ற மாதிரி இல்லை… ஆனா… இந்த ’RK' போட்ட டீ… வேற லெவல்னா” அனுபவித்துச் சொல்ல…


ரிஷி இதழ் விரித்த மௌனப் புன்னகையை பதிலாக கொடுக்க…


“சும்மா சொல்லலண்ணா… உண்மையாவே” என்று ரிதன்யா சிலாகித்து சொல்ல…


ரிஷி இப்போது அமைதியாக தன் டீயைக் குடித்தபடி இருக்க… ரிதன்யா தன் அண்ணனிடம் குறும்பாக…


”எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது ஃபர்ஸ்ட் குவாலிஃபிகேஷனே… என் அண்ணன் மாதிரி டீ போடத் தெரியனும்… டெஸ்ட் வைச்சுத்தான் நான் செலெக்ட் பண்ணுவேன்” என்ற போதே…


“மேடம் இந்த மாதிரி டீ போடனும்னு நினைக்க மாட்டீங்க… மேடம் கிட்ட மாட்டிகிறவங்களுக்கு தெரியனுமா… அது சரி…” செல்லமாக அவள் தலையில் குட்டியவன்…


”உன்னை மாதிரி நானும் நெனச்சுருந்தா டீ போடக் கத்துட்டுருக்க முடியுமா… விக்கிதான் எனக்கு கத்துக் கொடுத்ததே… இல்லல்ல நான் அவன்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்…” என்ற போதே ரிதன்யா… ஆர்வமாக அண்ணனைக் கவனிக்க ஆரம்பிக்க…


“அவனோட இருக்கும் போது… சில சமயம்… தண்ணி அடிச்சுட்டு நான் ஹேங்ஓவர் ஆகும் போது… திட்டிக்கிட்டே… போட்டுக் கொடுப்பான்… செமையா இருக்கும் அவன் போட்டுக் கொடுக்கும் டீ… அதை ரெண்டு சிப் அடிச்சா போதும்… அடிச்ச மப்பெல்லாம் இறங்கிரும்… எனக்கும் அந்த டேஸ்ட் பிடிச்சு… அவன்கிட்ட நானும் கத்துக்கிட்டு போட ஆரம்பிச்சது…. அப்புறம் குக்கிங்ல சில ரெஸிபி கூட அவன்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன்” என்று விக்கியின் அன்றைய நாள் நினைவுகளோடு ரிஷி சொல்லிக் கொண்டிருக்க..


விக்கியைப் பற்றி… இத்தனை நாள் அவனை நினைத்துக் கூடப் பார்த்திறாதவளுக்கு … இப்போது ஆயிரம் கேள்விகள் வர… தொண்டை வரை வார்த்தைகள் வந்து விட்டன… ரிதன்யாவுக்கு……


ஆனால்… விக்கியை விட… தன் அண்ணனிடம் பேச வேண்டிய முக்கியமான விசயம் வேறு ஒன்று இருந்தது…


அதற்காகத்தானே… இத்தனை சீக்கிரம் எழுந்து வந்து தன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தாள்… அதனால் விக்கியைப் பற்றி கேட்க வந்த வார்த்தைகளை தொண்டையிலே நின்று கொண்டன… வெளியே வரவில்லை


ஆனாலும் ஆரம்பித்து விட்டதால்… ரிதன்யாவுக்கு வார்த்தைகள் தடுமாற… பேசுவதை நிறுத்தியவளாக… சட்டென்று மௌனமானபடி தன் அண்ணனை நோக்க…


ரிஷி தன் கையில் இருந்த காபிக் கோப்பையினை கீழே வைத்தபடி…


“என்ன சொல்லு… ஏதோ என்கிட்ட சொல்ல நினைக்கிறதானே” என்று ரிஷி அவளைப் பேச வைக்க முயல…


“அண்ணா… அது…” என்று இழுத்தவள்…


“ரித்வி இன்னைக்கு இருப்பான்னு நினைத்துதான் ப்ளான் போட்டோம்… “ என்று இன்னும் ராகமாக இழுக்க…


தங்கையைப் பார்த்த பார்வையில் கூர்மை கூட... புருவமோ சுருங்கியது ரிஷிக்கு….


“என்ன ப்ளான்… அதுவும் என்னிடம் கேட்காமல்” என்று கேட்பது போல


“அது” என்று ரிதன்யா உமிழ்நீர் விழுங்க…


“மகிளா பற்றியா” சட்டென்று ரிஷியிடமிருந்து வார்த்தைகள் வர… வேகமாக ரிதன்யா தலையை ஆட்டியபடி…


“மகியும் பிரேம் அண்ணாவும் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிருக்காங்க”


வேகமாகச் சொல்லி விட்டு அண்ணனைப் பார்க்க


“மகிளான்னு சொல்லு… பிரேமை இழுக்காத… இது எப்போ போட்ட பிளான்” என்றவன் வார்த்தைகளில் கடுமை கோர்த்திருக்க



“நேத்து நைட்… ரித்வியும் நானும் மகியும் ப்ளான் பண்ணினோம்… ரிதி இப்படி இன்னைக்கு போவான்னு நினைக்கல… ஆனால் அவதான் ப்ளானே போட்டது”

“ம்ஹூம்… ரிதி ப்ளான்… அவங்க அவ்வ்வ்வ்ளோ பெரிய ஆளாகிட்டாங்களா…” என்று இழுத்தவன்… இப்போது நிறுத்தி தன் தங்கையைப் பார்க்க… ரிதன்யா அவன் பார்வை வீச்சை தாங்காமல் தலை குனிய…


“கண்மணி… இருக்க மாட்டான்னு தெரியும்ல.. இந்த வீட்டோட முக்கியமான ஆள் இல்லாம… நீ எப்படி வீட்டுக்கு கெஸ்ட்ட விருந்துக்கு கூப்பிடுவ” என்றபோதே…


அவன் சொன்னதை சரியாக தவறாக கணித்த ரிதன்யா….


“யார் சமைப்பாங்கன்னுலாம் கவலையே வேண்டாம்… நம்ம மகி சூப்பரா சமைப்பா… அவளே நம்ம எல்லோருக்கும் லஞ்ச் பிரிப்பேர் பண்ணித் தரேன்னு சொன்னான்னா… அவ நம்ம பழைய மகி இல்லண்ணா… பிரேம் அண்ணா வீட்ல ஒரே மகி புராணம் தான்… அந்த அளவுக்கு மகி மாறிட்டாண்ணா… “ என்ற போதே…


ஒரே பார்வைதான்… அதுவும் தங்கையைப் பார்த்து முறைப்போடு வீச… கப்பென்று அடங்கினாள் ரிதன்யா…


“கண்மணிய விடு… நீ அவள ஒரு பொருட்டாவே மதிக்கலைனு எடுத்துக்குவோம்… மகிளா நம்ம அத்தை பொண்ணு மட்டும் இல்லை… இன்னொருத்தவங்க வீட்டு மருமகள்… மரியாதை கொடுக்கனுமா இல்லையா” என்றவனின் வார்த்தைகள் ரிதன்யாவைச் சுட


“மகி… எப்போதுமே நம்ம மகிதான்… “ சொன்ன போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் கன்னம் வரை வந்து … அவள் குனிந்திருக்க… தரையில் முத்துக்களாக விழ…


அதைத் துடைத்தபடியே ரிதன்யா நிமிர்ந்தாள்... கூடவே தன் அண்ணனை குற்றம் சாட்டும் பார்வையோடும்


“நீ அவள வேற குடும்பத்து ஆள் மாதிரி டீரீட் பண்றண்ணா… மகி அவ வீட்ல இருந்ததை விட நம்ம வீட்ல இருந்ததுதான் அதிகம்… எல்லாத்தையும் மறந்துட்டியாண்ணா…”


ரிஷிக்கு ஒரு பக்கம் தங்கை மீது கோபமாக வந்த போதும்… இன்னொரு புறம் பாவமாக இருக்க…

தன் தங்கையைத் தன்னோடு சேர்த்து அணைத்தவன்


“ரிதும்மா… யோசிடா… சரி சாரி… ஒத்துக்கறேன்… மகிளா வேற யாரோ இல்ல... நம்ம மகிதான்… ஆனால் பிரேம்… அவர் இந்த வீட்டுக்கு… அதுவும் முதல் தடவை வரும் போது… கண்மணியும் நானும் சேர்ந்து அவங்களை வரவேற்கிறது மரியாதையா இருக்குமா… இல்ல இப்படி கண்மணி இல்லாமல்… நாம மட்டும் இருக்கும் போது அவர கூப்பிடறது ஒரு மரியாதையா இருக்குமா… அவர் நம்ம வீட்டு மாப்பிளைடா”


மௌனமாக இருந்தவள்… மெதுவாக


“அம்மாக்கு சர்ப்ரைஸ் விஸிட் கொடுக்கலாம்னு” என்று தயங்கித் தயங்கிச் சொன்ன தங்கையைப் பார்த்து சிரித்தவன்… சில நிமிடங்கள் தனக்குள் யோசித்தபடியே இருந்தான்… பின்


”மற்ற எல்லாத்தையும் விடு… என்கிட்ட கேட்டியா நீ…”


ரிதன்யா கடுப்பானவளாக … “இப்போ என்ன சொல்ல வர்ற நீ… “ என்று கேட்க…


“எத்தன மணிக்கு மகி வர்றதா பிளான்” கேட்ட போதே இந்த தர்ம சங்கடமான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்ற யோசனைக்கு போயிருந்தான்


“ப்ச்ச்… அதான் எல்லாம் கேன்சல் ஆகிருச்சே… “ என்ற போதே


“நீ மாத்திக்கிட்ட… மகி… அவ கேன்சல் பண்ணுவாளா… அவ பிடிச்ச பிடிக்கு ஆடலேன்னா… சும்மா விடுவாளா… நீ வேண்டாம்னு சொன்னாலும்… நான் இல்லேன்னாலும் வந்து நிப்பா… பிரேம்தான் பாவம்… உங்க பிளானால ” என்றான் மகியை முழுதும் உணர்ந்தவனாக…


“உனக்குத் தெரியுமா… எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங்… அது முடிந்து அடுத்து இன்னொரு ஆர்டர் விசயமா கிளைண்ட பார்க்கனும்…. வரிசையா அடுத்தடுத்து இன்றைக்கு முழுதும் நான் பிஸி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே… அந்த அறை வாசலில் நிழலாட..


நிமிர்ந்து இருவரும் வேகமாகப் பார்க்க… அவர்கள் கண்களையே நம்ப முடியவில்லை…


லட்சுமி வந்து நின்றிருக்க… உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும் லட்சுமி பெற்ற மக்களின் முகத்தில் வந்திருந்தது… மக்களின் சந்தோஷம் லட்சுமியையும் அடைய… தன்னையுமறியாமல் தன் மகன் மகளைப் பார்த்து ஆனந்தக் கண்ணீரோடு வேகமாக அடி எடுத்து வைக்க… அந்த வேகத்தில் லட்சுமி தடுமாற… ரிஷி… ரிதன்யா இருவருமாக இருவரும் அன்னையை நோக்கி ஓடி அவரைத் தாங்கி நின்றனர்…


---


அதிகாலை… சூரிய உதயம் அப்போதுதான் தொடங்கி இருக்க.. சூரியனின் கதிர்களால்… நிலவின் பிரசன்னம் மெல்ல மெல்ல குறைந்து… மேகக் கூட்டங்களில் தன்னை மறைந்து கொள்ள ஆரம்பித்திருந்தது… மங்கலான நிலவையும் பிரகாசமான சூரியனையும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பார்க்கும் அந்த நேரம் கண்மணிக்கு மிகவும் பிடிக்கும்… ஆனால் நிதானமாக ரசிக்க வாய்ப்பு கிடைத்ததில்லை… ஆனால் இன்று அதுவும் பேருந்தின் சன்னலோரத்தில் அமர்ந்திருந்தபடியால்.. அவளுக்குப் பிடித்த காட்சி.. இதோ ரசிக்க வாய்ப்பு கிடைக்க… அந்த வாய்ப்பை கண்மணி தவறவிடவில்லை


தனக்குப் பிடித்த காட்சியைப் பார்த்து ரசித்தபடியே ஊட்டியை நோக்கிப் பயணித்தாலும்… கண்மணியின் மனமோ… கணவனை நோக்கியே பயணித்துக் கொண்டிருந்தது…


இன்று அதிகாலை அலாரம் ஒலி… முதல் ஒலியை அடித்த போதே… எழுந்து விட்டாலும்… பழகிய ஒலி என்பதால் இமை பிரிக்க சோம்பேறிப்பட்ட கண்மணி… எழாமல் கண்மூடியபடியே அலைபேசியை அணைக்கத்தான் முதலில் நினைத்தாள்… ஆனால் அடுத்த வினாடியே கணவன் ஞாபகம் தான் வந்தது… ஆனால் அவன் கையணைவில் இருக்கின்றோம் என்ற வேறுபாடு எல்லாம் அவள் எண்ணத்தில் வரவே இல்லை…


மாறாக… அலார்ம் ஒலி கணவனை… அவன் தூக்கத்தை கெடுத்து விடுமோ… அந்த ஒலி கணவனை தொந்தரவு செய்யும் முன்… அணைத்து விட வேண்டும் என்று வேகமாக கண்களை மூடியபடியே தன் மொபைலை எடுத்து அணைக்க கைகளை உயர்த்தியவளால் அதைச் செய்ய இயலாமல் போக… முற்றிலும் உணர்வுக்கு வந்து கண் விழிக்க நினைக்கும் போதே… முதலில் உணர்ந்தது… கணவனின் இதமான உடல் சூடோடு கூடிய இதயத்தின் துடிப்பே…


எங்கிருக்கிறோம்… என்பதை உடனே உணர்ந்து கொண்டவளுக்கு எப்படி இங்கு வந்திருப்போம் என்பது தெரியாமல் இருக்குமா… அதற்காக அவளுக்கு ஏழாம் அறிவெல்லாம் தேவைப்படவில்லை… அதே நேரம்… கணவனின் இதயத்துடிப்பு… இப்போது கொஞ்சம் வேகமாக அடிக்கத் துடிக்க… நொடியில் கண்டுபிடித்து விட்டாள்… கணவனும் எழுந்து விட்டான் என்பதை அவனது புத்திசாலி மனைவி….


அது போலவே அவன் எழுந்தது தான் அறியக்கூடாது என்று நினைக்கிறான்… அதனாலேயே தூங்குவது போலப் பாசாங்கு செய்கிறான் என்பதையும்… ரிஷியின் இதயத்துடிப்பின் வேகம் உணர்ந்தே கண்டறிந்த கண்மணி… கணவனை கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளாமல் சட்டென்று அவனைவிட்டு எழுந்து கீழே வந்து விட்டாள்….


ரிஷியை நினைத்தபடியே… அவனது எண்ணங்களோடு வெளியே வானத்தைப் பார்த்த கண்மணியின் முகம் சிவக்கவில்லை… நீ சிவக்கவில்லை என்றால் என்ன!!? உனக்குப் பதிலாக நான் சிவக்கிறேன் என வானம் செவ்வண்ணம் பூசி இருக்க… அந்த பரந்த விரிந்த செவ்வானம் முழுவதும் அவள் நாயகனின் முகம் மட்டுமே கண்மணிக்கு விரிந்திருக்க… அந்த முகத்திலும்… உயிர்ப்பான ஒளி வீசும் அவன் கண்கள் சிந்தும் புன்னகையை மட்டுமே தேடிக் கொண்டிருந்தது கண்மணியின் கண்கள்…


---

/* தேவியை மேவிய ஜீவனே நீதான்

நீ தரும் காதலில்

வாழ்பவள் நான்தான்

நீயில்லாமல்

நானும் இல்லையே


அதிகாலை நேரம் கனவில்

உன்னை பார்த்தேன்

அது கலைந்திடாமல்

கையில் என்னை சேர்த்தேன் */


2,734 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page