top of page

கண்மணி... என் கண்ணின் மணி -31

Updated: Feb 25, 2021

அத்தியாயம் 31


”சோ, இதுதான் உன் முடிவா” என்றவாறு தன் முன் நின்ற தன் தங்கை ரிதன்யாவை கேள்வியாக நோக்கினான் ரிஷி…


அதிகாலை 5 மணிக்கே தன் இருக்கும் மாடி அறைக்கு வந்து தன்னை எழுப்பி… தான் வேலைக்குப் போவதாகச் சொல்லும் தன் தங்கையிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்டான் ரிஷி…


பெரிதாக அதிர்ந்தெல்லாம் அவன் கேட்கவில்லை… இயல்பாகவே தன் தங்கையை நோக்க….


ரிதன்யாவிடம்தான் அவள் இயல்பு என்பது காணாமல் போயிருந்தது… கண்மணிக்கும் ரிஷிக்கும் திருமணம் நடந்த தருணத்தில் இருந்து…


அத்தை மகளும் தன் அண்ணனை நேசித்தவளுமான தன் தோழி மகிளாவுக்கு உதவ முடியாத வேதனையில்… அவளோடும் பேச முடியாமல் குற்ற உணர்ச்சியிலும்… அதே நேரம் இங்கு நடப்பதை எல்லாம் தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தவள்… அவளாக இருப்பாளா என்ன… இல்லை அவள் இயல்பில் இருப்பாளா என்ன…


அதிலும் தன் அண்ணன்… திருமணம் முடிந்த கையோடு… அப்படி ஒரு சம்பவம் நடந்த அறிகுறியே இல்லாமல் தினம் இரவு தாமதமாக வருவதும்… வருபவன் வீட்டுக்கும் வராமல்… மாடி அறையில் தஞ்சம் கொள்வதையும் பார்க்க… இன்னுமே கலங்கினாள்… திருமணம் ஆகாதவள் என்றாலும் திருமணத்தைப் பற்றி அறியாதவளா என்ன…


அண்ணனின் மனைவி என்று வந்தவளோ… அருகில் இருந்த வீட்டில் இருந்து இந்த வீட்டிற்கு தன் ஜாகையை மாற்றி இருக்கின்றாள்… அவ்வளவுதான் இந்தத் திருமணம் என்பது போல அவள் நடந்து கொண்டிருந்தாள்…


ஆக இங்கு கேள்வி கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்… உண்மையிலேயே தன் தந்தை இருந்திருந்தால்… தன் அண்ணனுக்கு இப்படிப்பட்ட இடத்திலா பெண் எடுத்திருப்பார்… எங்களுக்காக என் அண்ணா இருக்கின்றான்.. ஆனால் அவனுக்கு…


இரண்டு வருடம் மட்டுமே ரிஷியை விட சிறியவள் ரிதன்யா… ஆனால் தன் அண்ணன் எப்படி வளர்ந்தான்… எப்படி வளர்த்தார்கள்.. இப்படி இந்த இடத்தில்… இந்த குப்பத்தில் அவன் வாழ்க்கை முடியவா… ஒவ்வொரு நொடியும் தன் அண்ணனுக்காக மட்டுமே கவலை கொண்டிருந்தவள்…


இப்போதெல்லாம் மகிளாவைக் கூடப் பெரிதாக நினைத்து வருந்தவில்லை… பிடிக்காத திருமணம் என்றாலும்… மற்றபடி… வேறு எந்தக் குறையுமில்லையே… எப்படியும் தன் தோழி அவள் வாழ்க்கையை ஆரம்பித்து விடுவாள்… ஆனால் தன் அண்ணன் வாழ்க்கை அப்படியா?… எந்த வகையிலாவது சமாதானம் அடையும் அளவுக்கா இருக்கிறது அவன் திருமண வாழ்க்கை… தனக்குள் நினைத்து நினைத்து குழம்பி குழம்பி ஒரு வாரமே ஓடி இருந்தது….


ரிதன்யாவின் கவலைக்கும் காரணம் இல்லாமல் இல்லை… எந்த கணம் கண்மணி அந்த வீட்டில் அடி எடுத்து வைத்தாளோ… அந்த கணமே ரிஷியும்… மாடி அறைக்கு மீண்டும் தன் பொருட்களை மாற்றி விட்டான்…


அவன் அந்த வீட்டில் இருக்கும் நேரம் அதிகாலை 5 மணி முதல் ரித்விகா பள்ளி செல்லும் வரையிலும்… மாலை ரித்விகாவை பள்ளியில் இருந்து வீட்டில் விட்டு விட்டு ஒரு மணி நேரம் இருப்பது… இதில் இந்த மாலை ஒரு மணி நேரம் என்பது மட்டுமே ரிதன்யாவுக்கு நிம்மதியான பொழுது… ஏனெனில் அப்போது கண்மணி பள்ளியில் இருந்து வந்திருக்க மாட்டாள்… அந்த நேரமே ரிதன்யா தன் குடும்பத்தோடு உண்மையாக செலவழிக்கும் நேரம்… தான், தன் தாய்… தங்கை… அண்ணன்… தன் குடும்பம் மட்டுமே…


காலையில் கண்மணி பள்ளிக் கூடம் கிளம்பிச் செல்லும் வரை அந்த அறையை விட்டு வெளியே வர மாட்டாள் ரிதன்யா… மாறாக அவள் அண்ணன் எப்போதும் போல அதிகாலையிலேயே எழுந்து… கீழே வீட்டுக்கு வந்து விடுவான்… முன்பு, தங்களை உதவியாக வைத்துக் கொண்டு சமையல் செய்பவன்… இப்போது மனைவிக்கு அவள் சமைப்பதற்கு உதவியாக இருக்கிறான்…


அதே போல ரிஷிக்கான இரவு உணவு மாடிக்கு சென்று விடும்… தன் அண்ணனின் மனைவியாக கண்மணி மற்றதெல்லாம் சரியாக செய்கிறாளோ என்னவோ… இதை மட்டும் சரியாகச் செய்து விடுவாள்…


இதற்கு பெயர் திருமணமாம்… யாரை ஏமாற்றுகிறார்கள்…. இவன் தான் இப்படி இருக்கின்றான் என்றால் வந்தவளோ அதற்கு மேல்


அண்ணனிடம் தன் வேலை விசயமாக பேச வந்தவள்… தன் முன் இருந்த ஹாட் பாக்ஸை வெறித்தபடியே நினைவு சுழலில் சுழன்றபடி… கோபத்தில் தனக்குள் பல்லைக் கடித்துக் கடித்துக் கொண்டாள்… என்னவென்று கேட்பது… எதையென்று கேட்பது…


இவள் தான் எனக்கு மனைவியாக வேண்டும் என்று தன் அண்ணன் இந்தக் கண்மணியைப் பிடித்து திருமணம் செய்திருந்தாலாவது… எப்படியோ போய்த் தொலை.. உன் விருப்பம் உன் வாழ்க்கை என்று மனதை ஆற்றுப்படுத்தி இருப்பாள்…


ஆனால்… அவன் விருப்பத்துடனா இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டான்…


இப்படி வாழ்வதற்கு இந்த திருமணம் அவசியமா என்று தன் அண்ணனின் சட்டையைப் பிடித்து உலுக்கி கேட்க வேண்டும் போல் தான் ஆத்திரம் வருகிறது ரிதன்யாவுக்கு… ஆனால் முடியவில்லையே….


ஆக ரிதன்யாவைப் பொறுத்தவரை… கண்மணி இல்லத்தில்… அகதியாக வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு… அந்த உணர்வு மட்டுமே


அதே நேரம்… இதுதான் சாக்கென்று ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொண்டு… வீட்டை விட்டு வெளியேறவும் மனம் வரவில்லை… காரணம் தன் அன்னையின் நிலை… கண்டிப்பாக அப்படி ஒரு சுயநலமான முடிவை அவளால் எடுக்க முடியாது… அதே நேரம் கண்மணியோடு அதே வீட்டில் அவளாலும் இருக்க முடியவில்லை.. தன் குடும்பத்தை விட்டும் போக முடியவில்லை… கண்மணியையும் தன் குடும்பத்தில் ஒருத்தியாக நினைக்க முடியவில்லை… இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தவளுக்கு… ஆறுதலாக கிடைத்த ஒரே தீர்வுதான்… இந்த இரவு நேர வேலை…


இந்த வேலையால் பகல் முழுவதும் வீட்டில் இருக்கலாம்… கண்மணியையும் பார்க்கத் தேவையில்லை… தன் அன்னையையும் கவனித்துக் கொள்ளலாம்… மாலை இவள் அலுவலகம் கிளம்பி விட்டால்… கண்மணி மற்றும் ரித்விகா இருவரும் வீட்டில் இருப்பார்கள்… தாயைப் பற்றிய கவலை இல்லை… ஒருவழியாக தன் மனக் குழப்பங்களுக்கு தற்காலிகமாக தீர்வு கிடைத்துவிட…


உடனடியாக அந்த வேலையில் சேர்ந்து கொள்வதாக ஒப்புதல் அளித்து… முந்தின நாள் இரவு மின்னஞ்சல் அனுப்பியவள்… அதன் பின்தான் இதோ இந்த அதிகாலையில் தன் அண்ணனிடமே விசயத்தைச் சொல்ல வந்தாள்…. அது கூட தகவலாக மட்டுமே…


கேள்வி கேட்ட அண்ணனிடம் பதில் சொல்லாமல் நடந்ததெல்லாம் நினைந்தபடி தலை குனிந்து அமர்ந்திருந்தவள்… இனியும் மௌனமாக இருப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து


”இது முடிவு இல்லண்ணா… சில பிரச்சனைகளை அவாய்ட் பண்றதுக்கு எனக்கு கிடைத்த வாய்ப்பு… “ தன்னிடம் முடிவா என்று கேட்ட அண்ணனிடம் பதிலாகச் சொன்னவள்… ’கண்மணி’ என்று சொல்லாமல் ’பிரச்சனை’ என்று முடிக்க…


ரிதன்யா ’கண்மணி’ என்று நேரடியாக சொல்லவில்லை என்றாலும் பிரச்சனை என்று சொல்வது கண்மணியைத்தான் என்பதை ரிஷியும் புரிந்துகொண்டான்தான்… எனினும் அதைப் பற்றி பேசவில்லை… தங்கை சொன்ன தகவலை மட்டுமே கவனத்தில் கொண்டான்


ரிஷி தன் தங்கையின் முடிவை விரும்பவில்லை… அதைச் சொல்ல வாயெடுக்கப் போக…


“ப்ளீஸ்ணா ஏதாவது சொல்லி என்னை தடுக்கப் பார்க்காத… உன் அளவுக்கு அதிரடியான முடிவெல்லாம் எடுக்கலை நான்… நீ சொன்னியே இன்னும் 4 மணி நேரத்துல உனக்கு மேரேஜ்னு… அந்த அளவுலாம் இது அதிர்ச்சி தரக் கூடிய விசயம் இல்லை… நான் வேலைக்கு போகனும்… படிச்சுட்டு இந்த மாதிரி வீட்ல அடஞ்சு கிடக்க முடியல என்னால… இதுவரை அம்மாவோட ஹெல்த் பெரிய காரணமா இருந்துச்சு… ஒத்துக்கறேன்… இப்போ கூட அம்மாவோட உடம்பு சரியாகல… நானும் மொத்தமா ஒதுங்கிப் போகலை… அதுனாலதான் இந்த நைட் ஷிஃப்ட்… பகல்ல அம்மாவைப் பார்த்துக்கறது என்னோட பொறுப்பு” என்றவள்… தன் அண்ணனைப் பார்க்க … அவனோ அமைதியான பாவனையோடு மட்டுமே இருக்க


ரிஷியின் இந்த அமைதியை சாதகமாகப் பயன்படுத்தியவளாக…


“கண்மணியை நீங்க மேரேஜ் பண்ணினது உங்க தனிப்பட்ட விருப்பமா இருக்கலாம்… சாரி சாரி.. விருப்பம்னு சொல்ல முடியாது… இந்த வீட்டு சூழ்நிலைக்காக மேரேஜ் பண்ணிக்கிட்டீங்க… அது என் புத்திக்கு புரியுது… ஆனால் மனசுக்கு…


“மகிளாவைத்தான் நீங்க மேரேஜ் பண்ணிருக்கனும்னு நான் எதிர்பார்க்கலை… அதுக்காக நானும் சண்டை போடலை… ஆனால் இந்தத் திருமணம்… அந்தப் பொண்ணு… என் அண்ணனுக்கு தகுதியானவங்களா” என்று நிறுத்த…


ரிதன்யாவின் வார்த்தைகளில்… இப்போது ரிஷி அவனை நினைத்து … கண்மனியை நினைத்து… தம் தங்கையின் வார்த்தைகளை நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் இதழ்கள் பிரியாமல் ஏளனமாக… காரணம்… இங்கு… அதாகப்பட்ட ‘தகுதி’ என்பது அவரவர் தராசில் வெவ்வேறு விதமாக எடைப் போடப்படும் விந்தை… அதை நினைத்ததால் வந்த புன்னகை அது… அதையும் வினாடியில் மாற்றியவன்… தங்கை பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தான்


”என்னால அவங்கள அண்ணியா ஏத்துக்க முடியலை… முடியுமான்னும் தெரியலை… எங்க ரெண்டு பேர்க்கு இடையிலயும் எப்போ பிரச்சனை வருமோன்னு தெரியலை எனக்கு… அப்படி வந்தால் உனக்குத்தான் தலைவலி… ஏற்கனவே பிரச்சனைகளை சமாளிக்கத்தான்… அந்தப் பொண்ண மேரேஜ் பண்ணிட்டு வந்திருக்க… இதுல நான் இன்னொரு பிரச்சனையை நம்ம குடும்பத்துல கொண்டு வர விரும்பலை… ஆனால் ஒண்ணு மட்டும் சொல்றேண்ணா… நம்ம குடும்ப கஷ்டத்தை சமாளிக்க இந்தப் பொண்ணுதான் சரி… அதுனால மேரேஜ் பண்ணினேன்னு சொன்னதானே… இதே பொண்ணுனாலதான் நம்ம குடும்பத்துக்கு பெரிய பிரச்சனை வரும் பாரு… உனக்கே தெரியும்ணா… நமக்கு இவ ஒத்து வரமாட்டான்னு…“ இந்த வார்த்தைகளை ரிதன்யா சொல்ல ஆரம்பிக்க… அதே நேரம் அந்த மாடி அறையின் வாசலுக்கு கண்மணி வரவும் சரியாக இருக்க… கண்மணி அப்படியே நின்று விட்டாள்… உள்ளே போகாமல்…


கடைசியாக ரிதன்யா பேசிய வார்த்தைகள்… கண்மணியின் காதுகளிலும் விழாமல் இல்லை… அப்படியே அர்ஜூன் பேசிய வார்த்தைகளின் கிட்டத்தட்ட மறு பிரதிபலிப்பாகவே இருந்தது ரிதன்யாவின் வார்த்தைகள்…


“அந்த ரிஷியோட எவ்ளோ நாள் நீ வாழறேன்னு பார்க்கிறேன்… கண்டிப்பா அவன் உனக்கு சரி வர மாட்டான்… அது ஒரு நாள் உனக்கும் புரியும்… அப்போ நீ என்கிட்ட மறுபடியும் வருவ… வரத்தான் போற… அது ஒரு நாள் நடக்கும்… அந்த நம்பிக்கையோட நான் போகிறேன்… நீ எந்த நிலைமல திரும்பி வந்தாலும் நான் மட்டும் தான் உனக்கு… இப்போ நான் அமிஞ்சிக்கரைவாசியா அமெரிக்கா வாசியான்னு நீ முடிவு பண்ணிக்க.. ” என்று சொன்னவனாக கிளம்பி விட்டான்… அர்ஜூன்…


விதியின் ஆட்டத்தை புரிந்து கொள்ளாத விசித்திரமான மனிதர்கள்… தனக்குள் நினைத்தவளாக…. ரிஷி என்ன சொல்லப் போகிறான் அவன் தங்கையின் வார்த்தைகளுக்கு…. என்று கவனம் வைக்க…


அவள் கணவனோ… தன் மனைவி அப்படிப்பட்டவள்…இப்படிப்பட்டவள்… என தன் மனைவியைப் பற்றி பேசவும் இல்லை… தங்கையின் வார்த்தைகளை மறுதலிக்கவும் இல்லை… அவன் எண்ணம் எல்லாம் தங்கையின் பணி நிமித்தமாகவே இருக்க… கண்மணி பற்றி ரிதன்யா சொன்ன வார்த்தைகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வில்லை…


ரிஷியைப் பொறுத்தவரை… ரிதன்யாவின் மனநிலைக்கும் ஒரு மாற்றாக இந்தப் வேலை இருக்கும் என்றே நம்பினான்… அதே நேரம்… தங்கையின் பாதுகாப்பும் முக்கியமே.. அது ஏனோ தெரியவில்லை… தன் தங்கைகளை எப்போதும் தன் பார்வை வட்டத்தில் வைத்திருக்கவே விரும்புவான் ரிஷி… தன்னை சுற்றி இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஆபத்து தன் தங்கைகளைத்தான் முதலில் குறிவைப்பது போலவே ஒரு அவனுக்குள் ஓர் உள்ளுணர்வு…. முதலிலாவது தன் தாய்… மகிளாவின் தந்தை நீலகண்டன்… என ஒரு நம்பிக்கையான பாதுகாப்பு வட்டம் தன் தங்கைகளைச் சுற்றி இருந்தது… இப்போது அவர்கள் இருவருக்கும் தான் மட்டுமே… அவன் உள்ளுணர்வின் எச்சரிக்கைக்கும் காரணம் இல்லாமல் இல்லை… கோவா சம்பவம்… அவன் வாழ்க்கையை மொத்தமாக திருப்பிப் போடவில்லை தான் என்றாலும்… ரிஷியின் வாழ்க்கையில் எதுவுமே சரியாக நடக்காமல்… மொத்தமாக அவன் மாறியதும்… அதன் பின் தானே…


அதிலும் கோவா சம்பவத்தில் இவன் மாட்டி விட்டவர்களில் ஒருவன்..


“போன் ஸ்கீரின்ல இருக்கிறது… உன் தங்கச்சிங்களா… இந்த பத்து வயது தங்கச்சி பாப்பா மாதிரி இந்தப் பொண்ணு இருந்ததுனாலதான்… இந்தப் பொண்ணக் காப்பாத்துனியா… பாவம்... இந்த ஸ்கூல் பாப்பா மேல நான் கண்ணு வச்சுட்டேன்… பார்க்கலாம் ஜெயில்ல இருந்து வெளிய வந்தேன்னா.. உன் தங்கச்சிதான் என் ஃபர்ஸ்ட் டார்கெட்..… என்ன மருது… ஒக்கேதானே உனக்கு“ சொன்ன அந்தக் குரல்… வருடங்கள் ஐந்து கடந்தும் இன்னும் இன்னும் அவன் காதில் கேட்கிறதே…


வருடங்கள் கடந்து விட்டதே… என்ன செய்து விடுவார்கள் என்று ரிஷி அசட்டையாக இல்லை என்பது மட்டும் நிச்சயம்… எச்சரிக்கையாக இருந்தவனுக்கு… அந்த இரண்டு நபர்களும் விரைவில் விடுதலை என்ற தகவல் சென்ற வாரம் தான் கிடைத்தது… அதே நேரம் தமிழ்நாட்டுக்கு வர மாட்டார்கள் என்ற கூடுதல் தகவல் கிடைக்க… அந்த மட்டில் ரிஷிக்கு நிம்மதி…


ஆனாலும் தங்கைகளின் பாதுகாப்பு அதில் கவனமாக இருந்தான்… கண்மணியைக் கூட அவன் நம்பவில்லை… என்றே சொல்ல வேண்டும்… கண்மணியின் தைரியம் அவன் அறிந்ததே… அவள் நட்ட நடு ராத்திரியில் கூட நடு ரோட்டில் தன்னந்தனியாக நிற்பாள்… அவனே பல சமயம் பார்த்திருக்கிறானே… அவளுக்கு பயம் என்பதே கிடையாது…


கண்மணி மேல் ஏதோ ஒரு நம்பிக்கை.. அவள் எந்த சூழ்நிலையிலும் தன்னை பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை… என்ன… அதே நம்பிக்கையை வைத்து… தன் தங்கையைத்தான் அவளோடு அனுப்ப மனம் வரவில்லை ரிஷிக்கு… அதன் காரணமாகவே… கண்மணி தானே ரித்விகாவை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு தான் திரும்பி வரும் போது தன்னோடு கூட்டி வருவதாக சொன்ன போது கூட மறுத்து விட்டான் ரிஷி…


மனம் சில நொடிகளுக்குள்… எங்கெங்கோ சுற்றி… மனைவியிடம் வந்து.. கடைசியில் தன் முன் நின்ற மூத்த தங்கை ரிதன்யாவிடம் நின்றது


“ஷிஃப்ட் டைமிங்க் என்ன…” கேட்டான் ரிஷி


“8 டூ 4… ஆனால் வீட்ல இருந்து ஈவ்னிங் 5 க்கு கிளம்பனும்… நம்ம ஏரியாவுக்கு மார்னிங் 8 க்கு ஆஃபிஸ் கேப் வந்துரும்…”


யோசித்தவன்… அதிக நேரம் எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை…சம்மதம் சொல்லி விட… கேட்டவளுக்கு … ஒரு வாரமாக இருந்த கோபமெல்லாம் போய் சந்தோஷமாக அண்ணனைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பரிக்கும் போதே கண்மணி அந்த மாடியறைக் கதவைத் தட்டியபடி… இருவருக்கும் காஃபி எடுத்து வர…


கண்மணியைப் பார்த்த ரிஷி சாதரணமாகவே இருக்க… ரிதன்யா முகத்தில்தான் கலவரம் வந்திருந்தது… கண்மணி எப்போது வந்தாளோ… பேசியது எல்லாம் கேட்டிருப்பாளோ என்று…. அதில் ரிதன்யாவின் முகம் வெளிறிப் போயிருக்க… அதன் விளைவு கண்மணி உள்ளே வந்தவுடன்… சட்டென்று ரிஷியின் அறையில் இருந்து வெளியேறி விட்டாள் ரிதன்யா…


அறை உள்ளே கண்மணியின் முகத்தைப் பார்த்தபடியேதான் இருந்தான்… ஆராய்ச்சிப் பார்வை தான் அதில் இருக்க… கண்மணியோ முகத்தில் எந்த மாற்றமும் இன்றி…


“இந்த டைம் கீழ வந்துருப்பீங்க… ஆளைக் காணோம்னு… வேலை பார்த்துட்டு இருக்கீங்களோன்னு நானே காஃபிய எடுத்துட்டு வந்துட்டேன்” என்றவளிடம் ரிஷியும் வேறெதுவும் கேட்காமல்… ரிதன்யா வேலைக்கு போகும் விபரத்தை மட்டும் சொன்னான்…


கண்மணிக்கு ரிதன்யாவைப் பிடிக்காது என்றெல்லாம் இல்லை… இன்னும் சொல்லப் போனால் அவளை மிகவுமே பிடிக்கும் காரணம்… கிட்டத்தட்ட ரிதன்யாவுக்கும் கண்மணியைப் போன்றே… ஒத்த குணங்கள் தான்…


இந்த ஒருவாரத்தில் ரிதன்யாவுக்கு கண்மணியைப் பிடிக்கவில்லை என்று நன்றாகவேத் தெரிந்தது… அது கூட கண்மணியாகப் பிடிக்கவில்லை என்பதை விட தன் அண்ணனின் மனைவியாக அவளைப் பிடிக்கவில்லை என்பது நன்றாகவேத் தெரிந்தது… அதே நேரம் ரிதன்யா சிறுபிள்ளைத்தனமாக கண்மணியிடம் பிரச்சனை பண்ணவும் இல்லை… ஒதுங்கிக் கொண்டாள்… அவ்வளவே


கண்மணி ரிதன்யாவைப் பற்றி தனக்குள்யோசித்தபடியே…


“இது அவங்க இஷ்டம்… எல்லாத்தையும் யோசித்துதான் முடிவெடுத்திருக்காங்க…” என்று சொல்லி விட்டு கீழே இறங்கியும் போய்விட்டாள்…


கண்மணியும் ரிதன்யா விசயங்களில் ஒதுங்கி இருக்க முடிவு செய்ததால்… ரிஷியிடம் இப்படி கூறிவிட்டுச் செல்ல…


ரிதன்யாவுக்கு திருமணம் முடியும் வரை ரிதன்யா–கண்மணி இருவரையுமே கத்தி மேல் நடப்பது போல கவனமுடம் கையாள வேண்டும் என்று நினைத்தவன் தான்… காலையில் கண்மணி..ரித்விகா…தன் தாய் என அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கி… மாலை ரிதன்யா- ரித்விகா…தன் தாய் என இவர்களுக்காக நேரத்தை மாற்றிக் கொண்டு… இரவுப் பொழுதையோ… தன் இலட்சியங்களுக்கான முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொண்டான்…


இந்த அனைத்து முடிவுகளுமே அவன் மனைவியின் ஒப்புதலுக்கு பின்னரே … என்பது வேறு கதை…


காலை ரித்விகாவை பள்ளியில் விட்டு விட்டு வரும் போது… வேலை முடிந்து வரும் ரிதன்யாவை வீட்டுக்கு அழைத்து வருவான்… அதே போல் மாலை ரித்விகாவை பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விடுபவன்… சில மணி நேரத் துளிகள் வீட்டில் இருந்து விட்டு… ரிதன்யாவை அலுவலகத்துக்கு செல்லும் வேனில் ஏற்றி விட்டு… மீண்டும் கம்பெனிக்குச் செல்பவன்… பின் இரவில் தான் கண்மணி இல்லத்துக்கே வருவான்…


ஆக மொத்தம் யாரையும் தொந்தரவு செய்யாமல்… முதலில் தான் தங்கியிருந்த அறை வாசியாகவும் மாறி இருந்தான் ரிஷி…


இதில் கண்மணிக்கும் குறை வைக்கவில்லை… கணவன் மனைவியாக அந்தரங்கள் பறிமாறி வாழ ஆரம்பிக்கவில்லையே தவிர… மற்ற படி… அந்தக் குடும்பத்தின் தலைவன் தலைவியாக… இருவருமே வேலைகளை பகிர்ந்து வாழ ஆரம்பித்திருந்தனர்… பின்னிரவில் படுப்பவன் கண்மணி எழும் நேரத்திற்கே எழுந்து… கீழே வந்து அவளுக்கு சமையலில் உதவியாக இருக்கவும் செய்தான்… கண்மணியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டாள்… இந்த மாதிரி அவன் உதவி செய்வதுதான் அவளுக்கு இடைஞ்சல் என்று….


“பரவாயில்லை… அந்த இடைஞ்சலோடு சமையல் செய்ய பழகிக்கோ…” கறாரான முடிவாக சொல்லிவிட… கண்மணியும் மறுக்க முடியாமல் அவன் முடிவுக்கு தலை அசைந்து விட்டாள்… ரிஷியோடு சேர்ந்து சமையல் செய்யவும் பழகிக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்…


ஆக கண்மணியோடு…. பேசியபடியே…. அவளுக்கு சமையல் வேலைகளில் உதவி செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டான்… சொல்லப் போனால்… இந்த அதிகாலை மட்டுமே ரிஷி அவன் மனைவியோடு அவன் செலவிடும் நேரம்…


ஆனால் கணவனுடனான இந்த நேரங்கள் அவன் மனைவிக்கு…


‘இம்சையா… இடைஞ்சலா… இனிமையா ….’ இயந்திரப் பாவை இதை மட்டும் சொல்லி விடுவாளா என்ன…


----


கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்திருக்க… வழக்கம் போல பரபரப்பான ஓர் அதிகாலை வேளை…


ரிஷியும் கண்மணியும் சமையலறையில் இருக்க… ரித்விகா குளியலறையில் இருந்து வந்தவள்…


“அண்ணி… என் யூனிஃபார்ம் காணோம்… பார்த்தீங்களா” என்று கத்தியபடியே கண்மணியிடம் வர… அடுப்பைக் கவனிக்கச் சொல்லி அவளிடம் கரண்டியைக் கொடுத்து விட்டு… அவளுக்கான ஆடையை எடுத்துக் கொடுக்க வெளியேற…


கரண்டியை கையில் வைத்தபடியே மும்முரமாக காய்களை வெட்டிக் கொண்டிருந்த தன் அண்ணனைப் பார்த்தாள் ரித்விகா……


“அண்ணா… நீ எப்போ இந்தக் காயெல்லாம் வெட்டி… அதை அண்ணி எப்போ சமச்சு… டைம் ஆகி விட்டது” என்று அண்ணனை அவசரப் படுத்த…


“உனக்கான லஞ்ச் அல்ரெடி பேக் பண்ணிட்டா உங்க அண்ணி” என்றவாறே தங்கையை நிமிர்ந்து பார்க்காமலேயே சொன்னவன் தன் வேலையில் கருத்தாக இருக்க..


“அ..ண்…ணா”… ராகமாக இழுத்தாள் ரித்விகா… இப்போதும் நிமிரவில்லை ரிஷி…


”என்ன… என் தங்கச்சி குரல்ல… ‘அண்ணா’ இவ்ளோ ராகம் பாடுது… என்ன விசயம்” ரிஷியும் கிண்டலாகக் கேட்க…


”உனக்கு ஒரு சூப்பர் நியூஸ் சொல்லவா…” தன் அண்ணி வருகிறாளா என்று சமையலறை வாசலில் பார்வையை வைத்தபடியே கேட்க…


நிமிர்ந்து மட்டுமே பார்த்தான் ரிஷி…. தன் தங்கையைப் பார்த்த பார்வையே என்ன விசயம் என்று சொல் என்பது போல் இருக்க


கண் சிமிட்டினாள் ரித்விகா…


“எங்க ஸ்கூல்க்கு ஒரு மிஸ் புதுசா வந்திருக்காங்க…. “ எட்டி வந்து அவன் காதிச் கிசுகிசுக்க… அவள் சொல்லி முடிக்க வில்லை… ரிஷிதான் இப்போது வேகமாக பின்னால் திரும்பிப் பார்த்தவனாகி இருந்தான்…


“உன்னை… “ என்றவன் தன்னைச் சமாளித்தவனாக


“அதுக்கு என்ன இப்போ” சாதாரணமாக கேட்க..


ரித்விகா தன் அண்ணனையே சில வினாடிகள் பார்த்தவள்… ஏமாந்த பாவனையோடு


“உன் ரியாக்‌ஷன் இவ்ளோ தானா… சரி விடு… சொன்னேன் அவ்ளோதான்… நீதானே ஊருக்கு வரும் போதெல்லாம் கேட்ப… நீ சைட் அடிக்கிற மாதிரி மிஸ் வந்திருக்காங்களான்னு… எத்தனை நாள் ரிதன்யா, மகிய ஸ்கூல்ல கொண்டு போய் விடுறேன்னு, அவங்க மிஸ்சை சைட் அடிச்சு திட்டு வாங்கிருக்க…அப்புறம் ரெண்டு பேரும் உன்னை ஸ்கூல் பக்கமே வர விட மாட்றாங்கன்னு என்கிட்ட ஃபீல் பண்ணுவ… பண்ணின தானே” என்று ரித்விகா பேசிக் கொண்டிருக்கும் போதே கண்மணி… ரித்விகாவின் உடைகளை கைகளில் வைத்தபடியே உள்ளே வர… ரித்விகா கண்மணி வருகிறாள் என்றெல்லாம் இப்போது சட்டை செய்ய வில்லை…


“ஆனா மேரேஜ் ஆகிருச்சுன்னு ஒதுங்கிற ஆளெல்லாம் கிடையாதே நீ… சைட் அடிக்கிறது எங்க உரிமைன்னு… சொல்வியே… இப்போ கூட அண்ணி அவங்களே என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போயிட்டு கூட்டிட்டு வர்றேன்னு சொல்லும் போது கூட .. நான் தான் ரித்விய விடுவேன்னு பிடிவாதமா கூட்டிட்டு போய்ட்டு வர்றியே… எனக்குத்தானே தெரியும்… நீ எதுக்கு வர்றேன்னு… இப்போ எதுவுமே தெரியாத மாதிரி சீன் போடற… அவ்ளோ நல்லவனா நீ… ” தன் அண்ணனை மிரட்டிக் கொண்டிருக்க…


“இந்தா உன் ட்ரெஸ்… “ ரித்விகா கையில் கொடுத்த கண்மணி…. ரித்விகாவிடம் திரும்பி…


“ட்ரெஸ் மாத்துறதுக்கு முன்னாடி… இதைக் குடிச்சுட்டு… போ…” என்று சமையல் மேடையில் இருந்த டம்ளரை எடுக்க அதைப் பார்த்த ரித்விகாவின் முகம் அஷ்ட கோணலாகப் போக… பாவமாக தன் அண்ணனைப் பார்த்தாள்


தன் தங்கையைப் பார்த்த ரிஷிக்கோ… சிரிப்பு வந்தாலும் அடக்கியபடி…


“பேச்சா பேசுற நீ… இப்போ பேசு பார்க்கலாம் …” என்றவாறு புருவத்தை உயர்த்த….


”அண்ணி பிளீஸ் அண்ணி… முட்டையும் பாலும்… குமட்டுது” என்றவளை…


“பரவால்ல… 11 த் படிக்கிற பொண்ணு மாதிரியா இருக்க… “ என்று சொல்லும் போதே…


”இப்படி சொல்லி சொல்லியே… அதை இதைனு சாப்பிட வச்சு…. நான் வெயிட் போட்டுட்டேன்னு என் ஃப்ரெண்ட்ஸ் லாம் சொல்றாங்க…” ரித்விகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே… கண்மணி முறைத்த முறைப்பில்… கையில் இருந்த பள்ளி சீருடையை மீண்டும் கண்மணியிடம் கொடுத்து விட்டு… வேகமாக பால் டம்ளரை வாயருகே கொண்டு போனவள்… கண்ணை மூடி கஷாயம் போலக் அதைக் குடித்து முடித்து விட்டு… அதே வேகத்தில் கீழே வைக்கவும் செய்ய..


“குட் கேர்ள்…” வந்த குரல் அவள் அண்ணியிடமிருந்து இல்லை… ரிஷியிடமிருந்து…


அண்ணனை முறைத்தபடியே…. அங்கிருந்து கிளம்ப… ரிஷி தங்கையின் முறைத்த பார்வைக்கு… பதில் பார்வை விடுத்து… அவள் கோபப் பார்வையை கண்மணியிடம் மாற்றச் சொல்ல… கோபமாக மீண்டும் அண்ணனை வெட்டும் பார்வை பார்த்தபடியே சென்ற தங்கையை ரசித்தபடியே தன் வேலையை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தான்…


ரித்விகா… பதினொன்றாம் வகுப்பில் இருக்கின்றாள்… இன்னும் பூப்பெய்தவில்லை… ஏனென்றும் தெரியவில்லை… அவள் வயதை ஒத்த அனைவரும் ஒவ்வொருவராக பெரிய பெண்ணாக… இலட்சுமிக்கு கவலை வந்து விட… கடந்த வருடமே மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டு கூட போய் பார்த்து வந்து விட்டார்… பயப்படும் படி ஒரு பிரச்சனையும் இல்லை… என்று மருத்துவர் சொல்லி விட… உடல் சக்திக்கென்று அவர் கொடுத்த டானிக்குகளை குடிக்காமல் தன் அன்னையிடமிருந்து ரித்விகா தப்பித்து விட்டவள்… ரிதன்யா சொன்னால் மட்டும் கேட்பாளா என்ன… ரிதன்யாவாலும் ரித்விகாவை கட்டுப்படுத்த முடியவில்லை…


இலட்சுமி… ரித்விகாவின் நிலையைப் பற்றி… ரிஷியிடம் சொல்லவில்லை… முதலில் மகன் மேல் இருந்த கோபத்தில் சொல்ல விரும்பவில்லை… இப்போது ரிஷியிடம் இதைச் சொன்னால்… அவன் வருத்தப்படுவான் என்று மகனிடம் சொல்லாமல் மருமகளிடம் தான் இருந்த நிலையிலும் சொல்லி விட… கடைசியாக ரித்விகா தன் அண்ணி கண்மணியிடம் வசமாக மாட்டிக் கொண்டாள்…


அதன் பின் ரித்விகாவுக்கென்று பிரத்யோக… உணவு முறை பழக்கத்தை ஆரம்பித்து விட்டாள் கண்மணி… கண்டிப்பாக.. தன் அண்ணி கொடுப்பதை எல்லாம் சாப்பிட்டே ஆக வேண்டும்… குடித்தே ஆக வேண்டும்… என்ற நிலை ரித்விகாவுக்கு… தப்பிக்க வேறு வழியும் இல்லை…


ரிஷிக்குத்தான் பாவமாக இருக்கும்… தன் தங்கையைப் பார்க்கும் போது… கண்மணி தன் அத்தை இலட்சுமியின் ரித்விகா மீதான கவலையை கணவனிடம் கூற…. அவனைப் பொறுத்தவரை இதெல்லாம் பெரிய விசயமாகப் படவில்லை… அவன் தங்கை அவனுக்கு இன்னும் குழந்தையே… இயற்கையாக நடக்க வேண்டிய விசயத்தை வலுக்கட்டாயமாக்குவது போல் தோன்ற…கண்மணியிடம் அதைச் சொல்ல…


’எங்களுக்கும் தெரியும்… இதெல்லாம் பெண்கள் விசயம்… நீங்க தலையிடாதீங்க’ என்று கண்மணி அவனை தள்ளி நிறுத்தி விட,… ரிஷி அதற்கு மேல் தலையிடுவானா… ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழி இல்லை…

ஆக மொத்தம்… கண்மணியின் செல்ல மிரட்டலில்… ரித்விகாவிடம் நன்றாகவே மாற்றம் தெரிந்தது… அதிலும் இந்த சில வாரங்களாக அவள் தோற்ற மாற்றங்களைக் கருத்தில் கொண்ட கண்மணி… ரித்விகாவுக்கும் முன்னேற்பாடாக இருக்க வேண்டிய விசயங்களையும் கற்றுக் கொடுத்திருந்தாள்…

...


”டைம் ஆகிருச்சு ரிஷி… கிளம்புங்க… ரித்துவ ஸ்கூல்ல விட டைம் ஆகியிருச்சுனா… ரிதன்யா பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ற மாதிரி ஆகப் போகுது… இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” கண்மணியின் குரலில் நடப்புக்கு வந்தவாறு


“டைம் இருக்கும்மா…” என்றவனிடம் கண்மணியும் அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் தன் வேலைகளில் கவனமாகி விட்டாள்… அடுத்து அவளும் கிளம்ப வேண்டுமே…


அதே நேரம்… இங்கு ரிஷியோ சற்று முன் தங்கை தன்னோடு நடத்திய உரையாடல்களை மனதில் அசை போட்ட படியே…


“பக்கத்தில நிற்கிற என் மிஸசையே சைட் அடிக்க முடியலை… இதுல… இவ ஸ்கூல்ல இருக்கிற மிஸ்ஸை…” என்று நினைத்தபோதே…


ஒரு காலத்தில்… அதிலும் கல்லூரி படிக்கும் காலத்தில் இவன் செய்த அலம்பல்களில்… விக்கியே அரண்ட நிகழ்வுகள் கண் முன் வந்து நின்றன…


“டேய் மச்சான்… அது புதுசா வந்திருக்கிற கெஸ்ட் லெக்சர்டா… சீனியர் கேர்ள்ஸ சைட் அடிக்கிற கொடுமையக் கூட பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கிருவேண்டா…. இதெல்லாம் முடியலடா…. சகிக்கலை”


“டேய் மச்சான்… இவங்கள்ளாம் நம்ம ஃபைனல் இயர் சீனியர்ஸ விட 2 இயர்ஸ் தான் கூட இருப்பாங்க… இதெல்லாம் மேட்டரா… ரசிகனா இருக்கனும்டா… நீ வேணும்னா என் தங்கச்சிக்கு ராமனா இருக்க இப்போ இருந்தே ட்ரெயினிங் எடுத்துக்கோ… நாங்கள்ளாம் மேரெஜுக்கு முன்னால கண்ணனா மட்டுமே இருப்போம்…” ரிஷி விக்கிக்கு எந்தப் பெண் மனைவியாக வந்தாலும்… தனக்கு அவள் தங்கை போலவே என்ற முறையில் சொல்ல… விக்கிக்கோ…. ரிஷியின் தங்கை ரிதன்யாதான் கண்களில் தோன்றுவாள் என்பது ரிஷியே அறியாத விசயம்…


தனக்குள் யோசித்தபடி இருந்தவனுக்கு… கண்மணியும் ரித்விகாவின் வார்த்தைகளைக் கேட்டிருப்பாளோ என்றே தோன்றியது… இப்போது மனைவியின் எண்ணங்களை பற்றி யோசிக்க ஆரம்பித்தவனுக்கு…. கண்மணியும் ரித்விகாவின் வார்த்தைகளைக் கேட்டிருப்பாள் என்றே தோன்றியது… அதே நேரம் கண்மணி என்ன நினைப்பாளோ என்ற கவலை எல்லாம் இல்லை…


“கட்டிய மனைவி தன்னையே பார்க்க நேரம் இல்லாதவன்… இதெல்லாம் செய்வானா.. ” என்று தான் நினைப்பாளே தவிர… தவறாகவெல்லாம் தன்னை நினைக்க துளி கூட வாய்ப்பில்லை என்று தனக்குள்ளே நினைத்தவனுக்குள்… நிம்மதிப் பெருமூச்சு வர… அதே நேரம் …ஏதோ ஒன்று தோன்ற… சட்டென்று நிமிர்ந்து கண்மணியைப் பார்க்க…. அவன் பார்த்த அதே நானோ செகண்ட்டுக்கு சரிசமமாக கண்மணியும் பார்க்க… பார்த்த அந்த நொடியே… இருவருமே சட்டென்று சிரித்து விட்டனர்… ஒருவரை ஒருவர் பார்த்து


“நீ என்ன நினைச்சேன்னு சொல்லவா” மெதுவாக சிரிப்பை அடக்கியவனாக….ரிஷி மென்னகையுடன் கண்மணியைப் பார்க்க…


“டெலிபதியா… “ என்று கேலியாக புருவம் உயர்த்தியவள்……


“சொல்லுங்க பார்க்கலாம்… நான் என்ன நினைச்சேன்னு” என்று சவாலாகக் கேட்க…


”சொல்லவா…” ரிஷியும் போட்டியாக சவால் விட… அவன் புறம் கைகட்டி திரும்பி நின்றவள்… அவனைச் சளைக்காமல் பார்க்க… அவளை எதிர்ப் பார்வை பார்க்க முடியாமல்… சட்டென்று குனிந்தவன்…


“கட்டின பொண்டாட்டி நம்மளயே பார்க்க… தகுதி விகுதி பார்த்துட்டு இருக்கவன்… சைட் அடிக்க போறானா… அதானே நினைத்த” என்று சொல்லி முடித்துவிட்டு இப்போது கண்மணியைப் பார்க்க…


தலையை இடவலமாக ஆட்டியபடியே உதட்டைச் சுழித்தாள் கண்மணி… அவன் சொன்னது ’தவறு’ என்பது போல…


இப்போது ரிஷி புருவம் சுருக்கி… ’வேறு என்ன நினைத்தாய் நீ’ என்பது போல பார்க்க….


“இல்ல… நீங்க சைட் அடிச்ச அத்தனை பொண்ணுங்களும் விட்ட சாபமோ என்னவோ… இப்டி கட்டின பொண்டாட்டியவே பார்க்க முடியாதபடி… ஆகியிருச்சேன்னு… பாவமா நினைத்தேன்” கண் சிமிட்டி… சொன்னவளின் குரலில் கணவனை வம்பிழுக்கும் பாவனையே இருக்க…


பொய்யாக முறைத்தவன்….


“சரி என்னை விடு… உன் வழிக்கே வருகிறேன். தேவையில்லாததை எல்லாம் பண்ணி… தேவையில்லாத சாபம் எல்லாம் வாங்கின பாவப்பட்ட பையன்தான் நான்… ஒத்துக்கறேன்… மேடம்… உங்களுக்கென்ன… நீங்கள்ளாம் வரம் வாங்கி வந்த தேவதை வம்சமாச்சே… புருசன் தான் பார்க்கல… நீங்க பார்க்கலாம்ல…” என்று ரிஷியும் இப்போது கண்மணியின் கணவனாக மெல்ல மாற முயற்சித்தவனாக… கண்மணியை நேருக்கு நேராக அவள் கண்களைப் பார்த்து சொல்ல முயற்சிக்க… அவளோ பார்வையை மாற்றாமல் இப்போதும் அவனையே பார்த்தபடியே…


“இப்போ என்ன பண்ணிட்டு இருக்கேன் ரிஷி சார்… பாரு பாருண்ணா உங்களத்தான் நான் பார்த்துட்டு இருக்கேனே...” என்று தைரியமாக பார்த்து புருவம் உயர்த்தியவளைப் பதில் பார்வை பார்க்க முடியாமல் தடுமாறியவன் ரிஷிதான்…


அவன் தடுமாற்றத்தைப் பார்த்தவள்… புன்னகையோடே பார்வையை வேறு புறம் மாற்றியவளாக…


“சைட்லாம் சொல்லிட்டு அடிக்க மாட்டாங்க ரிஷி சார்… அதெல்லாம் நாங்க கரெக்டாத்தான் பண்ணிட்டு இருக்கோம்… என் புருசன் மாடிப்படில இருந்து இறங்கி வரும் போது… வேகமா ஏறும் போது… என் அப்பாகிட்ட பவ்யமா பேசும் போது… அவங்க அம்மாகிட்ட பொறுப்பா பேசும் போது… அவங்க தங்கச்சிக்கிட்ட செல்லமா சண்டை போடும் போது… அப்புறம் பொண்டாட்டிய பார்க்காமலேயே அவளுக்கு ஹெல்ப் பண்ணும் போது… முக்கியமா… என் புருஷன் ஸ்டைலா கூலர் மாட்டிட்டு பைக் எடுக்கிற அழகை… இப்படி… வித விதமா…. பல டிசைன்ல சைட் அடிப்போம்…” இது எதையுமே அவன் முகம் பார்க்காமல்…. அங்கிருந்த பொருட்களை எடுத்து வைத்தபடியே மிக மிகச் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தவளை… ’ஆ…வென்று பார்த்தபடி இருந்தவனுக்கு மிக மிக இலேசான வெட்கச் சிதறல்கள் முகமெங்கும் விரவ ஆரம்பிக்க… பெண்களுக்கு வெட்கம் வந்தால் அதைக் காட்டும் விதம் அவர்கள் அழகை இன்னும் அதிகமாக்கும் என்றால்… அதுவே ஆண்களுக்கு வெட்கம் வந்தால்…. அதை மறைக்க… அவர்கள் செய்யும் செயல்கள் இன்னும் இன்னுமே கம்பீரத்தைக் கொடுக்கும்… இங்கும் ரிஷியும் அதற்கு விதிவிலக்கானவன் அல்ல…


தன் மனைவியின் வார்த்தைகளில் வந்த வெட்கப் புன்னகையை ரிஷி மறைக்க முயன்றவனாக… கைகளால் நெற்றிக் கேசத்தை சரி செய்வது போல பாவனை செய்ய… அது அவனது வழக்கமான செயல் தான்… ஆனால் இன்று அதுவும் அவனது கம்பீரத்தை கூட்ட… இருந்தும் மனைவியின் வார்த்தைகளை கேட்க முடிந்தவனால்… அதைக் கிரகித்து… எதிர் வினை ஆற்ற முடியாத நிலை…


முடியவில்லை என்றெல்லாம் இல்லை… தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள பெரும்பாடு பட்டவனாக… முயற்சித்துக் கொண்டிருக்க… சொன்ன ரிஷியின் பாவையோ… அவனைப் பார்க்காமல்… எங்கு அவனைப் பார்த்தால் மெழுகுப்பாவையாக மாறி விடுவோமோ என்ற அச்சத்தில் இயந்திரமாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்தாளோ???


கணவனால் ரசிக்கப்படும் பெண்கள் மட்டும் தான் கொடுத்து வைத்தவர்களா… மனைவியால் ரசிக்கப்படும் கணவர்களும் கொடுத்து வைத்தவர்களே…. ரிஷியின் நிலைமையும் அப்படித்தான் இருந்தது இங்கு…


இருவருக்குமே தடைகள் இல்லை என்ற போதிலும்… ரிஷி தனக்குள்ளாக போட்டுக் கொண்டிருந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியே வர நினைக்காமல் இருக்க… கண்மணியோ… தன் கட்டுப்பாடுகளை கொஞ்சக் கொஞ்சமாக உடைத்து வெளி வந்து கொண்டிருந்தாள்… அவளறியாமலேயே….


கணவன் ஒரு திசையிலும்… மனைவி ஒரு திசையிலும் போனாலே… அவர்களுக்கிடையே இருக்கும் கண்ணுக்கு தெரியாத பந்தம் அவர்களை இணைக்கும்… இங்கு இருவரும் ஒரே திசையில் இருக்கும் போது காதல் அவர்களுக்கிடையே கண்ணாமூச்சி ஆட முடியுமா என்ன… இருந்தும் காலம் அவர்களை விட்டுப் பிடித்தது…

-----


”அண்ணா…. பீன்சை வெட்டி… கீழ போட்டுட்டு இருக்க…” என்ற போதே… அடுத்த அதிர்ச்சியாக


“அண்ணி…. அடுப்பை ஆன் பண்ணாமலேயே தோசை ஊத்துறீங்க”


தன் அண்ணன் அண்ணி… இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே…. சொன்னபடியே உள்ளே வந்தவள் வேறு யாருமில்லை ரித்விகாவே


ரித்விகாவின் வருகையில் சட்டென்று அங்கு நிலவரம் மாறி… ரிஷி-கண்மணி இருவரும் மீண்டும் இயல்புக்கு மாறி இருக்க


“அண்ணா… கிளம்பலாமா” என்று ரித்விகா கேட்க….


“5 மினிட்ஸ்டா… ரெடியாயிட்டு வர்றேன்” ….. என்றவன்… தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறி விட்டான் ரிஷி…


“உங்க அண்ணா வர்றதுக்குள்ள… நீ சாப்பிடு” என்று கண்மணி சொல்ல…


“எந்த தோசை… அந்த மாவு தோசையவா” என்று கேலியாக பயந்து கேட்ட ரித்விகாவின் தலையைத் தட்டியவள்…


“அது அது…. உனக்கு தோசை ஊத்திட்டு அடுப்பை ஆஃப் பண்ணிட்டேன்…… அப்புறம் ஏதோ ஞாபகத்தில்… ஆஃப் பண்ணதை மறந்து தோசை ஊத்திட்டேன்… ஹாட் பாக்ஸ்ல இருக்கும் பாரு “ என்று முதலில் தடுமாறி… பின்… கண்மணியின் வழக்கமான தோரணைக் குரலுக்கு கண்மணி மாறி விட…


தன் அண்ணியையே வித்தியாசமாகப் பார்த்த ரித்விகாவோ….. பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் வேறு ஏதும் கேட்கவில்லை… சாப்பிட ஆரம்பித்து விட்டாள்…


சாப்பிட முடியாமல் அவசரமாக அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும்… தன் அண்ணியின் மேல் ஆராய்ச்சிப் பார்வையை வைத்தபடியே இருந்தவளுக்கு வெளியே ரிஷி பைக்கை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்க…


அதுதான் சாக்கென்று….


சாப்பாட்டை பாதியிலேயே வைத்தவளாக…



“லேட் ஆகிருச்சு அண்ணி… பை பை…” என்று வேகமாக கிளம்பி விட… அவளுடைய மதிய உணவுப் பையை வெளியே கொண்டு வந்த கண்மணி… அதை கொடுத்து விட்டு,… மீண்டும் வேகமாக உள்ளே போய் விட்டாள்…


இங்கு ரிஷியோ… இப்போது மனைவியைக் கண்காணிக்க ஆரம்பித்தவனாக… அவளைப் பார்க்க… அவளோ அங்கு நிற்காமல் மீண்டும் உள்ளே போய்விட… விடவில்லை ரிஷி…. கண்மணி சொன்னது போல் தன்னைப் பார்க்கிறாளா என்ற ஆவல் மட்டுமே அவனிடம்


“கண்மணி…” வண்டியில் இருந்தபடியே சத்தமாக கண்மணியை அழைக்க… அவன் கத்திய கத்தலில்… வேகமாக கண்மணியும் மீண்டும் வெளியே வர….


’என் கண்ணாடி மறந்துட்டேன்… அம்மா கட்டிலுக்கு பக்கத்தில இருக்கிற மேஜைல இருக்கு … எடுத்துட்டு வா” என்ற போதே…


“அது இல்லைனா… பைக் எடுக்க மாட்டியாண்ணா… இங்க இருந்து பத்து நிமிசம் தான் ஸ்கூல்… ஹெல்மெட் தான் முக்கியம்…” என்று தங்கை பேசிக் கொண்டிருக்க… அது எல்லாம் அவன் காதில் விழுந்ததா தெரியவில்லை… காரணம் கணவனாக அவன் கவனமெல்லாம் மனைவியின் மீதே இருக்க… அவள் மனைவியோ…. அவனிடம் அவன் கேட்ட கண்ணாடியை கொடுத்து விட்டு… மீண்டும் திரும்பி விட்டாள்…


“இவ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… உங்கள அப்படி பார்ப்பேன்…. இப்படிப் பார்ப்பேன்னு… டைலாக்ஸ்லாம் அடிச்சாளே… அதெல்லாம்… சும்மாவா” மனதுக்குள் கேட்டபடியே…. கூலரை அணிந்தபடியே… பைக் கண்ணாடி வழியாக மனைவியைப் பார்க்க… கண்மணி இன்னும் உள்ளே போகாமல் இருக்க..


இவனுக்குள் முதன் முதலாக இலேசாக படபடப்பு மனதுக்குள்…


‘உண்மையிலேயே தன்னைப் பார்க்கிறாளோ….’

மனதில் வந்த படபடப்பு… மெதுவாக… அவன் முகத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருக்க


அவன் நினைத்த அதே நேரம்… கண்மணியோ… ரிஷியை எல்லாம் கண்டுகொள்ளாமல்… அங்கு வாடகைக்கு இருக்கும் மற்றொரு குடித்தனக்கார பெண்ணிடம் மிகத் தீவிரமாக …. எதையோ பேச ஆரம்பிக்க போக…


சற்று முன் தோன்றிய… அத்தனை உணர்வும் ஒரே நொடியில் அடங்கிப் போனது போன்ற உணர்வு அவனுக்குள்


“டேய்… சொர்ணாக்கா… வாயிலயே வடை சுட்ருக்காடா உன்கிட்ட… இவளுக்கு உன் வீட்டுக்காரம்மான்றதை விட… இந்த ’கண்மணி இல்ல’ வீட்டுக்காரம்மான்றதுதான் முக்கியம்” மனசாட்சி முதன் முறையாக… ரிஷிக்கு ஆதரவாகப் பேச ஆரம்பிக்க…


மனைவி தன்னைக் கண்டு கொள்ளாத கடுப்பில்… அதை பைக்கின் கிக்கரில் காட்டி உதைத்தவனாக அங்கிருந்து கிளம்பியவனை… இரு விழிகள் அவன் உணராமலேயே… அவனைப் பார்க்காமலேயே…. மனதுக்குள் ரசித்துக்கொண்டிருந்ததை ரிஷி அறிவானோ???….

-----






3,263 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page