top of page

கண்மணி... என் கண்ணின் மணி-25-1

அத்தியாயம் 25:


/*கானல் நீரால் தீராத தாகம்

கங்கை நீரால் தீர்ந்ததடி

நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை

நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை


கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி*/


’அத்தியாயம் 26’: இந்த ஒரு வார்த்தையே வெகுநேரமாக வெண் திரையை ஆட்சி செய்து கொண்டிருந்தது

கண்மணியின் கண்கள் கணினித்திரையில் இருந்தாலும்… விரல்கள் வெகுநேரமாக விசைப்பலகையில் உறவாடிக் கொண்டிருந்தாலும்… அந்த அத்தியாயத்திற்கான காட்சி அமைப்புகள் அவளுக்குள் சுழன்று கொண்டிருந்தாலும்… ஏனோ அழுத்தமான வார்த்தைகள் எண்ணங்களில் இருந்து வெளிவரவில்லை… அதையும் மீறி விரல் வழியாக வந்த வார்த்தைகளுக்கும் மூளை அதற்கான அனுமதி அளிக்காமல் இருக்க… மூளையும் எண்ணமும் சமன்படாமல் போட்டிப் போட்டுக் கொண்டிருந்ததால் வெண் திரை வெற்றுத் திரையாக மட்டுமே காட்சி அளித்தது…


கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி எழுதுவதற்கு ஏதுவாக வைக்கப்பட்டிருந்த மேசையில் இருந்த வைக்கப்பட்டிருந்த கணினியை வெறித்தபடி கதாசிரியராக அமர்ந்திருந்த நம் நாயகி தடுமாறிக் கொண்டிருந்த காட்சி அமைப்பு இதுதான்…


’நாயகன்… மட்டுமே போதுமென்று… தாய், தந்தை, செல்வம்… தனக்கான தகுதி.. அனைத்தையும் துறந்து நாயகனோடு செல்லும் காட்சி…’


‘எப்படி யோசித்தாலும் அவளுக்கு அந்தக் காட்சியை உயிர்ப்போடு எழுத முடியவில்லை… ஏனென்றும் தெரியவில்லை… அதெப்படி… அப்படி எல்லாம் ஒரு பெண் இருக்க முடியும் என்று கண்மணியின் மூளை கண்மணியாக மட்டுமே யோசித்துக் கொண்டிருக்க… அந்த கதையின் பாத்திரமாக மாறி கதாசிரியராக யோசிக்க முடியவில்லை… யோசித்தபடியே கண்கள் அறையைச் சுழற்றி வட்டமடிக்க… அந்த அறையில் இருந்த தன் தாய் பவித்ராவின் புகைப்படத்தில் வந்து நின்றது…


அதே நேரம் வெளியே கூடத்தில் படுத்திருந்த தந்தையின் புறமும் கவனம் சிதற… தந்தையையே பார்த்திருந்தவளுக்குள் அவளையும் மீறி அவளுக்குள் மெல்லிய புன்னகை…


‘அடங்காத காளை ஒன்று அடிமாடா போனதடி“ என்ற பாடல் யாருக்கு பொருந்துமோ இல்லையோ தன் தந்தை நடராஜ்க்கு பொருந்தும்… அவரை அப்படி மாற்றிய பெருமை… புகைப்படத்தில் புன்னகையோடு இருந்த அவளது அன்னையை மட்டுமே சாரும்…


அழகான… அறிவான…. பணக்கார வீட்டுப் பெண்… முரட்டுத்தனமும்… திமிறிய இளமையும், தெனாவெட்டுமான இளைஞன்… இவர்களுக்கிடையே மோதல் காதல்… வாழ்க்கை என ஒரு ஜனரஞ்சகமான நாவலுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் கொண்ட தன் தாய் தந்தை வாழ்க்கைப் பாதை…. கட்டுரைகள்… தகவல்கள் என எழுதிக் கொண்டிருந்த கண்மணியை…. அவளையுமறியாமல் கதாசிரியராக மாற்றி இருக்க… ஓரளவு தாய் தந்தை வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைச் சேகரித்து கிட்டத்தட்ட கதையின் கடைசி கட்டத்துக்கு வந்து விட்டாள்… அதில் முக்கியமான பகுதி நாயகி நாயகனுக்காக அனைத்தையும் துறந்து வீட்டை விட்டு வெளியேறும் காட்சி… அந்தக் காட்சிக்காகத்தான் வார்த்தைகளைக் கோர்க்க தவித்துக் கொண்டிருந்தாள் அந்தக் கதையின் ஆசிரியரான நம் கண்மணி… வெகுநாட்களாக இந்த அத்தியாயம் எழுத முடியாமல் கதையையே கிடப்பில் போட்டு விட்டாள் என்பது வேறு கதை…


ஆனால் இன்று ரிஷிக்காக…. அவனது காதலி மகிளா துடித்த உணர்வுகளைக் கண்முன் கண்ட போது… அவளையுமறியாமல்… கதைக்கான அவளது எண்ண ஓட்டங்கள் தூண்டப்பட்டிருந்தது…


இதற்கிடையே… அவளோடு வந்திருந்த ரித்விகாவும் தூங்காமல் வெகுநேரம் அழுதுகொண்டே இருக்க… அவளை எப்படி சமாதானப்படுத்தினாலும் அவள் அழுகையை நிறுத்தவும் முடியவில்லை… உறங்க வைக்கவும் முடியவில்லை… அவள் அழுது அழுது ஒருவாறாக மூன்று மணி அளவில் தூங்கி விட… இவளுக்கோ அதன் பிறகும் உறக்கம் வரவில்லை….


பிறகென்ன… பாதியில் விட்ட கதையை…. தூசு தட்டி எழுத ஆரம்பித்தவளுக்கு இப்போதும் வார்த்தைகள் கண்ணாமூச்சி ஆட்டம் காண்பிக்க.. இன்றும் ஒரு வார்த்தை கூட எழுத முடியாமல்… கணினித் திரையை மூடியவள்.. அருகில் படுத்திருந்த ரித்விகாவுக்கு போர்வையை சரிப்படுத்தியபடி தானும் உறங்க ஆயத்தமாக… கண்மணி இல்லத்துக்குள் பைக் நுழையும் சத்தம்… அது ரிஷியின் பைக் என்பது அதன் சத்தத்தை வைத்தே உணர்ந்து கொண்டாலும்… அவன் எப்படி இப்போது வருவான்… சந்தேகமும் கூடவே வர… அவள் வீட்டின் அழைப்பு மணியின் ஓசை ஒலி… அவனே என்பதையும் கிட்டத்தட்ட உறுதி செய்ய… கண்மணி எழுந்து வெளியே வருவதற்கு முன் நட்ராஜ் கதவைத் திறந்திருக்க… வந்திருந்தது…. ரிஷியே…


ரித்விகா இவளோடு வந்து 4 மணி நேரம் கூட ஆகவில்லை… வந்து நின்றிருந்தான் ரிஷியும்…


ரிஷியிடம் நட்ராஜ்… லட்சுமியின் உடல்நிலையைப் பற்றி… கேட்க… இன்னும் அப்படியேதான் இருக்கின்றார் என்று நட்ராஜிடம் சொன்னாலும்… ரிஷியின் பார்வை வீட்டினுள் அலைந்தது தங்கையைத் தேடி…


“ரித்தி இதுவரை நாங்க யாருமே இல்லாமல் தனியா இருந்தது இல்லை… அதுமட்டுமில்லாமல் அவள் அதிகமாக அழுதா… காய்ச்சல் வேற வந்துரும்… அப்பா இறந்த பின்னால அவ ரொம்பவே வீக் ஆயிட்டா… அதுதான்… அங்க இருக்க முடியலை…” என்று தயங்கியபடி சொன்னவனிடம்…


கண்மணி பெரிதாக ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை…. கோபமா என்றால் கோபம் என்றும் சொல்லலாம்… அதே நேரம் ரிஷி சொன்னது போல ரித்விகாவிற்கு இலேசாக உடல் சூடும் இருக்க… அவனிடம்


“லைட்டா ஜுரம் இருக்கு… இப்போதான் தூங்கினா… இங்கேயே தூங்கட்டுமே” என்று சொல்ல…


“இல்லையில்லை … நான் கூட்டிட்டு போகிறேன்… ரூமை ஓபன் பண்ணிட்டு வருகிறேன்” என்று போனவன்…


கண்மணியிடம் திரும்பி….


“எழுப்பிறாத… நான் வந்து தூக்கிட்டு போகிறேன்” என்று சொல்லியபடி தன் அறைக்குப் போய் திறந்து தங்கைக்கு படுக்கை விரித்தவன்… அடுத்த சில வினாடிகளில் மீண்டும் இவள் வீட்டுக்கு வந்தவன்… கண்மணியின் படுக்கையறையில் படுத்திருந்த தன் தங்கையை அவள் உறக்கம் கலைக்காமல் கைகளில் ஏந்திக் கொண்டவன்… தனது அறையில் கொண்டு வந்து படுக்க வைத்தபோதும் அவள் உறக்கம் கலையாதபடி கவனமாகக் கையாண்டான்…


நட்ராஜ் அதன் பிறகு உறங்கவில்லை… ரிஷியோடு பேசச் சென்று விட… இப்போது கண்மணிக்கு உறக்கம் வந்தாலும்… உறங்க முடியவில்லை… தந்தை ரிஷி இருவருக்கும் தேநீர் தயாரிக்க ஆரம்பித்தவள்… அதை எடுத்துக் கொண்டு மாடிக்குப்போக… ரிஷி… நட்ராஜின் முன் அமர்ந்திருக்க… அவன் உடல் குலுங்கியதே அவரிடம் ஏதோ சொல்லி அழுது கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்த… இவள் வந்ததை உணர்ந்த ரிஷி… சட்டென்று கண்களைத் துடைத்தபடி… வெறித்து அமர்ந்து விட… நட்ராஜ் ஆறுதலாக அவன் தோள்களை அணைத்தார்…


“ப்ச்ச்… எனக்கு ஏன் சார் இவ்வளவு சோதனை… எதுக்காக… நான் ஒருத்தன் கஷ்டப்படுகிறேன் என்றால் அது எனக்கான தண்டனைனு நினைக்கலாம்.. இன்னைக்கு ரிது.. ரிதி… எல்லாருமே… இன்னும் கொஞ்ச நாள்ள சென்னைல எல்லோரும் என்கூட செட்டில் ஆகிறலாம்னு சொன்ன அம்மா சுயநினைவில்லாமல்… ரிது தனியா ஹாஸ்பிட்டல்ல… ரிதி இங்கனு… எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை… இதெல்லாம் அனுபவித்து… இதெல்லாம் தாண்டி… பயமா இருக்கு சார்… ” நட்ராஜிடம் புலம்பிக் கொண்டிருக்க…


நட்ராஜ் அவரால் முடிந்த அளவு அவனைத் தேற்றிக் கொண்டே இருக்க… சில நிமிடங்கள் அவர்களோடு இருந்த கண்மணி… அதன் பிறகு இருவருக்கும் தனிமை கொடுத்து கீழே வந்து விட்டாள்…


----


கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கழிந்திருந்தது…. லட்சுமி… ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்றாலும் பெரிதாக முன்னேற்றம் இல்லை… ஆனாலும் அன்னை ஆபத்துக் கட்டத்தை தாண்டி விட்டார் என்பதே ரிஷிக்கு பெரிய அமைதியாக இருக்க… ரிஷிக்கு இன்னொரு பிரச்சனை ரிதன்யாவின் மூலம் வந்தது… அதற்கு காரணம் ரித்விகா…


ரித்விகா பகல் வேளைகளில் மருத்துவமனைக்கு வருவதும்…. இரவில் கண்மணி இல்லத்திற்கு போவதுமாக இருக்க… அன்று இரவும் ரிஷி ரித்விகாவை கண்மணி இல்லத்துக்கு அழைத்துக் கொண்டு போக நினைக்க… ரித்விகா கண்களால் தன் சகோதரிக்கு சைகை காட்ட...ரிதன்யா ஆரம்பித்தாள்


“அண்ணா… இங்க ஏதாவது பக்கத்தில… ரூம் பாருண்ணா… ரித்தி நம்மகூடவே இருக்கட்டும்… நீயும் அவகூட நைட் தங்கிட்டு இங்க வந்துறலாம்” எனும்போதே ரிஷி இருவரையும் பார்த்தபடி…. சில நொடிகள் இருந்தவன்… ரித்விகாவை அழைத்தான்…


“சொல்லு… உனக்கு என்ன பிரச்சனை… எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிருக்கலாம்ல… ரிதன்யா ஏன் இப்படி சொல்றா.. அண்ணாகிட்ட சொல்றதுக்கு என்னடா கஷ்டம்” தங்கை தன்னிடம் மறைத்து… ரிதன்யாவிடம் சொன்னது ரிஷிக்கு தாங்க முடியவில்லை… ரிதன்யாவும் சரி ரித்விகாவும் சரி… இவனிடம் இந்த மாதிரியெல்லாம் பேசத் தயங்கியதே இல்லை… இன்று ஏனோ ரித்விகா இப்படி செய்ய… தாங்காமல் ரிஷியும் கேட்டும் விட


ரித்விகா இப்போதும் தயங்கினாள்.. ஆம் அவளது அண்ணன் இது இல்லையே… எப்போதும் சிரித்தபடி… இவள் கிண்டலுக்கு பதில் கவுண்டர் கொடுத்தும் இவளோடு குதூகலமாக செல்லச் சண்டைகள் போட்டும் விளையாடிய தன் அண்ணன் இல்லை இவன்… ரித்விகாவுக்கு எப்போதும் ஒரு எண்ணம் இருக்கும்… தன் அண்ணன் தங்களை விட மகிளாவின் மேல் தான் அதிக அன்பு வைத்திருக்கின்றானோ என்று… அந்த மகிளாவையே யாரோ என்று தோன்றும் படி தள்ளி வைத்த ரிஷியை… தன் அண்ணனைப் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்த ரித்விகா அதே மனநிலையில் அவனோடு பேசவும் தயங்கி இருக்க…


ரிதன்யா… ரித்விகாவுக்குப் பதிலாகப் பேச ஆரம்பித்தாள்…


“ரித்திக்கு அங்கு வர பிடிக்கலை… அந்தப் பொண்ணு கண்மணி மிரட்டற மாதிரி பேசறாளாம்…” என்ற போதே ரிஷி ரித்விகாவைப் பார்க்க..


“ஆமாண்ணா... அந்தக்கா சாப்பிடச் சொல்றது கூட மிரட்டற மாதிரியே இருக்கு…” தங்கை தன் தமக்கையின் வார்த்தைகளை ஆமோதித்து முடிக்க…


கட்டைவிரலால் நெற்றியில் அழுந்தினான் ரிஷி… அவனுக்குத் தெரியவில்லை இவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று… கண்மணி இல்லம்தான் இப்போது இவர்களுக்கு பாதுகாப்பு என்பதை… வேறு வழியும் இல்லையே… அதனால்


ரித்விகாவை தன்னருகே அழைத்தான் ரிஷி…


“ஹ்ம்ம்… நீ சொல்ல வருவது எல்லாம் புரியுதுடா… அம்மாக்கு கொஞ்சம் சரி ஆகிருச்சுன்னா… நாம வேற வீடு பார்த்து மொத்தமா அங்க போயிறலாம்… இப்போ டெம்ரவரியா தனியா ரூம்னா… நான் அதுக்கும் அலையனும்டா… இருக்க இடம் இருக்கும் போது தேவையில்லாம அது எதுக்கு… என் ரித்வி டார்லிங் புத்திசாலிதானே… அண்ணா சொல்றதை புரிஞ்சுக்குவீங்கதானே” என்றவன் தங்கை முகம் கொஞ்சம் தெளிவாக மாறத் தொடங்க…


“அப்புறம் கண்மணி அக்கா இருக்காங்கள்ள… ரொம்ப நல்லவங்க… அவங்க டீச்சரா இருக்கிறதுனால கொஞ்சம் அந்த மாடுலேஷன் இருக்கும்…. உனக்கு மிரட்டுகிற மாதிரி இருக்கும்… ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் தான்… இல்லைனு சொல்லலை… பட் நாட் ஹார்ம்ஃபுல் டா…” என்று தேற்றி அனுப்பியவனுக்கு அந்த ஆசிரியையின் கண்டிப்பான முகம் அவனுக்கும் தெரிய வர… தங்கையிடம் பொறுத்துக் கொள்ளச் சொன்னவன்… அவனால் முடியாமல் அவனே வேறொரு வீடு தேடி பார்க்கும் நிலை உருவானது… அதற்கு காரணம் மகிளா…


---

ரித்விகாவை எப்படியோ சமாளித்து தன்னோடு கூட்டி வந்தவன்… அடுத்த நாள் ரித்விகாவை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல முடியவில்லை…


காரணம் அதிகாலையிலேயே ரிதன்யா ரிஷியை அழைத்திருந்தாள்… லட்சுமிக்கு திடீரென்று ஏதேதோ டெஸ்ட்டுகள் எடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லி இருக்கின்றார்கள் என்று ரிஷியை அழைக்க… நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தங்கையை எழுப்ப மனமில்லாமல்… கண்மணியிடம் அவளைப் பார்த்துக் கொள்ளும்படி... சொல்லிவிட்டு கிளம்பி விட்டான் ரிஷி….


கிட்டத்தட்ட 7 மணி அளவில் எழுந்து பார்த்த ரித்விகாவுக்கு அழுகையும் அதே நேரத்தில் தன்னை இங்கேயே விட்டு விட்டு போய்விட்ட அண்ணனை நினைத்தும் கோபமும் இருக்க… காலை உணவுக்காக அவளை அழைக்க வந்த கண்மணியிடம் தன் கோபத்தைக் மௌனமாகக் காட்டிக் கொண்டிருந்தாள் ரித்விகா…


கண்மணியும் எவ்வளவோ சொல்லிப் பார்க்க… அசையவே இல்லை ரித்விகா… கண்மணியே பிடிவாதம்… பிடிவாதத்துக்கே ரித்விகா பிடிவாதம் காட்டிக் கொண்டிருக்க.. கண்மணிக்கும் கொஞ்சம் எரிச்சல்.. வந்ததுதான் … ஆனாலும் காட்டிக் கொள்ளாமல்… தன் வீட்டுக்கு வர… அங்கே அவர்கள் தெருவில் வசிக்கும் பெண்மணி வந்து நிற்க… அவர் எதற்கு வந்திருக்கின்றாள் என்பதை கண்மணியும் தெரிந்தவளாக…


“பிரபாக்கா… கிளம்பிட்டீங்களா….” என்றபடியே அந்தப் பெண்ணின் கையில் இருந்த குழந்தையை வாங்க… அதுவோ இவளிடம் வராமல் மறுக்க…


“அச்சுக்குட்டி… மணி அக்கா கிட்ட வரமாட்டிங்களா… அம்மா பாவம்ல… வேலை இருக்குனுதானே என்கிட்ட விட்டுட்டு போறாங்க” என்று குழந்தை அழுத போதும் தாயிடமிருந்து தன்னிடம் மாற்றிக் கொண்டவள்…. நின்று கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியிடம்


“ஜம்முக் குட்டி… நீ பாப்பாகிட்ட சொல்லு பார்க்கலாம்… நீ அக்காகிட்ட எப்படி சமத்தா இருப்பேன்னு…” என்று அந்தச் சிறுமியையும் கையில் பிடித்துக் கொண்டவள்…. அந்தக் குழந்தைகளின் தாயை கண்சைகையால் போகச் சொல்ல… அவரும் கிளம்பிவிட… எல்லாவற்றையும் ரித்விகா மாடிப்படிகளில் அமர்ந்திருந்தபடி பார்த்துக் கொண்டேதான் இருந்தாள்…


“ஜம்மு… பாப்பாவும் உன்னை மாதிரியே சமத்தாம்… பாரு அழுகைய நிறுத்திட்டாங்களாம்.. அப்டித்தானே அச்சுக் குட்டி”… கண்மணி தூக்கிச் சுற்றிக் கொஞ்சிய அழகில் அந்தக் குழந்தையும் சிரிக்க…


“ஆமாவாடா என் செல்லக் குட்டி” என்று இன்னொரு முறையும் கண்மணி சுற்ற… இப்போது அந்தக் கைக்குழந்தையிடமிருந்து அடக்க முடியாமல் சிரிப்பு…


கண்மணி இருவரிடமும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க… ரித்விகா முகம் இப்போது கோபம், பிடிவாதத்தைத் தொலைத்து… வேறொரு பாவத்தை கொண்டு வந்திருந்தது… ஒரு மாதிரியான ஒவ்வாத பாவனை… காரணம் அந்தக் குழந்தைகள்…


அவள் இதுவரை தூக்கியதெல்லாம்… பார்த்த குழந்தைகள் எல்லாம்… விளம்பரங்களில் வரும் குழந்தைகள் போல… சுத்தமாக… கொழுக் மொழுக் மெழுகு மேனி குழந்தைகள் … இவர்களோ… நினைக்கும் போதே… ஒரு மாதிரி முகம் சுளிக்க…


கண்மணியோ அது போல எந்த ஒரு அருவருப்பும் காட்டாமல் தூக்கிக் கொண்டதே ஆச்சரியமாக இருக்க… பிடிக்கவில்லை என்றாலும் அங்கு நடப்பவற்றை அவளையுமறியாமல் கவனிக்க ஆரம்பித்தாள் ரித்விகா…


இப்போது கண்மணி அங்கிருந்த கிணற்றடிக்கு வந்தாள்… அடுத்து பரபரவென்று செயலாற்றியவள்.. இரு குழந்தைகளையும் குளிப்பாட்டி… அந்தக் குழந்தைகளின் தாய் கொடுத்திருந்த மாற்றுடைகளை மாட்டுவித்து… அலங்காரம் செய்து… முடித்த போது… ரித்விகா முகத்தில் இப்போது ஆச்சரிய புன்னகை…


அவளையுமறியாமல் கீழே இறங்கியவள்… கண்மணியின் அருகே போய் நின்று… அந்தக் குழந்தையைப் பார்த்தபடி….


“ஏன் அவங்கம்மா இவ்ளோ நீட்டா வச்சுக்க மாட்டேங்கிறாங்க…“ என்றபடியே…. அவளுக்கும் அந்தக் குழந்தையை தூக்க வேண்டும் போல ஆசை வரத்தான் செய்தது…


ரித்விகாவைப் பார்த்தவுடன்… அந்தக் குழந்தையும் பொக்கை வாயைக் காட்டி சிரிக்க ஆரம்பிக்க… அவ்வளவுதான் ரித்விகா… அனைத்தையும் மறந்து விட்டாள்…


“ஹை… மணி அக்கா… என்னைப் பார்த்தும் சிரிக்கிறான் இவன்” என்றபடியே ரித்விகா அவளையும் மறந்து குழந்தையின் புன்னகையில் கைநீட்ட…


ஆர்வமாக கை நீட்டியவளிடம் … கண்மணி… இப்போது… தராமல் தவிர்த்தபடி


“அப்போ…ப்ரஷ் பண்ணு… குளி… சாப்பிடு… அந்தக் குழந்தை மட்டும் நீட்டா இருக்கனும்னு சொல்றேல…”


“அச்சுக்குட்டி… அப்போதான் ரித்தி அக்காகிட்ட வருவானாம்… சொல்றான்… ஆமாதானேடா” குழந்தையிடம் கண்மணியும் மழலை மொழியில் பிதற்ற ஆரம்பிக்க…


ரித்விகா… அடுத்த அரை மணி நேரத்தில் கண்மணி சொன்ன எல்லாவறையும் செய்து விட்டு… குழந்தையோடு விளையாட ஆரம்பித்து… குழந்தையாக மாறிப் போனவளுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியே… அந்த பகுதியின் சிறுவர்கள் அனைவரும் அங்கு வந்து விட… கண்மணி அவர்களுக்கிடையே வைத்த விளையாட்டு… ஆடல் பாடல் போட்டி என ரித்விகா அனைத்தையும் மறந்து அவர்களோடு கலந்து விட்டாள்…


இரவில் தன் அண்ணனிடம்… அனைத்தையும் ஒப்பித்தவள்… இனி பகல் வேளைகளில் இங்கேயே இருப்பதாகவும் சொன்னவள்… தன் அன்னையைப் பார்க்க மாலை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துப் போகவும் சொல்லி முடிக்க… கேட்ட ரிஷிக்கு தங்கையின் முக மலர்ச்சியில் ஒரு புறம் சந்தோஷம், நிம்மதி என்றாலும்… அன்னையின் உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்க… உறக்கத்தை வழக்கம் போல தொலைத்திருந்தான் ரிஷி…

---

அடுத்த நாள் காலை… ரிஷியோடு மருத்துவமனைக்கு வருகிறேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்காமல் அவனை வழி அனுப்பி வைத்த ரித்விகா…. கண்மணியிடம் வந்து நின்றாள்…


“மணி அக்கா… அச்சுக்குட்டி...வரலை… “ கேட்டவளிடம்…


“வரலை ரித்வி…” கண்மணி ரித்விகாவுக்கு பதில் கொடுத்தபடி காலை உணவைத் தயார் செய்து கொண்டிருக்க…


“ப்ச்ச்…ஏன்”


“ஏன்னா… அவங்க அம்மா இன்னைக்கு இருக்காங்க… நேத்து ஒரு வேலைனு என்கிட்ட கொடுத்துட்டு போனாங்க” என்ற போதே…


“அச்சுக்குட்டிய இன்னைக்கு… நான் குளிப்பாட்டலாம்னு ஆசையா வந்தேன்” என்று சோகமாக சொன்னவளிடம்… சிரித்தபடியே


“ரொம்ப ஃபீல் பண்ணாத… அவங்க அம்மாகிட்ட சொன்னா கூட்டிட்டு வந்து விடுவாங்க… ஆனால் குளிக்கவெல்லாம் வைக்க முடியாது… எப்போதாவது அவங்க விடும்போது குளிக்கவைக்கலைனா நான் பண்ணுவேன்..” என்று சொன்னவள்… அடுத்த அரை மணி நேரத்தில் ரித்விகாவிடம் சொன்னது போல அச்சுக்குட்டியை தூக்கிக் கொண்டு வர…. ரித்விகா அதனோடு விளையாட ஆரம்பித்து விட்டாள்…



கண்மணி… அவர்கள் மேல் தன் ஒரு கண்ணை வைத்தபடி… தன் தினசரி வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்… நட்ராஜ் வேறு வெளியூர் சென்றிருந்தார் வெகு நாட்களுக்குப் பிறகு… அது கூட ரிஷியால் முடியாத சூழ்நிலை என்பதாலேயே… இல்லையென்றால் ரிஷிதான் போயிருந்திருப்பான்… சற்று முன் தான் நட்ராஜும் போன் செய்திருந்தார்... நாளைதான் வர முடியும் என்று…


நட்ராஜ் இப்படி இரவு வெளி இடத்தில் தங்கும்படி இருந்தால்… உடனடியாக அங்கு ஆஜராவது நட்ராஜின் தாய் காந்தம்மாள் தான்… ‘கிழவி வருமோ’ என்று யோசித்தபடியே வேலை பார்த்தபடி இருந்தவளுக்கு… வேறொரு நபரின் பிரசன்னம் அன்று நிகழ்ந்தது….


ஆம்… கிட்டத்தட்ட 12 மணி அளவில்… அவர்கள் வீட்டின் முன் வந்து நின்றிருந்தது மகிளாவாக இருந்தாள்…


கண்மணி சமையலறையில் இருக்க… ரித்விகாதான் கூக்குரலிட்டாள்…


“மகி…” என்று சந்தோஷமாக அழைத்தபடியே மகிளாவை கண்மணியின் வீட்டுக்குள்ளும் அழைத்து வர… கண்மணி ரித்விகா அழைத்த பெயரில் நம்ப முடியாத பாவனையோடு சமையலறையில் இருந்து வெளியே வர… மகிளாவே தான் வந்திருக்க ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டவளாக வந்திருந்தவளை வரவேற்றாள் கண்மணி…


சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் பார்த்த போது இருந்த தேஜஸ் எதுவுமே இல்லாமல்… வாடி… அழுது வீங்கி இருந்த முகமே சொன்னது… இத்தனை நாட்களாக மகிளா எப்படி இருந்திருக்கின்றாள் என்பதை கண்மணிக்கு… அவளைப் பார்க்கும் போதே கண்மணிக்குமே வருத்தமாக இருக்க… அதே நேரம் இவள் எப்படி இங்கு வந்தாள்… ரிஷி வரச் சொல்லி இருப்பானா… கண்டிப்பாக இல்லை என்று மனம் சொல்ல… சந்தேகமாக ரித்விகாவைப் பார்க்க…


“மகி… நீ கவலைப்படாத… யார் தடுத்தாலும் நீதான் எங்க அண்ணி… இதுக்குப் போய் இவ்ளோ அழுகையா உனக்கு… ரிது சொல்லிட்டா… அண்ணாகிட்ட பேசறேன்னு… நாம இங்க எங்கேயாவது ஒரு கோவில்… இல்லை ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வச்சு மேரேஜ் பண்ணிக்கலாம்னு… “என்று மகிளாவுக்கு ஆறுதல் சொல்லியபடி மகிளாவின் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை ரித்விகா துடைத்துக் கொண்டிருக்க.. கண்மணியின் கண்கள் விரிந்தது ஆச்சரியத்தில்… சற்று முன் குழந்தையோடு குழந்தையாக விளையாண்டு கொண்டிருந்த ரித்விகாவா இது என்னும் பாவனையில்…


இருவரிடமும் பேசிக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு… குழந்தையை அதன் வீட்டில் கொண்டு போய் விட்டு வந்தவள் வீட்டுக்குள் நுழைய…


“எனக்கும் அந்த பிரேமுக்கும் நாளைக்கு நிச்சயம்… அடுத்து உடனே மேரேஜ்னு சொல்றாங்க ரித்தி… ரிஷி மாமா மட்டும் இல்லைனா நான் செத்துருவேன்… எத்தனை கால்… எத்தனை மெசேஜ் பண்ணி இருப்பேன் தெரியுமா… மாமா ஒண்ணைக் கூட கண்டுக்கலை… நான் என்ன பண்ணினேன் ரித்தி…” அழுதழுது கரைந்து கொண்டிருந்தாள் மகிளா…


“எனக்கு வேற வழி தெரியலை… ரிது சொன்ன மாதிரி இங்க வந்துட்டேன்… இனி இங்க இருந்து போறதுன்னா… ரிஷி மாமாவோடா பொண்டாட்டியாத்தான் பொவேன்” என்ற போதே


செருமினாள் கண்மணி இப்போது… தன் பிரசன்னமும் அங்கிருக்கின்றது என்பது போல…


ஓரளவுக்கு கண்மணியால் கிரகிக்க முடிந்தது என்ன நடந்திருக்கும் என்று.. ரிதன்யா, ரித்விகா, மகிளா மூவருமாக தங்களுக்குள் இந்த திட்டம் தீட்டி இருக்கின்றனர் என்பதை… அதுவும் ரிஷிக்குத் தெரியாமல் என்பதும் புரிந்தது.


மகிளாவிடம் கண்மணி பேச முடியாது… அன்று ஒரு முறை பேசி இருக்கின்றாள்… அதை வைத்தெல்லாம் இப்போது நட்பு பாராட்டி அறிவுரை கூற முடியாது… அது தேவையில்லாத விசயம்… தேவையில்லாத விசயம் என்பதை விட இவள் சாதரணமாகச் சொல்வதைக் கூட மகிளா காது கொடுத்து கேட்பாளா என்பதே சந்தேகம் எனும் போது… இப்படி எல்லாம் பண்ணுவது தவறு என்று சொன்னால் கேட்பாளா… காலம் தாழ்த்தாமல் சம்பந்தபட்டவர்களுக்கு உடனடியாக சொல்வது முக்கியம் என்பது போல ரிஷிக்கு தகவல் அனுப்பிவிட… கண்மணி உடனடியாக ரிஷிக்கு சொல்வாள் என்றெல்லாம் அறியாத ரித்விகாவும் மகிளாவும் ரிஷி தங்கி இருந்த அறையில் இருக்க… கண்மணி தகவல் அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் கண்மணி இல்லத்துக்கு வந்திருந்தான்…


கண்மணி புயலென அவன் வரவை எதிர்பார்த்திருக்க… அவனோ புயலுக்கு பின் வரும் அமைதியென உருவெடுத்து வந்திருந்தான்…


கண்மணி அவர்கள் வீட்டின் முன் இருந்த மரத்தில் சுற்றி கட்டி இருந்த திண்டில் அமர்ந்திருக்க… வழக்கமாக தான் நிறுத்தும் இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு… கண்மணியைப் பார்த்தபடி.. அவளை நோக்கி வர… மகிளாவைத் தேடிப் போகாமல் தன்னை நோக்கி வந்தவனை யோசனையுடன் நோக்கியவள்…


”தன் வீட்டில் தான் மகிளா இருக்கின்றாள் என்றெண்ணி வருகின்றானோ” நினைத்தவள்… சட்டென்று அவனை நோக்கி… அவன் மாடி அறையை நோக்கிக் கைகளைக் காட்ட… அவனோ இவள் சைகைகளை சட்டை செய்யாமல் இவள் அருகில் அந்து அமர்ந்தான் யாரையோ எதிர்பார்த்தபடி இருந்த பாவனையில்...


உள்ளே நுழையும் போது… இவள் அருகில் வந்து அமரும் போது… பார்க்கும் போது எல்லாம் அவன் அமைதியின் அம்சமாக இருப்பது போலத்தான் தோன்றியது… ஆனால் தன் அருகில் வந்து அமர்ந்த பின் அருகாமையில் அவன் முகம் பார்த்த போதுதான் கண்மணிக்குத் தெரிந்தது… அந்த அடக்கப்பட்ட அமைதிக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு…


அதே நேரம் கண்மணிக்குள் அவன் அமைதியும் குழப்பமே… அதே போல் வெறி கொண்ட வேங்கை கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் அலைப்புறுதல் அவன் நடவடிக்கையில் இருக்க… புரியாமல் அவனைப் பார்த்து ஏதோ பேச வர… அவனின் அமைதிக்கு காரணமும் அவளின் குழப்பங்களுக்கு தீர்வும் கிடைத்தது…. அங்கே புயலென நுழைந்த மகிளாவின் தந்தை நீலகண்டனின் வரவால்…


“மகிளா எங்கே” ரிஷியிடம் கோபமாக கேட்டாலும் ரிஷியின் மேல் கோபமில்லை… அவரின் மொத்த கோபமும் தன் மகளின் மீதே என்ற தொணியில் இருந்தது நீலகண்டனின் பாவனை… அதிலும் தன் மகள் இப்படி அவமானப்படுத்தி விட்டாளே என்ற கோபம் மட்டுமே அவர் வார்த்தைகளில் தாண்டவமாட…


ரிஷி இப்போது கண்மணி செய்த சைகையை தனதாக்கிக் கொண்டான்… அதாவது தான் தங்கி இருந்த மாடி அறையை நோக்கி கைகாட்டினான்… நீலகண்டனிடம்…


நீலகண்டன் அதிரடியாக மேலே ஏறிப் போனவர்… அடுத்த சில நிமிடங்களில் மகிளாவை கையோடு தர தரவென்று இழுத்துக் கொண்டு வர… கண்மணிக்கு அது கூட அதிர்ச்சி ஆக்க வில்லை… மாறாக… ரிஷிதான்…அவளின் ஒட்டு மொத்த அதிர்ச்சிக்கும் காரணமாகி இருந்தான்…


‘யாரை நம்பி மகிளா வந்தாளோ அவனே இதற்கு காரணகர்த்தா’ என்பதைத்தான் அவளால் நம்பவே முடியவில்லை…


அதிர்ச்சியில் ஸ்தம்பித்து கண்மணி நின்றிருக்க.. படிகளில் இறங்கி வரும்போது அழுதபடி தந்தையிடம் போராடிக் கொண்டிருந்த மகிளாவோ… ரிஷியைப் பார்த்தவுடன்… இனி தனக்கும் தந்தைக்குமான போராட்டமெல்லாம் இனி ரிஷி பார்த்துக் கொள்வான் என்று கண்களில் நம்பிக்கையைத் தேக்கி வைத்து கண்கள் மலர அவனை நோக்கினாள்… அவன்தான் அவளின் மொத்த நம்பிக்கையையும் சற்று நேரத்தில் மொத்தமாக தூள் தூளாக ஆக்கப் போகின்றான் என்பதை அறியா பேதையாக…


”உங்க பொண்ணு… 12 மணிக்கு வந்திருக்கா… நான் 1 மணிக்கு வந்தேன்… இதோ இங்கேதான் வந்த வினாடியில் இருந்து இருக்கின்றேன்… நம்ப முடியலேன்னா… இந்த பொண்ணுதான் சாட்சி…” என்று கண்மணியை வேறு முன்னிறுத்தியவன்…


“கூட்டிட்டுப் போகலாம்… உங்க ….. பொண்ணை” என்றவன் தப்பித் தவறி கூட மகிளாவைப் பார்க்கவில்லை.. பார்க்க முடியுமா என்ன…


பார்க்கவில்லைதான் ஆனால் மகிளாவின் நிலை அறியாதவனா என்ன… மகிளா தந்தையின் கரங்களினால் அடி வாங்கி இருக்கின்றாள் என்பதை உணர மனமெங்கும் ரண வேதனை அவனுக்குள்… அது தாங்க முடியாமல்


“அவ சொன்னாலே கேட்டுக்குவா மாமா…” என்று இருந்த வேதனை எல்லாம் மறைத்துக் கூற… மகிளா அதற்கு மேல் அமைதியாக இருப்பாளா என்ன…


”எல்லாம் செய்து விட்டு அக்கறை வேறு…” ரிஷியின் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்த… பார்த்துக் கொண்டிருந்த கண்மணிக்கே கோபம் பொங்கிக் கொண்டிருக்க.. மகிளா எப்படி இருப்பாள்…


கோபமும்… ரிஷி செய்த நம்பிக்கை துரோகமும்… அவளை வாள் கொண்டு அறுக்க…


“ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா.. இன்னும் என் மேல அக்கறை இருக்கே… ஆனால் என்னை சுக்கு நூறா உடைச்சுட்ட ரிஷி மாமா … இதுக்கு மேல நான் நல்ல வாழ்ந்துருவேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா… சொல்லு …” என்று அவனின் சட்டையைப் பிடித்துக் கதறியவளைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை கண்மணிக்கு…


ரிஷியிடம் சொன்னால் மகிளாவுக்கு ஏதாவது அறிவுரை சொல்லி அனுப்புவான் என்றுதான் அவனுக்குத் கண்மணி தெரியப்படுத்தினாள்… ஆனால் இப்படி மகிளாவின் அப்பாவுக்கு தகவல் சொல்லி அவரையும் கையோடு கூட்டி வருவான் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை… அது மட்டுமில்லாமல் பெரிய அக்கறையாக வார்த்தைகள் வேறு…


மகிளா இப்போது ரிஷியைப் பார்க்க… அவன் இவளைப் பார்த்தால் தானே… மகிளாவுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது… இனி இவனை நம்ப முடியாது… தன் காதலை தான்தான் காப்பாற்ற வேண்டும்… தன் தந்தையோடு போராட வேண்டும் என்பது… உலகமே தட்டாமலையாகச் சுற்ற ஆரம்பித்து இருந்தது மகிளாவுக்கு…


எத்தனை வருட காதல்… எவ்வளவோ கனவுகள்… இருவருமாக பேசிய வார்த்தைகள்… அத்தனையும் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக கானல் நீராக கலைந்து கொண்டிருக்க… அதன் நிதர்சனம் புரியாமல் தன் தந்தையின் முன் தீர்மானமாக வந்து நின்றாள் மகிளா…


“நான் வர மாட்டேன்… ரிஷி மாமா எங்கே இருக்காரோ… அங்கேதான் நானும் இருப்பேன்… இருக்கப் போகிறேன்” என்று முடிவாகச் சொன்னவள் அங்கேயே அப்படியே அமர்ந்து விட்டாள்… தர்ணா செய்வது போல… ரித்விகா ஒருபுறம் ரிதன்யாவோடு அலைபேசியில் பேசியபடியே தன் அண்ணனிடம் மன்றாடிக் கொண்டிருக்க…


ரிஷி… கல் போல நின்றிருக்க… நீலகண்டன்… வேறு வழி இன்றி பிடிவாதமாக அமர்ந்திருந்த மகிளாவை கட்டாயப்படுத்தி இழுத்து எழ வைக்க… கண்மணி இப்போது… அவருக்கு முன் வந்து நின்றவளாக… அவரின் கையைத் தட்டி விட்டு… மகிளாவிடம் கேட்டாள்….


“இதே தைரியம்… இதே போராட்டம் கடைசி வரை இருக்குமா உனக்கு” என்றவள்…


”ரிஷிகிட்ட சொன்னால் உனக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி வைப்பார்னுதான் சொன்னேன் மகிளா… ஆனா இந்த மாதிரி “ என்று கண்மணி குற்ற உணர்வில் மனம் குறுகிச் சொன்னபடியே அவள் விரல்களோ அவளது அலைபேசியில் வேக வேகமாக செய்திகளை யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தது…


மகிளா ரிஷியை வேதனையாகப் பார்த்துக் கொண்டிருந்த போதே… ரிஷியோ நீலகண்டனிடம்…


”இனி நீங்க… உங்க பொண்ணு… ” என்று தோளைக் குலுக்கியவனாக…. அழுது கொண்டிருந்த ரித்விகாவை இழுத்துக் கொண்டு… தன் பைக்கை நோக்கி்ப் போக


“ச்சீ… இவனெல்லாம் மனிதனா” என்றுதான் அந்த நொடியில் தோன்றியது கண்மணிக்குள்… அதே நேரம் கண்மணி அனுப்பிய செய்தியால் அடுத்த பத்தே நிமிடத்தில் மகளிர் காவல் நிலையை ஆய்வாளரே அங்கு வந்திறங்கி இருக்க…


ரிஷி கண்மணியை அக்கினிப் பார்வை பார்க்க கண்மணியோ தன் நேர்கொண்ட நியாயப் பார்வையில் அவனின் அந்த அக்கினிப் பார்வையைச் சுக்கு நூறாக்கிக் கொண்டு இருந்தாள் என்றே சொல்ல வேண்டும்...



3,063 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page