top of page

கண்மணி... என் கண்ணின் மணி-19-2

Updated: Nov 13, 2020

அத்தியாயம் 19-2:

கண்மணி பள்ளியின் நுழைவாயிலில் நுழைந்த போது மணி... 10:30....நேற்றே சொல்லி இருந்தாள்… இன்று அவர்கள் இருக்கும் ஏரியாவில் அம்மன் கோவில் விழா… கண்மணி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து பொங்கல் வைப்பது வழக்கம்… இந்த வருடமும் அதே வழமையை பின்பற்றினாள் தான்… கடந்த வருடம் வரை மாலை பொங்கல் வைத்து விரதத்தை முடிப்பாள்.. இந்த வருடம் காலையிலேயே எல்லாவற்றையும் முடித்து விட்டு… தந்தைக்கும் கொடுத்து விட்டு… சரியாக இதோ பள்ளிக்கும் வந்து விட்டாள்…

அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேஜையில் தனது கைப்பையை வைத்தபடி.... தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கணிணியை உயிர்ப்பித்தவள்.... தனது வேலையில் மூழ்கினாள்...

இந்த ஐந்து வருடங்களில் கண்மணியின் வாழ்க்கையில் எல்லாமே ஏறுமுகம் தான்… அவள் நினைத்தது போலத்தான்.. அவள் வாழ்க்கையும் போய்க் கொண்டிருப்பதால் அவள் வாழ்க்கையிலும் அவள் குணங்களிலும் பெரிதாக மாற்றமில்லை … தோற்றத்தில் மட்டுமே அவளிடம் வித்தியாசம் அதாவது… இன்று 22 வயது இளம் பெண் அவ்வளவுதான்… அதற்கேற்ற வனப்பும் அழகும் மட்டுமே அவளிடம் இருக்கும் மாறுபாடு…

கண்மணிக்கென்று தோழிகள் கிடையாது... கண்மணி அனைவரிடமும் இன்முகமாக பழகுவாளே தவிர.... நெருக்கம் கிடையாது.... அவளிடம் பழகும் பலருக்கு அவள் தோழியாக இருந்து... அவர்களின் மகிழ்ச்சி... துக்கங்களை கேட்டுக் கொள்வாளே தவிர.... தன் உணர்வுகளை பங்கு போட்டுக் கொண்டதில்லை... அப்படி ஒரு நட்பு அவளுக்கு கிடைக்கவில்லை என்பதை விட.... அவள் அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ள வில்லை.... அதுமட்டுமில்லாது தன் வட்டத்திற்குள் அவள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பதும் உண்மை…. கண்மணியைப் பற்றி... அவளது உணர்வுகளை பற்றி ஓரளவு அனுமானிப்பது அவள் தந்தை நடராஜ் மட்டுமே...

---

மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து வந்த மின் அஞ்சல்களை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டிருந்தவளை... பள்ளி முதல்வர் ராஜம் தனது அறைக்கு அழைக்க...

“இதோ வருகிறேன் மேடம்” என்றவள் அடுத்த நொடி நின்றது தனது தாளாளர் இராஜம் மேடம் முன்னிலையில் தான்...

வேகமாக உள்ளே நுழைந்தவள் ராஜம் மேடத்தின் முன்னால் அமர்ந்திருந்தவரை.... அவர் முகம் பார்க்காமலேயே அவர் யாரென்று புரிய… தன்னை அழைத்த ராஜம் மேடத்திற்கு வணக்கம் சொன்னபடி அவர் முன் நிற்க.... நாராயண குருக்களோ புன்னகை பூத்த முகத்தவராய் தன் பேத்தியைப் பார்த்தார் விழி அகற்றாமலேயே…

திருவிழாவுக்கென்று பிரத்தியோகமாக எடுத்திருந்த மஞ்சள் நிற பட்டுப்புடவையிலேயே தான் பள்ளிக்கும் வந்திருந்தாள் கண்மணி.. தேவதை போல் மூக்குத்தி ஒளிர… தன் அருகே நின்ற.... தன் பேத்தியையே பார்த்தபடி இருந்தவருக்கு…. கண்மணியைப் பார்க்கும் போதெல்லாம் மகள் பவித்ராவின் நினைவு வருவது போலவே இன்றும் அதே நினைவு

இந்த 5 வருடத்தில்... அதிலும் புடவையில் பார்க்கும் போது இன்னும் வளர்ந்தது போல் இருந்தாள் அவர் பேத்தி ... 22 வயது ஆகி விட்டது தன் பேத்திக்கு... ஆனால் அவளைத் தன் அருகில் வைத்துக் கொள்ள முடியவில்லையே என்பதைத்தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... மகள் தனக்கு பிடிக்காதவனோடு தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு போய் விட்டாள் என்பதற்காக... அவளையே தள்ளி வைத்தவர்தான்... ஆனால் தன் பேத்தியை அப்படி விட மனதில்லை.... தன் வாரிசான தன் மகள் வயிற்றில் பிறந்த கண்மணி... நடராஜனின் வாரிசு என நினைக்க முடியவில்லை... முழுக்க முழுக்க தன் குல வாரிசாகவே கண்மணி பரிணமித்திருக்கிறாள் என என்று உணர்ந்தாரோ அது முதல் கண்மணியை தன் பக்கம் இழுக்க நினைக்கிறார்.. ஆனால் முடியவில்லை...

ராஜத்திற்கு கண்மணியைப் பற்றி கிட்டத்தட்ட அனைத்தும் தெரியும்... என்பது மட்டுமல்லாமல் கண்மணியை எப்படியாவது அவள் தாத்தாவோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் ஒருவர்.... ராஜத்தை பொறுத்தவரை கண்மணியை முற்றிலும் நடராஜனோடு பிரித்துச் செல்லும் எண்ணம் எல்லாம் இல்லை... எப்படியும் கண்மணிக்கென்று ஒரு தனி வாழ்க்கை உண்டு... அது ஏன் நாராயண குருக்களின் குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜூனாக இருக்கக் கூடாது என்பதுதான் அவரது எண்ணம்...

கண்மணி தன் தாத்தாவைப் பார்த்தெல்லாம் பேசாமல் தன்னை அழைத்த முதல்வர் ராஜத்திடம் என்னவென்று கேட்க…

அவர் நாரயணனைப் பார்த்தபடியே…

“கண்மணி அர்ஜூன் வந்திருக்கான்.... உன்னைப் பார்க்காமல் அமெரிக்கா போக மாட்டேனு சொல்லி ஒத்தக் கால்ல நிக்கிறானாம்....” இராஜம் சிரித்தபடி கண்மணியிடம் சொல்ல... கண்மணி மரியாதை வைத்திருக்கும் நபர்களில் இராஜமும் ஒருவர்... அதனால் அவரிடம் தன் கடுப்பை மறைத்தபடி.. லேசான புன்னகையை தன் இதழ்களில் கொண்டு வந்தவள்..

தனது தாத்தாவைப் பார்த்து முறைத்தாள்...

“கண்மணி போகலாமா... அர்ஜூனுக்கு நைட் ஃப்ளைட்... “ கண்மணியின் முறைப்பை அலட்சியம் செய்தவராய்ப் பேச...

“இல்ல தாத்தா இப்போ நான் வரலை... அர்ஜூன் கிட்டயே சொல்லிட்டேனே… ஈவ்னிங்க் வருகிறேன்னு...” என்று அழுத்தமாகச் சொல்ல... நாராயணனும் இராஜமும் எவ்வளவோ வற்புறுத்தியும் கண்மணி தன் முடிவில் இருந்து மாறவில்லை...

அதன் பின் நாராயணன் தான் கண்மணியின் விருப்பம் போல் மாலை வருமாறு சொல்லி விட்டு செல்ல... கண்மணியும் அங்கிருந்து தன் அறைக்குச் சென்றாள்...

இராஜத்திற்குத்தான் இப்போது பலத்த யோசனை....

“சின்ன விசயம்... இதற்கே இந்தப் பெண் தன் முடிவில் இருந்து மாறாமல் இருக்கிறாள்... இவளை எப்படி நாரயண குருக்கள் தன் வழிக்கு கொண்டு வரப் போகிறார்.... நினைக்கவே மலைப்பாக இருந்தது அவருக்கு...

இன்றைய நிகழ்வு மட்டும் அல்ல... கண்மணியின் குணம் ஓரளவு தெரியும்... அவள் 12 ஆம் வகுப்பு முடித்த போது... அதிலும் மாநில அளவில் 3 வது இடத்தைப் பிடித்திருந்தாள்....

அனைவரும் அவள் மருத்துவம் இல்லை பொறியியல் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பாள் என எதிர்பார்த்திருக்க.... கண்மணியோ இளநிலை கணிதப் பிரிவு அதையும் தொலைதொடர்பு கல்வி வழி எடுத்து படிக்க போவதாக கூற அர்ஜூனுக்குத்தான் மிகவும் கோபம்…

அவள் பொறியியம் இல்லை மருத்துவம் தான் படிக்க வேண்டுமென்று அவன் சொல்ல… கண்மணி அதை எல்லாம் லட்சியம் செய்தால் தானே… கண்மணியின் மீதுள்ள கோபத்தை நாரயணனிடம் காட்ட… நாரயணன்-வைதேகி இருவரும் பேத்தியிடம் பேச… அவள் பிடிவாதம் அவர் அறியாததா… வேறு வழி இன்றி இராஜத்திடம் சொல்லி அவளிடம் பேச வைக்க… இராஜமோ நடராஜிடம் வந்து நின்றார்…

.

நடராஜனுக்குத்தான் படிக்க வைக்க வசதியில்லையோ… மகள் வாழ்க்கையில் முட்டுக்கட்டை போடுகிறாரோ… என்று என்று நடராஜனை வரவழைத்து விசாரிக்க... அவரோ தன் மகள் மருத்துவம் என்ன அவள் ஆசைப்பட்டால் வெளிநாடு அனுப்பியே படிக்க வைக்க தன்னால் முடியும் என்று சொல்லிவிட்டு.... கண்மணியின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதற்கு தான் தடையாக இருக்க மாட்டேன்.... அவள் விருப்பம் எதுவோ அதுவே படிக்கட்டும் என்று முடித்து விட.... அத்தனை பேருக்கும் நடராஜிடம் இன்னும் கோபமே… முடிவெல்லாம் கண்மணி எடுக்க… அவளிடம் பேசி ஜெயிக்க முடியாத இயலாமையை … நடராஜிடமே காட்டினர் அனைவரும்…

இராஜம் தானே கண்மணியிடம் பேசிப் பார்த்தார்... அவளது மதிப்பெண்.. அவளின் எதிர்காலம்...என அவளுக்கு அறிவுரை சொல்ல...

“இந்தப் படிப்பு படித்தால்.... என்ன குறைச்சல்... எனக்கும் இலட்சியம் இருக்கு மேடம். எனக்கு டீச்சர் வேலைனா ரொம்ப பிடிக்கும்.... அது மட்டும் இல்லை .... ஒரு பள்ளிக் கூடம் நானும் ஆரம்பிக்க வேண்டும்... ஏழை மாணவர்களுக்கு குறைந்த பட்சம் ஆரம்ப கல்வியை அளிக்கக் கூடிய அளவிலாவது அது இருக்க வேண்டும்... அதற்கு எனக்கு பொறியியலும் மருத்துவமும் தேவையில்லை.... கொஞ்சம் பணமும்.... அதற்கான.. கல்வித் தகுதியும் போதும்...” என்ற போது சோர்ந்தவர் நாரயணன் தான்… இந்த பள்ளி… அறக்கட்டளை எல்லாம் இவள் பெயரில் இருக்கும் போது இன்னொன்றா…

அதை விட…

இது தான் என் இலக்கு எனும் போது ஏன் பணத்தை மருத்துவம் பொறியியல் என வீணாக்க வேண்டும்... முடிந்தால் எனக்கு ஒரே ஒரு உதவி... எனக்கு இந்த ஸ்கூல்ல அட்மின்ல வேலை போட்டுக் கொடுங்க.... ஆசிரியர் வேலையை கற்றுக் கொடுக்க படிப்பு இருக்கிறது... பள்ளியை நிர்வகிக்கும் அனுபவத்தை உங்ககிட்ட இருந்து கற்றுக் கொள்கிறேன்” என்பதுதான் உச்சகட்ட அதிர்ச்சி… உரிமையானவளே… வேலைபார்க்கும் கொடுமையை என்ன சொல்வது….

கண்மணி இந்த அளவுக்கு தெளிவாக இருக்கும் போது... இராஜமும் அதைப் புரிந்து கொண்டு... நாரயணனிடம் பேசினார்… பிற்காலத்தில் அம்பகம் அறக்கட்டளையை அவள் தானே பார்க்கப் போகின்றாள்… அவளது இந்த முடிவும் நாரயண குருக்களுக்கு சாதகமானதே என்று சொல்ல… ஒரு வழியாக நாரயணம்…அர்ஜூன் ஓரளவு சமாதானமாகினர்..

அதன் பின் அந்தப் பள்ளியிலேயே தன் சிபாரிசு என்பது போல நிர்வாகத்தில் அவளை ஈடுபடுத்தினார் இராஜம்… அது மட்டும் இல்லாது... 10 ஆம் வகுப்பு , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கவும் அனுமதி அளித்தார்....

இராஜத்தின் புதல்வன் பார்த்திபனின் வழிநடத்தலின் படி… அந்த பள்ளியின் அனைத்து விபரங்களும் கண்மணியின் கீழ் அவளறியாமலேயே அவளுக்கு தெரியவைக்கப்பட ஆரம்பித்து இருந்தது… இது எல்லாமே அர்ஜூனின் கட்டளைகளுக்கு ஏற்ப நடந்தது என்பது வேறு விசயம்

...

வருடம் இருமுறை இந்தியா வந்தாலும்… நாரயணன் குடும்பத்தை அவன் கீழ்தான் வைத்திருந்தான் அர்ஜூன்… குடும்பம் மட்டுமல்ல… அவரின் தொழில், நிதி விவகாரம் அனைத்துக்குமே அர்ஜூன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான்… அவனைப் பொறுத்தவரை இது அவனுக்கு மிகப் பெரிய பொறுப்புதான்… ஆனால் வயோதிக நிலையில் யாரும் இல்லாத அவர்களை… அதிலும் வாரிசே இல்லாத செல்வந்தர்களாகி இருப்பவர்களை… வேறு வழியில்லாமல் இவன் பார்த்தாக வேண்டிய சூழ்நிலை… அடுத்து… வருங்கால மனைவிக்கு சேர வேண்டிய சொத்துகள்… ஆனால் அவன் கண்மணியை இந்த பணத்திற்காகவெல்லாம் காதலிக்க வில்லை… அதே நேரம் கண்மணி அவளுக்கான வாழ்க்கையை வாழவில்லை என்பதே அவன் எண்ணம்… அதற்கெல்லாம் காரணம் அப்பா என்ற பெயரில் கண்மணியின் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கும் நடராஜ் என்ற அந்த பாவியே… தன் அத்தையை இந்த குடும்பம் இழந்தது போல இந்தக் குடும்பத்தின் மீதமுள்ள ஒரே வாரிசான கண்மணியை இழக்க விரும்பவில்லை… மொத்தமாக கண்மணி என்ற நடராஜின் மகளின் அடையாளத்தை எல்லாம் அழித்து விட்டு… இளவரசியாக… அர்ஜூனின் மனைவி என்ற அடையாளத்தோடு அவளை இந்த வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்… இது மட்டுமே அவனது எண்ணம்… அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றான்…

இன்றும் காத்துக் கொண்டிருக்கின்றான் அவன் தேவதைக்காக… காலையிலேயே அலைபேசியில் சொல்லி விட்டாள்… மாலை ஐந்து மணி அளவில் வருவதாக…

அவளை எதிர்பார்த்தபடியே… வாயிலில் காத்துக் கொண்டிருக்க… அர்ஜூனைப் பார்த்து… அந்த வீட்டின் உயர் ரக காவல் நாய் பாவம் போல் பார்த்துக் கொண்டிருக்க…

”என்னடா டாமி… உன் வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கேன்னு பார்த்துட்டு இருக்கியா” என்று சிரித்தபடி அர்ஜூன் அதோடு பேசிக் கொண்டிருக்க… அப்போது அர்ஜூனுக்கு அவனது அலை பேசியில் வர… டாமியை அப்படியே விட்டு விட்டு சற்று தூரத்தில் போய் நின்று பேசிக் கொண்டிர்க்க…

திடீரென்று டாமியின் குரைப்பும்… அதைத் தொடர்ந்து கண்மணியின் அலறலும் கேட்க… போனில் பேசிக் கொண்டிருந்த அர்ஜூன் வேகமாக அங்கு வந்தவன்… பாயப் போன டாமியின் கயிற்றைக் கையால் பிடித்தவன்…

“உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் பஞ்சாயத்து முடியலையா” என்றவாறே கண்மணியைப் பார்க்க… அவளோ கண்ணை மூடியபடி அங்கிருந்த தூணின் பின்னால் நின்று கொண்டிருக்க… அர்ஜூனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…

“கண்ணைத் திறந்து பாருடி” என்று அவள் அருகில் போய் நிற்க… அர்ஜூன் குரலில் முதலில் இருந்த பயம் இல்லையென்றாலும் முற்றிலுமாக பயம் தெளியாமல்… மெதுவாக ஒற்றைக் கண்ணை மெதுவாகத் திறக்க… அரிதாகக் காணக் கிடைக்கும் அவளின் அந்தப் பாவனையில் மொத்தமாக கிறங்கிப் போனவன் அர்ஜூன் தான்…

“ஏண்டி… இந்த சீனுக்கு ஆக்ட்சுவலா என்னைத்தான் கட்டிப்பிடிச்சுருக்கனும்… இப்படி தூணைப் பிடித்து ஒட்டு மொத்த ஹீரோ குலத்துக்கே அவமானத்தை கொடுத்துட்டியே” என்று அவளை சீண்டியபோதே…

“ஹீரோ இல்லாமல் வேற யாரும் பக்கத்தில் இருந்தா ஹீரோயின் என்ன பண்ணுவாங்க… ” முறைத்தபடியே அர்ஜூனிடம் கேட்க…

இப்போது அர்ஜூனின் முகம் கடுக்க…

“நீ ஹீரோயின்ன்னா உன் பக்கத்தில் நான் மட்டும் தான் நிற்பேன்… நான் தான் நான் மட்டுமே உன் ஹீரோ” என்ற போதே… அவன் முகம் மாறிய விதத்தில்

கண்மணி… அடுத்து ஏதும் பேசவில்லை… பேசத் தோன்றவும் இல்லை… அவனின் காதல் அளவும்… தீவிரமும் தெரிந்தவள் தானே அவள்… தன்னால் தானே அவன் காதலில் மூழ்கித் திளைக்க முடியவில்லை… அதன் காரணமும் தெரியாதவள் இல்லையே…

கண்மணியின் அமைதி அர்ஜூனுக்கும் ஒரு மாதிரி இருக்க…

வேலையாளை அழைத்து டாமியை ஒப்படைத்தவன்… அவளின் முன் நின்றபடி… அவளையே பார்த்தபடி இருந்தான்… களைத்து வந்திருந்தாலும் அவன் கண்களுக்கு பேரழகியாக மட்டுமே தெரிந்தாள்… அவனின் மனம் கவர்ந்தவள்…

சுதாரித்த கண்மணி… அமைதியை விடுத்து அவனை முறைக்க… சூழ்நிலையை இலகுவாக மாற்ற முயற்சித்தான் அர்ஜூன்…

“உன்னைத்தான் தைரியமான பொண்ணுன்னு வெளிய சொல்லிட்டு இருக்காங்களாடி..” என்று கண்மணியைக் கண் சிமிட்டியபடி கிண்டல் செய்ய…

”தாத்தா… பாட்டி… “ என்று இங்கிருந்தே குரல் கொடுக்க…

“அவங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிருக்காங்க” என்றவனின் குரல் மாற்றம் உணர்ந்தவள்… அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர…

அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்…

“ஹேய் பிரின்சஸ்… நான் வந்து 15 டேஸ் ஆகிறது… என்னைப் பார்க்க கூட வர மாட்டேங்கிற…” அவளையே பார்த்தபடி பேச… கண்மணி இப்போதும் அமைதியாகவே இருந்தாள்… அர்ஜூனும் அமைதியாக சில நிமிடங்கள் இருந்தான் தான்… இன்று கண்மணியிடம் பல விசயங்கள் பேச வேண்டுமே…

கண்மணியைப் பார்த்ததும்…. அவள் வந்ததும் சண்டை போடத்தான் நினைத்தான்… ஆனால் அவளைப் பார்த்தவுடன் அவன் கோபமெல்லாம் எங்குதான் போகும் என்றே தெரியாது… அதிலும் இன்று தேவ கன்னிகை போல வந்திருந்தவளைப் பார்த்து… தவமிருக்கும் ரிஷிகளே தடுமாறுவர்… அவளைக் காதலிக்கும்… அர்ஜூன் தடுமாற மாட்டானா என்ன… உரிமை இருக்க… பார்வை அவனையுமறியாமல் அது எல்லை மீற… தன்னைத் தானே அடக்கிக் கொண்டவனாக… அவளோடு பேசப் போகும் அனைத்தையும் தனக்குள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க…

”அர்ஜூன்” என்ற அவளது அழைப்பில் அர்ஜூனும் தன் நிலை மீண்டு அவள் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தான்…

தீர்மானமாக அவளைப் பார்த்தபடியே…

“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் சொல்லுடி… எனக்கு வயசு 30 இப்போ… வீட்ல எப்போ மேரேஜ் வைக்கலாம்னு கேக்கறா… தாத்தா பாட்டிக்கு இந்த வீட்ல விசேசம் நடக்கனும்னு ஆசை… இது எல்லாத்துக்கும் மேல… எனக்கு நீ என்னோடவளா மாறனுண்டி… மிஸஸ் அர்ஜூனா உன்னை என்னவளா ஆக்கிக்கனும்டி… ஏன் பிடிவாதம் பிடிக்கிற… என்னோட காதல் உனக்கு புரியலையா” என்றான் நெகிழ்ந்தபடியே….

அவனின் காதல் வார்த்தைகள் எல்லாம் கண்மணியை கொஞ்சம் கூட அசைக்கவில்லை என்பதை அவள் அமர்ந்திருந்த விதமே சொல்ல… அர்ஜூன் இப்போது…

“இந்த வருசம் உனக்கும் எனக்கு மேரேஜ்… இனிமேல என்னால வெயிட் பண்ண முடியாது” என்ற போதே…

இதழ் வளைந்தன கண்மணிக்கு…

”நான் பிடிவாதம் பிடிக்கிறேனா அர்ஜூன்… நன்னா யோசிச்சு சொல்லுங்கோ… இங்க யார் பிடிவாதம் பிடிக்கிறான்னு… ஓகே மேரேஜ் பண்ணிக்கலாம்… மேரேஜ் இன்விட்டேஷன்ல என்ன பேர் போடுவீங்க… கண்மணி… “ என்று நிறுத்தியவள்…


‘ப்ச்ச்… கண்மணி பேர் பிடிக்காதுதானே… நட்ராஜ் வைத்த பெயர்னு என் பேரை மாத்திருவீங்களா அர்ஜூன்… நீங்க கூப்பிடுகிற மாதிரி பிரின்சஸ்னு போடப் போறிங்களா என்ன” அவன் கண்களைப் பார்த்துக் கேட்க…

சற்று முன் இருந்த அர்ஜூனின் முகம் வெளிறி இருந்தது… கோபத்தினாலா… ஆற்றாமையினாலா… இல்லை நட்ராஜன் என்ற கண்மணியின் வார்த்தைகளினாலா… அவனே அறியாதது அது…

“சொல்லுங்க அர்ஜூன்… நட்ராஜோட அடையாளம் இல்லாத கண்மணி உங்களுக்கு எப்படி அர்ஜூன் கிடைப்பாள்… முடியுமா உங்களால” என்ற போதே அர்ஜூன் முகம் உக்கிரமாக மாறியது…

“கிடைக்கனும்…. அவன்... அந்தாளு அடையாளம் இல்லாத நீதான் எனக்கு வேண்டும்… அது என்னால முடியும்… “ என்றான் இல்லையில்லை கத்தினான் என்றே சொல்ல வேண்டும்

“ஏன் அர்ஜூன் அவர் மேல இவ்வளவு கோபம்… எனக்கே இல்லாத கோபம் உங்களுக்கு எதுக்கு… உங்க அத்தையினாலா” என்றாள் நிதானமாக அவனைப் போலக் கத்தாமல்…

“ப்ச்ச்… அத்தையா… “ என்று வெறித்தவன்…

“உன்னோட பல வலிகளுக்கு காரணம் அந்த அயோக்கியன்தானே “ என்ற போதே

“அர்ஜூன்… வார்த்தையைப் பார்த்துப் பேசுங்க” என்றாள் கண்மணி்யும்… இப்போது அவளது குரலிலும் அவனுக்கு சரிசமமாக கோபம் வந்திருக்க… அவளது கண்களிலும் ரௌத்திரம் வந்திருக்க…அவள் கோபத்தில் இவனும் எகிற ஆரம்பித்தான்

“அப்படிதாண்டி பேசுவேன்… மரியாதை கொடுத்து பேசுற அளவுக்கெல்லாம் அந்தாளு வொர்த் இல்லை… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்து பயந்த அந்த நாய்க்கு கூட தன்னை நம்பி வந்தவங்களை பாதுகாக்கனும்னு நினைக்கும்… ஹ்ம்ம்ம்.. இவன்… பொண்டாட்டியையும் பாதுகாக்க வக்கில்ல… பெத்த பெண்ணையும் பத்திரமா வச்சுக்க துப்பில்லை…” என்ற போதே

மறக்க நினைக்கின்ற… அன்றைய நினைவுகளின் தாக்கத்தில் உதடுகள் துடிக்க கண்மணி… ”அர்ஜூன்” என்ற போதே

”என்னடி அர்ஜூன்… உண்மைதானே … நான் சொல்றது ஏதாவது தப்பா என்ன… நாயோட கூட கம்பேர் பண்ண முடியாது அந்த ஆளை… அவனை விட்டுட்டு வர இவ்ளோ யோசிக்கிற… உனக்காக மட்டுமே இருக்கிற… உனக்காக மட்டுமே யோசிக்கிற…. என்கிட்ட அவனுக்காக இந்த அளவுக்கு பேசுற…” என்றவனின் வார்த்தைகளில் இறுதியாக வலி மட்டுமே வெளிப்பட

கண்மணி இப்போது

“சோ… நான் மறக்க நினைக்கிற சில விசயங்கள்… உங்களுக்கு உருத்தற பெரிய விசயங்கள்… அப்படித்தானே” நேருக்கு நேராக அவனைப் பார்த்து கேட்க…

“ப்ச்ச்… டாபிக் வேற எங்கேயோ போகுது… அதை விடு.... என்னோட முடிவு… இதுதான்… வருகிற ஜூன் மாதம் உனக்கும் எனக்கும் மேரேஜ்” ஒரே வார்த்தையில் முடித்தான்

“அதுக்கு என்னோட சம்மதம் வேண்டும்…” கண்மணியும் பட்டென்று சொல்ல…

அர்ஜூனின் முகமெங்கும் இப்போது கல்மிஷப் புன்னகை…

“சம்மதம் தானே” என்றபடியே… அவள் அருகில் போக… கண்மணியும் அவனைச் சளைக்காமல் எதிர்ப் பார்வை பார்க்க…

“காண்பிக்கவா… உன் சம்மதத்தை… என் மேல இருக்கிற எனக்கான உன் காதலை” என்று அவளருகில் போக… கண்மணி இம்மியளவும் நகராமல் அவனையே பார்த்து நின்றிருந்தாள்…. கொஞ்சம் கூட அவள் கண்களில் பயமென்பது இல்லாமல்…

….

திடீரென்று விழிப்பு வர… சட்டென்று கண்களைத் திறந்தான் ரிஷி… மனதில் ஏனோ ஒரு இறுக்கம்… வெளிக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் போல இருக்க…

அருகே அமர்ந்திருந்த வேலனிடமும் தினகரிடமும் சொல்லி விட்டு வெளியே போகலாம் என்று இருவரையும் பார்க்க…


திரையில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் காதல் காட்சி போல… வேலனும் தினகரும் திறந்த வாய் மூடாமால் ஆ வென்று பார்த்திருக்க… இருவரையும் தொந்தரவு செய்யாமல் வெளியில் வந்தான் ரிஷி…

தனது தங்கைகளுக்கு போன் செய்ய… ரிதன்யாவும் ரித்விகாவும் சாதாரணமாகப் பேச… தன் குடும்பத்தார்க்கு ஒன்றுமில்லை என மனம் உறுதி செய்த போதிலும் மனம் ஏனோ இன்னும் சமாதானம் அடைய மறுக்க… அவனையும் மீறி… மகிளாவுக்கு அடிக்க… அவளும் நன்றாகவேப் பேச…

அவனுக்குப் பிடித்தவர்கள் அனைவருமே அவனோடு பேசி விட்டனர்…. ஆனாலும் ஏன் என் மனம் சமாதானமடைய மறுக்கின்றது…. தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டான் ரிஷி….

இவர்களை எல்லாம் மீறி அவன் மனதுக்கு நெருக்கமானவர்கள் யார் இருக்கின்றார்கள்… யாரின் வேதனை என்னைக் கொல்கிறது… தேடலுக்கான பதில்தான் கிடைக்கவில்லை… குழப்பத்துடனே சில நிமிடங்கள் அங்கிருந்தவன்… மீண்டும் உள்ளே செல்ல நினைக்க… இப்போது அவனது போன் அடித்தது… யாரென்று பார்க்க… நடராஜிடமிருந்து வந்திருக்க இவன் எடுக்கும் முன்னே அது நின்று விட… மீண்டும் இவன் அழைக்க… எதிர்முனையில் இருந்து பதில் இல்லை… இவனும் பலமுறை அடித்து அடித்துப் பார்க்க… மனதுக்குள் பய அலை அடிக்க… வேகமாக கண்மணிக்கு அடிக்க… அவள் அலைபேசியோ ஸ்விட்ச் ஆஃப் என்று வர… வேலனையும் தினகரையும் உடனடியாக அழைத்துக் கொண்டு வேகமாக நட்ராஜ் பட்டறைக்கு வர… ரிஷி பயந்தது போலவே நட்ராஜ் அங்கு பேச்சு மூச்சின்றி கிடந்தார்….

கண்மணி அர்ஜூனைப் பார்க்கப் போனதை நினைத்து தன் மகள் தன்னை விட்டு போய்விடுவாளோ என்று நடராஜனின் மனம் ஏதேதோ கற்பனையில் உழள ... அதன் விளைவு மன உளைச்சல் தான் அதிகமாகியது அவருக்கு.... அந்த அர்ஜூன் அவன் நினைத்தது போல காதல் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி… தன் மகளை தன்னிடமிருந்து பிரித்து விட்டானோ… இனி தன் மகள் தனக்கில்லையோ… அதை நினைக்கும் போதே அவர் மனம் பதறியது.... இதையே நினைத்துக் கொண்டு தன் அறையிலேயே அடைந்து கிடைந்தவருக்கு... ஒரு கட்டத்தில் ... மூச்சுத் திணறலும் வர ஆரம்பிக்க... தட்டுத்தடுமாறி கண்மணிக்கு அடிக்க… அது ஸ்விட்ச் ஆஃப் என்று வர… அடுத்து அவர் அடித்தது ரிஷிக்குத்தான்… ஆனால் அவரால் பேச முடியாமல் போக… எப்படியோ ரிஷி வந்து சேர… முக்கால் வாசி மயக்கத்தில் இருந்தவரைப் பார்த்து பரிதவித்துப் போனவன் ரிஷிதான்… வேகமாக நட்ராஜை தன் மடிகளில் தாங்கியவன்…

“என்னாச்சு சார்... இன் ஹேலர் வச்சுருப்பீங்களே அது எங்க...” என்று பதட்டத்தோடு கேட்டபடியே… தேடிப் பார்த்தவனிடம்...

“வீ… ட்....... ல இ....ருக்கு..” என்று நட்ராஜ் திணற....

“சரி விடுங்க... ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று அழைத்தவனை.... வீட்டிற்கு போகலாம் என்று கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றார் நடராஜன்....

ஆனால் அங்கும்... இன் ஹேலரும் தற்காலிக நிவாரணியாக இருக்க.... ரிஷிக்கு பயம் வந்து விட்டது....

உடனடியாக... கண்மணிக்கு போன் செய்ய..... அவளது அலைபேசியோ இப்போதும் அணைத்து வைக்கப் பட்டிருக்க… அதன் பின் சிறிதும் தாமதிக்காமல் நடராஜனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பியவன்.... அவருக்கான சிகிச்சையை முடித்துக் கொண்டு.... இரவு 10 மணி அளவில் வீடு திரும்ப... அப்போதும் கண்மணி வீடு வந்திருக்க வில்லை...15

2,429 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page