top of page
Writer's picturePraveena Vijay

கண்மணி... என் கண்ணின் மணி-16

அத்தியாயம் 16


விடிந்தும் விடியாமல் இருந்த அந்த அதிகாலைப் பொழுதில்… ரிஷி தன் வீட்டின் போர்டிகோவின் முன் நின்றிருந்தான் தன்னந்தனியாக….

கையில் வைத்திருந்த புகைப்படங்களும்… நீலகண்டனால் அவன் மேல் விசிறி அடிக்கப்பட்டு தரையில் வீழ்ந்து கிடந்த மீத புகைப்படங்களுமே அவனோடு இருக்க… வேறு யாரும் அங்கில்லை…

என்ன நடந்தது என்று அவனது மூளை உணரவே சில நிமிடங்கள் ஆகி இருக்க.. மூளை உணர்ந்து கொண்டதை அவனுக்குள் கடத்தி ஒரு நிலைக்கு வரவே இன்னும் பல நிமிடங்கள் ஆகி இருந்ததது….

காரில் வரும் போதே…. தனக்கு வந்த அலைபேசி அழைப்பின் வாயிலாகவே தந்தையின் கோபம்… மகிளா தந்தையின் கோபம் இரண்டையும் உள்வாங்கியவன்… தயக்கத்தோடும் குழப்பத்தோடும் வாகனத்தை ஓட்டியபடி தனது ஊருக்குள் நுழைந்தான்….

வாயில் கதவை காவலாளி திறக்கும் போது… போர்டிகோவில் நின்ற தந்தை மற்றும் மகிளாவின் பெற்றோரைப் பார்த்த போதே… அவன் மனம் கொஞ்சம் திகிலுறத்தான் செய்தது… அவன் அருகில் இருந்த மகிளாவோ அதை விட இருந்தாள்…

“மாமா… அப்பாக்குத் தெரியாமல் சென்னை வந்தது பெரிய பிரச்சனை ஆகி இருக்குமோ… அப்பா நெக்ஸ்ட் வீக் தானே வருகிறேன்னு சொன்னாரு” மகிளா பீதியுடன் சொல்லிக் கொண்டிருக்க…

ரிஷியின் தாய் லட்சுமி முகத்திலோ யோசனைக் கீற்றுகளுடன் கூடிய பதட்டம் வந்திருக்க … ரிஷியும் தன் வீட்டின் முன் காரை நிறுத்தி இருந்தான்…

அடுத்த நொடி

மகிளா இறங்க முயற்சித்தாளோ இல்லையோ…. அவள் புறம் இருந்த காரின் கதவை கோபத்தோடு திறந்த நீலகண்டன் அதே வேகத்தில் அவள் கன்னத்திலும் அறைந்திருக்க… வலி தாங்காமல் கூடவே அவமானமும் சேர… மகிளாவின் கண்களில் கண்ணீர் கரை புரண்டோட… காரில் இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் ஒன்றும் புரியாமல் இவர்களைப் பார்த்தபடியே இறங்க…

நீலகண்டனுக்கு இன்னும் ஆவேசம் அடங்க வில்லை போல… அடுத்த கன்னத்திலும் மகிளாவை அடிக்கப் போக… வேகமாக லட்சுமி நீலகண்டனின் கைகளைப் பிடித்திருந்தாள்…

கைகள் நீலகண்டனின் கரங்களைப் பிடித்திருந்தாலும்…. கண்கள் தன் கணவரிடம் நிலைத்திருக்க… அவரின் பார்வையோ இங்கில்லை… மகனிடம் மட்டுமே நிலைத்திருந்தது… அந்தப் பார்வையில் லட்சுமி உணர்ந்ததென்ன… அதில் கோபம் இல்லை… மாறாக… எதிலோ தோற்றுவிட்ட நிர்மூலமான பார்வை மட்டுமே இருக்க… லட்சுமிக்கு திக்கென்றிருந்தது தன் கணவரின் பார்வையில்…

இந்த அளவு ஓய்ந்த … கவலை தோய்ந்த கண்களை இதுவரை தன் கணவரிடம் அவர் கண்டதில்லை… சட்டென்று தன் கணவனை நோக்கியவராக..

“என்னங்க… அண்ணன் மகிளாவை அடிக்கிறாரு…. நீங்க பார்த்துட்டு நிற்கறீங்க… உங்ககிட்ட கேட்டுட்டுத்தானே கூட்டிட்டுப் போனேன்” என்ற போதே ரிஷியும் காரை நிறுத்தி விட்டு இறங்கி மகிளாவின் புறம் வந்திருக்க….

தனசேகரிடமிருந்தும் இப்போதும் பதில் இல்லை…

தாய் மகிளாவுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருக்க… தந்தையின் மௌனத்தையும் அதே நேரம் தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் பார்வையையும் ரிஷி உணராமல் இல்லை…

மகிளாவை சென்னைக்கு அழைத்து வந்தததால்… நீலகண்டன் பிரச்சனை பண்ணி இருக்கின்றார்…. இது அவன் மனம் உணர்ந்த முடிவாக இருக்க… தந்தையின் பார்வை சொன்னதோ வேறு, மகிளா விசயம் மட்டுமே பிரச்சனை இல்லை… என்பதைக் கணபொழுதில் ரிஷி உணர்ந்து கொண்டான்…

மகிளாவின் தந்தை நீலகண்டனைச் சமாதானப்படுத்துவதெல்லாம் தன் தந்தைக்கு பெரிய விசயமில்லை… என்பதை ரிஷி நன்றாக அறிவான்…

பின் வேறென்னாவாக இருக்கும்… தந்தையின் பார்வையில் மனம் கவலை கொள்ள ஆரம்பிக்க… அதைப் பின் தள்ளியபடி… வேகமான நீலகண்டனின் அருகில் ரிஷி வந்தவன்….

“மாமா… எதுவா இருந்தாலும்… எந்த கோபமா இருந்தாலும் என்கிட்ட காண்பிங்க… அவள அடிக்கிற வேலை வச்சுக்கீட்டீங்க…” என்று அவமானத்திலும் வலியிலும் அழுது கொண்டிருந்த மகிளாவைத் தன் புறம் இழுக்கப் போக…. அடுத்த கணம்…

“என் பொண்ணு மேல கைய வச்ச” என்று தீப்பார்வை பார்த்தவராக… தன் மகளைத் தன்புறம் இழுத்தபடி..

லட்சுமியிடம் திரும்பியவர்…

”நல்ல குணமான மகனைப் பெத்து வச்சுருக்கேன்னு…. என் பொண்ண வேற கூட்டிட்டுப் போயிருக்க நீ… உனக்கும் தானே ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க… உன் பொண்ணுங்க இந்த மாதிரி எவன் கிட்டயாவது அழைச்சுட்டுப் போவியா… “

என்றவர்… தன் மனைவியை நோக்கி

“மத்தவங்களை எல்லாம் சொல்லி குத்தமில்லை… உன்னைச் சொல்லனும்டி…” என்றவர்… இருந்த மொத்த கோபத்தையும் தன் மனைவியின் கன்னத்தில் காட்டி வைக்க… தங்கை அறை வாங்கியபோதும்….. அப்போதுமே தனசேகர் அமைதியாகத்தான் இருந்தார்….

நீலகண்டன் மனைவியை அறைந்தும் அவரைத் திட்டுவதை நிறுத்தவில்லை

”அண்ணன் பையன்… அண்ணன் பையன்னு என் பொண்ணு வாழ்க்கையை பாழடிக்கப் பார்க்க இருந்த… நல்ல வேளை நான் பிஸ்னஸ் விசயமா கோவா போனது நல்லதா போயிருச்சு…. அங்கதான் இவன் குணமெல்லாம் தெரிய வந்தது…. ஏதோ நான் பண்ணிய புண்ணியம் இவன்கிட்ட இருந்து என் பொண்ணைக் காப்பாத்திருச்சு”

என்ற போதே… லட்சுமி மனம் தாங்காமல்….

”நான் என்னைக்குமே என் பொண்ணுங்க வேற மகிளா வேறன்னு நினைத்தது இல்லை அண்ணா.. ஏண்ணா இப்டிலாம் பேசறீங்க” வேதனையுடன் கண்ணீர் மல்க கேட்க…

“அப்டியா… ” ஏளனமாக இதழ் வளைத்தார் நீலகண்டன்…. பார்வை ரிஷியிடம் நிலைத்திருக்க… அந்தப் பார்வை ரிஷியை நோக்கிய மொத்த ஏளனத்தையும் குத்தகை எடுத்திருந்தது…

ரிஷிக்கு அவரின் கோபம் கூட பெரிய விசயமாகத் தெரியவில்லை…. ஆனால் அவரின் ஏளனப் பார்வை… மனதின் ஆழத்தில் சுருக்கென்று குத்தியது…

ரிஷியிடமிருந்த பார்வையை திருப்பிய நீலகண்டன்… லட்சுமியிடம் திரும்பி,….

”என்ன சொன்ன… என்ன சொன்ன… உன் பொண்ணுங்க மாதிரியா”

”ம்ஹ்ம்ம்ம்… உன் பொண்ணுங்களை இந்த மாதிரி பையனுக்கு கட்டிக் கொடுப்பியா லட்சுமி… கொஞ்சம் இதைப் பார்த்துச் சொல்லு ” சொன்ன அடுத்த நிமிடம் அவரது கையில் ரிஷியும் அவனது நண்பர்களும்… மது பாட்டிலைக் கைகளில் வைத்திருந்தபடி கும்பலாக நிற்கும் புகைப்படம் இருக்க…

லட்சுமி அவமானமும் வலியும் நிறைந்த பார்வையோடு மகனைப் பார்க்க..

வேகமாக அன்னையின் அருகில் வந்தபடி அவர் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவனுக்கு… இப்போது தந்தையின் மௌனமும்… நீலகண்டனின் கோபமும் புரிய… மேல் உதட்டைக் அழுந்தினான் தன் பற்களுக்கிடையில்… தன் நிலைமை புரிந்த காரணத்தால்…

உண்மையைச் சொல்லப் போனால்… பெரிதாக தவறாகப் படவில்லை அவனுக்கு… மாறாக தன்னுடைய இந்தப் பழக்கமெல்லாம் பெற்றவர்களுக்குத் தெரிந்து விட்டதே என்ற எண்ணம் மட்டுமே… பெரியவர்களின் கோபம் புரிந்தது… ஆனால், தான் அவ்வளவு பெரிய தவறு புரியவில்லை என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு…

பற்களுக்கிடையில் அழுந்தப்பட்டிருந்த இதழ்களின் வலி புரிந்தும் அதை விடுவிக்காமல் அமைதியாக தலை கவிழ்ந்து நின்றான்… அவ்வளவே அவன் வருத்தம்….

அடுத்த சில நிமிடங்களில் மகிளாவை அழைத்துக் கொண்டு நீலகண்டன் கிளம்பி விட… ரிஷியும் அவனது குடும்பம் மட்டுமே அங்கே…

லட்சுமி… மகன் ஏதாவது பேசுவான் என்று அவனைப் பார்க்க… ரிஷி பேசினால் தானே… யாரையும் பார்க்கப் பிடிக்காமல் தலை கவிழ்ந்து நின்றபடியே இருக்க….

தனசேகர் எதுவுமே சொல்லாமல் உள்ளே சென்று விட…. அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக…. அவர் பின்னாலேயே லட்சுமி அவசர அவசரமாகச் சென்று விட… ரிதன்யாவுக்கும்… ரித்விகாவிற்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை…

அவர்களுக்கும் பெரிதாக வருத்தம் இல்லை… பெற்றவர்களுக்கு அண்ணன் மேல் கோபம் என்று தெரிந்தாலும்…. இவர்கள் இருவருக்கும் அண்ணன் மேல் கோபம் வரவில்லை…

அதிலும் அமைதியாக நின்றபடியே ரிஷி நேரத்தைக் கடத்த…

இப்போது தாங்கள் உள்ளே போவதா வேண்டாமா என சங்கடத்தோடு ரித்விகா ரிதன்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க.. ரிஷி தான் இருவரையும் உள்ளே போகச் சொன்னான்…

அதன் பின் தான் இருவரும் உள்ளே சென்றனர்…

----

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்திருக்க அன்றைய நாளிதழ் வந்திருக்க… அங்கிருந்த வராண்டாவில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவனுக்கு …. மகிளாவைப் பற்றி நினைவு வந்தது… தன் முன்னாலேயே அவள் அடி வாங்கிய போது அதைத் தடுக்க கூட முடியாத நிலையில் நின்ற நிலை அவனுக்கு வேதனையே… அந்த வேதனை நீலகண்டனின் மேல் இருந்த கோபத்தின் அளவு இன்னுமொரு விகிதம் கூட்டி இருந்தது… அவ்வளவுதானே தவிர… மகிளாவுக்கும் தனக்குமான காதல் திருமணம் இதெல்லாம் தடைபடும் என்று அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை… காரணம் மகிளாவின் மேல் ... அவள் காதல் மேல் அத்தனை நம்பிக்கை… அதே நேரம் நீலகண்டனின் கோபத்தை எல்லாம் அவன் எப்போதும் பொருட்டாகவே எடுத்தது கிடையாது என்பதால் அவரின் கோபம் ரிஷியைப் பெரிதாகப் பாதிக்கவில்லை என்றே சொல்லலாம்

அவனைப் பொறுத்தவரை தந்தையின் மௌனம்… தாயின் கலங்கிய நிலை… தங்கைகளின் பயம்… இவையே அவனைக் கவலைப்படுத்தும் விசயங்களாக இருந்தன தற்போது

தன் தந்தை அடித்திருந்தாலாவது பரவாயில்லை… ஆனால் ஒரு வார்த்தை கூட பேசாததும்… அதை விட…. தாயின் ... தன் வளர்ப்பு இவ்வளவுதானா என்ற அடி வாங்கிய வலி நிறைந்த பார்வையுமே இவையே அவனை அலைகழித்துக் கொண்டிருக்க… இப்போது கூட அவன் செய்த செயல்களைப் பற்றி… அதில் உள்ள தவறுகளைப் பற்றி வருத்தப்படவில்லை…

இந்த வயதில் அனைவரும் செய்வதுதானே… பெற்றவர்களுக்கு முதலில் கேட்கும் போது இல்லைப் பார்க்கும் போது வருத்தம் இருக்கத்தானே செய்யும்… ரிஷியின் எண்ணம் இப்படித்தான் இருந்தது…

வெளியிலேயேதான் அமர்ந்திருந்தான்… கண்டிப்பாக தன் அன்னை கூப்பிடுவார் என்று அவனுக்குத் தெரியும்…இவன் ஒரு வேளை சாப்பிடவில்லை என்றால் கூட அவர் மனம் தாங்காது என்று தெரியுமே…

ஆக அன்னையின் அழைப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தவன்… நேரத்தைக் கடத்த சற்று முன் வந்திருந்த தினசரியைக் கையில் எடுத்தவன் அதைப் படிக்க ஆரம்பிக்கப் போக…

”தம்பி… ஐயா பேப்பர் கேட்கிறாரு…” என்றபடி சரியாக வேலையாளும் அங்கு வந்து நிற்க…

ஒரு வார்த்தை கூடப் படிக்காமல் அப்படியே அந்த நாளிதழை அவரிடம் கொடுத்தவன்…

தன்னை அழைக்கும் தாயின் குரலைக் எதிர்பார்த்து காத்திருக்க... லட்சுமியிடமிருந்து அப்படி ஒரு அழைப்பு வரவே இல்லை...


அதில் வந்த கோபத்தில்.... சில நிமிடங்கள் அங்குமிங்கும் நடைபயின்றவன்… சில நிமிடங்களிலேயே தன்னைத் தானே சமாதானப்படுத்தும் முயற்சியாக.... மூச்சை இழுத்துவிட்டபடி…

“டேய் இந்த மாதிரிப் போட்டோவை எல்லாம் பார்த்தால்… பெத்தவங்களுக்கு என்ன குளுகுளுன்னா இருக்கும்… இதுல உன்னை உள்ள வான்னு வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்கன்னு நடைபழகிட்டு இருக்கியோ… உள்ள போடா” மனசாட்சி முதன் முதலாக அவனை திட்ட

அவனைப் பொறுத்தவரை மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிய விசயமில்லை… மன்னிப்போடு கூடவே… இனி இந்த பழக்கத்தை எல்லாம் கையால் கூட தொட மாட்டேன் என்று சொல்ல வேண்டுமே!… அது முடியாதே!…

தோளைக் குலுக்கிக் கொண்டவனாக…

“நடப்பது நடக்கட்டும்…” என்றவாறு உள்ளே நுழைய… லட்சுமி… அங்கிருந்த சோஃபாவில் தலை சாய்த்துப் படுத்திருக்க கொஞ்சம் கூட இவனைக் கண்டு கொள்ளவில்லை ரிஷி உள்ளே நுழைந்தது உணர்ந்த போதும்…


ரிதன்யா தான் உள்ளே வந்த ரிஷியைப் பார்த்து

“அண்ணா… “ என்று அழைக்க…

மாடிப்படிகளில் ஏறியவன்… திரும்பி தன் தங்கையை முறைத்தபடியே…

“எனக்கு ஒரு 1 மணி நேரம் டைம் கொடுங்க… உங்க லெக்சர்… அட்வைஸ் ஆணி எல்லாம் அதுக்கப்புறம் கொடுங்க” என்றவாறு மேலே ஏறிச் சென்றான்…

“இது தங்கைக்கான பதில் இல்லை… தாய்க்கான பதில்… ” இலட்சுமிக்கு புரியாதா என்ன...

மகனின் வார்த்தைகளைக் கேட்ட லட்சுமி விரக்தியோடு கண்களை மூடினார்… மகன் தங்களை விட்டு வெகு தூரம் போய்விட்டானோ… தாங்கள் இழுக்கும் தூரத்தில் இல்லையோ என்ற எண்ணம் தந்த விரக்தி அது…

அவனாவது ஏதோ பேசி விட்டு போய் விட்டான்… அவள் கணவர் தனசேகரோ… வந்ததில் இருந்து ரிஷியைப் பற்றி பேசவே இல்லை…


லட்சுமி பேசச் சென்ற போது கூட…

“என்னைச் சமாதானப்படுத்துறேன்னு அவனைச் சப்போர்ட் பண்ணி உன்னை கஷ்டப்படுத்திக்காத லட்சுமி” இதுதான் அவர் உரைத்த வார்த்தைகள்… பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது இலட்சுமியால்

வீடே நிசப்த கோலம் பூண்டிருக்க… இவற்றுக்கெல்லாம் நாயகனான ரிஷியோ அவன் அறையில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்… முந்தைய தின தலைவலியோ இல்லை கார் ஓட்டி வந்த அலுப்போ... தெரியவில்லை படுக்கையில் விழுந்த அடுத்த நிமிடமே கண் அயர உறங்கி விட்டான்…

---

இங்கு அவனது தந்தை தனசேகர் அவரது அலுவலக அறையில் இருக்கையில் சாய்ந்திருந்தார்… கண்கள் மூடியபடி இருந்தாலும்… அவரின் கண்களின் அலைப்புறுதலே அவரின் கவலையைச் சொல்ல… மகனைப் பற்றிய மனபாரம் வெகுவாக அழுந்திக் கொண்டிருந்தது அவருக்குள்…

நீலகண்டன் எத்தனையோ முறை எச்சரித்திருக்கின்றானே… கடைசியாக ரிஷிக்கு மகிளாவைக் கேட்டுச் சென்ற போது… நீலகண்டன் அவரிடம் சொன்ன வார்த்தைகள் இன்றும் அவருக்குள் எதிரொலித்தது

“தனா… என் பொண்ணை ரிஷி மாதிரி ஒரு பையனுக்கு கொடுக்க உண்மையிலேயே இஷ்டம் இல்லைடா… அதையும் மீறி இதுக்கு சம்மதிக்கிறேன்னா… உன் முகத்துக்காகத்தான்… “

இதோ இன்று…

“தெரிந்தே என் மகளை கிணற்றில் தள்ளத் தயாராக இல்லை” என்று சொல்லி விட்டான்…

”மகனைச் செல்லம் கொடுத்து… வாழ்க்கையின் வரம்புகளைக் கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டேனா… இப்போது கூட பெரிதாக தவறு செய்தவனாக… அவன் மனம் நோகவில்லையே… நொந்து கொண்டிருப்பது என்னவோ அவனைச் சேர்ந்த நாங்கள் தானே”

இப்படி இவர் தன் மகனை நினைந்து வருந்திக் கொண்டிருக்க… நேரம் மெல்ல கடந்திருக்க…

”டாட்…” என்று முன்னே நின்றது வேறு யாருமல்ல… சாட்சாத் ரிஷிகேஷ்… அவரது மகனே…

கண்களைத் திறந்து மகனைப் பார்க்க… சாவாதனமாக அவர் முன்னால் அமர்ந்தவனின் முகத்தில் மிகமிக குறைந்த அளவில் மட்டுமே குற்ற உணர்வு இருந்தது போலத் தோன்ற… இவருக்கோ இன்னும் மனம் வேதனையில் துடித்தது…. அதை அவர் முகமும் எடுத்துக் காட்ட…

தந்தையின் முக வாடல் தாங்க முடியாமல்… ரிஷி ஏதோ சொல்ல வர அதே நேரம் தனசேகரனின் அலைபேசி ஒலித்தது…

எடுத்துப் பேசியவரின் முகத்தில் அலை அலையாக கோபமும் அவமானமும் விரவ… மகனைப் பார்த்திருந்த அவரின் கண்கள் சிவக்க ஆரம்பிக்க… தந்தையின் கோபப் பார்வையில் ரிஷிக்குள் கிலி பரவத் தொடங்கி இருந்தது…

சில மணி நேரங்களுக்கு முன் தந்தை பார்த்த பார்வையில் வேதனையோடு கூடிய கோபம் மட்டுமே இருக்க… இப்போது அவர் தன்னைப் பார்க்கும் கோபப்பார்வை புரியாமல்…. அவனையுமறியாமல் குழம்பிய பாவத்தோடு அவரை நோக்கிப் பார்த்தபடியே அமர்ந்திருக்க….

‘ஒகே சார்.. ‘ என்ற போது தனசேகர் குரல் அவருக்கே கேட்டதா என்று தெரியவில்லை… அலைபேசியைக் கட் செய்தபடி… எழுந்தவர்

ரிஷியின் முன் வந்து நின்றவர்… வேறு எதுவும் கேட்க வில்லை

“கோவா போனப்போ போலிஸ்கிட்ட மாட்டுனியா” வினாவினார் மகனைப் பார்த்தபடியே….

புரியாமல் பார்வை பார்த்தவன்…. யோசித்தபடியே

“போலிஸ்கிட்ட மாட்டலை… “ என்று தயங்கியவாறு சொன்ன போதே போதே….

“ பொய் சொல்ல நினைக்காத ரிஷி... ஸ்டேஷன் போனியா இல்லையா…“ என்று இடைமறித்து தனசேகர் குரல் உயர்த்தி ஆவேசத்தோடு கேட்க…

“ம்ம்… ஆனால்… நீங்க… கோபப்” என்று ரிஷி அவரின் கோபத்தை உணர்ந்து சொல்ல ஆரம்பித்த போதே… அடுத்த வார்த்தை அவனிடமிருந்து கேட்க அவன் தந்தைக்கு பொறுமை இல்லை… அவரின் கைகள் தான் அவனோடு முடித்திருந்தது

வலி தாங்க முடியாமல் ரிஷியையும் மீறி அவன் கைகள் அவன் கன்னத்தைத் தடவியவன்…

“அப்பா” என்ற போதே…

தனசேகர் கர்ஜித்தார்..

“அப்பான்னு சொன்ன” என்று சுட்டு விரல் உயர்த்தியவரின் கண்களும் இப்போது கலங்கி இருக்க…

“நல்ல மரியாதை வாங்கிக் கொடுத்துட்ட ரிஷி உன் அப்பாக்கு… நீ ஆசைப்பட்டதெல்லாம் நீ கேட்ட அடுத்த நொடி உனக்கு வாங்கிக் கொடுத்த எனக்கு இதெல்லாம் வேண்டும் தான்” தழுதழுத்தது அவரது குரல்…

தன் தந்தை இந்த அளவு வருத்தப்படும் அளவுக்கு… வேதனைப் படும் அளவுக்கு… கோபப்படும் அளவுக்கு என்ன செய்தோம்…

அதை அவரிடமே கேட்க நினைத்து ரிஷி மீண்டும் வாய் திறக்கப் போக… மீண்டுமொரு அறை கிடைக்க….

இப்போது ரிஷியின் குரல் உயர்ந்திருந்தது…..

“அப்பா… நான் என்ன செஞ்சேன்னு… இவ்ளோ கோபம் உங்களுக்கு… போலிஸ் ஸ்டேஷன் போனா தப்பா” என்ற போதே….

அவன் எதிர்த்துப் பேசிய அடுத்த நொடி

பளார் என்ற மீண்டும் அறை விழ… இப்போது அவரின் வேகத்தில் ரிஷியே சற்றுத் தடுமாறி நிற்க… இருவரின் வாக்குவாதங்களும் ஹாலுக்கு கேட்க… லட்சுமி ரிதன்யா ரித்விகா அந்த அறைக்குள் வந்து விட…

வேகமாகத் தன் தாயைப் பார்த்தவன்

“அம்மா… என் மேல என்ன தப்புனு சொல்லிட்டு அடிக்கச் சொல்லுங்கம்மா” தடுமாறி ரிஷியிடமிருந்து வார்த்தைகள் வர…

இலட்சுமிக்கு கூட… காலையில் இருந்த கோபத்தைத்தான் தன் கணவர் மகன் மீது இப்போது காட்டுகின்றார் என்ற நோக்கில் பார்த்துக் கொண்டிருக்க…

“தெனாவெட்டா பேசதடா… “ என்று ரிஷியிடம் எச்சரித்தபடியே….

”நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க” மகள்களை அதட்டி அவர்களது அறைக்கு அனுப்பிய தனசேகர்… தன் மனைவியிடம்

“உன்னையையும் என்னையும் இவன் ஏமாத்திட்டான் லட்சுமி… காலையில நீலகண்டன் வந்து கோபப்பட்டுக் கத்தினப்போ கூட… நாம மகனை ஒழுங்க வளர்க்கலையோ… அவன் நடவடிக்கை எல்லாம் கவனிக்கலையோன்னு மட்டும் தான் யோசிச்சேன்…. ஆனால்” என்று முடிக்க…

லட்சுமி தனசேகரையேப் பார்க்க…

“ஆனால்னா.. என்னப்பா… எனக்குப் புரியலை” என்று ரிஷிதான் தந்தையிடம் வினா எழுப்பினான்…

இலட்சுமிக்கு கணவரின் கோபம்… ஏதோ பெரிதாக ஒன்று இப்போது வந்திருக்கின்றது என்பதை புரிய வைக்க மௌனமாக நின்றிருந்தார்…. வார்த்தைகள் வர வில்லை அவருக்கு

”அவனைப் பேசச் சொல்லாத லட்சுமி… பேச என்ன என் கண்முன்னால கூட நிற்கச் சொல்லாத லட்சுமி… ” என்ற போதே ரிஷி இறுகினான்… அந்த இறுக்கமான பாவதோடு தந்தையின் முன் வந்து நிற்க…

தன் மகனைப் பார்த்தபடியே

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.”

திருக்குறளைச் சத்தமாகச் சொன்ன தனசேகர்…. விரக்தியாக சிரிக்க ஆரம்பித்தார்…. அடுத்து தன் மனைவியிடம் திரும்பி புலம்ப ஆரம்பித்தார்….

“இந்தக் குறளோட அர்த்தம் கூட இவனுக்குத் தெரியுமான்னு தெரியலை லட்சுமி… நாம தோத்துட்டோம் லட்சுமி…. நாமதான் தப்பு பண்ணிட்டோம் லட்சுமி… ஒரே புள்ளைனு அவன் மனசு நோகக் கூடாதுன்னு… அவனை இந்த இடத்தில கொண்டு வந்து நிறுத்துனது நம்ம தப்புதான் … பொம்பளை புள்ளைகளை பொத்திப் பொத்தி வளர்த்த நாம… இவன கை மீற வளர விட்டுட்டோம் லட்சுமி…” என்று சொன்னபோதே… அவரது முகம் முழுவதும் வியர்வை அரும்ப…

லட்சுமி… பதறியவராக… அவர் அருகில் போக… தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் தனசேகர்…

ரிஷி அவரின் நிலையை எல்லாம் கவனிக்க வில்லை…. அவனைப் பொறுத்தவரை தவறே செய்யாமல் தண்டிக்கப்படுகின்றோம்… அந்த கோபத்தில் அவனும் தைரியமாகப் பேச ஆரம்பித்தான்…

“அந்த அளவுக்கு… கை மீறிப் போகிற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு சொல்லுங்கன்னுதான் கேட்கிறேன்… உங்க கண் முன்னால நிற்க கூட முடியாத அளவுக்கு… என்ன தப்பு செய்தேன்”

கேள்வி கேட்ட ரிஷியின் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்கவில்லை தனசேகருக்கு…. தன் மனைவியிடம் திரும்பியவராக

“அவன் காலேஜ்லருந்து பேசுனாங்க லட்சுமி…” என்றவர்… அடுத்த வார்த்தை பேசப் பிடிக்காமல் மௌனமாக அமர்ந்திருக்க… லட்சுமி அவர் மனம் நோவது தாங்காமல் அவருக்கு அருகில் இன்னும் நெருங்கி ஆதரவாக நிற்க… இப்போது மனைவியைக் கட்டி அணைத்து அழ ஆரம்பித்திருந்தார் தனசேகர்…

“இவன்… இவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து,… பொண்ணுங்களோட... எந்த மாதிரி பொண்ணுங்க தெரியுமா” என்று சொல்லும் போதே அவரால் முடியவில்லை….

லட்சுமிக்கோ காதில் விழுந்த வார்த்தைகள் எல்லாம் கொடுமையான வார்த்தைகள்… எந்த ஒரு தாயும் கேட்க கூடாத வார்த்தைகள்…

“தண்ணி தம்மு மட்டுமில்ல இல்லை லட்சுமி…” என்ற போதே இப்போது லட்சுமி அழ ஆரம்பிக்க…

“காலேஜ் பேர் கெட்டுப் போகாமல் விசயம் வெளிய தெரியாமல் பண்ணிட்டாங்களாம்… வந்து இது மாதிரி இனி நடக்காதுன்னு கையெழுத்து போட்டுட்டு போங்க… இல்லை உங்க பையனோட டிசிய வாங்கிட்டுப் போகச் சொல்றாங்கடி…. இதுக்கு மேல நமக்கென்ன இருக்கு லட்சுமி… நான் இவனை நம்பித்தான் இருந்தேன்… எல்லாமே குடி முழுகிப் போயிருச்சு லட்சுமி” என்ற போதே மொத்தமாக உடைந்திருந்தார் தனசேகர்


ரிஷி தந்தை கூறி முடிக்கும் வர அமைதியாகவே இருந்தவன்... அவர் சொல்லி முடித்த மறு நொடி

“நீங்க நம்புறீங்களா டாடி… நீங்களும் தாம்மா… உங்க பையன் தப்பு செஞ்சிருப்பான்னு நம்புறீங்களாம்மா” ரிஷியின் வார்த்தைகளில் கடினத்தன்மை வந்திருந்தது இப்போது…

கண்கள் தன்னைப் பெற்றவர்களின் மீது மட்டுமே நிலைத்திருந்தது…

தனசேகரின் இதழ்கள் ஏளனத்தில் வளைய…

“எதை நம்பச் சொல்ற்டா…. உனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லைனு நம்பச் சொல்றியா” என்று தனசேகரும் கேட்க

“நானும் அதெல்லாம் இல்லைனு சொல்லலையே… ”

“ஓ சாருக்கு…. தண்ணி தம்முனு சொன்னப்போ ரோசம் வரலை… பொண்ணுங்கனு சொன்ன வுடனே ரோசம் வருதா” என்ற போதே…

தந்தையிடம் பதில் பேசாமல்… தாயிடம் திரும்பி…

“அம்மா” என்று அன்னையிடம் பேசப் போக…

“அவகிட்ட என்னடா பேசப்போகிற…. உங்கம்மா தான் பேச்சடைச்சு போய் நிற்கிறாளே… என்கிட்ட பேசுடா எதுவா இருந்தாலும்” என்றபடி எழுந்து அவனைத் தன்புறம் திருப்ப…

“என்னை நம்பாதவங்ககிட்ட நான் பேசத் தயாரா இல்லை…. “ என்று அவரிடமிருந்து விலகியபடி ரிஷி திமிற…. அவனது தாடையை பிடித்து தன் புறம் திருப்பிய தனசேகர்….

“சரி இதுக்கு பதில் சொல்லு… ஒருநாள் நடு ராத்திரியில இலட்ச ரூபாய்க்கு என்ன தேவை வந்துச்சு உனக்கு… ”

விழி விரிந்தது ரிஷிக்கு…. இதற்கு பதில் சொல்ல முடியாதா என்ன… ஆனாலும் தந்தையின் வார்த்தைகள் அவனை மௌனிக்க வைக்க

”எவகிட்ட கொண்டு போய்க் கொடுத்த… ” என்ற தனசேகரின் அடுத்த வார்த்தைகளில் ரிஷியின் உடல் தூக்கி வாறிப் போட நிமிர்ந்தவன்…

வார்த்தைகளின்றி அவரைப் பார்த்தவன்… கண்களை மூடித் திறந்தவன்

“என்னை நம்பாத உங்களுக்கு இனி நான் பதில் சொல்லனும்னு அவசியம் இல்ல ...” திமிராகத் தந்தையைப் பார்த்துச் சொன்னவன்… இதற்கு மேல் இங்கு நின்றால்… பேசினால்… அன்று தான் செய்த உதவி.. கேவலமான விசயமாகப் போய்விடும் என்று உணர்ந்தவனாக வெளியே செல்ல ஆரம்பிக்க… போக முடியாமல் தாய் லட்சுமியின் குரல் திடுக்கிட வைத்து நிற்க வைத்தது ரிஷியை...

“அவருக்கு பதில் சொல்ல வேண்டாம் ரிஷி.... எனக்கு... உன்னைப் பெத்தவ நான் கேட்கிறேன்.... அந்த பணத்தை எதுக்கு எடுத்த.... எனக்கு இப்போ தெரியனும்… “ லட்சுமியின் குரல் நிராசையில் நடுங்கியது...


தன் முன்னே தன் கணவனை எடுத்தெறிந்து பேசிய மகனைப் பார்த்து அக்னிப் பார்வை வீச... அமைதியாக நின்றான் ரிஷி இப்போது…. தந்தையை எதிர்த்துப் பேசியவனால் தாயை எதிர்த்துப் பேச முடியவில்லை…

”சொல்லுடா.... தண்ணியடிக்க எடுத்தியா... லட்சுமி கேட்க.. மெதுவாக மறுத்து தலை அசைக்க... வரிசையாக அவர் கேட்டதெற்கெல்லாம் இல்லை இல்லை என்று மட்டுமே ரிஷி சொல்ல....

”அப்போ உங்க அப்பா சொன்ன மாதிரி எவகிட்டனாலும்” என்ற போதே....

“அம்மா” என்று அலறினான் ரிஷி... தாயின் நெருப்பான வார்த்தைகளில்.... தாயின் வார்த்தைகளைத் தாங்க முடியவில்லை அவனால்

இப்போது ரிஷியின் தன்மானம் விழித்துக் கொள்ள...


“தன்னை தன் தாயும் நம்பவில்லை....” என்று தன்னைத் தானே சுட்டுக் கொண்டது அவனது மனம்..

“சொல்லு ... இந்த நிமிசம் வரை நம்புறேன் உன்னை... நீ எதுக்காக எடுத்த..... ”

ரிஷி இதழ்கள் அலட்சியமாக விரிந்தன…

”அப்பா கேட்ட கேள்விதான்… வேற மாதிரி பாலிஷா கேட்கறீங்கம்மா நீங்க… நீங்களும் என்னை நம்பலைதானேம்மா” என்றான் விரக்தியாக…


அடுத்த நிமிடம் அவரைக் கடந்து வெளியேறவும் போக… ஆனால் வெளியேறப் போனவன் ஏதோ மனதில் தோன்ற…. மீண்டும் உள்ளே திரும்பி வந்து தன்னைப் பெற்றவர்களின் முன் வந்து நின்றவன்…

தனசேகரைப் பார்க்காமல்… லட்சுமியிடம் மட்டுமே பேசினான்…

“அம்மா..... கேட்டுக்கங்க… அந்த பணம் நல்ல விஷயத்துக்காகத்தான் எடுத்தேன்… அப்புறம் …. ஒரு பொண்ணுகிட்ட தான் கொடுத்தேன்… அது யாருக்கு... எதற்குனு இப்போ எனக்கு சொல்ல விருப்பம் இல்லை.... ஏனென்றால் அதிகமா பணம் எடுத்ததால் பொண்ணுகிட்ட போயிருப்பேனு கேவலமா நினைத்து சொன்னபின்னால அதை எனக்கு சொல்ல இஷ்டம் இல்லை... முக்கியமா அந்தப் பொண்ணைக் கேவலப்படுத்த மனசு வரலை”

நிதானமாக வார்த்தைகளில் சொல்லி நிறுத்தியவன்...

“வேற ஏதாவது என்கிட்ட கேட்கனுமா? இல்லை இன்னும் ஏதாவது கேள்வி பாக்கி இருக்கா? அப்புறம்… வீட்டை விட்டு போ… கண்ணு முன்னால நிற்காதனுலாம் உங்க வீட்டுக்காரர சொல்ல வேண்டாம்னு சொல்லிருங்க… அடுத்து முக்கியமான விசயம்… “ என்று நிறுத்தியவன்….

“எவன்கிட்டயும் போய் மன்னிப்புலாம் நான் கேட்க முடியாது… ஏனென்றால்… நான் தப்பு செய்யலை… என் மானத்தை வித்துதான் படிப்பு கிடைக்கும்னா… அந்தப் படிப்பு தேவையும் இல்லை… அவசியமும் இல்லை….”

“சாரி… தண்ணி அடிச்சது தம்மு அடிச்சதெல்லாம் கெட்ட பழக்கம் தான்… கண்டிப்பா சீக்கிரமா அதை விட ட்ரை பண்றேன்…”

முழுக்க நனைந்தாகி விட்டது… இனி முக்காடு எதற்கு என்று ரிஷி அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு... அப்படியே தொப்பென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தும் விட்டான்

மொத்தமாகப் பேசியதால் அவனையுமீறி வந்த படபடப்பை குறைக்கும் பொருட்டு மேசையில் இருந்த அன்றைய தினசரியை திருப்ப…. கண்கள் அவனையும் மீறி அந்தச் செய்தியில் ஆர்வமாக படிந்தது.... ‘கண்மணி’ தமிழக அமைச்சர் ஒருவரிடமிருந்து பரிசு வாங்கிய செய்திதான் அது...

கண்மணியின் புகைப்படம் மிகவும் சிறியதாக இருந்தது தான்.... இருந்தும் கண்மணியின் முகம் நன்றாக தெரிந்தது ரிஷிக்கு... தனக்குத் தெரிந்த பெண் என்ற உற்சாகம் அவனையும்மீறி அவனை ஆட்கொள்ள…. அவனையுமறியாமல் செய்தியை படிக்க ஆரம்பித்தான்.... தமிழக அளவிலான கட்டுரைப் போட்டியில் கண்மணி வென்றிருந்தாள் போல.... “ஃபீனிக்ஸ் பறவைகளாய் நாங்கள்” என்ற கட்டுரைக்காக அவளுக்கு பரிசு கிடைத்திருந்தது...

தினசரியில் இருந்த அந்த செய்தியில், கண்மணி அந்த தலைப்பின் கீழ் என்ன எழுதி இருந்தாள் என்பதை விட யார் யார் அந்த விழாவிற்கு வந்தார்கள்…. பாராட்டினார்கள் என்பதே இருக்க…. படித்து முடித்த ரிஷிக்கு

ந்தப் புகைப்பட்த்தில் உள்ள மாணவிக்குத்தான்…. இந்த அளவு புத்திசாலியான பெண்ணுக்குத்தான்…. நான் பணம் கொடுத்து உதவி செய்தேன் என்று தன் பெற்றோரிடம் நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன்…. சொல்லலாமா என்று வேறு யோசனை வர... ஆனாலும் உடனே அதைக் கைவிட்டான் ரிஷி...

இவர்கள் அனைவரிடமும் தன்னை நிரூபித்து அதன் பின் இதைச் சொல்வோம்... இப்போது கூட அவனால் தன்னைக் கெட்டவன் அல்ல என்று நிரூபிக்க முடியும்... கண்மணி, நடராஜன், விக்கி என அவனுக்கு பல ஆதாரங்கள் இருக்கத்தான் செய்தன....

அதே போல கோவாவில் நடந்ததை எல்லாம் சொல்லவும் விருப்பம் இல்லை… நடந்ததை எல்லாம் சொல்லித்தான் அந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று விரும்பவும் இல்லை…

காவல் நிலையத்துக்குதான் இவனும் சென்றிருந்தான்… ஆனால் அவன் கல்லூரியில் சொன்னது போல குற்றவாளியாக அல்ல… ஒரு சிறுமியைக் கயவர்களிடமிருந்து காப்பாற்றி அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காகச் சென்றான்

இதைச் சொல்ல அவனுக்கு ஒரு நிமிடம் போதும்…

ஆனாலும் தன் தாய் தந்தை தன்னை நம்ப வில்லையே... சந்தேகப்பட்டு விட்டார்களே.... அந்த நினைவில் தான் அவன் மனம் கொதித்தது….

அதற்கு காரணம் தன் மற்ற கெட்ட பழக்கவழக்கங்கள் என்பது ரிஷிக்கும் புரிந்தது தான்...

ஆனால் தான் சொல்லாமலயே தன்னைப் பெற்றவர்கள் தன்னை நம்ப வேண்டும் என அவன் மனம் பிடிவாதம் பிடிக்க... அப்படியென்றால் தான் அவ்வாறு வாழ வேண்டும்... அந்த நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அந்த நிமிடத்தில் முடிவு செய்தான் ரிஷி.......

நாயகியோ தன் பக்குவப்பட்ட அறிவால் அறிமுகம் இல்லா நபர்களின் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்க.... நாயகனோ தன்னை ஈன்றெடுத்த தன் முதல் உறவான தன் அன்னையிடம் கூட நம்பிக்கை இழந்திருந்தான் அன்றைய தினத்தில்....

2,570 views4 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக...

4 Comments


Saru S
Saru S
Oct 19, 2020

Lovely update pravee

Like

vp vp
vp vp
Oct 12, 2020

Late episode but nice episode parents should understand their children first but no one does it

Like

Jonnie Andronicus
Jonnie Andronicus
Oct 11, 2020

Rishi paavam and avanoda parentsum avana purindhu kollanum and avan mela nambikkaium vaikkanum, rishi save panna sirumi oru vaelai kanmaniyooo?

Like

Sumithra Ramalingam
Sumithra Ramalingam
Oct 10, 2020

Arumaiyana ud. Rishi ya enna nadanthathunu parents ketkave murpadala. Ivanukkum rosam sollama vittutan.

Like
© 2020 by PraveenaNovels
bottom of page