top of page

என் உயிரே!! என் உறவே!!!-44

அத்தியாயம் 44:

கீர்த்திகாவின் கழுத்தில் தாலி ஏறிய போதும் யாருக்கும் அங்கு நிம்மதி இல்லை…. பாலாவிடம் ஆதி புலம்பியபடி இருக்க… பாலாவுக்கு கூட கோபம்… இவ்வளவு அவசரமாக இந்தத் திருமணம் அவசியமா என்று

அது மதுவின் மேல் திரும்பியது…. வீட்டிற்கு கூட போக வில்லை அவன்… நேராக வந்தது மது-கீர்த்தி தங்கியிருந்த வீட்டிற்கு…

கோபத்தில்தான் நுழைந்தான் பாலா… ஆனால் தலையில் கட்டுப் போட்டபடி அமர்ந்திருந்த மதுவைப் பார்த்தவன் தவித்துப் போய் விட்டான்…

பாலாவைப் பார்த்த மது ஓடி வந்து கட்டிக் கொண்டாள்….. அன்று…….. ஒரு நொடியே நினைத்த இனி பாலாவைப் பார்ப்போமோ மாட்டோமோ என்ற தாக்கத்தில் வந்த தவிப்பில்

பாலா என்று இறுகக் கட்டியணைத்தவளை பார்த்தவன் கீர்த்திகாவும் அங்கிருப்பதை உணர்ந்து.. அவளை மெல்ல விலக்கினான்…

கீர்த்திகா மட்டும் அங்கு இல்லையென்றால்… அவளின் தயக்கமற்ற காதலில் அவனும் கொஞ்சம் முன்னேறி இருப்பான் தான்… அவளை விலக்கி நிறுத்தியவன்

”என்ன ஆச்சு மது….. நான் போன ஒரு வாரத்தில்…. ராஸ்கல் உனக்கு வேற தலையில அடி பட்ருக்கு… அவன்லாம் ஒரு ஆளுன்னு” என்றபடி கீர்த்தியை பார்த்தவன்…. அவள் கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தபடி…

“எதுக்கு மது அந்த அயோக்கிய ராஸ்கல் கொண்டு வந்த தாலிய கீர்த்தி கழுத்தில கட்டச் சொன்ன…. ஆதி கொஞ்சம் நல்ல நேரம்….கெட்ட நேரம் அதெல்லாம் பார்ப்பான்… அதுனாலதான் அவனால ஏத்துக்கமுடியாம தயங்குறான்.. என்று ஆதியின் நிலையை விவரிக்க

அன்று நடந்த நினைவுகள் அவளை வருத்த அவன் மார்பின் மேல் மறுபடியும் சாய்ந்தாள் மது…

அவன் மீண்டும் விலக்கப் போக.. அவனிடம் முறைத்தவளாய்

”கீர்த்திதானே இருக்கா… அவ ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டா….” என்றவளை சிரித்தபடி… அணைத்தவன்

”சரி சரி… கொஞ்சம் நல்லவனா இருக்க ட்ரை பண்ணினேன்… கரும்பு தின்னக் கூலியா மது…. “ என்ற போது கீர்த்தியே அவர்களுக்கு தனிமை கொடுத்த படி அவனுக்கு காபி கலக்க உள்ளே போனாள் …

அவளை தன்னோடு சாய்த்து… அவள் நெற்றியின் காயத்தை தடவியவன்…. பின்… முறைத்தான் பாலா…

“உனக்கு ஏதாவது ஆகி இருந்தா…. பெரிய இவனு நினைப்பு… “

”நான் என்னடா பண்ணட்டும்…. இப்போ கூட ஆதி-கீர்த்தி விசயத்தில தப்பு பண்ணிட்டோம்னு பயமா இருக்கு….” என்ற போதே கீர்த்தியும் வர பேச்சை மாற்றினர்…

சிறிது நேரத்தில் ஆதியும் வர…. நால்வரும் பேசி ஒரு முடிவெடுத்தனர்…

வரும் முகூர்த்த்தில் அந்தத் தாலியைக் கழட்டி கோவில் உண்டியலில் போட்டு விட்டு… கீர்த்தி கழுத்தில் ஆதி வேறொரு தாலியைக் கட்ட முடிவு எடுக்கப்பட… ஓரளவு நிம்மதி ஆனான் ஆதி….

அது மட்டும் இல்லாமல் அவர்கள் இருவரும் இனி இந்த வீட்டில் தங்க வேண்டாம் என்றும்…. ஹாஸ்டல் தான் இனி அவர்களுக்கு பாதுகாப்பு… அது போக மதுவையும் பாலா திருமணம் செய்ய இருந்ததால் தற்காலிகமாக ஹாஸ்டலில் தங்கச் சொல்ல மதுவும் கீர்த்தியும் தங்கள் நிலைமை உணர்ந்து மனப்பூர்வமாக சம்மதித்தனர்

சரிடா பாலா…. உங்க வீட்டில உன்ன தேடப் போறாங்க… கிளம்பு… போகும் போது மதுவையும் கூட்டிட்டு போ… உங்க அம்மா பார்க்கனும்னு சொன்னாங்க…. என்று அவர்களை விரட்டுவதிலேயே ஆதி குறியாக இருக்க

”டேய் மச்சி…. தனியா விடுங்கனு …..சொல்லாம சொல்லி விரட்டி அடிக்கறியா…. விட மாட்டோம் மச்சி…..” என பாலா சொல்ல

“முடியாதா… நேரடியாவே சொல்றேன்… நான் என் பொண்டாட்டி கூட இருக்கப் போறேன்…. நீங்க கிளம்புங்க…” என்று கீர்த்தியின் மேல் உரிமையாய் கை போட்டபடி அவளை அணைக்க… அதில் கீர்த்தி முகம் சிவக்க….

”ஹலோ… இது செல்லாது செல்லாது…. அவ கழுத்தில கிடக்கிற தாலியத்தான் நீங்க ஏத்துக்கலேல்ல…சோ இது கள்ளாட்டம்… முதல்ல இடத்த காலி பண்ணுங்க ரெண்டு பேரும்…. என்று மது விரட்ட…

கீர்த்தியும் அவளுடன் சேர்ந்து கொள்ள… வேறு வழி இன்றி வெளியேறினர் நண்பர்கள் இருவரும்….

-----------------------------------------

அன்றிரவே அவர்களுடைய வாழ்வில் உச்சக்கட்ட கொடூரம் அரங்கேறியது… பிரதாப்பின் கைகளினால் ஆதிக்கு….

முடிவு எடுத்த பின்னர்…. சகஜமான சூழ்னிலை நிலவ…. தோழியர் இருவரும் ஒருவரை ஒருவர் வாரியபடி அன்றைய பொழுதைக் கழிக்க…. இரவும் வந்தது….

கிட்டத்தட்ட பத்து மணி அளவில்… பாலா அன்றுதான் வந்திறங்கியதால் வந்த களைப்பில் உறங்கிவிட்டதால் மது வேறு வழி இன்றி உறங்கச் செல்ல… கீர்த்தி ஆதியிடன் போனில் பேசிக் கொண்டிருந்தாள்…

”கீர்த்தி செல்லம் என் மேல கோபமா…. உண்மையிலேயே சொல்லனும்னா எனக்கு அந்த மாதிரி இரு சூழ்னிலையில தாலி கட்டவே பிடிக்க வில்லை.. ஊர் உலகம் முன்னாடி… அம்மி மிதித்து அருந்ததி பார்த்து உங்க அப்பா.. எனக்கு கன்னிகாதானம் பண்ணிக் கொடுத்து உன்னை என் உரிமை ஆக்க வேண்டுமென்று நினைத்தேன்.. அத்தனையும் கனவா போச்சு கீர்த்தி…. கோவில்ல உன் கழுத்தில தாலி கட்டிட்டு இப்ப கிடக்கிற தாலிய கழட்டினாத்தான் எனக்கு நிம்மதி… என்று இன்னும் மிச்சம் இருந்த வருத்தத்தில் பேச

“சரி ஆதி…. வேற எதுனாலும் பேசு… புதுசா கல்யாணம் பண்ணின பொண்டாட்டிட்ட பேசுர புருசன் மாதிரியா பேசறீங்க என்று சலிக்க…

“ஆமாடி….. காலையில உன் ஃப்ரெண்டோட சேர்ந்துட்டு விரட்டினவ இப்போ போன்ல பெருசா பேசுற…. காலையில மட்டும் நம்மள தனியா விட்டுட்டு போயிருக்கணும்….. என்று கொஞ்சியவனை

”கிழிச்ச… நீ அதுக்கும் நல்ல நேரம் பார்த்து காலத்த ஓட்டுவ” என்று அவன் காதில் விழாதபடி மெதுவாகச் சொல்ல…

“ஏய்… என்ன சொன்ன காதில விழல… நேர்ல இருந்தா கூட வாயசைவில் கண்டுபிடிக்கலாம்... ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி இருக்கு…என்னத் திட்டறியா…. என்று ஆரம்பித்தவனை

”ஆதி கதவ யாரோ தட்டுற மாதிரி இருக்கு… இரு பார்க்கிறேன்….” என்று தடை செய்தாள் கீர்த்திகா

“கதவத் திறக்காத…. மது எங்க” என்று எச்சரிக்கை உணர்வில் கேட்க

“அவ அப்பவே தூங்கப் போய்ட்டா…. என்றவள் சன்னல் கதவைத் திறந்து பார்க்க… அங்கு பிரதாப் கண்களில் வெறியுடன் நின்று கொண்டிருந்தாள்…

கலக்கமும்…பயமும்….படபடப்பும் ஒன்றாகச் சேர சட்டென்று சன்னல் கதவை அடைத்து மூடியவளுக்கு… அவனின் குரோதம் கலந்த விழிகள் என்னவென்று புரியாத உணர்வை அடிவயிற்றில் கிளப்ப

“ஆதி அவன் தான் ஆதி… எனக்கு பயமாயிருக்கு ஆதி….” என்று தவித்தவளின் வார்த்தைகளில்

“கீர்த்தி.. நீ,.. நீ பயப்படாத… இப்போ வந்துடறேன்…. அடங்க மாட்டேங்குறானே…. அந்த பொறுக்கி ராஸ்கல்… நீ கதவ மட்டும் திறக்காத…என்றவன் தனக்கு நடக்கப் போகும் விபரீதம் உணராதவனாய் அவள் வீட்டை நோக்கி கிளம்பினான்…

போனைக் கட் செய்தவள்… மதுவை வேக வேகமாக எழுப்ப…. திகில் நிறைந்த விழிகளாய் கீர்த்தி நிற்பதை பார்த்து என்னவென்று கேட்க … கையை வெளியே நீட்டினாள்….

அவளும் சன்னல் கதவை திறந்து பார்க்க …. அவளுக்கும் பயம் திரண்டது… அவள் பாலாவுக்கு போன் செய்ய அவனும் தன் வீட்டில் இருந்து கிளம்பியிருந்தான்…

ஆதி கூறியது போலவே அவனும் கதவை மட்டும் திறக்காதீர்கள் என்று எச்சரித்த வண்ணம் கிளம்பியிருந்தான்..

என்ன அன்று போல் இன்று அஜாக்கிரையாய் இல்லை.. அவர்கள்…. எல்லா கதவு சன்னல்களையும் மூடியபடி படபடத்த இதயத்தோடு இருவரும் உள்ளே இருந்தனர்…

அவன் போன முறை வந்த அன்றே வீட்டைக் காலி செய்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது இருவருக்கும்…

காலம் கடந்த ஞானோதயம் தான்….. அதை இனிமேலாவது நிறைவேற்றியிருந்தால் கூட ஆதியின் உயிர் போனதோடு போயிருக்கும்… அதைச் செய்யாத மதுவுக்கு பாலாவோடான வாழ்க்கையும்…. காதலும்…. அல்லவா அநியாயமாகப் பறி போனது

------------

ஆதி அவர்கள் வீட்டருகே நெருங்கியவுடன் அவர்களுக்கு கால் செய்து தைரியம் சொல்ல… இருவரும் பெருத்த நிம்மதியுடன் சன்னல் கதவை திறந்தனர்… ஆதியின் வருகையை எதிர்பார்த்து…

அவர்கள் சன்னலைத் திறந்தவுடன் சன்னலருகே வந்தவன் “கீர்த்தி வெளில வாடி… நான் கொண்டு வந்த தாலிய கட்டினா… அவன் ஒன் புருசனா ஆகிடுவானா..யார் கட்டுனா என்ன…அது நான் கொண்டு வந்தது…. அதுக்கு உரிமை எனக்குதான்… “

கீர்த்தியோ…

“நான் என்னடா பண்ணினே உனக்கு,,, இப்டி என்ன சுத்தி சுத்தி வந்து உயிர எடுக்கிற… நான் என் ஆதிய விரும்பறேன்,,, அவர் கூடத்தான் வாழுவேன்.. இத உன்னால தடுக்க முடியாது… I love ஆதி… I love ஆதி…” என்று அவளும் வெறிப் பிடித்தவள் போல் கத்த

மதுவுக்கு என்ன செய்வதென்று புரியாமல் நின்றாள்…

”ஓ அப்படியா… இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கு நான் யார்னு புரியும்…. அவன் இருந்தால் தானே அவனோட வாழுவ…. அவன் இல்லேணா என்ன பண்ணுவ….” என்று கேட்டவனின் வார்த்தைகள் மதுவுக்கு புரிய ஸ்தம்பித்து நின்றாள்…

அவசரப்பட்டு ஆதியை வரவழைத்து விட்டோமோ…. போலீஸுக்கு போன் செய்திருக்கலாமோ என்று நினைத்தவள் உடனடியாக காவல் நிலையத்துக்கும் போன் செய்தாள்…. ஆனால் கீர்த்தியோ எதுவும் உணராமல் அவனோடு வார்த்தைக்கு வார்த்தை மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள்…

“அவன் இருந்தாலும் இல்லேனாலும் அவனோட மட்டும் தான் என்னோட வாழ்க்கை..முடிஞ்சத பார்த்துக்கடா….” என்று கூறும் போதே ஆதி பிரதாப்பின் அருகில் நிற்க

வந்த வேகத்திலேயே அவனை அடித்து கீழே தள்ள…. கீர்த்தியும் மதுவும் கதவைத் திறந்து வெளியே வர முயற்சிக்க… வர வேண்டாம் என்று தடுத்து விட்டான்..

ஆதியின் அடியில் கீழே விழுந்தவன் …அவனைப் பார்த்து விகாரமாகச் சிரிக்க…. ஒருமுறை கீர்த்தியை திரும்பிப் பார்த்தான்…

எதுவுமே சொல்லாமல்… கொண்டு வந்திருந்த கத்தியை … ஆதியின் வயிற்றில் சொருகினான்… ஆதியும் உணர்ந்து சுதாரிப்பதற்குள் மீண்டும் சொருக…

மதுவும்…கீர்த்தியும் பதறியபடி ஓடி வந்தனர்….. பிரதாப் கையில் கத்தியுடன் வெறிப் பிடித்தவன் போல் கத்தினான்….

“ஒழிடா…. எங்க ரெண்டு பேருக்கு இடையில் யார் வந்தாலும் இந்தக் கதிதான்…. என்றவன் கண்ணீர் மல்க ’ஆதி’ என்று கதறி ஓடி வந்த கீர்த்தியை பிடித்துக் கொண்டான்…

மதுவுக்கு யாரைக் காப்பற்ற … என்ன செய்ய என்று புரியாமல் … கீர்த்தியையும் கொன்று விடுவானோ என்று தடுமாற…..

பாலாவும் வந்து சேர்ந்தான்………

அவனைப் பார்த்த ஆதி ” பா…………லா………. ” என்று கதறித் துடிக்க….

”ஆதிதீஈஈஈஇ” என்று அவனருகில் வந்தான்…

“என்ன விடுடா… என் கீர்த்திய காப்பாத்துடா…. அவன் என்ன வேணும்னாலும் பண்ணுவான் போல…. நாம் தப்புக் கணக்கு போட்டுடோம்டா….” என்றவனை விட்டு விட்டு வேறு வழி இல்லாமல் பிரதாப்பின் அருகில் போனான்…

“பிரதாப் தப்பு மேல தப்பு பண்ற… கீர்த்திய விடு….” என்று அவனிடம் பேசியபடி முன்னேற…

பிரதாப்புக்கோ.. இவன் வேற எதுக்கு இங்க வந்தான்… என்று எண்ணியபடி

“இங்க பாரு… உனக்கு இது தேவை இல்லத விசயம்… நான் எதுக்கு என் பொண்டாட்டிய விடனும்…. விட மாட்டேன்… இது நான் கொண்டு வந்த தாலி… அவ கழுத்துல இருக்கு …. இது என் கீர்த்தி…. எனக்கு மட்டும் தான் சொந்தம்… நான் போறேன் என் கீர்த்தி கூட…. நீ போய் உன் ஃப்ரெண்டப் பாரு…. அவன் செத்தான பொழச்சானா போய்ப் பாரு….” என்று பைத்தியக்காரன் மாதிரியே பேச…

பாலா அசராமல்… முன்னே போக..

“வராத… இவளக் குத்திட்டு… நானும் செத்துப் போய்டுவேன் “ என்று கையில் வைத்திருந்த ஆதியின் ரத்தம் தோய்ந்த கத்தியை கீர்த்தியின் கழுத்தில் வைத்து அழுத்த

“என்னையும் கொண்றுடா… என் ஆதி இல்லாத உலகத்தில நானும் இருக்க விரும்பல…“ என்று கதறிக் கொண்டிருந்தாள் கீர்த்தி..

மது…. ஆதியின் அருகில் இருந்தாள்…. பாலா… பிரதாப்பை கலவரத்துடன் பார்த்துக் கொண்டே…

கையில் கிடைத்த துணியில் ஆதிக்கு வேகமாக கட்டுப் போட்டவள்…

“ஆதி … மெதுவா எழுந்திருக்க ட்ரை பண்ணுங்க ஆதி… நாம் ஹாஸ்பிட்டலுக்கு போய்டலாம்…. கீர்த்திய பாலா கூட்டிட்டு வந்திருவான்….” கண்ணீர் பாதி வார்த்தை பாதியாக கூறியவளை… ஆதி கேட்டான்..

“பார்த்தியா மது… இதுனாலதான்… இந்த மாதிரிலாம் நடந்துடக் கூடாதுனுதான்… நான் அந்தத் தாலிய கட்ட மறுத்தேன்… இனி கீர்த்தி நிலைமை…. எனக்கு தாங்க முடியல…. சும்மா நான் போனாலும் பரவாயில்லை…. தாலிய வேற கட்டி… என் கீர்த்தி இனி அமங்களமா இருக்கப் போறாளா… அய்யோ என்று தலையிலடித்தான்..

”ஆதி ப்ளீஸ்… நம்பிக்கையை விட்டுராதீங்க…. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது…” என்று சொல்லும் போதே போலிஸ் சைரனும் அடிக்க…

பிரதாப் அந்த சத்தத்தில் தடுமாற… பாலா கீர்த்தியை அவனிமிருந்து பிரித்தவன்…. அவன் கத்தியைப் பிடுங்கி கீழே போட்டவன்… அவன் கைகளைப் பிடித்து முறுக்கி அங்கிருந்த மரத்தில் கட்டினான்… பாலாவின் பலத்திற்கு முன் அவனால் ஒண்றும் செய்ய முடியவில்லை….

பிரதாப்பிடமிருந்து விடுதலை ஆன கீர்த்தி ஆதியிடம் ஓடோடி வந்தாள்…

அவனைக் கட்டியணைத்து

“மது என் ஆதிய எனக்கு காப்பாத்திக் கொடு… இல்ல என்ன அவரோட சேர்த்து கொண்னுடு என்று கதறிய தோழியோடு மதுவும் சேர்ந்து அழ…

அவர்கள் அருகே வந்த பாலா….

ஆதியை கைத்தாங்கலாக தூக்கியவன்…. தன் காருக்குள் போட்டு கீர்த்தி..மதுவோடு மருத்துவமனை நோக்கி விரைந்தான்…

சம்பவ இடத்திற்கு காவலர்கள் வந்த போது கட்டப் பட்டிருந்த பிரதாப் மட்டுமே அவர்கள் கண்ணில் பட்டான்…

-----------------

நடுங்கிய கைகளோடு காரை ஓட்டிக் கொண்டிருந்த பாலாவை…. மதுதான் பின்னால் இருந்து கூப்பிட்டாள்…

“பாலா… க்க்காரை நிறுத்துடா….ஆதி ஸ்டாப் பண்ணச் சொல்றார்” என்றவளின் பதற்ற வார்த்தையில் காரை நிறுத்தியவன் பின்னால் திரும்பி

“ஆதி …இன்னும் கொஞ்ச நேரம் தாண்டா… ஹாஸ்பிட்டல் வந்துடும்… தைரியத்தை விடாதடா” என்று கெஞ்சலாய்க் கூற…

மனம் நொந்தவனாய்ச் சிரித்தான் ஆதி…

“இல்லடா… நான் ரொம்ப நேரம் உயிரோட இருக்க மாட்டேனு தோணுது… என் கீர்த்திய இப்டி விட்டுட்டு போறேனுதான் எனக்கு வருத்தம்டா…” என்று சொன்னவனி வார்த்தையில் கீர்த்தி குலுங்கி அழ… அவள் மடியில் தலை வைத்திருந்த ஆதியின் முகத்திம் முன் அவன் கட்டிய தாலி தொங்கியது…

அதை வெறித்துப் பார்த்த ஆதி…. என்ன நினைத்தானோ தெரிய வில்லை… அதை தன் கையாலே பலம் கொண்ட மட்டும் இழுக்க….கீர்த்தி பதறியவளாய்…துடித்து அதைத் தடுக்கப் போரட…

அதை எல்லாம் அலட்சியம் செய்தவனாய் ….அறுத்து வெளியே எறிந்தான்…

அவனது நடவடிக்கையில் பாலாவும் ---- மதுவும் உச்சக் கட்ட அதிர்ச்சியில் இருக்க… கீர்த்தியோ தலையில் அடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள்…

ஆதி…மதுவை தன் அருகே வருமாறு சைகை செய்ய…அவளும் போனாள்…ஆனால் அவன் மதுவிடம் ஒரு பெரிய ஒப்படைக்க போவதை உணராமல்…

“”மது….. நீ எனக்காக….. என் கீர்த்திக்காக ஒரு ப்ராமிஸ் பண்ணிக்கொடு…… இவளுக்கு நீ தான் இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்…… உன் ஃப்ரெண்ட் நான் சொன்னா பண்ண மாட்டா…. செய்ய மாட்டா… ஆனால் நீ சொன்னால் அவள் உன் வார்த்தையை மீற மாட்டாள்…. அதனால்தான் அவளிடம் கூட கேட்காமல் உன்னிடம் நம்பிக்கை வைத்து கேட்கிறேன்….” என்று கேட்டவனை கீர்த்தி முறைத்தபடி வெறித்து நோக்க

மதுவுக்கோ என்ன செய்வது… என்ன சொல்வது என்று புரியாமல் கலங்கி நின்ற தோழியைப் பார்த்தவள்…

“என்ன செய்ய” என்பது போல் பாலாவையும் பார்த்தாள்…

“பாலாதான்

“டேய் என்னடா இப்படிலாம் பேசுற… வாடா ஹாஸ்பிட்டல் போகலாம்…லூசு மாதிரி இப்படி பண்ணிட்டு இருக்க…’ என்று கோபமும் துக்கமுமாய் பேச

”மது எனக்கு…ப்ப்ராமிஸ்…” எனும் போதே வார்த்தைகள் தடுமாறின ஆதிக்கு…

மது வேறு வழி இல்லாமல் அழுத படி அவனுக்கு வாக்குறுதி கொடுக்கப் போக

கீர்த்தியின் வார்த்தைகள் அவளைத் தடுத்து நிறுத்தின..

மது.. நீ .. நீ மட்டும் ஆதிக்கு சத்தியம் பண்ணிக் குடுத்த… உனக்கும் எனக்கும் உள்ள அத்தனையும் இந்த நிமிசத்தோட முடிஞ்சுடும்… ஞாபகம் வச்சுக்கோ” என்று சொன்னவளின் விழிகள் ஆதியின் மேல் கோபத்தொடு நிலைத்திருந்தன…

அவளிடமிருந்து வந்து விழுந்த வார்த்தைகளில் ஆடிப் போனாள் மது…

ஆதிதான்

“கீர்த்தி.. என்னைப் புரிஞ்சுக்கோ…. என்னோட காதல் அந்த பொறுக்கியோடது மாதிரி இல்ல… நான் இருந்தாலும்,…. இல்லேனாலும் நீ… நீ சந்தோசமா வாழனும்… என்னால் உனக்கு இனிமேல் சந்தோசம் இல்லை…. உனக்கு சந்தோசம் தராத… உன்னை சமுதாயத்தில இருந்து தள்ளி நிறுத்தப் போற என் நினைவும்… என் காதலும்… என் உறவும் இனி உனக்கு வேண்டாம்…… அத அழிச்சுசுடு……….. பிரதாப்போட கேவலமான காதல் நான் சாகக் காரணமாக இருக்கலாம்…. ஆனால் என் தூய்மையான காதல் உனக்கு நல்ல வாழ்க்கையை மட்டுமே தரும்… கண்டிப்பா ஒரு நல்லவன என் காதல் உனக்கு கொண்டு வந்து சேர்க்கும்” எனும் போதே அவன் நினைவுகள் அவனை விட்டுப் போய்க் கொண்டிருக்க…

“கீர்த்தி I love u….” என்று கண் கலங்கியவனாய்… நலுங்கிய விழிகளாய்.. சொன்னவன்… தன் கடைசி நிமிடத்தில் மதுவிடம் தன் கையை நீட்ட …. அனிச்சையாய் மதுவின் கைகள் அவனைச் சேர்ந்தது…. அது கொடுத்த நம்பிக்கையில் ஆதி…. பாலாவையும் மதுவையும் ஒருமுறை நம்பிக்கையோடு பார்த்து கீர்த்தியின் கண்களோடு கண் சேர்ந்து தன் கடைசி மூச்சை விட்டான்…

கீர்த்தி மது கொடுத்த வாக்குறுதியில் பத்ரகாளியாய் மாறி இருக்க… அவள் கணவன் கூறிய வார்த்தைகளில் உக்கிரமாய் மாறி இருக்க… அவனோ எதுவும் அறியாமல் அவளை விட்டு விண்ணுலகம் அடைந்தான்……… கீர்த்தியின் கண்ணீரில்…ஆதியின் மறைவில் மது-பாலா அடைந்த துக்கத்திற்கும் அளவே இல்லை

-----------------------------

அதன் பிறகு பிரதாப் சிறையில் தள்ளப் பட்டான்…. கீர்த்தி…..படிப்பை நிறுத்தினாள்…. ஊருக்கே திரும்பினாள்…. மதுவோடும் தன் தொடர்பை நிறுத்தினாள்…. பாலாவுடன் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள்… அதுவும் கூட ஆதி கொலை விசாரனைக்காக மட்டுமே… பிரதாப்புக்கு தண்டனை கிடைக்க அவள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருந்தாள்

மதுதான் தாங்க முடியாதவளாய் பாலாவிடம் அழுது கொண்டிருந்தாள்…

மது மட்டும் என்றாவது கீர்த்தி தன் மேல் உள்ள கோபம் மறந்து தன்னைப் பார்க்க வருவாள் என்று அதே வீட்டில் இருந்தாள்… அது தான் மது தன் வாழ்நாளில் செய்த மிகப் பெரிய தவறாகப் போனது…

பாலா… எவ்வளவு சொல்லியும்…. கேட்க வில்லை அவள்… அருந்ததி கூட வந்து சொல்லிப் பார்த்தாள் கேட்க வில்லை அவள்….

மதுவின் தந்தையும் போராடிப் பார்த்தார்…. முடியவில்லை. துக்கத்தில் பாலா வீட்டில் கூட வந்து சண்டை போட்டு விட்டு வந்தார்

இவ்வாறு … 3 மாதம் கழிந்தது… …

அன்று கோர்ட்டில் ஹியரிங் இருந்ததால் மதுவும் பாலாவுடன் வந்திருக்க கீர்த்தியும் தன் தந்தையுடன் வந்திருந்தாள்… ஆதியின் பெற்றோர் கூட வந்திருந்தனர்…. அவர்கள் தன் பங்குக்கு மகன் இறந்த துக்கம் தாளாமல் கீர்த்தியை கறித்துக் கொட்ட… மதுவுக்கு பற்றிக் கொண்டு வந்தது….

அவளுடைய விதவைக் கோலம் அவளை பரிதவிக்க வைத்தது…. அவள் பேசாதது கூட அத்தனை வருத்தம் இல்லை... அவளின் கோலம் அவளை அலைகழிக்க வைத்த்து….

கீர்த்தியின் அருகில் நெருங்கிய மதுவை தீப்பார்வை பார்த்தாள்…..

“கீர்த்தி” என்று சொன்னவளை…

“பாலா…. நான் போறேன் ….” என்று போக எத்தனிக்க….

கையைப் பிடித்தவள்…

“நீ என்கிட்ட பேசக் கூட வேணாம் கீர்த்தி… இது என்ன கோலம்… ப்ளீஸ்…. சாதாரணமானாச்சும் இரு,….” என்றவளைப் பார்க்காமல்..

“என் அழகுதானே… இந்த பாழாப் போன அழகுதான என்னை என் ஆதிட்ட இருந்து பிரிச்சுடுச்சு…. அதுனாலதான்… அப்புறம்…. நான் உன்கிட்ட பேசாம ஏன் இருக்கேனு தெரியனுமா உனக்கு…. உன் மேல இருக்கிற கோபம் மட்டும் இல்லை… நான் உன்கிட்ட பேசுனா… நீ என் மனச மாத்திடுவ,,,, அப்படி ஒரு பவர் உன்கிட்ட இருக்கு….. இத்தனை வருசம் பழகுன எனக்கு மட்டும்தான் அது தெரியும்… எப்படிப்பட்டவங்களையும் நீ மாத்திடுவ உன் வார்த்தையால… உன் பாசத்தால… அதுதான்… போதுமா… இன்னும் எதுனாலும் நீ என்கிட்ட பேசுன….பேச இல்லை என்னை மாத்த முயற்சி பண்ணுன…. நான் என்னை மொத்தமா அழிச்சுக்குவேன்…. என்னை விட்டுடு….” என்று விரக்தியின் எல்லையில் பேசிய தோழியை அதிர்ச்சியுடன் பார்த்தாள்…

அவள் கோப வார்த்தைகளில்…. நொந்த மதுவை பாலா தேற்ற வழி இல்லாமல் ஆற்றாமையுடன் பார்த்தான்

தாயின் நினைவுகளில் இருந்து…. மாற்றிய தன் தோழியை ஆதியின் நினைவுகளில் இருந்து மாற்ற வழியில்லாமல் அதற்கு வழி கொடுக்காமல் தவிர்த்த தன் தோழியை நினைத்து தத்தளித்தாள்… தான் அவசரத்தில் ஆதியை திருமணம் செய்யச் சொன்ன நிர்பந்தமே கீர்த்தியின் இந்த நிலைமைக்கு காரணமோ… என்று கீர்த்தியின் வாழ்க்கையின் மீதான கவலை மதுவை உருக்குலைக்க ஆரம்பித்தது…

-------------

பாலாவால் மதுவைத் தேற்றவே முடியவில்லை….

“ஏண்டி..என்ன படுத்தற….. இப்போ என்னை என்ன பண்னச் சொல்ற… அவ முறைச்சுட்டு போனாள்னா நான் என்ன பண்ணுவேன்…. எப்போ பாரு எனக்கு எந்த ரூபத்திலாவது ஆப்பு வச்சுறா…. “

“பாலா… இப்போ கூட இப்படி பேசுற” நொந்து போய் பேசியவளிடம்

“”என்ன நொப்படி பேசுறேன்…. வாடி கல்யாணம் பண்ணிக்கலாம்னா… முறைக்கிற…. உங்க அப்பா சொன்னதுதான் நடக்கப் போகுது எனக்கு…… நடந்தத யாராலயும் மாத்த முடியாது… அதுக்காக நீ இப்படியே இருக்கப் போறியா….. ” என்றவனிடம்

“அட்லீஸ்ட்… அவ என்கிட்ட பேசினால் கூட பரவாயில்ல பாலா… மனசு தாங்கல எனக்கு…. எத்தன வருசப் பழக்கம்… அவ பிடிவாதக் காரி…. எனக்கு பயமா இருக்கு என் கூட பேசாமலே போய்டுவாளோன்னு” ….

“இப்போ அவ உன்கூட பேசனும்…அவ்வளவுதானே…. ”

ஆமாம் என்று பரிதாபமாத் தலை ஆட்டினாள்…

”அவதான் உன்கிட்ட ஏன் பேச மாட்டேங்கிறானு காரணம் சொன்னாளே…. ஆனா அது நூத்துக்கு நூறு உண்மைடி…. உன்னைப் பார்க்காத வரைக்கும் தான் நான் கூட என்னோட சிந்தனைல இருக்கேன்… எப்போ இந்த ரெண்டு இந்த முட்டைக் கண்ணையும் பார்க்கிறோனோ… அந்த நிமிசத்திலருந்து உன்னோட பாலாவா மாறிடறேண்டி…. சுத்தி இருக்கறது அத்தனையும் மறந்து போயிருதுடி… சகலமும் நீயா ஆகி போறடி” என்றவனை நக்கலாகப் பார்த்தாள்

“ப்ராமிஸ் டி… ” என்று உண்மையாகச் சொன்னவனைப் பார்த்து…

“அதுதான் 11/2 வருசம் சுத்த வச்சியாடா நீ… சும்மா டையலாக்லாம் விடாத…”

அசடு வழிந்தவன்..

”அது….அது… நீ என் மனசுக்குள்ள வரதுக்கு முன்னால… இது என் மனசுக்குள்ள வந்த பின்னால… எப்புடி” என்று டீசர்ட்டின் காலரைத் தூக்கி விட்டவனிடம் ஓரளவு சகஜமானாள்…

“ஆனா ஆதி கேட்டது தப்புதானடா… அதுக்கு நான் ஒத்துக்கிட்டு சத்தியம் பண்ணினதும் தப்புதானே பாலா..” என்றவளை…

“தெரியல… கீர்த்தி அவன் சூழ்னிலையில இருந்து பார்க்கும் போது அது சரிதான்னு தோணுது… கீர்த்தி நிலைமைல இருந்து பார்க்கும் போது அது தப்பு மாதிரியும் தோணுது… என்ன பண்ணச் சொல்ற.. ஒவ்வொருத்தர் சூழ்னிலையும் ஒரு ஒரு மாதிரி முடிவெடுக்க வைக்குது “ என்று வெட்டவெளியை வெறித்தவனாய்ச் சொன்னான்…

“அது எப்டிடா அப்டி சொல்ல முடியும்…. நமக்கு பிடிச்சவங்கள அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா என்ன…” என்று புரியாமல் கேட்டாள் மது….

”தெரியல மது… விட்டுக் கொடுக்க முடியாமத்தானே பிரதாப் கூட இந்த அளவிற்கு போயிருக்கான்” என்று பாலா கூற…

‘ச்சேய் அந்த பொறுக்கிய பத்திப் பேசாத…அவன் பண்ணினதுக்கெல்லாம் பேரு லவ் இல்லை. அவன் ஒரு சைக்கோ டா….” என்று சொன்னவள்…

பாலாவையே பார்த்தபடி இருக்க

“என்னம்மா..எதுவா இருந்தாலும் கேளு” என்று பார்வையின் யோசனையில் பாலா கேட்க

கேட்கப்பிடிக்கவில்லைதான் இருந்தாலும் கேட்டாள்

“நீ என்ன விட்டுக் கொடுத்துடுவியாடா…. சொல்லுடா…”..

“ஏண்டி இப்படிலாம் பிணாத்துற… “ என்று மட்டும் சொன்னவனிடம்

“பதில்” என்று அவள் வழியிலேயே நிற்க…. பெருமூச்சை விட்டவன்… கண்களை நேராகப் பார்த்துச் சொன்னான்

”உனக்கு அதுனால நல்லது நடந்தா… கண்டிப்பா விட்டுக் கொடுப்பேன்… போதுமா…” என்றவனின் நெஞ்சத்தில் சரணடைந்தவள்…

”ஆனா… நா..மாட்டேன்பா…“ என்று குறும்பாகக் கூறியவளிடம்…

“நம்பிட்டேன் மா.. நம்பிட்டேன்…. நீதான் மதர் தெரசா ஆச்சே…. அடுத்தவங்க்ளுக்கே நல்லது பண்ணுவ..எனக்கு பண்ண மாட்டியா” என்று சிரிக்க….

அது மத்தவங்க விசயத்துல… உன் விசயத்தில எல்லாம் கிடையாது பாஸ்... இப்டிலாம் ஒரு எண்ணம் இருக்கா உனக்கு…. என்று பொய்யாக முறைத்து அடித்தவளை… உரிமையாய் அள்ளிக் கொள்ளும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தான் பாலா….

மதுவின் கவலையைப் போக்க கீர்த்தியிடம் அவளைப் பேச வைப்பதே அவனது முதல் கடமையாய் இருக்க… கீர்த்திகாவிற்கும் அவன் போன் பண்ணத் தவற வில்லை…. அவன்

----

அப்போதுதான்…. பாலாவின் போனை அட்டெண்ட் செய்து கீழே வைத்திருந்தாள் கீர்த்திகா….அவன் பேசியதை எல்லாம் நினைத்துப் பார்த்தாள்…

மதுவின் நிலையைச் சொல்லி… அவளுக்கும் அதில் இஷ்டம் இல்லையென்றும்….. ஆதியின் கடைசி நிமிட வேண்டுகோள் என்பதாலே அவளால் மறுக்க முடிய வில்லை என்றும்…. எவ்வளவு தன்னால் இயன்ற அளவு அவளுக்கு எடுத்துச் சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லி கடைசியாக…. வேறு வழியின்றி தங்கள் இருவரின் மண வாழ்க்கையே அவள் மதுவோடு பேசுவதில் தான் உள்ளது” என்றும் உணர்த்தி போனை வைத்தான்…

“மதுவின் மேல் இருந்த வருத்தம் ஓரளவு குறைந்துதான் இருந்தது…. தனக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்தவளை …. தன் சுயனலத்துக்காக வருந்த விடலாமா என்று ஒருவாறாக முடிவெடுத்தவள்…. ஒன்றில் மட்டும் தீர்மானமாக இருந்தாள்… ஆதியின் வாக்குறுதியை பற்றி மட்டும் அவள் இனி தன்னிடம் பேசக்கூடாது” என்று

அதன் பிறகு மதுவுக்கு போன் செய்ய… மதுவுக்கு தலை கால் புரிய வில்லை… தன் தோழி தன்னிடம் பேசி விட்டாளா என்று நம்பவே முடிய வில்லை…. எங்கு அவள் அப்பாவைப் போல் தன்னையும் ஒதுக்கி வைத்து விடுவாளோ என்று நினைத்திருந்தாள் அவள்…. தன் தந்தை பேசாமல் இருப்பதைக் கூட தாங்கிக் கொண்ட மதுவுக்கு கீர்த்தி பேசாமல் இருப்பதைத் தாங்க முடியவில்லை….

கீர்த்தியும் … மது தன்னை வேறு எந்த விதத்திலும் வற்புறுத்தக்கூடாது என்று சொல்ல… மதுவுக்கு வேறு வழியில்லாமல்… அவள் பேசினால் போதும் என்று நினைத்தவளாய்…. ஆதியின் சத்தியத்தை எல்லாம் காற்றில் விட்டாள்… ஆதியின் காதல் உண்மை என்றால் அவளுக்கு அவனே ஒருவனை காண்பிப்பான்… என்று நினைத்தவள்… தோழியின் விருப்பப்படியே அவளை விட நினைத்தாள்…

கீர்த்தியும் அடுத்த வாரமே அங்கு வருவதாகக் கூறி இருவருக்கும் நல்ல ஒரு ஹாஸ்டலை பார்க்கச் சொல்ல…. மதுவும் அதற்கான வேலைகளில் உற்சாகமாக பாலாவுடன் இறங்க ஆரம்பித்தாள்..…….

ஆனால்…… கீர்த்தியுடன் பேசிய அடுத்த 3 நாட்களில் மது என்கின்ற மது பாலா……… காணமால் போனாள்…….. அவர்கள் இருந்த வீட்டில் இருந்தே கடத்தப்பட்டிருந்தாள்..

யார் என்றுதான் தெரியாமல் பாலா இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறான்… பிரதாப்பும் அப்போது ஜெயிலில் தான் இருந்தான்… வேறு யாராக இருக்கும்… பணத்துக்காக என்றால் தொடர்பு கொண்டிருப்பார்கள்.. அதுவும் இல்லை என்றால் எந்த நோக்கத்திற்காக தெரியவில்லை… மதுவின் தந்தையைக் கூட சந்தேகித்தான் பாலா… ஆனால் அவரும் இல்லை…. ஏனென்றால்… அவர்.. பாலாவின் மேலேயே கம்ப்ளெயிண்ட் செய்ய… யார்.. யார்… என்ற கேள்வி இன்று வரைத் தொடர்கிறது….

உற்சாகத்தின் மொத்த உருவமாய்…. அன்பின் நிழலாய்…. நட்பின் இலக்கணமாய்…. காதலின் சின்னமாய் இருந்தவள்………… இருக்கும் இடம் தெரியாமல் மறைய…. அது கீர்த்திக்கு…. ஆதியின் மறைவுக்கு அடுத்த மரண அடியாய் விழ மீளும் வழி தெரியாமல் துவண்டு போனாள்…

மதுவின் பாலாவோ சுத்தமாய் மடிந்து போனான்… எங்கும் எதிலும் மதுவின் நினைவே…… தன் ஒவ்வொரு செயலிலும் காதலை மட்டுமே காட்டி அவனையும் அதில் பழக்கியிருந்தாள் மது… அவளின் காதலுக்கு அடிமையாகி இருந்த பாலாவுக்கு செயல்களும்… நினைவுகளும் மறந்து பைத்தியக்காரன் போல் ஆனான்…

தொழிலில் கவனம் சிதற…. மதுவின் நினைவுகளுக்கு அடிமையானவனுக்கு வேறொன்றுக்கும் அடிமையாக மனமும் இல்லை… ஒருமுறை குடித்துக் கூட பார்த்தான்… அதுதான் அவனுக்கு ஒத்தும் வராதே… அருந்த்திக்கு தான் வேலை வைத்தான்,….

மது ஒருவேளை ஆதி போல இறந்து போல்….. இறந்து போயிருந்தால் கூட பரவாயில்லை… காலம் துக்கத்தை ஆற்றி இருக்கும்… ஆனால் அவள் காணாமல் போய் விட்டாளே… அவளை நினைத்து… என்ன ஆனதோ… எப்படி இருக்கிறாளோ… என்ன அவலம் அவளுக்கு நடந்ததோ … ஒவ்வொரு நிமிடமும் அனலில் விழுந்த புழுவாய்த் துடித்தான் பாலா…

காலம் அப்படியே விட்டு விடுமா என்ன… கொஞ்சம் கொஞ்சமாய் நடைமுறை வாழ்க்கைக்கு பழக ஆரம்பித்தவன்… அவளின் நினைவுகளோடு மனதோடு போராட ஆரம்பித்து… காதல் மனதை… இளமை உணர்வுகளை எல்லாம் தனக்குள் பொசுக்கியவன்.. வெளியுலக வாழ்க்கைக்காக சாமான்ய மனிதனின் முக மூடி அணிந்து… முடங்கிப் போன தனது தொழிலை மீட்க… வெறியோடு போராட ஆரம்பித்தான்… தன் கவனத்தை எல்லாம் அதில் திருப்ப…. அதன் விளைவு 4 வருடங்களில் இந்த அளவு அவனது global net அலுவலகம் அசூர வளர்ச்சி அடைந்திருந்தது…

மது பாசம் வைத்திருந்த கீர்த்திகாவிற்காக…. பிரதாப்க்கு தண்டனை கிடைக்க அவன் போராட….அவனோ சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி…. வெளியே வந்தான்…. ஆனால் கீர்த்திகாவிடம் பிரச்சனை பண்ண வில்லை……….. ஏனென்றும் தெரிய வில்லை….

…………………………………

இதற்கு இடையே ஒருநாள் …. என்று பாலா ஆரம்பித்த போது

நர்ஸ் வந்து கதவைத் தட்ட…. பாலா … கீர்த்திகா…. வினோத்…. மற்றும் கீர்த்தனா நிகழ்காலத்திற்கு வந்தனர்….

பாலா தன் கடந்த காலத்தை…… மதுவைப் பற்றிச் சொல்லும் போது…. கீர்த்தனாவின் பக்கம் திரும்பக் கூட வில்லை… ஆனால் கீர்த்தனாவோ தன் கணவனின் ஒவ்வொரு பாவனையையும் விழி மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்….

அவன் சொன்னதில் தன்னைப் பார்த்த்தாய்ச் சொன்ன நாளும்… அந்த விசயமும் கூட அவளுக்கு ஞாபகம் இல்லை…. அடிக்கடி இதே போல் வினோத்தோடு அவள் போயிருக்கிறாள்… இரண்டு மூன்று பேர் மேல் மோதிக் கூட இருக்கிறாள்… அதனால் ஆதி-பாலாவை பார்த்த விசயம் நினைத்துப் பார்க்கும் அளவுக்கு பெரிய விசயமாய் அவள் வாழ்க்கையையில் மாற வில்லை… அவன் சொன்னதில் ஒன்று மட்டும் அவளுக்கு ஆறுதல்…. தன்னவனை தான் தான் முதலில் சந்தித்து இருக்கிறோம் என்பதுதான் அது….. மற்றது எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்…….” நெஞ்சம் விம்மியது.. கணவனின் கடந்த காலம் நினைத்து மட்டும் அல்ல… மதுவுக்காக….கீர்த்திகா-ஆதிக்காகவும் தான்…

இப்போது பாலா மெதுவாய்க் கொஞ்சம் பயத்தோடும் கீர்த்தியை நிமிர்ந்து பார்க்க…. அவளோ எதுவுமே நடக்காதது போல… அவளை பாதிக்காதது போல் மனதை மறைத்து அவன் விழிகளை சாதாரணமாய் எதிர்கொண்டாள்…..

அந்தப் பார்வைக்கே வீரியம் தாங்காமல்… அவளைப் பார்க்க முடியாமல் பாலாதான் திணறினான்… என்று சொல்ல வேண்டும்…

வந்த செவிலி…. கீர்த்திகாவிடம்…

“இன்னும் கொஞ்ச நேரத்தில டாக்டர் ரவுண்ட்ஸ் வருவாங்க…அட்டென்டர் மட்டும் தான் இருக்க வேண்டும்” என்று சொல்லி.. கீர்த்திகாவை மட்டும் ரிப்போர்ட் வாங்க வருமாறு அழைக்க…..

பாலா… கீர்த்தனாவிடம்…

“கீர்த்தி… நீயும் அவளோட போய்ட்டு வா” என்று சொல்ல…

கணவன் வார்த்தையை தட்டாமல்…. கீர்த்திகாவோடு சென்றாள் கீர்த்தனா…

அவர்கள் இருவரும் போகும் வரைக் காத்திருந்தவன் வினோத்தின் அருகில் சென்று அமர்ந்தான்…

--------------------

1,470 views0 comments

Recent Posts

See All

என் உயிரே !!! என் உறவே ??? -60

அத்தியாயம்:60 காரை பாலா ஓட்ட…. கீர்த்தி அருகில் இருக்க……. பின்னால் கீர்த்திகாவும்…….. வினோத்தும் வர………… வினோத் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்……… கீர்த்தி பின்னால் திரும்பி வினோத் மற்றும் கீர்த்திக

என் உயிரே !!! என் உறவே ??? - 59

அத்தியாயம் 59: அன்று பாலா-கீர்த்தியின் திருமண நாள்…………….. மது இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தாள்…………… மதுவின் பெற்றோர்.. கீர்த்திகாவின் வீட்டிலேயே தங்கி தங்கள் மகளைக் கவனித்துக் கொண்டனர்.…………. பாலா

என் உயிரே !!! என் உறவே ??? - 58

அத்தியாயம் 58: யாருக்கு மதுவின் பதில் நிம்மதியைத் தரவேண்டுமா…. சந்தோசத்தை அள்ளிக் கொட்ட வேண்டுமோ…………….அவள் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்………… ”பாலா…… மது…………. உங்க கிட்ட ஒண்ணு கூட கேட்க வில்லையா” “இல்

© 2020 by PraveenaNovels
bottom of page