Praveena Vijay

Nov 7, 20208 min

கண்மணி... என் கண்ணின் மணி-18-3

Updated: Nov 8, 2020

அத்தியாயம் 18-3

ரிதன்யா , ரித்திகா மற்றும் மகிளா மூவரும் கோவிலுக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்... தனசேகர் இறந்து 45 நாட்கள் முடிந்தபடியால் கோவிலுக்கு செல்ல வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் கிளம்பிக் கொண்டிருக்க… நீலகண்டன் மற்றும் அவரது மனைவி கோதை இருவரும் அவர்களை அழைத்துச் செல்ல காத்திருந்தனர்…

நீலகண்டனுக்கு ரிஷியை பிடிக்கவில்லைதான்…. இருந்தாலும் இந்த நேரத்தில் லட்சுமி குடும்பத்திற்கு இருக்கும் ஒரே ஆதரவு அவர்தான்…. அதே நேரம் ரிஷி அன்று தன்னிடம் பேசிவிட்டு சென்ற பின்னர்… மனம் கொஞ்சம் அமைதியாகத்தான் இருந்தது… தன் மகள் வாழ்க்கையை நினைத்து இனி கவலை வேண்டாம்… என்பதால் பிடிக்கின்றதோ இல்லையோ கடமைக்காகவது வந்து போய்க் கொண்டிருந்தார்,…

அதே நேரத்தில் மகிளாவையும் ரிஷியையும் கண்காணிக்கவும் தவறவில்லை… ஆனால் அவரின் கண்காணிப்பு தேவையே இல்லை என்பது போல… ரிஷி மகிளாவை சந்திக்க என்ன…. நேருக்கு நேராக பார்த்தாலோ… இல்லை அருகில் இருந்தால் கூட கண்டு கொள்ள வில்லை… ஆனால் மகிளாவோ அதற்கு எதிர்மாறாக இருந்தாள்… தன்னை ரிஷி கண்டு கொள்ளாமல் இருக்கிறானே என்று அவளது பார்வை ஏக்கமாய் மாறி அவனையே சுற்றி சுற்றி வந்ததை நீலகண்டனுக்கும் புரியாமல் இல்லை…ரிஷிக்கும் தெரியாமல் இல்லை… அவளை விட்டு அவன் தான் விலக நினைக்கிறானே…. பின் எப்படி அவன் அவளைக் கண்டு கொள்வான் பழகுவான்…

ஒரு மாதிரி… நாட்கள் ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக போய்க் கொண்டிருக்க… இதோ ரிஷி இன்று சென்னை செல்லும் தினம்…

அனைவரும் கிளம்பி கோவிலுக்கு போய் விட…. ரிஷி மற்றும் லட்சுமி மட்டுமே அந்த வீட்டில் இருந்தனர்… லட்சுமி ரிஷி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முகம் கொடுத்துப் பேசி பல நாட்கள் ஆகி இருந்தது…

சென்னையில் இருந்து வந்த அன்று ரிஷியோடு பேசியவர்தான் லட்சுமி… சண்டை… கணவன் இறப்பு… அதன் காரணமாக மொத்தமாக ரிஷியைத் தள்ளி வைத்து விட்டார்… கணவன் இறந்த வருத்தம்… மகனின் மீதான கோபம்… அவனின் பிடிக்காத யாரையும் மதிக்காத நடவடிக்கை… என இவை மட்டுமே எஞ்சி இருந்தது அவரிடம்…

ரிஷியும் இத்தனை நாட்களில் தன் அன்னையிடம் தன்னைப் பற்றி எடுத்துச் சொல்லவும் முயலவில்லை.... மாறாக அவரை விட்டு முடிந்த அளவு விலகி நின்றான்....

அவனுக்கு இப்போதைய எண்ணம் எல்லாம்.... தன் அன்னை மனதளவில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.. அதில் இருந்து வெளி வர வேண்டும்… அந்த மனக் கஷ்டத்திற்கு காரணமே தான் தான் என்பதும் புரியாமல் இல்லை…. ஆனால் எப்படி தன்னை நிரூபிப்பது… காலம் வரும்… பொறுமையுடன் இருப்போம்… தன் தாய் தன்னை நம்பாமல் யாரை நம்ப போகிறார்… காத்திருப்போம் தன்னைப் பற்றிய தவறான அவரின் எண்ணங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அகற்ற வேண்டும்… இந்த எண்ணம் தான் அவன் மனதினுள் வேரோடியிருந்தது...

அதற்கு முதல் படி.... தான் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணவில்லை... அப்பாவின் பணத்தை நம்பி தான் இல்லை.... இதை முதலில் தன் அன்னைக்கு புரியவைக்க வேண்டும்....

அடுத்து தன் கல்லூரிப் படிப்பு… படிப்பை முடிக்க வேண்டும்... தனக்கான வேலை ஒன்றை தேட வேண்டும்…. இவற்றை எல்லாம் முடித்து விட்டுத்தான் தன் அன்னையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்தவன் அதற்கான செயல்களிலும் இறங்கினான்...

இதோ… தன் அன்னையிடம் பேசுவதற்கு சரியான சந்தர்ப்பமாக இன்றைய தனிமை வாய்க்க... லட்சுமியின் முன் நின்றான்...

“அம்மா” என்ற வாஞ்சையுடன் அழைத்தபடி அவர் அருகில் அமர்ந்தவனுக்கு... தன் அன்னை தன்னை நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருந்தது... மனதில் வருத்தத்தை தந்தாலும்... அதில் தளர்ந்துவிடாமல்..... தான் சொல்ல வந்ததை சொல்லும் முடிவோடு பேச ஆரம்பித்தான்

“அம்மா” என்று மட்டும் அவன் கூப்பிடஅப்போதும் லட்சுமி நிமிரவில்லை...

“இது பாங்க் பாஸ் புக்... உங்க 3 பேருக்கும் ஃபிக்ஸட் பண்ணிட்டேன்.... இது உங்க செலவுக்கான அக்கவுண்ட் தனியா ஒரு பாஸ்புக்.... “ என்று அவரின் கைகளில் திணித்தவன்... இந்த வீடு ,நகை… கொஞ்சம் சேவிங்ஸ் இதுதான் மிச்சம்… வீடை அடமானம் வைத்து ஓரளவு கடன் லாம் செட்டில் பண்ணிட்டேன்…. மற்ற எல்லா ப்ராபெர்ட்டியையும் வித்தாச்சும்மா.... அதெல்லாம் தனித்தனியா உங்க மூனு பேர் பேர்லயும் போட்ருக்கேன்.... மாமாவுக்கு என்னைத்தான் பிடிக்காது.... உங்க எல்லாரையும் நல்லா பார்த்துக்குவாரு..... மாமா வீட்டுக்கு பக்கத்திலேயே உங்களுக்கு தங்க ஏற்பாடு பண்ணிட்டேன்...” என்று எல்லாம் சொல்லி முடித்து அமைதியானான்..

இத்தனை வருடம் இந்த வீட்டில் வாழ்ந்து வந்தவனுக்கு... இனி எப்போது இதை மீட்டெடுத்து மீண்டும் இங்கு குடியேறப்போகிறோமா... என்ற நினைவில் வந்த அமைதி அது...

இருந்தும் இது அமைதிக்கான நேரம் இல்லை என்பதை உணர்ந்தவனாக... மீண்டும் பேச ஆரம்பித்தான்

“நான் சென்னைக்கு கிளம்புகிறேன்....” இந்த வார்த்தையில் இப்போது லட்சுமி அவனைப் பார்க்க... அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக

“நீ படிச்ச இலட்சணம் லாம் தெரியுமே… எதுக்கு சென்னை போறேன்னு கேட்காதீங்க… சென்னைல ஏதாவது வேலை பார்த்து என்னோட வாழ்க்கைய நான் பார்த்துக்கிறேன்… வெற்றியோ தோல்வியோ என்னோட போகட்டும்… எனக்கும் இந்த வாழ்க்கைக்குமான போராட்டத்தில்… நீங்களோ ரிது ரிதன்யாவோ எதற்காகவும் கஷ்டப்படக்கூடாது… முக்கியமா பணக்கஷ்டம் வரக்கூடாது… அதற்கான எல்லா ஏற்பாடையும் பண்ணி வச்சுட்டேன்… மாமா உங்க எல்லாரையும் நல்லா பார்த்துக்குவார்…”

லட்சுமி இப்போதும் பேசவில்லை… ஏன் சென்னை செல்கிறாய் என்றும் கேட்கவில்லை… நீ இனி என்ன செய்யப் போகிறய் என்றும் கேட்கவில்லை… அவரைப் பொறுத்தவரை மகன் தவறானவன்…. இந்த எண்ணம் மட்டுமல்லாது தன் கணவரின் இறப்புக்கு மகன்தான் காரணம்… அவனின் நடத்தை தான் முக்கிய காரணம்… தொழிலில் நஷ்டம் எல்லாம் பெரிய காரணமாக இருக்காது என்றே நம்பி இருக்க… ரிஷியை லட்சுமி அறவே வெறுத்திருந்தார்…

ரிஷி அதன் பின் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.... தன் அன்னை தன்னிடம் ஏதாவது கேள்வி கேட்பார் என்று... குறைந்தபட்சமாக அவனின் செலவுக்கு என்ன செய்யப் போகிறான் என்றாவது தன் அன்னை கேட்பார் என்று நினைத்தான்... ஆனால் லட்சுமி வாய் திறந்தால் தானே...

ரிஷிக்கு தன் மீதான கழிவிரக்கத்தில் அழுது விடுவான் போல் தோன்ற.... அறையை விட்டு வெளியே வந்து விட்டான்...

ஹாலில் வந்து கண்மூடி எத்தனை மணி நேரம் அமர்ந்திருந்தானோ தெரியவில்லை.. ரிதன்யா ரித்திகா.... வரும் சத்தம் கேட்ட போதுதான் கண் திறந்தான்....

ரிதன்யா நல்ல மதிப்பெண்கள் எடுத்தும்... தன் அன்னையை விட்டு செல்ல பிரியம் இல்லாததால் இங்கேயே கலைக்கல்லூரியில் சேர முடிவு செய்திருந்தாள்... ரிஷியும் அவளை அவள் விரும்பிய படிப்பிலேயே சேர வற்புறுத்தினான் தான்... ஆனால் அவள் மறுத்து விட்டாள்... ரித்விகா... அடுத்த வகுப்புக்கும் சென்று விட்டிருந்தாள்... என அவனது குடும்பம் நடைமுறை வாழ்க்கைக்கு பழக ஆரம்பித்து இருக்க ரிஷியும் சென்னைக்கு கிளம்ப முடிவு செய்திருந்தான்....

ரிதன்யா... ரித்திகா குரல்கள் கேட்ட போதே அவர்கள் நினைவுகளுக்கு தாவிய போதே… மகிளாவின் குரலையும் அவன் செவிகள் தேட.... அது ஏமாற்றத்தைத்தான் பிரதிபலித்தது... ஆனாலும் மகிளா நன்றாக இருக்க வேண்டும் என்றால் தன்னை விட்டு பிரியத்தான் வேண்டும் என்று மனதில் நினைத்து விலகி விட்டான் தான்.... ஆனாலும் அவன் மனம் இன்னும் அதற்கு பழக வில்லை போல... மகிளாவை நினைக்கும் போதெல்லாம் மனம் வலித்தது... ஆனாலும் மகிளாவின் நினைவுகளுக்கு முன்னால் அவனின் குடும்பம் நிற்க... காதலை புறம் தள்ளினான்...

காதல், காதலி இதெல்லாம்....... வாழ்க்கையில் தோல்வியுற்ற ஒருவனுக்கு அத்தியாவசியம் இல்லை… அதெல்லாம் அனாவசியம் மட்டுமே என்று தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்ட வார்த்தைகளை இப்போதும் தனக்குள் சொல்லிக் கொண்டபடி... கண் திறக்க… அவன் முன் நின்றிருந்ததோ மகிளா...

அவளை எதிர்பார்க்காதவன்… தடுமாறி பின் உடனே தன்னைச் சமாளித்தபடி...

“என்ன மகி” என்று அவளைப் பார்த்து வலிய புன்னகைக்க முயற்சித்தான்… அது மகிளாவுக்கும் புரிய

“ஏன் மாமா உன்னையே இப்படி வருத்திக்கிற... நீ கவலைப்படாமல் சென்னை போ மாமா… அப்பா என்ன சொன்னாலும் நான் உன்னைத்தான் மேரேஜ் பண்ணிக்கிருவேன்... உனக்காக காத்திருப்பேன்… இப்போ என்ன உனக்கு என்ன கவலை… யார் உன்னை நம்பாவிட்டாலும்.. நான் உன்னை நம்புறேன் மாமா.... அந்த பணம் விவகாரம்… நீ ஏன் அந்த பொண்ணுக்கு கொடுத்த… இதெல்லாம் எனக்கும் தெரியுமே மாமா.. நான் அத்தைகிட்ட சொல்றேனு சொன்னால் சொல்லக் கூடாதுனு மிரட்டுற....” என்று அவன் தோள் மீது சாய்ந்தவளை... அவளறியாமல் நாசுக்காக… அவளை விட்டு தள்ளி அமர்ந்தவன்....

“ப்ச்ச்.. அதெல்லாம் ஒரு வருத்தமும் இல்லை… நல்லா படி... மாமா சொல்றதைக் கேளு.... பிடிவாதம் பிடிக்காதே.... என்னால முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்ய முடியாது... அடிக்கடி என்ன... என் போனை எதிர்பார்க்காத....” சிறு பிள்ளைக்கு கூறுவது போல சொல்ல...

தான் சொன்னதிற்கெல்லாம் அப்பாவியாய் தலை ஆட்டியபடி தொலைக்காட்சியில் ஓடிய பாடலில் கவனத்தை வைத்திருந்தவளை... கண்களில் வலியோடு பார்த்திருந்தான் ரிஷி...

ரிஷியின் மேல் அத்தனை நம்பிக்கை மகிளாவுக்கு… தங்கள் காதல் கை கூடாது என்றெல்லாம் ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லை மகிளா…பிரச்சனை என்றால் தந்தையிடமிருந்துதான் வரும்… அவரை சமாளிக்க முடியாதாஅ என்ன… ரிஷி தன்னை விட்டு போக நினைக்கின்றான் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை… அது புரிந்தால் தானே கவலை கொள்ள… கவலையின்றி இருக்க…. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்கு ஒன்று மட்டும் புரிந்தது….

தான்தான் காதல் கன்றாவி என்று கூறி... அவளை கெடுத்து வைத்திருக்கிறோம் என்று தோன்ற தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்தான் ரிஷி...

அதை வெளியில் சொல்லாமல்...

“சாரி மகி.... “ என்று மட்டும் சொல்ல...

“எதற்கு மாமா சாரி... நான்தான் சாரி கேட்கணும்... உன்னை எல்லோரும் தப்பா பேசுறதை கேட்டு வாய முடிட்டு இருக்கேன்ல.... நான் தான் சாரி கேட்கணும் உன் கிட்ட.. உன் அருமை யாருக்கும் இங்க தெரியாது மாமா…” வருத்தத்தோடு சொன்னவள்... சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினாள்... போகும் முன்...

“உன் போனை எதிர்பார்க்க மாட்டேன்.... ஆனால் என் போனை எடுக்க மறந்திராத” என்று வேறு ரிஷியை கலங்கடித்து விட்டுத்தான் போனாள்...

அவள் போன வழியையே பார்த்திருந்தான் ரிஷி….

”இவளைப் பணயம் வைத்துதான் தன் குடும்பத்தின் பாதுகாப்பை வாங்கி இருக்கின்றான்…” என்பது அவளுக்குத் தெரிந்தால்… என்னைப் பற்றி என்ன நினைப்பாள்…

ஆம் வாழ்க்கை என்னும் சூறாவளி வட்டத்துக்குள் அடி எடுத்து வைத்து வைத்தவன்… தன் எதிரிகளை அவர்களின் வாள் கொண்டே வீழ்த்தும் சூட்சுமத்தை கையில் எடுத்திருந்தான் ரிஷி…. அது அவனுக்கு சுலமாகவும் இருக்க… தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் தன் கீழ் கொண்டு வந்தான்

நல்லவன், மனசாட்சி உள்ளவன் என்பதை அவன் தாய் தங்கைகளுக்கு மட்டும் என சுருக்கிக் கொண்டான்….

தன் தந்தையிடம் எந்த காரணத்தை வைத்து மிரட்டினார்களோ… அதே காரணத்தை இவன் கையில் எடுத்து பங்குதாரர்களை மிரட்ட… அவர்கள் மிரள ஆரம்பித்து இருந்தனர்…. தொழிலாளர்களைக் காரணம் காட்டி தனசேகரனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க… ரிஷியோ எதைப்பற்றியும் கவலைப்படாமல்… எனக்கு ஒரு கண் என்றால் உங்களுக்கு இரண்டு கண்… வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று மொத்தமாகத் தொழிலை முடக்கி வைத்து விட்டான்… அவகாசம் கொடுக்காமல் தன் தந்தையை முடக்க நினைத்தவர்களிடம் இருந்து அவகாசம் மட்டும் எடுத்துக் கொண்டவன்… தங்கள் பரம்பரைத் தொழிலை மீட்டெடுக்கும் பாதையை வகுத்துக் கொண்டான்… கண்டிப்பாக இடைப்பட்ட நாட்களில் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை… கிடைக்காவிட்டாலும்… குறுக்கு வழி ஏதாவது இருக்கும்…. அதைப் பயன்படுத்தி தொழிலை மீட்டெடுக்கலாம்… நம்பினான் ரிஷி…

அதே போல…

நீலகண்டனிடம்… உன் மகள் வாழ்க்கை நீ நினைத்தது போல இருக்க வேண்டுமென்றால்… என் குடும்பத்துக்கு பாதுகாப்பை அளி… இல்லையென்றால் இன்றே மகிளாவைத் திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்ட… நீலகண்டனும் தன் மகள் மகிளாவின் வாழ்க்கையை ரிஷியிடமிருந்து காப்பாற்ற... சுலபமாக கிடைத்த வழியினைப் பற்றிக் கொண்டார்…

எப்படியும் மகிளாவும் தானும் இனி வாழ்க்கையில் ஒன்று சேரப் போவதில்லை தெரிந்து கொண்டே ரிஷி மகிளாவை பகடைக்காயாகப் பயன்படுத்த…. ரிஷி கொடுத்த உத்திரவாதத்தால்…. தன் மகளின் வாழ்க்கையில் அவன் இனி குறுக்கிட மாட்டான் என்று சொன்ன வார்த்தைகளால்… அவன் குடும்பத்தை இங்கு பார்த்துக் கொள்வதாக வாக்குறுதியும் அளித்தார்…

தன் வாழ்க்கை… அதில் இருந்த காதலுக்கு முற்றுபுள்ளி…. இனி வரப் போகும் நாட்களிலும் காதலாவது கத்தரிக்காயாவது…. அவனுக்கான வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்க… முடிவெடுக்க என்ன யோசிக்கக் கூட பல வருடங்கள் எடுக்கும்… அப்படி இருக்க… மகிளாவை தன் வாழ்க்கைப் பாதையில் இருந்து அகற்றி விடவே தீர்மானித்தான்… ரிது ரிதன்யா தனக்கு எப்படி முக்கியமோ… அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென இவன் நினைப்பானோ…. அதே போல் தான் மகிளாவும் இருக்க வேண்டும்…

தன்னைத் திருமணம் செய்தால் அவள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டாள் என்றே ரிஷுக்குத் தோன்றியது… பணம் மட்டும் பிரச்சனை இல்லை இங்கு… அவன் குணமுமே மாறிப் போயிருக்க… காதல் வாழ்க்கை… கண்ணே மணியே… நீ என் உயிர்… என்று கொஞ்சி கெஞ்சி… செல்ல சண்டைகளுமாக நிரம்ப காதலுமாக… மனைவி பின் ஓடும் சம்சார பந்தம்… இனி அவன் வாழ்க்கையில் இருக்குமா… ஏன் மனைவி என்று ஒருத்தி வந்தால் கூட… காதல் என்பது இருக்குமா… கேள்விக்குறியே

எப்படி எல்லாம் அவன் மகிளாவோடு வாழ வேண்டுமென்ற நினைத்திருந்தானோ அந்த வாழ்க்கையை… தான் நேசித்த ஒருத்திக்கு அவனால் கொடுக்க முடியாத போது… இருவரும் சேர்ந்து என்ன பிரயோசனம்… சேர்ந்தால் கூட அந்தக் காதலும் அர்த்தமில்லாமல் போகும்… உயிரற்றும் போகும்… பின் எதற்கு அந்தக் காதல், கல்யாணம்

கருவறையில் இருக்கும் போதே கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுடன்தான் பிறக்கும் என்று தெரிந்து அந்தக் குழந்தையை தாய் அழிப்பதைப் போல…. தனக்குள்ளேயே தன் காதலை சமாதி கட்டினான் ரிஷி… சுயநலத்தோடு முடிவெடுத்திருந்தாலும்…. பெரிதாக வருத்தம் இல்லை… மகிளாவின் வாழ்க்கையை நினைத்து நிம்மதியே கொண்டான்… ஆக மொத்தம் காதல் என்ற அத்தியாயம் முடிந்தது… அவனாலேயே முடித்து வைக்கப்பட்டிருந்தது அவன் வாழ்க்கை என்னும் புத்தகத்தில்

வேட்டையாடும் வேடனின் நோக்கம் மட்டுமே அவனுக்கு… இங்கு அவன் யாரையும் பழி வாங்க புறப்படவில்லை… முட்டுக்கட்டையாக யாராவது வந்தால் மட்டுமே இவன் எதிர்ப்பும்…

ஆக தன் வாழ்க்கையின் முன்னேற்றம் மட்டுமே இங்கு எல்லோருக்கும் கொடுக்கும் பதிலடி… என்பதை உணர்ந்தவனாக… சென்னையை நோக்கிப் பயணமானான் ரிஷி...

----

ரிஷி தான் தங்கியிருந்த சென்னை வீட்டிற்கு வந்தான்... தான் ஒருவனுக்கு மட்டும் இந்த வீடு அதிகப்படி... அதுமட்டுமில்லாமல்.. அவன் தன் ஆடம்பரத்தை முற்றிலும் தன்னை விட்டு ஒழிக்க முடிவு செய்திருந்தான்...

கல்லூரிக்குச் சென்றபோதோ… அவன் எதிர்பார்த்த அளவு கல்லூரியில் பெரிதாக விசாரணை எல்லாம் இல்லை… இனி இது போல நடக்கக் கூடாது என்று மட்டும் அறிவுறுத்தி முடித்திருக்க… பணம் பாதாளம் வரை பாயும் என்பது மீண்டும் அவனுக்கு நிரூபணம் ஆனது… இவன் நண்பர்களில் ஒருவன் அமைச்சரின் மகனாக இருக்க… பெரிதாக எதுவுமே நடக்கவில்லை… இந்த படிப்பு வேண்டுமா… அப்படியே படிப்பு வேண்டும் என்றாலும் இங்கு தொடர்வதா வேண்டாமா… குழப்பம் சூழ்ந்தபடி அமைதியாக வகுப்பறையில் அமர்ந்திருக்க

ரிஷியின் நண்பர்கள் குலாமோ… அவனிடம் துக்கம் விசாரித்ததை விட பெருமை பீற்றிக் கொண்டதே அதிகம் எனலாம்…

“டேய் மச்சான்… உங்க வீட்டுக்கும் கால் வந்துச்சா… தப்பு செய்யாமலேயே நீ மாட்டி இருப்ப போல… சரி விடு… நம்ம கிரண் அவங்க அப்பாவை வச்சு சமாளிச்சுட்டான்…” என்று பேசிக் கொண்டிருக்க… ரிஷியின் மனம் கணக்கிட ஆரம்பித்திருந்தது கல்லூரி வாழ்க்கைக்கான தீர்வை… தீர்வெடுத்த அடுத்த சில நிமிடங்களில் அவன் அந்தக் கல்லூரியின் முதல்வர் முன் அமர்ந்திருந்தான்….

நிமிடங்கள் கடந்திருக்க…

இவன் உள்ளே நுழையும் போது அலட்சியமாக பார்த்து இவனை வரச்சொன்னவரின் பார்வை… இப்போது பயத்தில் ரிஷியையே பார்த்துக் கொண்டிருந்தது.. அவர் மட்டுமல்ல… இப்போது அந்த கல்லூரியின் நிர்வாகத் தலைவர் வரை ரிஷியின் முன் இருந்தனர்

மென்னகையோடு அவர்களைப் பார்த்தவனின் கண்களில் அச்சம் என்பதே இல்லை….

”எனக்கு டிசி கொடுக்கப் போறிங்களா… இல்லை என்னோட கோரிக்கை எல்லாம் நிறைவேற்றப் போறிங்களா சொல்லுங்க… இந்தக் காலேஜ் நேம் முக்கியம் தானே… ” என்று நிறுத்தி நிதானமாகப் பார்க்க…

அவர்கள் அனைவரும் சேர்ந்து கோபமும் பயமும் சேர அவனை முறைக்க…

“என்கிட்ட இருக்கின்ற போட்டோஸ் எல்லாம் வெளிய லீக் பண்ணினேன்னா… எனக்கு ஒரு பிரச்சனையும் வராது… ஏனென்றால்… அது எதுலயுமே நான் இல்லை… அன்னைக்கு அந்த இடத்தில நான் இல்லவே இல்லை… நீங்கதான் தெரியாமல் என்னையும் அவங்க கூட இருந்தேன்னு நினைத்து என் அப்பாகிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணிருக்கீங்க… சரி அதை விடுங்க… இதை வெளில விட்டால் ஒரு பக்கம் காலேஜ் மானமும்… இத்தனை நாள் இந்த கல்லூரிக்குனு நீங்க சேர்த்து வைத்த பேர் எல்லாம் கெட்டுப் போகும்… இன்னொரு பக்கம் நீங்கதான் இதைப் பண்ணுனீங்கன்னு… அதாவது அவர் மகனோட மானம் போச்சுனு மினிஸ்டர் அங்கிள் உங்கள அதகளம் பண்ணிருவார்… தென் உங்க வேலையும் ஃபினிஷ்… இதெல்லாம் நடக்கனுமா…”

“இப்போ என்ன பண்ணனும் உனக்கு நான்” என்று அவன் வழிக்கு வந்தவரிடம்

“ரொம்ப சிம்பிள்… நான் பெருசா எதையும் கேட்கலை… ஜஸ்ட்…. என்னை எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸ் பண்ணி விடுங்க… இதுக்கு முன்னால உள்ள அரியர்ஸ் மட்டுமல்ல… இனிமேல் எழுதப் போகிற எக்ஸாம்லயும்…” என்று அமர்ந்திருந்த இருக்கையின் பின் சாய்ந்து பின்னங்கழுத்தைத் தடவியவன்….

“கோல்ட் மெடல்லாம் எதிர்பார்க்கலை சார்… ஜஸ்ட் ஆவரேஜ் போதும்… மாட்டிக்கக் கூடாது பாருங்க…” என்று வில்லத்தனமாக ரிஷி சிரிக்க.. முதல்வரோ முறைத்தார்…

அவர் முறைப்பதைப் பார்த்து புன்னகைத்தபடி…

“அப்புறம் ஃபீீஸ்… அதுவும் இனி நான் கட்ட மாட்டேன்… என்ன ஏதுன்னு விசாரிக்காமல் என் அப்பாக்கு போன் பண்ணி… அந்த அதிர்ச்சில இப்போ அவர் உயிரோட இல்லை… இதெல்லாம் சொன்னால் இன்னும் இன்னும் இந்த காலேஜ் பேர்தான் கெடும்…” என்று முடிக்க

“அதே மினிஸ்டர்கிட்ட சொல்லி உன்னையும் எங்களால வாயடைக்க வைக்க முடியும்… “ என்று அங்கிருந்தவர்களில் ஒருவர் இவனை மிரட்ட

”ஹா ஹா… என்னை யார் என்ன பண்ணினாலும்… ஏன் அந்த மினிஸ்டர் கொன்னாலும் எனக்கு கவலை இல்லை… ஆனால் ரெண்டு பக்கமும் மானம் பறந்திரும்… யோசிங்க ” என்றவன்

“ஹப்பா… பெரிய மனுசங்களா…. புரிஞ்சுக்கங்க… எனக்கும் இதெல்லாம் வெளிய விட ஆசை இல்லை… ஜஸ்ட் பாஸ் பண்ணி விடுங்கன்னுதானே சொல்கிறேன்… ஃபீஸ் கட்டுங்க… அவ்ளோதான்… இவ்ளோ தூரம் தைரியமா உங்களை மிரட்ட காரணம் என்னன்னா… எனக்கு எதுவும் பெருசு இல்லை… படிப்பு வேண்டாமுனுதான் வந்தேன்… எனக்கான ஆப்ஷன் கிடைத்திருக்க.. யூஸ் பண்ணிக்கிட்டேன்… இவன்லாம் ஒரு ஆளான்னு என்னை அழிக்க நினைத்து… இதை பெரிய விசயமா ஆக்குவதும்… இல்லை இவன் லாம் ஒரு ஆளான்னு நான் கேட்ட டிமாண்ட்ஸ்லாம் நிறைவேத்துறதும் உங்க ஆப்ஷன்….” என்ற போதே அவர்களுக்குள் கிசுகிசுக்க தொடங்கியவர்கள்… முடிவில் இவன் கோரிக்கைகளுக்கெல்லாம் ஒத்துழைக்க…. தெனாவெட்டாக வெளியேறினான் ரிஷி…

தன் பக்கம் வெற்றி பெற்ற தைரியத்தில் திமிராக வகுப்பறைக்குள் நுழைந்து… தன் இருக்கையில் அமர்ந்தவன்… சற்று முன் இருந்த திமிர் தெனாவெட்டு… அதற்கு முன் இருந்த விளையாட்டுத்தனம் எல்லாவற்றையும் விட்டு விட்டு… முதன் முறையாக வகுப்பைக் கவனிக்கவும் ஆரம்பித்திருந்தான்….

---

கல்லூரி…. படிப்பு இந்தப் பிரச்சனைகளை முடித்தவன்…. அடுத்து வருமானத்திற்கு யோசிக்க ஆரம்பித்து…. பகுதி நேர வேலை பார்க்கவும் முடிவு செய்திருந்தான்… அந்த வருமானத்தில் தன் தேவைகளை நிறைவேற்றில் கொள்ள வேண்டும் என்ற கொள்கை என்பதால் அவனுக்கு வருமானத்திற்கு இந்த வீடு அதிகப்படியாகத்தான் இருக்கும்… முதலில் தனக்கு ஏற்றவாறு குறைந்த வாடகையில் வீடு ஏற்பாடு செய்ய நினைத்தான்… தனக்கு ஒரு இருப்பிடத்தையும் … ஒரு வேலையையும் பார்க்க வேண்டும் என்று அதில் தீவிரமாக இறங்க்கினான்…

முதலில் ஒன்றிரண்டு இடங்களில் கேட்ட போது 2 வீலர் வேண்டும் என்று சொல்ல… இப்போதைக்கு வீடு பார்ப்போம் என்று முடிவெடுத்தவன்... தரகருக்கு பணம் தந்து பணத்தை வீணாக்காமல், முதலில் தானே அலைந்து வாடகைக்கு வீடு தேடினான்... ஆனால் அது பலனளிக்காமல் போக.... தரகரின் துணையை நாட... அவரோ...

“உன்னை மாதிரி காலேஜ் போற பசங்களுக்கு வீடு கிடைக்கிறது கஷ்டம் தம்பி... அதிலும் நீ சொல்ற அமௌண்டுக்கு... ரொம்ப கஷ்டம்... நீ சொல்ற பணத்துக்கு வீடு கிடைக்க வேண்டுமென்றால்... சென்னைக்கு அவுட்டரில் தான் கிடைக்கும்...” என்று யோசித்தவர்...

“ஹ்ம்ம்ம்ம்ம்... ஒரு வீடு இருக்கு....“ ஆனால் அந்தப் பொண்ணும் பேச்சுலர்க்கு விடாதே... என்று தலையைச் சொறிந்தார்.... இருந்தும் ரிஷி வற்புறுத்த…. பின் போனை எடுத்து பேச ஆரம்பித்தார்...

“மணி... உன் கண்டிஷன மாத்திக்கம்மா... சிங்கிள் ரூம் உள்ள மாடி வீடுதானே... ரொம்ப நாளா யாரும் வரலைனு அப்பா சொன்னாரும்மா” எனும் போதே எதிர்முனையில் என்ன பதில் வந்ததோ அமைதியாக போனை வைத்தார்...

“அந்த பொண்ணுக்கு விட விருப்பம் இல்லையாம்... சரி பார்க்கலாம் தம்பி.... வீடு அமைந்தால் நானே உனக்கு போன் பண்றேன் தம்பி.... “ என்று கிளம்பி ....

“ஒருநிமிசம்...” என்றபடி நிறுத்தினான் அவரை...

‘மணி’ என்ற பேரைக் கேட்டதும் அவன் மனம் கண்மணியின் முகத்தைத்தான் அவன் முன் நிறுத்தியது... இருந்தும் கண்மணியைப் பற்றி கேட்காமல்...

“நடராஜ் சார் வீடுதானே அது” என்று அந்த ஏரியாவில் அந்த வீடு அமைந்திருந்த பகுதியை பற்றிச் சொல்ல...

“ஆமாம் தம்பி” என்று அவரும் வேகமாக தலையாட்ட... ரிஷி தரகரை அனுப்பிவிட்டு… எப்படியும் தனக்கு நடராஜ் வீடு கொடுப்பார் என்ற நம்பிக்கையில் முதல் வேலையாக போய் நின்றது நடராஜ் பட்டறையில் தான்...ன் மணி-15

    23270
    25