Praveena Vijay

Oct 18, 202010 min

கண்மணி... என் கண்ணின் மணி-17

Updated: Oct 19, 2020

அத்தியாயம் 17

கல்லூரியில் இருந்து அழைப்பு வந்து… அதன் காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு… தந்தையின் கைகளால் அடி வாங்கிய ரிஷி நேராக தன் அறைக்குள் போய் முடங்கி விட… தனசேகரோ வேலை என்று வெளியே கிளம்பி விட்டிருந்தார்… தன் மனைவியிடம் கூட கோப முகத்தைக் காட்டி விட்டுத்தான் கிளம்பிச் சென்றிருந்தார்…

லட்சுமியோ அப்படியே ஸ்தம்பித்து ஹாலிலேயே அமர்ந்திருக்க… ரிதன்யாவும் ரித்விகாவும் தன் அன்னையுடனே அமர்ந்து விட்டனர்… வீட்டின் நிலைமை சரி இல்லை என்பது மட்டுமே ரித்விகாவுக்குப் புரிய… ரிதன்யாவுக்கு நடக்கும் நிலைமை அனைத்தும் புரிந்தும் என்ன செய்வது என்று தெரியாமல்… அண்ணன் மீது கோபம் மட்டுமே கொள்ள முடிந்தது…

இந்த மாதிரியான சூழ்நிலை அவர்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு அசாதரணமான நிலைமைதான்… லட்சுமியை விட தனசேகர் தான் மக்களுக்கு சலுகைகள் கொடுப்பவர்… பொறுமையாக இருப்பவர்…. எந்த ஒரு விசயத்திலும் மக்களை விட்டுக் கொடுக்காதவர்… மக்கள் முகம் இம்மென்று முகம் சுருக்கினால் போதும்… அடுத்த நொடி… அதைச் சரிப்படுத்தி விட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்…

மகிளா ரிஷி இருவர் காதல் பற்றி தெரிந்து இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை பெரியதாக வந்து நின்ற போது கூட தனசேகர்தான் தலையிட்டு சுமூகமாக முடித்து வைத்திருந்தார்… மைத்துனன் நீலகண்டனைச் சமாதானப்படுத்தியது மட்டுமல்ல தன் மனைவி லட்சுமியைக் கூட சமாதானப்படுத்தி… மகிளாவை மருமகளாக நினைக்க வைத்தது வரை அவர்தான்…

அப்படிப்பட்ட தங்கள் தந்தை இந்த அளவுக்கு கோபப்படுகின்றார் என்றால் விசயம் இல்லாமலா இருக்கும்… இது ரிதன்யாவின் எண்ணப் போக்கு… மகிளா வேறு ரிதன்யாவுக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தவள்… அவளோடு பேசிக் கொண்டிருக்க… திடீரென்று மகிளாவிடமிருந்தும் செய்தி வராமல் போக… மகிளாவின் நிலைமை அங்கு என்னவோ என்று ரிதன்யா தன் தோழியை நினைத்து வேறு கவலை கொண்டிருந்தாள்….

ஆக மொத்தம் அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த நிம்மதியையும் பறித்திருந்த ரிஷியோ.... தன் அறையில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்…

மகிளாவின் அழைப்புகளும், குறுஞ்செய்திகள் அவன் அலைபேசியில் மட்டுமே நிரம்பிக் கொண்டிருக்க… அவன் மனதிலோ வெற்றிடம் மட்டுமே…

மகிளாவின் எந்த குறுஞ்செய்திக்கும் அவன் பதில் சொல்லவும் இல்லை… அவள் அழைப்பையும் எடுக்கவில்லை… அவனுக்குத் தெரியும் இந்த உலகில் தன்னை நம்பும் ஒரே ஜீவன் என்றால்… அது மகிளா மட்டுமே என்று…

ஆனால் சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் மகிளாவின் துணையை நாடியவன்… தன் மகிழ்வான தருணங்களை எல்லாம் அவளிடம் பறிமாறிக் கொண்டவனுக்கு… தன் மன வருத்தங்களை… தன் புலம்பல்களை… தன் மனம் படும் பாடை எல்லாம் அவளிடம் சொல்லி ஆறுதல் தேட வேண்டுமென்று ஏனோ தோன்றவில்லை… இன்று மட்டுமல்ல… கோவாவில் நடந்த விசயங்களைக் கூட அவளிடம் பகிர்ந்து கொள்ள முடியவி்ல்லை…

அதைப்பற்றிய ஆராய்ச்சி எல்லாம் அவன் எண்ணங்களில் இல்லை… அவன் மனதிலோ ஏதேதோ எண்ணங்கள்…

அவன் மனதைக் கசக்கும் நிகழ்வுகளே ஏன் நடக்கின்றன… அடுத்தடுத்தும் தொடர்கின்றன… ஏன்… எதற்கு என்று விடை தெரியாத வினாக்கள் மட்டுமே அவனுக்குள் எஞ்சி நின்றன…

தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று நினைப்பன் ரிஷி… தான் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன்… ஆனால் இன்று தன்னால் அந்த மாதிரி மாற்ற முடியவில்லையே… தன்னாலும் மாற முடியவில்லையே… தனக்குள் தன்னை மாற்றவே போராடிக் கொண்டிருந்தான்… ரிஷி…. தன் இயல்புகள்… அவன் அறிந்தே கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கும் நிலை தெரிந்தும் அதைத் தடுக்க முடியாமல் தடுமாற ஆரம்பித்தான் ரிஷி…

இதோ இன்றைய பிரச்சனையில் கூட அவனுக்கு பெரிதாக வருத்தமில்லை… தவறு என்பது அவனிடத்தில் இல்லாத போது வருத்தம் ஏன்… அவனுக்கு இல்லை தான்… அதே போல தன் தந்தையிடம் எந்த இடத்திலும்… தன்னை நிரூபிக்க ரிஷி நினைக்கவில்லை… ஆனால் தாயிடம் தன்னை நிரூபிக்க நினைத்தான் தான்… தன் தாயிடம் பேச நினைக்க… ரிஷியிடம் லட்சுமி பேசத் தயாராக இருந்தால் தானே… பேச என்ன… இவன் முகத்தைக் கூட திரும்பிப் பார்க்க நினைக்கவில்லையே …

தன் அன்னையின் சிறு முகச் சுழிப்பைக் கூட தாங்க முடியாமல் தன் புன்னகையால்… இல்லை தன் குறும்பு வார்த்தைகளால் அவரை மாற்றித் தன் வழிக்கு கொண்டு வந்துவிடுவான் ரிஷி… லட்சுமியும் அப்படியே…. அப்படிப்பட்ட தன் அன்னை இன்று… நினைத்தபோதே கண்களில் கண்ணீர் கசிந்தது ரிஷிக்கு

ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தால் கூட பொறுக்காத தன் தாய்… சிறு அழைப்பு கூட கொடுக்கவில்லை… என்ற கழிவிரக்கமே ரிஷியை மொத்தமாக உடைத்து விட….

”தந்தை தன்னை புரிந்து கொள்ள வில்லை என்பதைக் கூட அவன் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை…. ஆனால் தன் தாய் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே” மனம் வலிக்க ஆரம்பிக்க… அறைக்குள் இருக்க பிடிக்காமல்…. மொட்டை மாடிக்குச் சென்றவன்தான்…..

நண்பகல் மாலை ஆகியது… இரவாகியாது… நள்ளிரவாகியது… அவனைத் தேடி… ஒருவர் கூட வராமல் போக… ஒரே நாளில் அநாதை ஆகியது போன்ற உணர்விற்கு தள்ளப்பட்ட ரிஷி… அதற்கு மேல் அன்றைய நிகழ்வுகளின் கனம் தாங்காமல் தனக்குள்ளேயே உடைந்து அழ ஆரம்பித்தவன்… ஆரம்பித்தவன் தான்…. ஒரு கட்டத்தில் அவனால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை… கால்களை கட்டிக் கொண்டு கால்களுக்கிடையில் முகத்தை புதைத்து அழ ஆரம்ப்பித்தவன்…. அழுது கொண்டே இருக்க…. தனக்கென்று யாருமில்லையே… தன் ஒரு வார்த்தையைக் கேட்க இந்த உலகில் யாருமில்லையா… ஆண்மகன் என்ற வார்த்தைகளை எல்லாம்… தன் கண்ணீரில் கரைக்க ஆரம்பித்திருந்தான் முதன் முதலாக…

ஒரு கட்டத்தில் கண்ணீர் கூட வற்றி… அவனிடமிருந்து தேமல்கள் மட்டுமே வந்து கொண்டிருக்க… அப்போது

திடீரென்று அவன் முதுகை ஒரு கரம் ஆறுதலாகத் தடவ…. நிமிரவில்லை ரிஷி… தன்னை தொட்டுக்கொண்டிருக்கும் கரங்கள் யாரென்று நிமிர்ந்து பார்த்து உணரும் கரங்களா என்ன…

அவன் இந்த உலகிற்கு வரக் காரணமான உயிர்துளியின் முதல் காரணகர்த்தாவை அவனுக்கு தெரியாமல் இருக்குமா….

தலையை உயர்த்தவே இல்லை ரிஷி…

“என்னை நீங்க நம்பலைதானேப்பா… இப்போ எதுக்கு வந்தீங்க… ஐ ஹேட் யூப்பா”…. என்று பிடிவாதக் குரலில் பேச ஆரம்பித்தவன் அடுத்த நொடியே

”நான் தப்பு செய்யலை டாடி… ” என்று பெருங்குரலெடுத்து கதற ஆரம்பித்தவன்…

“என்னால முடியல டாடி… அதே நேரம்… நான் தப்பானவன் இல்லைனு நிருபிக்கவும் பிடிக்கலை டாடி… அம்மா என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசக் மாட்டேங்கிறாங்க… அவங்க பேசாம இருக்கிறதை பார்க்கிறதவிட நான் சாகலாம் போல இருக்கு டாடி” என்றவன்… இன்னும் தந்தையை நிமிர்ந்து கூட பார்க்காமல் அழுது கொண்டே இருக்க…

தனசேகர்… ரிஷியின் தாடையை தொட்டு தன் முகத்தை பார்க்குமாறு நிமிர்த்தியவர்… அழும் தன் மகனையே சில நொடிகள் பார்த்தவராக அவர் முன் அமர்ந்திருந்தவர்… மெதுவாக அவன் கண்களைத் துடைத்தபடியே…

“என்னைப் பாருடா… நான் உன்னை நம்புறேன் ரிஷி… ” என்று அமைதியான… ஆறுதலான குரலில் மனதை வருடும் தொணியில் பேச ஆரம்பிக்க…. இமை கொட்டாமல் தந்தையையே பார்த்திருந்தான் ரிஷி….

தனசேகர் தொடர்ந்தார்….

”நான் இருக்கிற நிலைமையில்… இருந்த நிலைமையில்… உன்னைப் பற்றி அடுத்தடுத்து கேட்ட விசயங்கள் என்னை யோசிக்க விடலை ரிஷி… ” என்ற போதே… அன்றைய தினத்தில் கேட்ட… அவனுக்கான முதல் ஆதரவான வார்த்தைகள்…. ரிஷியின் கண்களில் கண்ணீர் துளிகள் மெது மெதுவாக தன் வரவினைக் குறைக்க ஆரம்பித்திருக்க… நம்ப முடியாமல் தன் தந்தையைப் பார்க்க

”ஆமாம் ரிஷி… உன்னை நம்புகிறேன் ரிஷி…. உங்க மாமா உன்னைப் பற்றி சொன்ன விசயங்களைக் கேட்ட போது நீ பதட்டமடையவில்லை… ஆனால் உன் காலேஜ்ல இருந்த போன்காலைச் சொன்ன போது… அந்த விசயங்களைக் கேட்டு உன்னோட முகம் மாறியதுதான்… ஆனால் அந்த விசயத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட நீ கேட்கவில்லை…. மாறாக… என்னை நீங்க அந்த மாதிரிப் பையன்னு நினைக்கிறீங்களா… இந்த வார்த்தைகள் தான் உன்னிடமிருந்து வந்தது … தனியா யோசிச்சுப் பார்த்தேன் ரிஷி… உன்னைப் பெத்த நாங்க உன்னை தவறா நினைச்சுட்டோமோ இந்தக் கவலைதான்… உன்னோட முகத்தில கோபமா வந்தது… எங்களோட நம்பிக்கை உன் மேல இல்லைன்ற ஆக்ரோஷம் தான் முகத்தில் இருந்தது” என்று தனசேகர் நிறுத்த

இப்போதும் ரிஷியின் கண்களில் கண்ணீர் தான்… என்ன ஆனந்தக் கண்ணீர்… வேகமாய் துடைத்தவன்… தந்தை முன் மண்டியிட்டபடி அமர்ந்தவன்…

“என்னை நம்புறீங்க தானே டாடி… அப்போ அம்மாகிட்ட வாங்க…. இப்போதே வாங்க… அவங்ககிட்ட சொல்லுங்க… நம்ம பிள்ளை தப்பு பண்ணலைனு சொல்லுங்க…” என்று படபடவென்று சந்தோஷமாக பேச ஆரம்பித்தபடி எழ ஆரம்பித்தவன்… மீண்டும் அமர்ந்தபடி…

“அப்பா… கோவா போனேன் தான் அங்க என்ன நடந்ததுன்னா” என்று அவன் ஆரம்பிக்கும் போதே…

அவனை வாயில் கை வைத்து…. அவனைப் பேசாமல் அடக்கிய தனசேகர்…

”முதல்ல சாப்பிடு….“ என்று கையோடு கொண்டு வந்திருந்த தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்துப் பிசைய ஆரம்பிக்க…

“எனக்கு வேண்டாம்… முதல்ல நான் சொல்றதைக் கேளுங்க” என்று அழுகையோடே சொன்னவன் குரலில்… வழக்கமாக அவன் தந்தையிடம் பேசும் கொஞ்சல் குரல் மீண்டும் வந்து சேர்ந்திருக்க

மகனைப் பார்த்து புன்னகைத்தவராக

“ரிஷிக்கண்ணா… சாப்பிடு… அப்புறம் உங்க அம்மா… என்னையத்தான் திட்டுவா” என்று செல்லமாக கோபிக்க…

“அம்மாகிட்ட பேசனும்பா…” இப்போதும் ரிஷி தேம்பலாகச் சலுகையாகச் சொல்ல…

“அவ தூங்கிட்டாடா… பிரஷர் ஜாஸ்தி ஆகிருச்சு… ” என்று கவலையாகச் சொல்ல.. பதறி விட்டான் ரிஷி…

தாயின் நிலை கூடத் தெரியாமல்தான் இங்கு இத்தனை மணி நேரமாக அமர்ந்திருக்கின்றானா… குற்ற உணர்வில் அவன் முகம் மீண்டும் சுருங்க ஆரம்பிக்க

மகனின் முகம் மாறியதைக் கணித்தவராக…

”அம்மாக்கு ஒண்ணுமில்லைடா… காரணம் நீ மட்டும் இல்லை நானும் தான்…. மாத்திரை போட வச்சு ரிதன்யா படுக்க வச்சுருக்கா… நானே இப்போதான் வந்தேன்… ரிதன்யாகிட்ட புலம்பிட்டு இருந்திருப்பா போல… நானும் அவளைத் திட்டிட்டு வெளிய போய்ட்டேன்… போனையும் எடுக்கலை… கொஞ்சம் டென்சன்… கொஞ்சம் என்ன… அதிகமா டென்ஷன் ஆகிட்டா போல… காலையில முதல் வேலையா… உங்க அம்மாவைச் சமாதானப்படுத்தி உன் கூட பேச வைக்கிறது என்னோட பொறுப்பு” என்று சொன்னபடி… மகனுக்கு ஊட்ட ஆரம்பிக்க… அதன் பிறகு ரிஷி மறுக்கவில்லை… இரண்டு வாய் கவளம்… தந்தை கைகளினால் ஊட்டிவிடப்பட்டு… அதை வாங்கிக் கொண்டவன்…

“கொடுங்க டாடி… மரணப் பசி… கொஞ்சம் கொஞ்சம்மா கொடுக்கறீங்க” என்று அவர் கையில் இருந்த தட்டைப் பறித்தவன் வேக வேகமாகச் சாப்பிட ஆரம்பிக்க…

சாப்பிட்டுக் கொண்டிருந்த மகனையே இமை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் தனசேகர்…. இருபது வயதாகியும் அவர் கண்களுக்கு சிறுவனாகவேத் தோன்றினான் ரிஷி… வார்த்தைகளுக்கே அதன் வீரியம் தாங்காமல் தடுமாறுகிறானே…

மேடு பள்ளங்கள் நிரம்பிய இந்த வாழ்க்கையை பயணிப்பானா… மேடு பள்ளம் மட்டுமா… முட்களும் கூட நிரம்பியிருக்க போகிறதே… அதையெல்லாம் தாங்கி…. தாண்டி பயணிப்பானா… தந்தையாக மனமெங்கும் வலி பரவியது…

சூது சூழ்ந்த இவ்வுலகை எப்படி கையாளப் போகிறான்…. தன்னாலேயே முடியவில்லையே… தன் மகனைக் கவலைகள் சூழக் கூடாது என்று… எந்த கஷ்டத்தையும் அனுபவிக்க விடாமல்… மலர் நிறைந்த பாதையை மட்டுமே காட்டி… அதில் மட்டுமே அழைத்து வந்து விட்டோமா… தனக்குள்ளேயே நொறுங்கிக் கொண்டிருந்தவர்… இனி ரிஷியை இப்படி வளர்க்க கூடாது… தான் பட்ட கஷ்டங்களை,, படுகின்ற கஷ்டங்களை, தன் அனுபவங்களை… தோல்விகளை… வெற்றிகளை எல்லாம் அவனுக்கு சொல்லி அவனை வாழ்க்கையை எதிர்நோக்க பழக வைக்க வேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்தார் அந்த நொடியில்…

”என்ன சொல்வது… அவர் எடுத்தது காலம் கடந்த முடிவென்பது” தனசேகருக்கு தெரியாமல் போனதுதான் அந்த நொடியின் நிதர்சனம்

தந்தை இப்படி நினைத்திருக்க… சாப்பிட்டு முடித்த ரிஷியோ… கோவாவில் நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தான்…. கோவாவுக்கு சென்றது… நண்பர்களோடு சுற்றியது… இரண்டு தினங்களுக்குப் பிறகு அவர்கள் பெண்களை அழைத்து வந்து கும்மாளமிட்ட போது… அவர்களை விட்டு பிரிந்து வந்து வெளியே தங்கியது… அங்கு ஒரு 8 வயது சிறுமியை இரு கயவர்களிடம் இருந்து காப்பாற்றி அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் சேர்த்தது மட்டுமின்றி… அந்தக் கயவர்களை காவல்துறையிடம் பிடித்தும் கொடுத்தும் கொடுத்ததைச் சொல்லி முடிக்க…

தனசேகரின் கண்கள் மகனை நினைத்து பெருமிதத்தில் பனித்திருக்க

“கோவாவுக்கு போனப்போ… போலிஸ் ஸ்டேஷன் போனேன் தான்பா… ஆனால் நீங்க நினைக்கிற விதம் போல கேவலமா இல்லை… அந்தப் பாப்பா நம்ம ரித்திய விட கம்மியான வயசுப்பா… நான் மட்டும் அங்க போகாம இருந்திருந்தேன்னா… அந்தக் குழந்தையைச் சிதச்சிருப்பாங்கப்பா…” என்று குரல் கம்ம நிறுத்தியவன்

”அவனுங்களுக்கு இது வாடிக்கையாம்பா… நான் போலிஸுக்கு போனப்போ… அவன் மேல இது மாதிரி முன்னாலேயே ரெண்டு மூனு கேஸ் இருந்துச்சுப்பா… இந்தப் பொண்ண நான் காப்பாத்திட்டேன்… எத்தனை குழந்தைங்க வாழ்க்கை இவங்களால போனதோ…. பதறுதுப்பா… இன்னுமே என்னால சீரணிக்க முடியலை… இவனுங்க வெறிக்கு குழந்தைகள் தான் கெடச்சாங்களா…“ தந்தை முன் பேசுகிறோம் என்று கூட நினைக்கவில்லை…

ரிஷியின் வாயிலிருந்து அவனையும் மீறி கெட்ட வார்த்தைகள் வர… அவனை நிறுத்தக் கூட சொல்ல முடியாமல் மகனையேப் பார்த்துக் கொண்டிருந்தார் தனசேகர்…

“அவங்களைக் கொல்லாமல் வந்துட்டேன்னுதான் எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்குப்பா… இவனுங்க எல்லாம் உயிரோட இருக்கவே லாயக்கில்லை… சாதரணமாலாம் இவனுங்க சாகக் கூடாது… இந்த மாதிரி கேவலமான மனுசங்கள்ளாம் ஏன் உயிரோட இருக்கிறாங்க டாடி… அரக்கனுங்க இவனுங்க… ராட்சன் இருந்தா தெய்வமும் அங்க இருக்கனுமே… எங்க போனாங்க…. நீங்க கும்பிடுற தெய்வங்கள் எல்லாம்… அந்த அவதாரங்கள் புருஷர்கள் எல்லாம் ஏன் இப்போ வரலை…. அவதாரம் எடுக்கவில்லை.. பத்து அவதாரங்களுக்குள்ள லிமிட் பண்ணிட்டாங்காளா… அப்போ இதிகாசம்லாம் பொய்யாப்பா…” அடுத்தடுத்து கேள்வி கேட்டு அவரைப் பார்க்க…

விரக்தியாகப் இதழ் விரித்தவர்…

“நீ தான் ரிஷி அந்தக் கடவுள்… எல்லா இடத்திலும் கடவுள் இருக்கின்றார்… இங்க… உன் உருவத்தில அந்தப் குழந்தையைக் காப்பாற்றி இருக்கிறார்” எனும் போதே…

“ப்ச்ச்… அப்பா… சப்பைக்கட்டு கட்டாதீங்க….” முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டவனாக…

“இந்தப் பொண்ணைக் காப்பாத்திட்டேன்னு சந்தோஷமா என்னால இருக்க முடியலை டாடி… இவனுங்களால எத்தனை குழந்தைங்க காப்பாற்ற யாரும் இல்லாமல் இளங்குருத்துலேயே அழிஞ்சிருப்பாங்களோ…. அதே போல… இவனுங்கள மாதிரி எத்தனை பேரோ… மனம் பதறுதுப்பா”

“ரிஷி… கூல்… இப்டி யோசிடா… உன்னால முடிஞ்சு ஒரு குழந்தையைக் காப்பாத்திருக்க… இந்த மாதிரி அவனுங்க இனிமேல தவறு செய்ய முடியாதபடி கம்பி எண்ணவும் வச்சிருக்க” எனும் போதே…

“அப்பா… நீங்க வேற… அதுல ஒருத்தவன்… சென்னைல இதே மாதிரி ஒரு பத்துவயசு பொண்ணுகிட்ட நடந்து… கம்பி எண்ணிட்டு வந்தவனாம்…”

தன் உள்ளங்கையை மடக்கி தரையில் குத்தியவன்…

”அப்போ தண்டனை அனுபவித்தாலும் அவனுங்க மாறலை… அவனுங்க குணம் மாறலைனுதானே அர்த்தம்… அதைக் கேட்ட பின்னால அவனை கொல்லாமல் ஜெயிலுக்கு அனுப்பியது எவ்ளோ தவறுன்னு…என்னோட முட்டாள் தனத்தை நினைத்து ஃபீல் பண்றேன் டாடி… இன்னும் எனக்கு குற்ற உணர்ச்சி குத்துதுப்பா… யார்கிட்டயும் சொல்ல முடியாமல் தவிச்சுட்டு இருக்கேன்பா” என்றவன்… ஒருவழியாக தன் உணர்வுக்கு வந்து…

ஏதோ நினைவு வந்தவனாக… ஏதோ நினைவு என்பதை விட … கண்மணியிடம் கொடுத்த அந்தப் பண விவகாரம் நினைவுக்கு வர

“அப்புறம் அந்தப் பணம்…” என்று ஆரம்பித்து கண்மணி நடராஜ் பற்றிய விபரம் முழுவதையும் சொன்னவன்… கையோடு கொண்டு வந்திருந்த அன்றைய நாளிதழைக் காட்டி…

”இதுதான் அந்தப் பொண்ணு கண்மணிப்பா” என்று பெருமையாக கண்மணியைக் காட்டினான் தன் தந்தையிடம்…

“டேலண்டான பொண்ணுப்பா… ரெண்டு மூணு தடவை தான் பார்த்திருப்பேன்… அவங்க அப்பா இருக்கார்ல… பொண்ணு ஒரு வார்த்தை சொன்னால் போதும்… வார்த்தை என்ன… ஒரு பார்வை பார்த்தால் போதும்… அப்டியே ஃப்ரீஷ் ஆகிடறார் டாடி.. மறு வார்த்தை இல்லை அவர்கிட்ட” சிரித்தபடியே சொன்னவனைப் பார்த்து தனசேகரும் சிரித்தபடியே… அந்தப் பத்திரிகையைப் பார்த்தார்…

அந்தப் பெண்தான் தன் வருங்கால மருமகள் என்பது கூடத் தெரியாமல் தன் மகனிடம்

“அந்தப் பொண்ணு டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்ஸா இருப்பா போலடா” கிண்டலடித்தவர்… அதன் பிறகு உண்மையிலேயே மனதாரப் பாராட்டியவராக…. நாளிதழைப் பார்க்க ஆரம்பித்தவர்…

”ஃபீனிக்ஸ் பறவைகளாய் நாங்கள்” என்று தலைப்பைப் படித்தவராக…

”ஏன் இப்படி ஒரு தலைப்பு… என்ன ஆர்ட்டிகிள் அது… எதைப்பற்றின ஆர்ட்டிக்கிள் அது” என்று மகனைக் கேட்க…

தெரியாதென்று ரிஷி உதட்டைப் பிதுக்கி அவரைப் பார்க்க…

அதற்கு மேல் தனசேகரும் அதை விட்டு விட்டு…

”சரி விடு… மணி…. கேஷ் ரெண்டு பேர்கூடவும் சம்பந்தமாகிருக்கு… அதுனால கூட…. இந்த பண மேட்டர் பெருசாகிருச்சு போல” என்று சிரிக்க…

ரிஷி “அப்பா…." என்று புரியாமல் புருவம் உயர்த்திப் பார்க்க…

“கண் ’மணி’…. ரிஷி ‘கேஷ்’… அதைச் சொன்னேன்டா….” என்ற போது…ரிஷியும் புரிந்து புன்னகைக்க… ஒரு மாதிரியான இயல்பு நிலை பலமணி நேரத்திற்குப் பின் அங்கு வந்திருக்க…

ரிஷி தன் தந்தையிடம்…

”கீழ போகலாம்பா” என்று எழப் போக… தனசேகர் அவனை எழ விடாமல் மீண்டும் அமர வைத்தவர்… அடுத்து அவனது படிப்பைப் பற்றி பேச ஆரம்பித்தவர்… இரண்டு நாட்கள் கழித்து தான் சென்னை சென்று அவனது கல்லூரியில் பேசுவதாகவும்… ரிஷியின் படிப்பை அந்தக் கல்லூரியிலேயே தொடர வேண்டுமென்றும் அவனுக்கு அறிவுரை கூற…

ரிஷியோ

“இல்லப்பா… எனக்குப் பிடிக்கலைப்பா… அவங்க கிட்ட உண்மையான காரணம் சொல்லி…. அந்தக் குழந்தையை சபைக்கு கொண்டு வந்துதான் என்னோட பிரச்சனை தீரும்னா…அப்படி ஒரு படிப்பே எனக்கு வேண்டாம்…” என்றவன்

“எனக்கு படிக்க பிடிக்கலைன்றது வேற விசயம்பா… டிசி கொடுக்கட்டும்… வேற காலேஜ்ல படிக்கிறேன்… மற்றபடி மன்னிப்பு கேட்கவோ… இல்லை உண்மைக் காரணமோ சொல்ல பிடிக்கலை… “ என்று குரல் தளர்த்தியவன்

“அப்படி ஒண்ணும் நானும் படிச்சுக் கிழிக்கலை… ஆனால் இனிமேல படிக்கனும்னு நினைக்கிறேன்” என்று எங்கோ பார்த்தபடி சொல்ல…

மகனின் கரங்களைக் தனது கரங்களுக்குள் புதைத்துக் கொண்டவராக…

“ஹ்ம்ம்ம்… உன் உணர்வு புரியுது ரிஷி…. ஆனால் படிப்பு முக்கியம் ரிஷி… அதை விட… முக்கியம் நம்மைச் சுத்தி இருக்கிறவங்களைப் புரிஞ்சுக்கனும்…. எதிரில் இருக்கும் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை விட… அருகில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத துரோகிகளைக் கண்டுபிடிக்க பழகனும்… இதெல்லாம் சீக்கிரம் வராது… அனுபவம்… அது மட்டும் தான் கத்துக் கொடுக்கும்… இத்தனை வருச அனுபவம் உள்ள உன் அப்பாவுக்கே தெரியாத பாடம்லாம் நீ கத்துக்கனும்… இந்த வாழ்க்கையைச் ஜெயிக்க நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது….” என்றவரின் குரலில் மாறுபாடு ரிஷிக்கு தெரிந்திருக்க… அது அவனுக்குள் எச்சரிக்கை மணியையும் அடிக்க ஆரம்பித்திருந்தது

சாதரணமாக ரிஷி இருந்திருந்தால் அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ… இன்று உணர்ந்தான்…

முதன் முதலாக தந்தையின் குரல் மாறுப்பாட்டை கவனிக்க ஆரம்பித்தவனுக்கு… தந்தையின் நடவடிக்கைகள் அதிலும் சில வாரங்களாக அவனோடு பேசும் குரல் வேறுபாடு எல்லாம் இப்போது கண்ணுக்கு முன் வந்து நிற்க… தந்தையை அதிர்ச்சியோடு பார்த்தான்…

“அப்பா..” என்றவனுக்கு அவர் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை… தந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சனை… அதனால்தான் தன் தாய் தங்கைகளைச் சென்னைக்கு தன்னோடு தங்கியிருக்க அனுப்பி இருக்கின்றார்… என்பதை இப்போது உணர்ந்து கொள்ள முடிந்தது

’அந்த அளவு தனிமை தேவைப்படும் அளவுக்கு அவருக்கு என்ன நேர்ந்தது… இத்தனை மணி நேரம் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டுக் கொண்டிருந்தவன் மனதில் தந்தையைப் பற்றிய வருத்தங்கள் எழ… இப்போது தன் தந்தையின் முகத்தை கவலையோடு ஏறிட்டுப் பார்க்க… அவன் நினைத்தது தவறில்லை… சரியே என்பது போல தனசேகரின் முகத்தில் அவ்வளவு ஒரு துக்கம் குடி கொண்டிருக்க…

தன் மகனின் கண்கள் கேட்ட கேள்வியே அவரை முற்றிலுமாக உடைய வைத்திருந்ததது இப்போது

“என்னை ஏமாத்திட்டாங்க ரிஷி… மொத்தமா எல்லாத்தையும் இழந்திட்டேன் ரிஷி… அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலைடா” என்றவர்

”இரண்டு மாதமா உங்க யாருக்கும் தெரியாம வைத்து புழுங்கிட்டு இருக்கேண்டா”

”என்னப்பா ஆச்சு” பதட்டம் வார்த்தைகளில் இருந்தாலும்…. நிமிர்ந்து அமர்ந்திருந்தான் ரிஷி…

“திருவையும் கேசவ்வையும் நம்பி ஏமாந்திட்டேண்டா… பார்ட்னர்ஷிப்னு சொல்லி என்னை நம்ப வைத்து… வேற வேற தெரியாத பிஸ்னஸ்ல எல்லாம் என்னை இறக்கி விட்டு… அதில எல்லாம் நஷ்டம் ஆகிருச்சு ரிஷி… அது கூட கவலை இல்லை… ஆனால் நம்ம குடும்ப பிஸ்னஸையே அவங்க கன்ட்ரோலுக்கு கொண்டு வந்துட்டாங்க… நம்ம ஷேர்லாம் லாஸ் ஆகி அவங்க மெஜாரிட்டி ஆகிட்டாங்க…” என்றவர் அடுத்தடுதடுத்துச் சொல்லச் சொல்ல… கோபத்தில் ரிஷியின் கண்கள் இடுங்கின…

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன்….

“இதுக்கு ஆல்டர்னேட் சொல்யூசன் இல்லையா… “ என்று கடினக் குரலில் கேட்டவனின் புருவங்களோ நெறிந்திருந்தன யோசனை பாவத்தில்

இடவலமாக தலையை ஆட்டியவராக….

“நம்ம ஷேரைத் தர்றாங்களாம்… அதை எடுத்திக்கிட்டு… வெளிய போகச் சொல்றாங்க… ஒன் மந்த் டைம் கொடுத்தாங்க… இப்போ ஒன் வீக் இருக்கு….”

“என்ன பண்ணப் போறிங்கப்பா” கேள்வி கேட்டு ரிஷி அவரைப் பார்க்க…

“எனக்கு வேற வழி தெரியலை… வெளிய வரலாம்னு இருக்கேன்…“ முதுகில் குத்தப்பட்ட தோல்வியின் வலி… அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது…

“நம்ம லாயர்கிட்ட பேசுனீங்களா…”

“ஹ்ம்ம்… ஸ்டே ஆர்டர் வாங்கலாம்னு சொன்னார்… ஆனால் நம்ம பக்கம் ரொம்ப வீக்கா இருக்காம்… கம்பெனி நம்ம கைக்கு கிடைக்கிறது கஷ்டம்னு சொன்னாருப்பா… அதுமட்டுமில்லை… ஸ்டே ஆர்டர் வாங்கினோம்னா… எல்லாமே ஸ்டாப் ஆகிரும்… வேலை பார்க்கிறவங்க எல்லாம் வருடக்கணக்கில் வேலை எல்லாம இருக்கிற நிலை கூட வரலாம்…” என்றவரை புருவம் சுருக்கிப் பார்த்தவன்

“நாம ஏன் அவங்களைப் பற்றி யோசிக்கனும்” என்று ரிஷி சாதரணமாகக் கேட்க… தனசேகர் படக்கென்று நிமிர

”நம்ம கிட்ட வேலை பார்க்கிறவங்களுக்கு…. இங்க வேலை இல்லைனா… இன்னொரு கம்பெனி… ஆனால் நமக்கு அப்படி இல்லையே… ” மனசாட்சி என்பது ரிஷியிடமிருந்து தொலைந்த முதல் நொடி அந்த நொடியாக ஆரம்பித்து இருந்தது… வஞ்சம் சூழ் உலகில் ஆர்கே(RK)வாக முதல் அடி எடுத்து வைத்த தருணமும் அதுவே என்றும் சொல்லலாம்

புரியாமல் பேசும் தன் மகனைப் பார்த்து… புன்னகைத்தவர்…

“நமக்குனு ஒரு நியாய தர்மம் இருக்கு ரிஷி… அதை மீறி என்னால ஒண்ணும் பண்ண முடியாது” என்று உறுதியாகச் சொல்ல

“சோ… உங்க ஷேரை பிரிச்சுட்டு வெளிய வரப் போறிங்க… அப்படித்தானே” என்று கூர்ப்பார்வை பார்த்த மகனைப் பார்த்து தலை குனிவது தந்தையின் முறை ஆக….

அவரின் தலைகுனிந்த பாவத்தை பார்க்க முடியாதவனாக மனதுக்குள் குமுறியவன்…. இருந்தும் வெளிக்காட்டாமல்… அமைதியாக ரிஷியும் இருக்க… தனசேகர் பேச ஆரம்பித்தார்… தன்னை மகனிடம் நிருபிக்கும் பொருட்டு… அதாவது தான் எடுத்த முடிவு சரிதான் என்று நிரூபிக்கும் பொருட்டு

“தனியா இருந்த இந்த ஒரு வாரத்தில் தற்கொலை கூட பண்ணிக்கலாம்னு முடிவு தோணுச்சுடா… ஆனால் நான் போய்ட்டா… நீங்க நான்கு பேரும் அடுத்த அடி எப்படி எடுத்து வைக்கிறதுன்னு தெரியாமல் தடுமாறி கலங்கி நிற்கிற நிலைமை எப்போ என் கண்ணுக்குள்ள வந்துச்சோ… அப்போதே மாறிட்டேன்… இந்த ஒரு வாரத்தில தனியா எனக்கு நானே எடுத்த முடிவுதான் இது… இருக்கிறதைக் காப்பாற்றி உங்களைக் காப்பத்தனும்ன்ற முடிவு தான் அது… பரம்பரையாவது… ஒண்ணாவது”

என்றவர்…

“இதுல உன் பிரச்சனை வேற… ப்ச்ச்… இப்போ தெளிவாகிட்டேன் ரிஷி… அந்த வகையில எனக்கு நிம்மதிடா” மகனிடம் சொல்லி முடிக்க

ரிஷிக்கோ அவனைப் பற்றி தந்தை சொன்ன வார்த்தைகள் எல்லாம் தன் மனதில் சிறு துளி கூட பதியவில்லை… மாறாக தந்தையின் தொழில்… அவரது நண்பர்கள் என்று காட்டிக் கொண்ட துரோகிகள் என அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க

“நான் ஒண்ணு கேட்கிறேன்… அதற்கு மட்டும் பதில் சொல்லுங்க…

“உங்களப் பற்றி கவலைப்படாமல் உங்ககிட்ட வேலைபார்கிறவங்களை நினைத்து கவலைப்படுவதெல்லாம் ஓகே… ஆனால்.. அந்த துரோகிங்க… இவங்களை வேலையில வச்சுக்காம தூக்கிட்டு… ஐ மீன் நம்ம விசுவாசிகள்னு வேலையில இருந்து எடுத்துட்டு புது ஆளுங்களை வைத்து கம்பெனி ரன் பண்ண ஆரம்பித்தால் என்ன பண்ணுவீங்க…. அப்போ… அந்தப் பாயிண்டலயும்… உங்க எத்திக்ஸ் வீணாத்தானே போகும்…” என்று தந்தையைப் பார்க்க…

”அப்டிலாம் பண்ண மாட்டாங்க….”

“பண்ணினால்… உங்களுக்கே நீங்க அறியாமல் துரோகம் பண்ணினவங்க… இதைச் செய்ய மாட்டாங்களா டாடி… உங்களுக்கு யோசிக்க டைம் கொடுக்காமல்… உங்க வீக்னெஸ வைத்து… ப்ளே பண்றாங்க டாடி… நிதானமா யோசிச்சா நல்ல முடிவு கிடைக்கலாம்… ஆனால் அவங்க உங்களை நிதானிக்க விடாமல் டைட் பண்றாங்கன்னு தோணுது” என்று ரிஷி யோசனையோடு சொல்ல…

ரிஷி ஏதோ யோசிக்கின்றான் என்பது மட்டுமே தனசேகருக்குப் புரிய…. முதன் முறையாக அவர் மகன்… தனசேகரின் பார்வையில் வேறு கோணத்தில் தெரிய… அவரது கண்களில் தீர்க்க வந்திருக்க… அதன் விளைவு முகத்தில் தெளிவும் வந்திருக்க… தன் மகன் தனக்காக இருக்கின்றான்… இனி எது வந்தாலும் கவலை இல்லை என்ற பாவம் மட்டுமே அவர் மனதில் நிறைந்திருக்க… ஏனோ இந்த இரு மாதமாக அவர் கொண்ட கவலைகள் எல்லாம் ஒரு நொடியில் மாயமானது போல் இருக்க… இதயம் இலேசானது போல் நிம்மதி வந்திருக்க…

மகனிடம்

“எனக்கு பக்க பலமா இருப்பியா ரிஷி” என்று தழுதழுத்தபடி கேட்க

“கண்டிப்பா அப்பா… யோசிக்கலாம் அப்பா… நமக்கு வழி கிடைக்கும்… கால தாமதம் ஆனாலும்…” என்று உறுதியாக நம்பிக்கையாக சொன்ன மகனிடம்…

“உன்னை வைத்து கூட என்னை தடுமாற வச்சுட்டாங்கடா… நீ எதற்குமே லாயக்கில்லாத சூது வாது தெரியாத விளையாட்டுப் பையன்னு… மனரீதியாவும் என்னை முடக்கி வச்சுட்டாங்கடா… அதுக்கும் காரணம் இருக்கும்… உன்னைப் பற்றி நான் புலம்பின புலம்பலாவும் இருக்கலாம்” என்ற போதே…

கேட்ட ரிஷியின் மனதுக்குள் எரிமலைக் குழம்புகள் கோபத்தில் வெடித்துக் கொண்டிருந்தாலும்…. தந்தையின் முன் புன்னகை என்னும் முகமூடியை அணிந்தவன்…

“பார்த்துக்கலாம்பா… அவங்களா நாமளான்னு… நான் விளையாட்டுப் பையனா இல்லை யார்னு காண்பிக்கலாம்… அதுக்கு முன்னால லாயர்கிட்ட பேசுவோம்” என்று எழுந்தவன்… கீழே அமர்ந்திருந்த தந்தையிடமும் கை கொடுத்து அவரைத் தூக்கி எழுந்து நிற்க வைக்க…

தன்னைத் தூக்கி விட்ட ரிஷியின் முகத்தில் இருந்த தீவிரம் தனசேகரே இதுவரை பார்க்காதது….

ரிஷியைப் பார்த்த போது அவ்வளவு பெருமையாக இருந்தது தனசேகருக்கு… எல்லாமே போய் விட்டது என்று சொன்ன போது கூட மகன் துவளவில்லை என்பதே அவருக்கு பெரும் தைரியத்தை அளிக்க… அதே தொணியில்

”அப்போ கண்டிப்பா நமக்கு விடிவுகாலம் பிறக்கும்” என்று நம்பிக்கையோடு மகனிடம் சொன்னவர்… அதே நம்பிக்கையோடு… மகன் மீதான கவலை எல்லாம் நீங்கி… தனக்கு உதவியாக இருப்பான்… அவன் கண்டிப்பாக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்… என்று கண்மூடிய தனசேகர்… அவருக்கான விடியலை அதன்பிறகு பார்க்கவேயில்லை….

ரிஷிகேஷ்…. கள்ளம் கபடமற்ற இளைஞன்… வாழ்க்கை வாழ்வதற்கே… அது சந்தோசம் நிரம்பியது… என மனம் போன போக்கில் சுற்றித் திரிந்தவன்...

என் வாழ்க்கை எனக்கானது… அதில் நான் விதித்த விதிகள் மட்டுமே அதிகாரம் செய்ய வேண்டும்… அதற்காக யாரையும் ஏமாற்றலாம்… யாரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்… செய்கின்ற காரியங்கள் அனைத்திற்கும் நீதி நியாயம் தேட வேண்டியதில்லை…

'ஆர்கே' வாக மாறியவன் அவன் கள்ளங்கடமற்ற சிரிப்பையும்… அந்த சிரிப்பின் போது விழும் கன்னக் குழியையும் மறைத்து வைத்தவன் மனசாட்சியையும் தெரிந்தே தனக்குள் புதைத்துக் கொண்டான்….

நல்ல உள்ளம் கொண்டவன் இந்த ரிஷி என்று எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்த கண்மணியையே அவன் விட்டு வைக்க வில்லை எனும் போது மற்றவர்களை விட்டு வைப்பானா…!!!! தன்னை ஏமாற்றிய வஞ்சித்த அத்தனை பேரையும் தனக்கேற்றார் போல வளைத்துக் கொண்டான்…தன் காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டான்…

கண்மணி... என் கண்ணின் மணி-15

29590
26