top of page

கண்மணி... என் கண்ணின் மணி-52

Updated: Nov 17, 2021

அத்தியாயம் 52


’கண்மணி’ இல்லம்… மணி மாலை 4.30


ரிதன்யா கையில் இருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே… மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டவளாக… சரியாக இருந்த தன் நெற்றிப் பொட்டை மீண்டும் சரிபடுத்திக் கொண்டவள் தன்னையே பார்த்தபடி இருந்தாள்…


ஒரு காலத்தில் அலங்காரத்திற்கென்றே பிரத்யோகமாக நேரம் எடுத்து தன்னை அழகுபடுத்திக் கொண்டவள்.. இன்று நினைக்கும் போதே ரிதன்யாவுக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது… அதிலும் மகிளாவும் இவளும் போட்டி போட்டுக் கொண்டு மேக்கப் செய்வார்கள்…


“ஹ்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்… ஆனாலும் இதுவுமே அழகாத்தான் இருக்கு…” என்று தனக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டவள்....


பாலும் சந்தனமும் கலந்த கலவையாக அவளின் மாசு மருவில்லாத நிறத்தைப் பார்த்தே… அந்த ஏரியாவில் இருப்பவர்கள் எல்லாம் அவள் தெருவில் நடந்து செல்லும் போது ஏதோ தேவலோக மேனகை போல…… இவளையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்… இந்த ஏரியாவில் இருக்கும் மக்களின் பார்வைகளும் ஞாபகம் வர


”ஒண்ணுமே இல்லாத இந்த முகத்துக்கே இந்த ஏரியா நம்மை ’ஆ’ ன்னு பார்க்கும்… இதில் அலங்காரம் எல்லாம் செய்து போனால் அவ்வளவுதான்..” என்று நினைத்த போதே வெளியே பைக் வரும் சத்தம் கேட்டது….


கண்மணியும் ரித்விகாவும் வந்து விட்டார்கள் என்பதை உணர்ந்தவள்… வேகமாக எழுந்து தன் தாயிடம் சொல்லிக் கொண்டு… அலைபேசியில் தன் அண்ணனுக்கு வழக்கம் போல தான் அலுவலகத்துக்கு கிளம்புவதாக செய்தி அனுப்பி விட்டு… வெளியே வர… ரித்விகா பைக்கை விட்டு இறங்கிக் கொண்டிருந்தாள்…


“ரித்வி பை” என்று சொல்லிவிட்டு கண்மணியைப் பார்த்தாள்…


சாதாரண பூனம் சாரியில் முந்தானையை இழுத்துச் இடுப்பில் சொருகி… தரையில் கால் வைத்து பைக்கில் அமர்ந்திருந்த தோரணையா… இல்லை சற்று சேலை விலகிய கணுக்கால்களுக்கு மேலாகத் தெரிந்த கால்களின் அழகா… நீளமாகவும் இல்லாமல்… குட்டையாகவும் இல்லாமல்… இடை வரை தொட்டுக் கொண்டிருந்த முன்னால் போடப்பட்டிருந்த பின்னலோ… இல்லை… அந்த புடவை மறைத்த இடையின் அழகான வளைவுகளோ…. என்னவோ… கண்மணியை ஏனோ இன்று மீண்டும் பார்க்கத் தோன்றியது ரிதன்யாவுக்கு…


கண்மணியும் ரிதன்யாவின் பார்வையை உணர்ந்தவளாக… அவளைப் பார்க்க… சட்டென்று பார்வையை மாற்றி இருந்தாள்


“மழை வர்ற மாதிரி இருக்கு…. பஸ் ஸ்டாப்பிங்ல விட்டுட்டு வரவா..” கேட்க


”நான் போய்க்கிறேன்” என்று கையில் இருந்த குடையைக் காட்டியபடி முணுமுணுக்க… இப்போது கண்மணி ரிதன்யாவைப் பார்க்கும் முறையானது…


ரிஷி தன் தங்கைகளை நினைத்து… அவர்கள் மேல் காட்டும் அக்கறையெல்லாம் ஏன் என்று புரியத்தான் செய்தது… அழகான தங்கைகளை பெற்றிருக்கும் அண்ணன்மார்களின் கவலை என புரியாமல் இல்லை…


என்னதான் கண்மணி தைரியமான பெண்ணாக இருந்தாலும்… ரிதன்யா ரித்விகா தனியே எங்காவது செல்லும் போது கொஞ்சம் எச்சரிகையாகத்தான் இருக்க வேண்டியிருந்தது… அதுவும் ரிஷி இருக்கும் போது கூட பெரிதாக அக்கறை எடுத்துக் கொண்டதில்லை… தங்கைகளின் மீதான அவனது அக்கறை அதிகப்படியாகத்தான் தெரியும்… அதே நேரம் அது தவறில்லை என்பதும் உணர்வாள் பெண்ணாக மட்டுமின்றி… தன் அனுபவத்தினாலும்


ரிஷியும் இல்லை…. அவன் இங்கு இல்லாத சமயத்தில் கண்மணிக்கு ரிதன்யா ரித்விகாவை அண்ணியாக கூடுதல் பொறுப்பும் வந்திருந்தது…


”பார்த்து… பத்திரம்… ஏதாவது எமர்ஜென்ஸினா கால் பண்ணுங்க ரிதன்யா” என்றவளிடம் பதில் சொல்லாமல் ரிதன்யா கடந்திருக்க… கண்மணியும் வழக்கம் போல் ரிதன்யாவின் அலட்சியத்தை அலட்சியம் செய்தவளாக.. தன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டினுள் சென்றாள்…


உள்ளே நுழைந்த போதே வேலைகள் எல்லாம் அப்படி அப்படியே கிடக்க…. வேகமாக உடை மாற்ற அறைக்குள் நுழைந்தவள்… அணிந்திருந்த புடவையின் பின்களை கழட்டிக் கொண்டிருக்கும் போதே…. வானத்தில் மெல்ல மெல்ல கருமேகங்கள் ஒன்று சேரத் தொடங்கி இருட்டத் தொடங்க… மாலை ஐந்து மணி ஏழு மணி போல காட்சி அளிக்க ஆரம்பித்திருக்க… அதை ரசித்தபடியே உடை மாற்றப் போனவளுக்கு அப்போதுதான் காலையில் காயப் போட்ட துணிகள் ஞாபகத்துக்கு வர… மாற்றத் தொடங்கிய புடவையை மாற்றாமல்… வேக வேகமாக மீண்டும் அதை அள்ளிப் போட்டவளாக வெளியே வந்து துணிகளை எடுக்கத் தொடங்கினாள் கண்மணி…


---


”அண்ணி… உங்க போன் அடிச்சுட்டே இருக்கு… கேட்கலையா” என்ற படி தாயின் அறையில் இருந்து வெளியே வந்த ரித்விகா.. இப்போது பள்ளிச் சீருடையில் இருந்து… சாதரண உடைக்கு மாறி இருந்தாள்…


போன் அடித்துக் கொண்டே இருக்க… கண்மணியைத் தேடியபடியே… அதில் வந்த அழைப்பை ஏற்றபடியே… தன் அண்ணன் என்று தெரிந்தும்

“சொல்லுங்க” ’அண்ணா’ என்ற பாச அழைப்பெல்லாம் இல்லாமல் என்று வெற்று விளிப்பில் சொல்ல


எதிர்முனையில் அவள் அண்ணன் புருவம் சுருக்கினான்… ஏனென்று தெரியாவிட்டாலும் தங்கையின் கோபம் உணர்ந்தாந்தான்.. இருந்தும் அதன் கண்டு கொள்ளாதவனாக


“அண்ணி எங்க” என்று வேண்டும் என்றே அவளின் கோபம் பற்றி கேட்காமல் நேரடியாக கண்மணியைக் கேட்க.. இங்கு ரித்விகாவோ… இன்னும் காண்டானாள்… அந்த ஆத்திரத்தில்…


“அண்ணின்னா… எந்த அண்ணி… எனக்குத் தெரியலை..” வேண்டுமென்றே ரித்விகா அவனை வார ஆரம்பித்தாள்… கடுப்பான குரலில்


“அடிப்பாவி” ரிஷி தனக்குள் சொல்லிக் கொண்டவனாக


“ஓய்… என்ன குடும்பத்துல கும்மி அடிச்சிருவ போல… உனக்கு எத்தன அண்ணி…” ரிஷி பதறியவனாகக் கேட்க


“ஹாஆஆஅன்… நீதானே சொல்லிருக்க… ஊர்ல இருக்கிற அழகான பொண்ணெல்லாம் எனக்கு அண்ணின்னு சொல்லிருக்க… “ என்ற போதே


“பாப்பு… அண்ணா மேல என்னடா கோபம்… எதுவா இருந்தாலும் நாம பேசித் தீர்த்துக்கலாம் ஓகேவா.. உன் அண்ணி சாதாரண அண்ணி கிடையாதும்மா… ரவுடி… உன் அண்ணா வாழ்க்கைல இப்படிலாம் விளையாடலாமா“ அண்ணனாக அவள் கோபம் கண்டுகொள்ளாதவன்… கண்மணியின் கணவனாக சரண்டராகி இருந்தான் இப்போது…


”அது… அப்படி வழிக்கு வா… அந்தப் பொண்ணு பேரு என்ன கார்லாவா… நோர்லாவா… அது என்ன அவ்ளோ உரிமை எடுத்துகிது உன்கிட்ட… ஐ ஹேட் ஹெர்… சொல்லி வை அந்தப் பொண்ணுகிட்ட” கொஞ்சல் பாதி… மிரட்டல் பாதி… எனச் சொல்ல…


“ஓ…..ஹ்ஹ் ரித்வி பாப்பாக்கு இதான் கோபமா” என்று சிரித்தபடி சொன்னவன் வேறு ஏதும் சொல்லாமல் இருக்க


”இப்போ கூட அந்த பொண்ணெல்லாம் முக்கியம் இல்லைனு சொல்ல மாட்டேங்கிற பாரு” என்ற தங்கையின் அர்த்தம் இல்லாத பேச்சிற்கு… இப்போதும் ரிஷி மௌனம் காக்க


“சோ… அந்தப் பொண்ணும் உனக்கு முக்கியம்…. இருந்துக்கோ… எப்படியும் இங்கதான் வரணும்… அப்போ இருக்கு உனக்கு… எனக்கு கூட இங்க புது ஃப்ரெண்ட் கிடைச்சிருக்காங்க… நீ ஒண்ணும் தேவையில்ல போ” என்று அர்ஜூனை மனதில் வைத்துச் சொல்ல…


ரிஷியோ நெற்றி சுருக்கினான்


“அர்ஜூன் அங்கிள்தான் என் நியூ ஃப்ரெண்ட்… சூப்பர்… ஜெம் ஆஃப் பெர்சன்…” கார்லா சொன்னது போலவே ரிஷியிடம் ரித்விகா சொல்ல


அமைதி ஆகி இருந்தான் ரிஷி… தன் அண்ணனின் இந்த அமைதி பதில் சொல்ல முடியாத காரணத்தால் வந்த அமைதி அல்ல என்று ரித்விகாவுக்கு தெரிந்திருந்தால் தானே…. அவள் தன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தாள்


”உன்னை விட எங்கள நல்லா பார்த்துக்கிறாரு… சம் டைம் வீட்ல கூட வந்து ட்ராப் பண்ணிட்டு போவாரு… போ போ… எங்களுக்கும் ஆள் இருக்கு” என்ற போதே..


”அவ எங்க” ரிஷியின் குரல் தடித்திருந்தது இப்போது…


அதெல்லாம் ரித்விகா உணர்ந்தால் தானே


“ஊட்டிக்குக்கு கூட என்னைக் கூப்பிட்டாங்க… நான் தான் வரலைன்னு சொல்லிட்டேன்”


“உன் அண்ணிகிட்ட போனைக் கொடுன்னு சொன்னேன்” ரிஷி வார்த்தைகளை ஒவ்வொன்றாக கடித்துத் துப்ப…


இப்போதும் ரித்விகா


“அண்ணின்னா எந்த அண்ணின்னு கேட்டேண்ணா” ரித்விகா ஜாலியாக சிரித்துக் கேட்க…


“ஏய்… உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது… விளையாண்டுட்டு இருக்க… எங்க அவ… அவகிட்ட கொடு” என்ற உயர் அதிர்வில் ஒலித்த தன் அண்ணனின் குரலில் விதிர் விதித்திருந்தாள் ரித்விகா இப்போது…


அவன் அதட்டிய அதட்டலில் கண்கள் அவளையுமறியாமல் கரித்தும் விட… அதைத் துடைத்தபடி…. வேகமாக வெளியே பார்க்க… கண்மணி கொடியில் கிடந்த துணிகளை எடுத்துக் கொண்டிருப்பது தெரிய… தன் அண்ணியிடம் வந்தாள்…


“அண்ணி… அண்ணா” அலைபேசியை நீட்டினாள்…


ரித்விகா கண்மணியிடம் தன் முகவாட்டத்தை எல்லாம் காட்டிக் கொள்ளவில்லை… காட்டினால்… எங்கு தன் அண்ணிக்கும் தன் அண்ணனுக்கும் ஒருவேளை தன்னால் பிரச்சனை வந்து விடுமோ என்று மறைத்தபடி இயல்பாக இருக்க… கண்மணியாலும் ரித்விகாவைக் கண்டு கொள்ளமுடியவில்லை… ரிஷி கோபமாக இருக்கிறான் என்று தெரிந்திருந்தால் கண்மணியும் ரிஷியிடம் கொஞ்சம் பார்த்து பேசி இருந்திருப்பாளோ????….


”கைல ஃபுல்லா ட்ரெஸ் இருக்கு… போனை நீயே கைல வச்சுக்க… ஸ்பிக்கர்ல போடு” என்று சற்று குனிந்து ரித்விகாவின் கைளுக்கு அருகே காதை வைக்க… ரித்விகா அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டாள்…


எதிர்முனையில் ரிஷியின் குரல் ஒலிக்காமல் இருக்க


“சொல்லும்மா” ரிஷி அவளை அழைப்பது போல கண்மணியும் அதே போல் அவனையே அழைத்து அவனைக் கிண்டலடிக்க


ரிஷியோ கோபத்தில் பல்லைக் கடித்தான்… அவன் புறம் இருந்து… இருந்தும் தன்னை அடக்கிக் கொண்டவனாக


“ஊட்டி எப்போ போற” ரிஷி தீவிரமாக கேட்க


“நீங்கதானே இந்த டேட்னு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொடுத்தீங்க… மறந்துட்டு கேட்கறீங்களா… ரிஷிக்கண்ணா”

”மிஸ்டர் ஆர் கே… ஆஸ்த்ரேலியா ராக் ஸ்டார் ஆனதும் எல்லாம் மறந்து போச்சா… அப்டியே ’கண்மணி’ இல்லத்துக்கும் லேண்ட் ஆகலாம்ல” ரித்விகாவிடம் கண்சிமிட்டியபடியே கண்மணியும் தன் பங்குக்கு ரிஷியை ஓட்ட ஆரம்பிக்க


”ரித்வி ட்ரெஸெல்லாம் வாங்கிட்டு… வீட்டுக்குப் போ…” ரிஷி தங்கையை அதட்டியவனாக


“கண்மணி போனை வாங்கு… ஸ்பீக்கரை ஆஃப் பண்ணு… உன்கிட்ட தனியா பேசனும்” என்ற போதுதான் கண்மணியே அவன் குரல் மாற்றத்தை உணர்ந்தாள்…


அதற்கு மேல் அவனிடம் விளையாடாமல்… காய்ந்த துணிகளை எல்லாம் ரித்விகாவிடம் மாற்றியவள்… மரத்தின் அடியில் அமர்ந்தவளாக ரிஷியிடம் பேச ஆரம்பித்தாள்…


“சொல்லுங்க ரிஷி”


“ஹர்ஷித்தைப் பார்க்கிறதுக்கு பெர்மிஷன் வாங்கின…. அர்ஜூன் கூட போறதுக்கு என்கிட்ட பெர்மிஷன் வாங்கவே இல்லையே” சுற்றி வளைக்கவெல்லாம் இல்லை… நேரடியாக ரிஷி கண்மணியிடம் கேட்க


“ஹர்ஷித்தைப் பார்க்கிறதுக்குத்தான் எனக்கு உங்க பெர்மிஷன் வேண்டும்… அர்ஜூன் கூட போறதுக்கு நான் ஏன் உங்ககிட்ட பெர்மிஷன் வாங்கனும்” கண்மணி காட்டிய நிதானமே அவளின் கோபத்தைக் காட்ட


“சோ…”


“பார்த்திபன்… அர்ஜூன்… யமுனா… இவங்க கூட போகிறேன்… 4 பேருக்கு பெர்மிஷன் கேட்ருந்தேன்… அப்போ கூட நீங்க யார் வர்றாங்கன்னு கேட்கலை… இப்போ என்ன… அதுமட்டும் இல்லை… அர்ஜூன் கூட போறதுக்கு பெர்மிஷன் உங்ககிட்ட வாங்கனுமா… இதுதான் ஏன்னு எனக்குப் புரியலை ரிஷி… ” அவள் சொல்லி முடிக்கவில்லை… எதிர்முனையில் எந்த சத்தமும் இல்லை…


“ரிஷி … ரிஷி… “ என்று அழைத்த போதுதான் கண்மணிக்கே தெரிந்தது… அவன் பேசிக் கொண்டிருந்த அழைப்பைக் கட் செய்து விட்டான் என்பது…


அவன் தன் மீது கொண்ட கோபம் அவளை வருத்தவில்லை… மாறாக கோபமாக அவன் இருந்தால் எந்த அளவுக்கு போவான் என்று உணர்ந்தவளாக… மனம் சுணங்கியவளாக… தன்னையே நொந்து கொண்டவளாக.. மீண்டும் மீண்டும் அவன் எண்ணை தொடர்பு கொள்ள… அப்போதுதான் அவன் கோபத்தின் அடுத்த கட்டம் புரிந்தது… போனையே அணைத்து வைத்து வைத்திருக்கின்றான் என்பது


“ப்ச்ச்… நான் ஏன் இவ்ளோ திமிரா பேசுனேன்” தன்னையே திட்டிக் கொண்டவளாக…


“இப்போ என்ன பண்றது…” ஒரு ஐந்து நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு… அவனாக இனி இவளை அழைக்க மாட்டான்… அதேபோல அலைபேசியையும் உடனே ஆன் செய்ய மாட்டான் எனத் தோன்ற… உடனே தன் தந்தைக்கு அழைத்தாள்


அவரும் எடுக்க…


”அப்பா எங்க இருக்கீங்க… அவர் பக்கத்திலயா…” மகள் தயங்கி தயங்க்கி கேட்க


“என்னடாம்மா… ஏதாவது பிரச்சனையா… குரல் ஒரு மாதிரி இருக்கு” நட்ராஜ் கேட்டபோதே


”இல்ல…. இல்ல… அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா… அவர் போன் ஸ்விட்ச் ஆஃப் போல… ட்ரை பண்ணேன் கிடைக்கல.. பேசனும்… கொடுக்கறீங்களா”


“இதோடாம்மா” என்றபடி நட்ராஜ் ஹோட்டல் அறைக்குப் போக… கண்மணிக்கும் கொஞ்சம் பயமாகத்தான் உள்ளுக்குள் இருந்தது


தந்தை முன்னிலையில் ஏதாவது பேசி விடுவானோ என்று… ஆனாலும் மறுபுறம்… நட்ராஜ் சார் மேல் வைத்திருக்கும் மரியாதையினால் தன்னிடம் கோபத்தைக் காட்டாமல் பேசுவான் என்று நம்ப… நல்லவேளை அந்த நம்பிக்கை அவளை ஏமாற்றவில்லை…. கைகொடுத்தது… நட்ராஜ் முன் அவன் ஏதும் காட்டிக் கொள்ளவில்லை


அப்போதும் அவனாகப் பேசவில்லை…


“இப்போ எதுக்கு ரிஷி… இவ்ளோ கோபம்… இவ்ளோ அரோகண்ட்… அதுவும் என்கிட்ட… எதுவா இருந்தாலும் பேசுங்க திட்டுங்க… இந்த மாதிரி பண்ணாதீங்க ப்ளீஸ்” என்றவளிடம்


“ஹ்ம்ம்ம்… சகவாச தோஷம்… எனக்கும் தொத்திகிருச்சு…” ரிஷி நக்கலாகச் சொல்ல…


தன்னைத்தான் சொல்கிறான் என்று கண்மணிக்குப் புரியாமல் எல்லாம் இல்லை…


“நான் உங்ககிட்ட காண்பிச்சது இல்லை…” கண்மணி உணர்ந்தே சொல்ல…


“அப்படியா… மேடம் காண்பிச்சதே இல்லையா… “ அவனையுமறியாமல் அவன் கன்னங்களைத் தடவிக்க்கொண்டவனாக….


“ஆனால் அன்னைக்கு நீ கேட்ட போது கூட மனசு வலிக்கலை… கன்னம் தான் வலிச்சது…” ரிஷி உள்குத்தோடு சொல்ல… கண்மணி புரியாமல் விழித்தாள்…


“ஞாபகம் இல்லையா கண்மணி… நீ மிட் நைட்ல வந்தியே ஒரு நாள்… சார்க்கு கூட உடம்பு சரி இல்லாமல் இருந்தாரே அந்த நைட்.. உனக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியலை… நான்லாம் உனக்கு யாரோ அப்போ” என்றவன் சொன்ன நிகழ்வு இவளுக்கும் ஞாபகம் வந்தவளாக அமைதி ஆகி விட


“எங்க வேணும்னாலும் போவேன்… எப்போ வேணும்னாலும் வருவேன்… நீங்க யார் கேட்கிறதுக்குனு சொல்லித்தானே அறஞ்ச” நிறுத்தினான்


“இன்னைக்கும் அதே கொஸ்டீன் தான் அதே மாடுலேஷன்லதான் என்கிட்ட கேட்ருக்க… ஹர்ஷித் உன்னோட விசயம் பெர்மிஷன் கேட்டேன்… மத்ததுக்கெல்லாம் ஏன்னு… என்னை தள்ளி வச்சுட்ட தானே” இப்போது ரிஷியின் குரல் உண்மையிலேயே தடுமாறி வர


“சாரி… இவ்ளோ பெருசா எடுத்துப்பீங்கன்னு தெரியல… அதுமட்டுமில்லாமல்… நான் ஊட்டிக்கு போறதுக்கு முந்தின நாள் சொல்லிக்கலாம்னு நினைத்தேன் ரிஷி… சாரி… சாரி” கண்மணி உண்மையான வருத்தத்தோடு… தன்னையே திட்டிக் கொண்டவளாக… பேச ஆரம்பிக்க… அதையும் இடையிலே நிறுத்தியவனாக



“ப்ச்ச்… அது பிரச்சனை இல்லை… நான் கேட்டப்போ நீ ஒழுங்கா பதில் சொல்லாம… உன்கிட்ட ஏன் கேட்கனும்னு சொன்னதானே அதுதான் எனக்கு உண்மையிலேயே கோபம்… மனசு வலிக்குது… பராவாயில்ல இப்போ ஒகே… சார் போன்ல மட்டும் நீ போன் பண்ணாமல் மட்டும் இருந்திருந்த… என்ன பண்ணியிருப்பேன்னு எனக்கே தெரியாது…. சரி மழையா என்ன அங்கே… ரிது எப்படி போனா” ரிஷி இயல்பாக பேச ஆரம்பிக்க…. சற்று முன் கோபமாகப் பேசிய ரிஷியா… என்றிருந்தது கண்மணிக்கு…



அதே நேரம் ரிஷி இவளது அழைப்பை தன் தந்தையின் அலைபேசியில் எதிர்பார்த்து காத்திருந்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவனது பேச்சு…


கண்மணிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை… அவனாக இறங்கி வர மாட்டான்… ஆனால் எல்லாமே இவளே அவனை உணர்ந்து நடக்க வேண்டும் என ரிஷி எதிர்பார்க்கின்றான் என்பது நன்றாகத்தான் புரிந்தது அவளுக்கு… இப்படியே பழக்கமானால் இது ஒரு கட்டத்தில் பிரச்சனையாகவும் முடியக்கூடும் என்பது இவளுக்கும் புரியாமல் இல்லை… அதே நேரம் ரிஷி அவளை விட்டு கோபமாக எவ்வளவு தள்ளிப் போனாலும்… தான் அவனை விடாமல் அவனோடே இருக்க வேண்டும்… சமாதானப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான்… அவனைப் புரிந்து கொண்டதால்… தானும் இறங்கிப் போனதால் இன்று பெரிதாக பிரச்சனை ஆகவில்லை… அதே போல ரிஷிக்கு.. அர்ஜூன் பிரச்சனை இல்லை.. கண்மணியின் வார்த்தைகள்தான் பிரச்சனை… இவளாகவும் புரிந்து கொண்டாள்… அவனாகவும் அமைதி ஆகி விட்டான்… இயல்பாகவும் பேச ஆரம்பித்து விட்டான்….


ஆனால் அவன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல்… இப்படியே இருப்பதும் பயமாகத்தான் இருந்தது கண்மணிக்கு… தான் தவறு செய்கிறோமோ… புரிந்து கொண்டு நடக்கிறோம் என்ற பெயரில் அவனை அவன் உணர்வுகளை வெளிக்கொணர விடாமல்…. அவனுக்குள் இருக்கும் அரக்கனத்தனத்தை இன்னுமே வளர்க்கிறோமோ… ஒருபுறம் எதிர்மறையாக யோசித்தாலும்….


ரிஷிக்காக யோசித்து… ரிஷிக்காக பேசி… அவனைத் தாங்கி…. என எல்லாவற்றிருக்கும் ரிஷிக்கான அவனது தேவையாக அவள் மாறி இருந்ததையும் உணர்ந்து கொண்டவளுக்கு உச்சகட்ட சந்தோசத்தை வந்தாலும் … அதையும் மீறி எங்கோ மனதின் ஒரு ஓரம் எச்சரிக்கை மணி அவளுக்குள் அடித்ததுதான்…


”ஓய்…. என்ன அமைதி ஆகிட்ட” அத்தனை ஆக்ரோஷமாகப் பேசியவன்… இப்போது துள்ளலாகப் பேசினான்…


அவன் இயல்பாக பேச ஆரம்பித்து இருந்தாலும்… கண்மணிக்கு இப்போது ஒன்று உருத்தியது…


“என்றோ நடந்த சம்பவத்தை இன்று இழுக்கின்றான் என்றால் அது அவனுக்கு ஆறாத காயமாக வடுவாக மாறி இருந்ததால் தானே” யோசித்தபடியே பேச ஆரம்பித்தாள்…


“எனக்கொரு சந்தேகம் ரிஷி”


“சொல்லு…”


”அன்னைக்கு ஏன் உங்கள அறஞ்சேன்… ஜஸ்ட் கேள்வி கேட்டதுக்காகவா…. ” நிறுத்தியவள்…


“கையைப் பிடிச்சீங்க… சம் வாட்… அந்த மாதிரி ஏதோ நடந்தப்போதானே நான் அடிச்சேன்… அப்படித்தான் எனக்கு ஞாபகம் இருக்கு” கண்மணி அவனிடம் சந்தேகமாகக் கேட்க


“ஹ்ம்ம்ம்… புடவைல பட்ருச்சு… அதுனால… ஒண்ணு இல்லை… 1,2,3,4,5 “ இப்போது அடி வாங்கியது போல… ஒவ்வொன்றாக எண்ணிச் சொல்லிக் கொண்டிருக்க…


“எனக்கென்ன தெரியும்… இந்த ரிஷிதான் என் புருசனா வரப் போறான்னு….” செல்லமாக கொஞ்சலாக கண்மணி கேட்க


”தெரிஞ்சு இருந்தால்” ரிஷி கொக்கி போட்டு நிறுத்த


“தெரிஞ்சு இருந்தால்… நம்ம ஆளுதானேன்னு எக்ஸ்ட்ரா இன்னும் ரெண்டும் விழுந்திருக்கும்…” கண்மணி குறும்பாகச் சொல்ல… ரிஷி பக்கென்று சிரித்து விட்டான்…


”அம்மா… பயமா இருக்கே… ரவுடியிசத்த மட்டும் மாத்த மாட்றாளே என் முதலாளி பொண்ணு” பயந்த குரலில் நடுங்கும் பாவனையில் அவன் சொன்ன தோரணையில்…. கண்மணிக்கு புன்னகை வந்தாலும்


“வலிச்சதா ரிஷி…” உண்மையாகவே வருத்தம் தோய்ந்த குரலில் கண்மணி கேட்டாள்


”ஹ்ம்ம்ம்… வாம்மா… வா எப்போ வாங்கின அடிக்கு… எப்போ ஒத்தடம்… இப்போ கேளு… இதை அப்போ கேட்ருக்கனும்”


“அப்போ யாரோ நான் …. சாரி மட்டும் தான் கேட்க முடியும்… வேறு என்ன பண்ண முடியும்”


“இப்போ… இப்போ மட்டும் என்னவாம்” ரிஷி உதட்டில் புன்னைகையை உறைய வைத்தவனாகக் கேட்க


“இப்போ… இப்போ…. இப்போ…. யாஆஆஆஆஆஅரோஓஒ… “ என்று நீட்டி முழங்கியவள்…. வேகமாக


“நாம ஒண்ணு பண்ணலாம் ரிஷி… அதே மாதிரி நாம திரும்ப சீன் ரீகிரியேட் பண்ணலாம்… அப்போ அடி வாங்கினதை இப்போ வேற மாதிரி மாத்திரலாம்.. நீங்களும் மறந்துருவீங்க…” கண்மணி உணர்ச்சி வசப்பட்டு சொல்ல


“அப்போப்ப ரைட்டர்னு காமிக்கிறடி” ரிஷியும் சொல்ல


“நமக்கு பிடிக்காத ஒன்ணு நடந்ததுன்னா அதை நமக்கு பிடித்த மாதிரி எழுதி நம்ம மனசை தேத்திக்கலாம்னு தான் நான் எழுத ஆரம்பித்ததே” என ஆரம்பித்தவள்…



“ப்ச்ச்… இப்போலாம் நான் எழுதுறதே இல்லை ரிஷி… எழுதனும்” தனக்குள்ளாக சொல்லிக் கொண்டாளா… அவளுக்கே தெரியவில்லை…


ரிஷி சிரித்தபடியே…


“அப்போ… உனக்கு பிடிச்ச மாதிரியே விசயங்கள் உன்னைச் சுத்தி நடந்துட்டு இருக்குனு வச்சுக்கலாமா… அப்படி என்ன பிடிச்ச விசயமா இருக்கும்” ரிஷி இப்போது அறிந்தே அவளைச் சீண்ட… கண்மணி இப்போது மௌனமாகி இருந்தாள்… தன்னை உணர்ந்தவளாக…. ஆனாலும் தன்னை மீட்டெடுத்து பேசி ஆரம்பித்திருக்க…. அதன் பின் ரிதன்யா… ரித்விகா… அவன் அன்னை… தொழிற்சாலை… இவன் ஷோ , கார்லா என வழக்கம் போல ரிஷி பேசி முடித்து வைக்கப் போக…


வைக்கப் போன கண்மணியிடம் ரிஷி மெதுவாக


“கண்மணி மேடம்… சீன் ரீ கிரியேட் பண்றேன்னு சொன்னதானே… எப்படி அடி வாங்கினதை மறக்க வைப்ப… ஜஸ்ட் ஸ்க்ரிப்ட் மட்டும் இப்போ சொல்லு… சீன் அப்புறமா வச்சுக்கலாம்” வேண்டுமென்றே சீண்டினான் ரிஷி


“யோசிக்கனும் ரிஷிக்கண்ணா… உடனே கேட்டால்… எப்படி சொல்றது” அவன் சீண்டல் புரிந்து கண்மணி வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதது போல் சொல்ல


”ஹ்ம்ம்ம்… அன்னைக்கு நட்ராஜ் சார் பொண்ணுனுதான் கொஞ்சம் சுதாரிக்காமல்… அவள அடிக்க விட்டுட்டேன்…” ஏக்கப் பெருமூச்சோடு ரிஷி சொல்லிக் கொண்டிருக்க


“இப்போவும் நான் அந்த நட்ராஜ் சார் பொண்ணுதான் ஆர் கே சார்” என்றவளிடம்


“அன்னைக்கு நீ யாரோ கண்மணியா இருக்கலாம்… ஆனால் இப்போ என்கிட்ட பேசிட்டு இருக்கிற இந்தக் கண்மணி… என்னோட கண்மணி… இந்த ரிஷியோட கண்மணி… ”R K’ வோட ’K K’… அதை யோசித்து சீன் ரிக்ரியேட் பண்ணு” என்று அவன் சொல்லி விட்டு… அடுத்து ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனே வைத்தும் விட்டான் கண்மணியின் ரிஷிகேஷ்…


அவன் சொல்லிவிட்டு வைத்துவிட்டான்… ஆனால் அவனது மொத்த காதலும் அவன் சொல்லி முடித்த வார்த்தைகளில் வந்து நின்று இவள் செவிகளில் அது மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது…


”என்னோட கண்மணி… இந்த ரிஷியோட கண்மணி…” இது மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது


அவளுக்கு மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்த ரிஷியின் வார்த்தைகள்…. கண்மணியின் தேகத்தின் ஒவ்வொரு அணுவிலும் அவன் சொல்லாமல் சொன்ன காதல் தன் பதிவை மீண்டும் மீண்டும் அவளிடம் உணர வைத்திருக்க… முதன் முதலாக காதல் என்றால் என்ன என்பதை கண்மணி உணர்ந்த தருணம்…


இத்தனை நாளாக… புரிதல்… பாசம்… அரவணைப்பு, நட்பு என்று ரிஷியிடம் அவள் காட்டிய அனைத்து உணர்வுகளும் இன்று காதல் என்ற ஒரே ஒரு உணர்வால் மூழ்கடிக்கப்பட்டு… அவளுமே அதில் மெய்மறக்க ஆரம்பித்திருக்க…. அதே நேரம் அவள் மேல் மழைத் துளியும் விழ… கொஞ்சமாக மழைத் துளி அவள் தேகத்தை முற்றிலுமாக நனைக்க ஆரம்பிக்க… அது கூட உணர முடியாதவளாக அவளது ரிஷியின் காதல் மழையில் விருப்பத்தோடேயே நனைந்திருக்க… தனை மறந்து அமர்ந்திருந்தாள் கண்மணி….


எத்தனை நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்திருந்தாளோ… சில நிமிடங்கள் கழித்துதான் மழையில் முழுவதுமாக நனைந்திருந்ததை உணர… இருந்தும் அந்த நிலையில் இருந்து வெளி வர மனமில்லை கண்மணிக்கு….


அதே நேரம் ரித்விகாவும் வெளியே வர….


“அண்ணி… மழையில் ஏன் நனையுறீங்க… இடி இடிக்குது பாருங்க… மரத்துக்கு கீழ உட்கார்ந்து இருக்கீங்க…” வீட்டின் வாசல் படியில் இருந்து கத்த… வலுக்கட்டாயமாக தன்னை நிகழ்வுக்கு கொண்டு வந்தவ கண்மணி… எழுந்து வேகமாக ஓடி ரித்விகாவின் அருகில் நின்றிருந்தாள்…


ரித்விகாவின் கையில் போனைக் கொடுத்தபடி… ஈர உடையை மாற்றும் பொருட்டு உள்ளே போக எத்தனித்தாள்தான்…


ஆனால்… அவள் கண்ணில் பட்டதோ அங்கிருந்த ஊஞ்சல்… இத்தனை நாட்கள் அங்கிருந்த ஊஞ்சல் பெரிதாக அவளை ஈர்த்ததில்லை… ஆனால் அந்த ஊஞ்சலோ… அவள் நாயகன் அதில் அமர்ந்திருந்த காட்சியை இன்று ஞாபகப்படுத்தியது…


அந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி ரிஷி அன்று அவனது நண்பனை அழைத்த காட்சி … ஏனோ இன்று தன்னையே அழைப்பது போல கற்பனைத் தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்க… மீண்டும் ஊஞ்சலை நோக்கி தோட்டத்தின் புறம் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தாள் கண்மணி… ரித்விகா அழைத்த குரல் எல்லாம் அவள் காதுகளில் விழவில்லை…


பெருங்காற்றோடு மழை ’சோ’ வென்று அடித்து ஊற்றிக் கொண்டிருக்க… ஊஞ்சலில் அமர்ந்தவள்… தன்னவனோடு இருப்பது போலவே உணர்ந்திருக்க… சுற்றம் மறந்தவள்… தன்னையுமே மறந்து ஊஞ்சலில் ஆட ஆரம்பித்திருந்தவள்… மழையையும்… காற்றையும்… தன் உற்சாகத்தோடு சேர்த்துக் கொண்டிருக்க… மழையும் காற்றுமே அவளோடு… அவளின் வேகத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல்… தணிந்து… இளங்காற்றோடு கலந்த மென்சாரலாக மாறி இருக்க…


ஒரு கட்டத்தில் ரித்விகாவுக்கும்… கண்மணியின் இந்த புது உற்சாகம் தொற்றிக் கொள்ள… இந்த துள்ளலான புதுக் கோணத்தில் தன் அண்ணியை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்க… தன் கையில் இருந்த அலைபேசியை எடுத்து காணொளியாகவும்… காட்சிப் பதிவுகளாகவும் கண்மணியை படம் பிடித்துக் கொண்டிருந்தாள்… மழையில் நனைந்தபடியே…


தன்னை மறந்து ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த கண்மணி அப்போதுதான் ரித்விகாவைப் பார்க்க… அவளையும் தன்னோடு அழைக்க…


“நான் உங்கள் போட்டோ எடுத்துட்டு இருக்கேன்… டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று அலைபேசியும் அவளுமாக மழையில் நனைந்தபடியே சொல்ல… அப்போதுதான் கண்மணியும் நிதர்சனம் உணர்ந்தவளாக…


“ரித்வி… இடி… மின்னல்… இதுல டிவைஸ் வச்சு ஹேண்டில் பண்ணிட்டு இருக்க” என்றபடி வேகமாக ஊஞ்சலை விட்டு இறங்கியவள் அதே வேகத்தோடு ரித்விகாவை இழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தவள் முகத்தில் அப்படி ஒரு புத்துணர்ச்சி…ஒளிவட்டம்… சந்தோஷம்


“அண்ணி…. ஹ்ம்ம்ம்…. செம்ம போங்க… ஒரே கலக்கல் தான்... அண்ணாகிட்ட திட்டு வாங்கப் போறீங்களோன்னு பார்த்தா… ஒரே ஜாலியோ ஜிம்கானாவா“ என்றபடி அலைபேசியில் தன் அண்ணியின் புகைப்படத்தைப் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தவள்


“அண்ணி உங்க முகத்தைப் பார்த்தா… அப்டியே மரத்துல இருந்து பறிச்சு ஃபிரிட்ஜ்ல வச்சு எடுத்த ஆப்பிள் மாதிரி இருக்கு…. ஆனால்….” என்று இழுத்தவள்…


“அப்படியே கீழ பார்த்தா…. ஒரே ஹாட் தான் போங்க” என்று கண்சிமிட்ட… கண்மணி வேகமாக தன்னைப் பார்க்க…


“கடவுளே” என்றபடி பதறியபடி தன்னைக் குனிந்து பார்க்க… அவள் பயந்தது போல ஆடைகள் கலையவெல்லாம் இல்லை… ஆனால் அது தேவையே இல்லை என்பது… நனைந்திருந்த ஆடைகள் அவளின் நளினங்களை… அழகாகக் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்க… சட்டென்று அங்கிருந்த டவலை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டவள்…. தன் கணவனின் தங்கையையும் தலையைத் தட்டியபடி…


“எடுக்கிறதை எடுத்துட்டு… கமெண்ட்ஸ் வேறயா…”


“போட்டோ எடுக்கும் போதே சொல்ல வேண்டியதுதானே… அம்மா தாயே…. என் அண்ணி… செல்ல அண்ணின்னு… இந்த ஃபோட்டோஸ் ஸ்டேட்டஸ் போட்டு ஷேர் பண்ணிராத…. “ என்று சட்டென்று அவளிடமிருந்து போனை வாங்க…


“அய்யோ அண்ணி” என தலையில் கை வைத்திருந்தாள் ரித்விகா இப்போது…


“என்ன… யார்க்கும் ஷேர் பண்ணிட்டியா” கண்மணியின் அதிர்ந்து கேட்க…


“ஹ்ம்ம்…. அண்ணாக்கு” அப்பாவியாக விழி விரித்துக் கவலையோடு சொல்ல… கண்மணியின் முகத்திலோ இப்போது நிம்மதி வந்து சேர்ந்திருந்தது


“விடு… உங்க அண்ணாக்கு தானே அனுப்புன… பார்த்துக்கலாம்… பார்த்தாலும் பிரச்சனை இல்லை… ஒரு ரியாக்‌ஷனும் வராது… ”


“அது ஏன்…” ரித்விகா கேட்க


“இந்த பாம்பு ஸ்டோரிலாம் கேள்விப்பட்ருக்கியா… பல வருசமா வாழற நாகங்கள்… விஷத்தை வெளியிடாமல் சேர்த்து நாக ரத்தினமான மாத்துமாம்… அது மாதிரிதான் உங்க அண்ணாவும்… ஃபீலிங்க்ஸ்லாம் சேர்த்து வச்சு… ’ரிஷிரத்தினமா’ மாற்றி இந்த கண்மணிக்கு கொடுக்க காத்திருக்காரு” கிண்டல்… பாதி கடுப்பு பாதியாக சொல்ல…


ரித்விகா… புரிந்தும் புரியாமலும் அண்ணியைப் பார்த்தாள்…


----


அன்றிரவு ….


கண்மணி சொன்னது போலவே…. ரிஷி அவளது புகைப்படங்களை பார்க்கவே இல்லை… அனுப்பிய தகவல்களை எதிர்முனை பயனர் பார்த்ததற்கான அடையாளங்கள் சொல்லும் அமைப்பையும் தன் அலைபேசி செய்தி அமைப்பில் ரிஷி நீக்கி வைத்திருக்க… அவன் பார்த்தானா பார்க்கவில்லையா என கண்மணியால் அனுமானிக்க முடியவில்லை…


ரிஷியின் அலைபேசிக்கு மீண்டும் அழைத்துப் பார்க்க… இப்போதும் அது அணைத்து வைக்கப்பட்டிருக்க… தன் புகைப்படங்களை ரிஷி பார்க்கவில்லை என்பதை இப்போது உறுதி செய்திருந்தாள் கண்மணி… ஒருவேளை அலைபேசியை மீண்டும் ஆன் செய்யும் போதுதான் பார்க்க வாய்ப்பு இருக்கின்றது என்பதை உணர்ந்த போதே….


காதல்… ரொமான்ஸ்… செண்டிமெண்ட்… என இவற்றையெல்லாம் விட்டு தள்ளி விலகி நிற்பவன் தன்னவன்… அவனைப் பற்றி எல்லாம் தெரிந்த தானும் அவன் உணர்வுகளோடு விளையாடுகிறோமோ… யோசித்தவளாக அனுப்பிய புகைப்படம் அத்தனையும் நீக்கியபடி உறங்க ஆரம்பித்தாள் … கண்மணி… நிம்மதியாக


அன்று அனுப்பிய அடையாளமே இல்லாமல் ரிஷியின் அலைபேசியில் அவளது புகைப்படங்களை நீக்கியவள்தான்…. இன்று அவனோடு வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளமாக அவன் கருவை சுமந்திருந்த போதும்…. அவன் வாழ்க்கையில் இருந்து தன்னை நீக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றாள் கண்மணி… முடியுமா அவளால்????

2,187 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-3

அத்தியாயம் 94-3 சில வாரங்களுக்குப் பிறகு… வீட்டில் கண்மணி மட்டுமே இருந்தாள்… சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க… மணி 11 க்கும் மேலாக ஆகியிருக்க… நட்ராஜுக்காகவும் மருதுவுக்காகவும் காத்திருந்தாள் கண்மணி…. இப்

© 2020 by PraveenaNovels
bottom of page