அத்தியாயம்-5
எட்டு முதல் பத்துபேர் வரை சுற்றி உட்கார்ந்து அரட்டை அடிக்க ஏதுவாக வட்டவடிவிலான அலங்கார 'சோஃபா'க்கள் அந்த வரவேற்பறையை அலங்கரித்திருக்க, நடுவில் போடப்பட்டிருந்த வட்ட-தேநீர்மேசை மீது, பாதிக்கும் மேல் காலியான நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட மது பாட்டில் ஒன்று திறந்த நிலையில் அமர்த்தலாக வீற்றிருந்தது. அருகே, பீங்கான் தட்டுகளில் கொஞ்சமும் மேசைமேல் மீதமுமாக சிதறிக் கிடந்தன வறுத்தவை பொறித்தவை என அந்த உயரடுக்கு மதுவின் துணையுண்டிகள்.
கண்ணாடிக் குவளை ஒன்று கீழே விழுந்து நொறுங்கியிருந்தது. தரையில் கிடந்த காலி 'சோடா' பாட்டில்கள், சுழன்றுகொண்டிருந்த மின்விசிறி வீசிய காற்றின் வேகத்திற்கேற்ப இப்படியும் அப்படியுமாக உருண்டுகொண்டிருந்தன.
இது வழக்கமாக நடப்பதுதான் என்றாலும் அவனறிந்து கருணாகரன் மட்டும் தனியாக வந்து இப்படி கவிழ்ந்து கிடப்பது இதுவே முதன்முறை.
அவர்களுடைய தொழிலுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒரு சிறு நட்பு வட்டம் அவருக்கு உண்டு. எல்லோருமே அவருடைய வயதை ஒற்ற, மனைவிக்கு பயந்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அப்பாவி குடும்பஸ்தர்கள்தான்.
எப்பொழுதாவது, சில மாதங்களுக்கு ஒரு முறை அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, 'சரக்கும் சைட் டிஷ்'சுமாக ஒரு நாள் முழுவதையும் கழிப்பார்கள். அதுவும் இந்த 'கெஸ்ட் ஹவுஸ்'ஸில் மட்டுமே நடக்கும்.
பின்-மாலைக்கு மேல் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட கருணாகரன் மட்டும் அன்றைய இரவு அங்கேயே தங்கிவிடுவார் தாமரைக்கு அஞ்சி.
மற்றபடி தொழில்முறை பார்ட்டிகளில் கூட மது அருந்த மாட்டார் அவர்.
தாமரையிடமிருந்து மறைத்தாலும் கூட இதையெல்லாம் சத்யாவிடம் மறைக்கவே இயலாது அவரால். மறைக்கவும் மாட்டார்.
இந்த விஷயத்தில் கணவன் மனைவி இருவரின் மனநிலையையும் புரிந்தவனாதலால், நடுநிலைவாதியாக அவனும் கண்டும் காணாமலும் இருந்துவிடுவான். மற்றபடி இதுபோன்ற நிலையில் கருணாகரனை தனித்திருக்க விடாமல் அன்று அவருடனேயே தங்கிக்கொள்வான் அவ்வளவே. காரணம், அவர் ஐம்பதை கடந்த பிறகு அவருடைய உடல்நலம் குறித்த கவலை தம்பி மற்றும் தமக்கை இருவருக்குமே தொற்றிக்கொண்டது.
ஆனால் இந்த அளவுக்கெல்லாம் தன்னிலை மறந்து நினைவு தப்பும் அளவுக்கு அவர் சென்றெல்லாம் இதுவரை பார்த்ததே இல்லை அவன்.
"என்ன நேர்ந்தது இந்த மனிதருக்கு" என்றுதான் தோன்றியது அவனுக்கு.
"கோபால்" என அங்கிருந்தே குரல் கொடுத்தவன், அவரை திருப்பி நேராகப் படுக்க வைத்தான். கோபால் உள்ளே வரவும், இருவருமாக அவரை தூக்கிப் பிடித்து படுக்கை அறைக்குள் இழுத்துச்சென்றனர்.
அங்கே அவரை கட்டிலில் உட்கார வைக்கவும், பித்தம் தலைக்கேறி அ