அத்தியாயம்-11
கீழே, நீல நிறத்தால் ஆன ஜரிகை வேலைப்பாட்டுடன் கூடிய பேண்ட் மேலே அதே துணியால் தைக்கப்பட்ட, ஷார்ட் டாப் என்றும் சொல்ல முடியாமல் பிரின்சஸ் கட் பிளௌஸ் என்றும் சொல்ல முடியாமல் ஏதோ ஒன்று முக்கால் கையுடன், அதனைச்சுற்றி குட்டி குட்டி வெண்மணிகள் கோர்க்கப்பட்ட தங்க நிற பூத்தையலுடன் கூடிய அடர் ரோஜா நிறமும் நீலமும் கலந்த தாவணியை அணிந்து, தோகையென விரித்த கூந்தலும் முகத்தில் முழு ஒப்பனையுமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றும் ஒரு தொகுப்பாளினியைப்போல நின்ற மகளைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது தாமரைக்கு.
அவளுடைய கல்லூரி தோழர்களுடன் பிறந்தநாள்பார்ட்டி திருமண வரவேற்பு என செல்லும்பொழுது வழக்கமாக அவள் செய்யும் அலங்காரங்கள்தான். சிக்கென்று இன்னும் அவளை ஒல்லியாக வேறு காட்டித்தொலைக்க, அந்த உடையில் அவளைப் பார்க்கவே சகிக்கவில்லை அவருக்கு.
இதெல்லாம் கோமாளித்தனமாக இருக்கிறது என அவர் எவ்வளவோ முறை அவளிடம் சொல்லிவிட்டார். 'லேட்டஸ்ட் ட்ரெண்ட் - ஃபேஷன்' என்கிறபெயரில் இதேபோல் தாங்களும் உடை அணிந்து இவளையும் ஊக்கப்படுத்த ஒரு கூட்டமே இவளை சுற்றி உண்டு. அதுவும் அந்த பாலா இருக்கிறாளே! அவளை பற்றி சொல்லவே தேவையில்லை. ஷ்... அப்பா... தலையைப் பிடித்துக்கொண்டார் தாமரை.
"என்ன ஹசி இது, தலை விரி கோலமா, அதுவும் என்ன கன்றாவி டிரஸ்ஸிங் இது. ஆயிரம் ஆயிரமா செலவு பண்ணி, பியூட்டி பார்லர் போய் இதைத்தான் செஞ்சிட்டு வந்தியா? உன்னோட ட்ரெஸ்ஸும் மேக்கப்பும் இந்த அகேஷனுக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகலயே" என அவர் கவலையுடன் சொல்ல,
"ம்மா... போம்மா, அது சரியில்ல இது சரியில்ல, இதை செய்யாத அதை செய்யாதன்னு எதுக்கெடுத்தாலும் ஆயிரம் நொட்டை சொல்லிட்டு" என அலட்சியத்துடன் சிடுசிடுத்தாள் மகள்.
தான் செய்வது கொஞ்சம் அதிகப்படி என்று தெரிந்தாலும், அப்பா தன்னிடம் மனவருத்தத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தாலும், கொஞ்சம் கூட குற்றக் குறுகுறுப்பே இல்லாமல், யாரைப் பற்றியும் அக்கரை கொள்ளாமல் தன் காரியம் நடந்தால் சரி என்கிற மனோபாவத்தில் வெகு இயல்பாகத் தான் செய்வதையே செய்துகொண்டிருக்கும் மகளைப் பார்த்ததும் அப்படி ஒரு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது தாமரைக்கு.
"ஆமாண்டி... அப்படிதான் சொல்லுவேன். என் வீட்டுல இருக்கற வரைக்கும் நீ நான் சொல்றதைத்தான் கேட்கணும். ஏற்கனவே தாத்தா பாட்டி ரொம்பவே மனசு கஷ்டப்பட்டுக்கறாங்க. இத்தனைக்கும் அவங்களுக்கு முழுசா எதுவும் தெரியாது. நீ வேற இப்படி வந்து நின்னன்னு வெச்சுக்கோ, இதுக்கு வேற நான் வண்டி வண்டியா வாங்கி கட்டிக்கணும். சரி பரவாயில்ல சுடிதார் போட்டுக்கோன்னுதான் சொல்லலாம்னு நினைச்சேன். நீ இப்படி எடுத்தெறிஞ்சு பேசற இல்ல, மரியாதையா கீர்த்தனா கல்யாணத்துக்கு உங்க அத்தை எடுத்து கொடுத்தாங்க இல்ல, அந்த பட்டுப்புடவையை கட்டிட்டு ரெடியா இரு, நான் வந்து ஜடை பின்னி பூ வெக்கறேன். ஏதாவது மறுத்துப் பேசின, இப்படியே சத்யாவை கூட்டிட்டு ஊருக்கு போயிட்டே இருப்பேன், கல்யாணமாவது ஒண்ணாவது... ச்சை" என ஒரு ஆதங்கத்தில் அவர் பட்டாசாய் பொரிய, 'திக்' என்று ஆனது ஹாசினிக்கு.
அம்மா எப்பொழுதும் பேசும் பேச்சுதான். ஆனாலும், எப்பொழுதும் அவள் பக்கம் பொங்கி பிரவாகிக்கும் அவளுடைய அப்பாவின் தயவுதான் இப்பொழுது சுத்தமாக கிட்டுவதில்லையே! அம்மாவையும் பகைத்துக்கொண்டால் வேலைக்கே ஆகாது என்பது உரைக்க, அதுவும் அவர் அழுத்தந்திருத்தமாக சொன்ன 'என் வீடு' என்கிற வார்த்தை அவளைத் தொலைதூரத்தில் தள்ளி நிறுத்துவது போல் தோன்றவும், கண்களில் நீர் கோர்த்தது அவளுக்கு.
அதற்கும், 'அதுதான் எல்லாமே உன் இஷ்டத்துக்கு நடக்குதே, அப்பறம் எதுக்கு இப்படி கண்ணை கசக்கிட்டு இருக்க? நீலிக்கு நெத்தியில கண்ணீர்னு சும்மாவா சொன்னாங்க' என அடுத்த அதட்டல் விழும் என்பது புரிந்து கண்ணீரை