அத்தியாயம் 99-2
கண்மணி அழைத்ததும் நட்ராஜும் அவளது அழைப்பை எடுத்திருக்க
“அப்பா…. ரிஷி வெளில நிற்கிறாரு… வந்து கூட்டிட்டுப் போங்க…” என்று மட்டும் சொல்லி விட்டு கண்மணி அலைபேசியை வைக்க…
“அடுத்த தெலுங்கு பட சீனா… அத்தனை பேரும் வந்து நிற்பாங்களே… “ ரிஷி சலிப்போடு அவளைப் பார்க்க…
அவன் மேல் வீசிய மது வாடை… அவளுக்கு குடலைப் பிரட்டிக் கொண்டு வருவது போல் இருக்க… எப்போது உள்ளே இருப்பதெல்லாம் வெளியே வருமோ என்று சொல்ல முடியாமல் தனக்குள் போராட ஆரம்பித்திருந்தாள்…
கண்மணியின் சொன்னவுடனே… இலட்சுமியிம் நட்ராஜும் வெளியே வந்திருந்தனர்… வந்தவர்களிடம்
“அத்தை… உள்ள கூட்டிட்டிப் போங்க உங்க பையனை… “ கண்மணி இலட்சுமியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“அம்மா… உள்ள கூட்டிட்டுப் போங்க உங்க மருமகளை” ரிஷி அப்படியே கண்மணி சொன்னதை மாற்றிச் சொல்ல
“அம்மாடா… உள்ள கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போடாம்மா… இங்கேயும் பிரச்சனை பண்ண விடாத… உள்ள வந்துருடா… தெருவுல நிக்க வேண்டாம்… நாங்க கூப்பிட்டாலும் வர மாட்டார்…” நட்ராஜ் மகளிடம் சொல்ல….
கண்மணியும் வேறு வழி இல்லாமல்…
“வாங்க…” ரிஷியை கைப்பிடித்து எழுப்ப… அப்போதும் ரிஷி தான் இருந்த இடத்தை விட்டு எழ வில்லை… எழாமல் தன் முதலாளியைப் பார்த்தவன்
“நன்றி முதலாளி…. என்னைச் சரியா புரிஞ்சு வச்சுட்டு இருக்கிறது என் முதலாளி சார் தான்… ஆனால் அந்த ரெண்டல் அக்ரிமெண்ட்….” ரிஷி அப்போதும் விடாமல் நட்ராஜிடம் கேட்க
“ரிஷி... உள்ள வா” இப்போது நட்ராஜ் ரிஷியை அதட்டி இருக்க…
“இல்ல சார்… நாளைக்கு இதைக் காரணம் காட்டி… வீட்ட விட்டு வெளிய அனுப்பிட்டீங்கனா… எங்க போய் நாங்க நிற்போம்… என் பொண்டாட்டி வேற முழுகாம இருக்கா… அவள வச்சுட்டு நடுத்தெருவுலயா நிற்பேன்… நோ நெவர்…” ரிஷி நகராமல் அப்படியே அமர்ந்திருக்க
“இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க சார் நீங்க” கண்மணி எரிச்சலோடு… கைகளைக் கட்டிக் கொண்டபடியே அவனிடம் கேட்க… நட்ராஜோ ரிஷியின் வழிக்கே வந்தார்…
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… நான் தான் இந்த வீட்டோட ஹவுஸ் ஓனர்… நான் பார்த்துக்கிறேன்… நான் சொல்றேன்ல உள்ள வாங்க” நட்ராஜ் சொல்லி முடித்திருக்க
“ம்க்கும்… இவர் பார்த்துகிட்டாலும் பேசிட்டாலும்… அவர் பொண்ணு அந்த சொர்ணாக்கா ஒரு கோடு போட்டால் அதை தாண்ட மாட்டார்… எங்க அவர் பொண்ணுகிட்ட எதிர்த்து ஒரு வார்த்தை பேசச் சொல்லு… இவர் என்ன ஒரு கூட்டமே அவளை எதிர்த்துப் பேச முடியாமல் கையைக் கட்டி வாயைப் பொத்திட்டுத்தான் இருக்கு… அதை விடு அது எதுக்கு அம்மு நமக்கு…. இப்போ சீனைப் பார்ப்போம்… இவரை நம்ப முடியாது அம்மு… நாம உஷாரா முன்னெச்சரிக்கையா பேசிடனும்…” கண்மணியிடமே நட்ராஜை நக்கலடித்துச் சொன்னவன்…
“சா…ர்… உங்க பவர் என்னனு எனக்குத் தெரியும்… நீங்க சொல்றதுலாம் செல்லாது செல்லாது… பவர் இருக்கிற இடத்துல இருந்து ஸ்டேட்மெண்ட் வரனும்…” ரிஷி இப்போது கண்மணியைப் பார்த்திருக்க…
“அந்த அக்ரிமெண்டையே கிழிச்சுட்டுப் போட்டுட்டேன்.. இப்போ இது ’கண்மணி’ இல்லம் இல்லையே… மிஸ்டர் ரிஷி.. கேஷ் இல்லம்… போர்ட் மட்டும் தான் மாத்தலை… வர்றீங்களா…” எனக் கண்மணி பல்லைக் கடித்து… கெஞ்சாத குறையாகக் கேட்க
“ஓகே… என் பொண்டாட்டி சொல்றதுனால உள்ள வர்றேன்…” தள்ளாடியபடி எழுந்தவனை இலட்சுமி பிடிக்க வர…. வேகமாக அவர் கையைத் தட்டிவிட்டவன்…
“நோ… யாரும் என்னைத் தொடாதீங்க… நீ மட்டும் என்னைப் புடிச்சுக்கோ… அம்மு….” கண்மணியிடம் கையை நீட்டியபடியே
“பத்திரமா நான் கூட்டிட்டுப் போறேன்… நீ ஏன் என்னை விட்டு தள்ளித் தள்ளிப் போற…”
“தள்ளிப் போகாதே”
”எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே....”
அவனின் அந்தாக்ஷரி அட்டூழியம் மீண்டும் ஆரம்பித்திருக்க… எப்படியோ ரிஷியை கண்மணி இல்லத்துக்குள் அழைத்து வந்திருக்க…. ரிஷி கண்மணியைக் கண்மணி இல்லத்துக்குள் அழைத்து வந்தானா… இல்லை கண்மணி ரிஷியை அழைத்து வந்தாளா… கேள்விக் குறியே…
உள்ளே வந்தவுடன் ரிஷி நேராக மாடி அறையை நோக்கிப் போக… கண்மணியும் தன் கையை விலக்கப் பார்க்க… அதுவோ ரிஷியின் கைகளினால் உடும்புப்பிடியாகப் பிடிக்கப்பட்டிருக்க… கண்மணி விலக முடியாமல் தவித்த போதே
“கண்மணி… அவன் மதியத்துல இருந்து சாப்பிடவே இல்லை… கொடுத்து விட்ட சாப்பாட்டையும் திருப்பி அனுப்பிட்டான்… மாடிக்குப் போக வேண்டாம்… இங்க கூட்டிட்டு வாம்மா… நான் போய் சாப்பாட்டைத் தட்ல போட்டு எடுத்துட்டு வர்றேன்…”
”மறந்துட்டேனே… பசிக்குதே… என் கல்யாண நாள்னு அம்மா எனக்குப் பிடிச்ச ஐட்டம்லாம் சமைச்சு வச்சு காத்துட்டு இருந்தாங்களே…” என்றபடி ரிஷி கண்மணியை விட்டுவிட்டு தன் வீட்டுக்குள் போகாமல் அங்கிருந்த மரத்தடி திண்டில் அமர்ந்து விட… கண்மணி அமைதியாக தான் இருந்த இடத்திலேயே நின்றவள்… பின் ஒன்றும் சொல்லாமலேயே அவனைப் பார்க்காமலேயே அவனைக் கடந்திருக்க… ரிஷியும் தடுக்கவில்லை… அவனின் மௌனம் உணர்ந்தவளாக ஒரு முறை திரும்பிப் பார்த்தவள்… நின்று அவனைப் பார்க்க…
“போகாதடி… ப்ளீஸ்டி.” அவன் குரல் நைந்து ஒலித்திருக்க… கண்மணி இப்போது வேகமாக கண்மணி இல்லத்தின் வாயிலை நோக்கி அடி எடுத்து வைத்த போதே… பைக் சாவி ஞாபகத்துக்கு வந்திருந்தது…
அதே நேரம்…
“மணி… இருடாம்மா… நான் வர்றேன்… நைட் நீ தனியா போக வேண்டாம்…” நட்ராஜ் அவளை தடுத்து நிறுத்தியபோதே… தன் தந்தைக்குப் பதில் சொல்லாமல்…
“பைக்கை லாக் செய்தேனே… கையில் தானே சாவியை வைத்திருந்தேன்…” தனக்குள் பேசியபடியே கண்மணி சாவியைத் தேட ஆரம்பித்திருக்க… மீண்டும் வேகமாக வெளியே போய் பைக்கில் பார்க்கப் போக
”பை அம்மு… ஐ லவ் யூ…. அம்மு” ரிஷி வேகமாக கத்த கண்மணிகண்டுகொள்ளாமல் வெளிவாயிலை நோக்கிச் செல்ல…
”நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ…. ஐ லவ் யூ….
நீ நிற்காமால் போனாலும் துரத்தி சொல்வேன் பேபி ஐ லவ் யூ….. ஐ லவ் யூ….”
கண்மணி வண்டியில் சாவியைப் பார்க்க…. வண்டியில் சாவி இல்லை… வேறு வழி இன்றி கண்மணி ரிஷியை முறைத்தபடியே உள்ளே வந்திருக்க
”நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்… நீ பார்க்காவிட்டால் நானும் பார்க்கமாட்டேன் நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்… நீ சண்டை பிடித்தால் நானும் சண்டைப்பிடிப்பேன் நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன் நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்…”
ரிஷி ஒரு புறம் பாடிக் கொண்டிருக்க… அவனை கண்டு கொள்ளாமல்… கண்மணி அங்கிருந்த மணல் பரப்பில் சாவியைத் தேடிக் கொண்டிருக்க….
“கிடைச்சதா கண்மணி… கிடைக்காதே… ஏன்னா…. அது என்கிட்ட இருக்கே” ரிஷி குறும்பாகச் சொல்ல… கண்மணி முறைத்தபடி அவனருகில் போன போதே…
“இதைத்தானே தேட்ற…” அவனது இதயத்தைத் தொட்டுக் காட்டியவன்…
“உன் இதயத்தைத்தானே தேட்ற… என்னைக்கும் கிடைக்காது… கொடுக்கவும் மாட்டேனே” ரிஷி அவளிடம் விளையாடிக் கொண்டிருந்தான்… அடுத்து பாடவும் ஆரம்பித்தான்
”உன் கன்னக் குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன் உன் நெஞ்சுக்குழியில் மீசை முடி”
”அப்பா” கண்மணி ரிஷியிடம் கத்த முடியாமல்… தன் தந்தையைக் கத்திக் கூப்பிட… அவளின் அந்தக் குரலில் ரிஷி இப்போது பட்டென்று வாயை மூடி இருக்க
“என்னம்மா…” நட்ராஜ் கேட்ட போதே…
“பைக் சா…விய காணோம்பா…” என்றவளிடம்…
“மணி… சொன்னால் கேளு… வீம்பு பிடிவாதம்லாம் என் கூட, ரிஷியோட வச்சுக்க… உன் வயித்துல வளர்ற குழந்தையோட வச்சுக்காத… கம்பெனியிலருந்து பைக் ஓட்டிட்டு வந்திருக்க நீ… “ கோபமாக மகளைத் திட்டிக் கொண்டிருந்த போதே
அப்போது இலட்சுமியும் வந்திருந்தார்… கையில் சாப்பாட்டுத் தட்டோடு வந்தவர்….
“எதுக்கு கண்மணியைத் திட்டறீங்க சம்பந்தி…. குடிச்சுட்டு உட்கார்ந்திருக்கானே இவனைச் சொல்லனும்… காலையில இருக்கு இவனுக்கு கச்சேரி…” இலட்சுமி ரிஷியைத் திட்ட ஆரம்பித்த போதே
“ஹலோ… ஓல்டீஸ்… கெளம்புங்க… கெளம்புங்க … சும்மா நை நைனு… தட்டை என் பொண்டாட்டிகிட்ட கொடுத்துட்டு போங்க.. கெளம்புங்க” எனும் போதே இலட்சுமி
“ரொம்ப சந்தோசம்…” கண்மணி கையில் தட்டை திணித்து விட்டு…
”சம்பந்தி நீங்க கெளம்புங்க… அம்மா நீ பார்த்துக்க… “ என்றபடி இலட்சுமி கிளம்பிவிட்டார்…
நட்ராஜ் மட்டும் தயங்கி நின்றவர்… பின் என்ன நினைத்தாரோ
“தனியா போயிறாத கண்மணி… இல்ல காலைல நானே கூட்டிட்டு வந்து விட்றேன்… இப்போ வீட்டுக்குப் போறேன்… ஆனால் நான் தூங்க மாட்டேன்… முழிச்சுட்டுத்தான் இருப்பேன்…. எதுவா இருந்தாலும் என்னைக் கூப்பிடு” சொல்லிவிட்டு நட்ராஜும் சென்றிருக்க… அவர்கள் இருவரும் இடத்தைக் காலி செய்ததைப் பார்த்தபடியே… ரிஷி கண்மணியைப் பார்த்து கண்சிமிட்டியவனாக
”டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை
ஏ…அளவான உடம்புக்காரி…அளவில்லா கொழுப்புக்காரி… அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி”
கண்மணியை யோசிக்கவெல்லாம் விடவில்லை ரிஷி… உடனடியாக பாடலை பாடாமல் நிறுத்தியவனாக
“வா வா… செம்ம பசி…” என்றபடி சம்மணம் போட்டு அமர்ந்திருந்தவனுக்கு… அவனாகச் சாப்பிடும் எண்ணமே இல்லை என்பது போல… அவளைப் பார்த்தபடியே ரிஷி இருக்க… கண்மணி அவளையுமறியாமல் சென்றாள்… குழாயடிக்கு…
கை அலம்பி விட்டு வந்தவள்…. அவன் முன் அமர
”ஏய்…அழகான சின்ன பாப்பு…ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு… அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு கொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு…”
கண்மணியின் பொறுமை பறந்து கொண்டிருக்க… அது அவள் கண்களிலும் வந்து சேர்ந்திருக்க
“ஐயோ அம்மு… நோ ஆங்க்ரி பேர்ட் ரியாக்ஷன்… எனக்கு இதுதானே வருது… செவெண்டிஸ்…எயிட்டிஸ்…நைன்டிஸ் சாங்… மெலோடியஸ் சாங்லாக்ம் இப்போதான் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்… அதுவரை இந்த மாதிரி சாங்க்ஸ்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… அப்படி இப்படித்தான் இருக்கும்… நம்ம டேஸ்ட் அப்படி … ”
கண்மணி ஒன்றுமே சொல்லாமல்… தட்டை கையில் எடுக்க…
/*பல பெண்களைப் பார்த்தேன்.. அந்த கண்களைப் பார்த்தேன்..
இதுவரை என்னை என்னை ஜெயிச்சது யாரும் இல்லை
உன் திமிரைப் பார்த்தேன்.. அடி உன்னைப் பார்த்தேன்..
தொடாமலே.. படாமலே.. வளைத்தாயே.. இந்த வில்லை....
“ஏ சரிகமபதநீசா அட கமான் கமான் சே ஜல்சா”
தடாலுன்னு இதயம் வெளியே எகிறி குதிக்குது ரௌசா
ஜல்சா ஜல்சா ஜல்சா அதிரிடுதே நம் பல்ஸா*/
ரிஷி அவளை நேருக்கு நேராகப் பார்த்து பாட ஆரம்பித்திருக்க… கண்மணி அவனிடம்…
”எப்படி… சார் ஒரு படப் பாடல் மாதிரி எல்லா சாங்கையும் பாடி முடிச்சுட்டுத்தான் சாப்பிட வருவீங்களா… வெயிட் பண்ணட்டுமா… உங்க இசைக்கச்சேரியை எல்லாம் முடிச்சுட்டு சொல்றீங்களா…” அவளின் கோபம் அவள் நிறுத்தி உச்சரித்த விதத்திலேயே ரிஷிக்கு புரிந்திருக்க…. அதற்கு மேல் பாடுவானா என்ன…. பட்டென்று நிறுத்தி இருக்க… இப்போது கண்மணி சாதத்தை எடுத்து அவனுக்கு ஊட்டி விடப் போன போதே…
“நீ…” ரிஷி அவளைக் கேட்க… இப்போது அவனின் ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கி இருந்தது….
“சாப்பிட்டுட்டேன்… மதியமே அத்தை அனுப்பிட்டாங்க” அவனைச் சாப்பிடச் சொல்ல
“இப்போ… கேட்டேன்…” இரவு உணவை சாப்பிட்டாளா எனக் கேட்டதை சுட்டிக் காட்ட
”மணி என்ன… 11… நான் சாப்பிட்டுட்டேன்…சாப்பிடுங்க ரிஷி….” என்ற போதே… அவள் அவளாக இல்லை… மனமெங்கும் வலி மட்டுமே… எப்போது உடைவாளோ என்ற நிலையில் கண்மணி இருக்க…. அவளின் குரலும் ஙஞணநமன வாசிக்க ஆரம்பித்திருக்க
“நான் ஊட்டலை…. நீயே சாப்பிடேன்… எனக்காக… அட்லீஸ்ட் ஒரு வாய்… நீ சாப்பிடலைனா நான் சாப்பிட மாட்டேன்” அவள் கையை அவள் புறமே திருப்பியிருக்க… கண்மணிக்கு ஏற்கனவே முடியவில்லை… இதில் இவன் வேறு பிடிவாதம் பிடித்தான்…
”உனக்காகத்தாண்டி எல்லாம் பண்ணச் சொன்னேன்… இது பாரு… பொங்கல்… நெய் கம்மியா போட்டது… இங்க பாரு…. இது தேங்காய் சாதம்… உனக்குப் பிடிச்ச மாதிரி துருவல்ல பண்ணது… இது இது புளியோதரை… நம்ம அம்மன் கோவில் புளியோதரை அதே மாதிரி அதே ஃப்லேவர்ல… ஹான் தக்காளி சாதம்… இஞ்சி பூண்டு போடாமல் பண்ணியி்ருக்காங்க… மாங்கா சாதம்… நம்ம மரத்துலயிருந்து பறிச்சு பண்ணினது…அடுத்து என்ன…. லெமன் சாதம்…பெருங்காய வாடை வருதா… ஹ்ம்ம்… அடுத்து புதினா சாதம்…. தயிர் சாதம்… சாம்பார் சாதம்… இங்க இங்க பாரு இந்த வடகம் அம்மா கையாலேயே போட்டது… உனக்காக… பண்ணினாங்க… ஹார்ட் ஷேப் இருக்கா… நானும் ரித்வியும் போட்டோம்… உனக்கு அனுப்புனதுல வந்துச்சா”
கண்மணி அழுகையையை அடக்க பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருக்க
“அடுத்து நம்ம ஐட்டம்…. உருளைக்கிழங்கு காலி பிளவர் வறுவல்… வெண்டைக்காய் மண்டி… மாங்கா பச்சடி… வாழைக்காய் வறுவல்… சேனைக்கிழங்கு தேங்காய் சொதி… மொச்சை பிதுக்கு பயறு கூட்டு…பீன்ஸ்கேரட்கோஸ் பொறியல்..”
அவன் ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டிருந்த போதே… வேகமாக அங்கிருந்த அத்தனை உணவு வகைகளையும்… கொஞ்சம் கொஞ்சமாக எடுத்தவள்… ஒன்றாகச் சேர்த்து… அவனுக்காக ஒரு வாய் சாப்பிட்டவள்… முடியவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளி தண்ணீரைக் குடித்தவள்… இப்போது அவனுக்கு ஊட்ட ஆரம்பித்திருக்க… ரிஷியும் இப்போது சாப்பிட ஆரம்பித்திருந்தான்… அவனும் சாப்பிட்டு முடித்திருக்க அப்போதும் விட்டானா அவள் கணவன்
“பால் பாயாசம் அம்மு… விசேஷம்னா எங்க வீட்ல பருப்பு பாயாசம் தான் செய்வாங்க அம்மு… உனக்காக செய்யச் சொன்னேன்… சாப்பிடு… உனக்கு இது பத்துமான்னு தெரியலையே” சிறு குவளையில் இருந்த பால் பாயாசத்தை கவலையோடு பார்த்துச் சொன்னபடியே… ரிஷி அவளுக்கு ஊட்டி விட்டிருக்க… வேறு வழி இல்லாமல் அவனிடம் மறுக்க மனமில்லாமல் தன் உடல் உபாதையையும் காட்டிக் கொள்ளாமல் அவனுக்காக அவனுக்காக மட்டுமே கண்மணி அத்தனையும் சாப்பிட்டிருக்க… ரிஷியும் தன் பங்குக்கு பால்பாயாசத்தை சாப்பிட்டு முடித்திருந்தான்… முடித்தவன் அதோடு அப்படியே தான் அமர்ந்திருந்த இடத்திலேயே படுத்தும் விட்டிருக்க…
”மயங்கி விட்டானா…. ” பதட்டமானவள்…
“ரிஷி… ரிஷி…” அவனைக் கண்மணி பதறி எழுப்பி அமர வைத்தவளிடம் ரிஷி அவள் மீதே தொய்ந்து விழுந்திருக்க… வேகமாகத் தண்ணீரைப் புகட்டி… அவன் முகத்தைத் துடைத்து விட்டவள்… கண்களில் இருந்து கண்ணீர் வந்திருக்க…
“நான் ரூம்க்கு போறேன்…” என்றபடியே எழுந்தவன் அது முடியாமல் மீண்டும் உட்கார்ந்தான் தள்ளாடியபடியே…
கண்மணி தன் தந்தை வீட்டையும் பார்த்தாள்…. ரிஷி வீட்டையும் பார்த்தாள்… பெருமூச்சு விட்டவளாக…
“என் தோளைப் பிடிச்சுக்கங்க…. ரூம் சாவி எங்க… உங்ககிட்ட தானே இருக்கு” கண்மணி கேட்க.. ’ஆம்’ என்பது போல ரிஷி தலையை மட்டும் ஆட்டியிருக்க…
அவனை கூட்டிக் கொண்டு மாடிப்படி ஏற… ரிஷியும் கவனமாக அவள் மீது தன் சுமையை ஏற்றாமல் அவளோடு நடந்து வர… மாடி அறையின் முன் இருவரும் வந்து நின்றிருந்தனர்
“லெவல் 2 தாண்டி…. லெவல் 3 வந்துட்டேன் அம்மு” சம்பந்தமே இல்லாமல் ரிஷி உளர…. கண்மணி அவன் உளறலை எல்லாம் கண்டுகொள்ளாமல்
“கீ எங்க…” கண்மணி கேட்ட போதே… ரிஷி சட்டைப் பாக்கெட்… பேண்ட் பாக்கெட் எனத் தடுமாறித் தேடிய போதே … ரிஷி எப்போதும் அவன் பேண்ட் பாக்கெட்டில்தான் சாவியை வைப்பான்… தெரிந்தவளாக கண்மணி அவன் பாக்கெட்டில் தேடிய போதே… ஒரு நிமிடம் சிலையாக நின்று பின் சாவியை எடுத்தவள் முகத்தில் இப்போது கோபத்தோடு இறுக்கமும் சேர்ந்திருந்தது….
காரணம் அவள் கையில் அந்த மாடி அறை சாவி மட்டும் இல்லை…. அவள் பைக்கின் கீயும் இருந்தது… அவள் கோபத்தின் அளவும் அதிகரித்திருந்தது….
எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனையும் ஒன்றுமே சொல்லாமல் அறைக் கதவைத் திறந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சியும்…
அவர்களது படுக்கையில் இதய வடிவில் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க… அறை முழுவதும் மெழுகுவர்த்திகளும் வரிசயாக அடுக்கப்படிருந்தது…. கண்மணியின் இதயம் நின்று துடித்திருக்க…
ரிஷி அவளைப் பார்த்தபடியே… அப்போதும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல்…
“உள்ள வா அம்மு… ” அவளைப் பிடித்து உள்ளே இழுத்தவன்….
“லெவல் 4… கொஞ்சம் கஷ்டமான ஸ்டேஜ் தான்” என்றவன் கண் சிமிட்டியபடியே கதவையும் அடைத்திருக்க… கதவின் மேல் சாய்ந்தபடி அவளை சற்று தள்ளி நிற்க வைக்க…
இப்போது அவன் சொன்ன லெவல் கணக்குப் புரிந்திருந்தது….
“ப்ச்ச்… பயப்படாத… சாரி சாரி… நீ பயப்பட்ற ஆள் கிடையாதே… சோ கோபப்படாத… இதெல்லாம் சும்மா… நான் ஒண்ணும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… இன்னைக்கு நீ என் கூட இருக்கனும் அவ்ளோதான்” என்றவன் குரலில் சிறு தடுமாற்றம் கூட இல்லை…
கண்மணி அவனைக் கோபத்துடன் பார்த்த போதே… முறைத்த போதே
“என்னடி… என்ன முறைக்கிற…” அவளைத் தன்னோடு இழுத்தவன்… அவளை அணைத்த அதே வேகத்தில் அறைக்கதவின் தாழ்ப்பாளையும் போட்டிருக்க… கண்மணி அவனை விட்டு விலகவெல்லாம் இல்லை…
குனிந்து அவளைப் பார்த்தவன்…
“ஹலோ… இந்தக் கண்மணிகாகவெல்லாம் யாரும் ஃபீல் பண்ணலை…” என்றபடியே
ரிஷி அவள் மாங்கல்யத்தை வெளியே எடுத்துப் போட்டவனாக
”உனக்காகவெல்லாம் இவ்ளோ கஷ்டப்படலை… நீ போனதுக்காகவும் நான் ஃபீல் பண்ணலை… இது இதுக்காத்தான்…. இந்தத் தாலி என்னோட முதல் உழைப்பு… இதையும் எடுத்துட்டு போயிட்டியே…” ரிஷி நக்கலாகக் பேசிக் கொண்டிருக்கும் போதே
கண்மணி குமட்ட ஆரம்பித்திருக்க… ரிஷியை விட்டு விலக முயல…
“ஏய் ஏய்… என்னாச்சு… வாமிட் வருதுனா எடு….” ரிஷி சுதாரித்தபடி… பதட்டத்தோடு அவளை இலகுவாக்க முயல… வேகமாக அவனை தள்ளி விட்டவள்… வேகமாக குளியலறைக்குள் சென்று விட… ரிஷியும் அவள் பின்னாலே செல்ல…
சற்று முன் அவள் சாப்பிட்ட அத்தனையும் மொத்தமுமாக வெளியே வந்திருக்க… வேகமாக ரிஷி அவளைப் பிடித்துக் கொள்ள… நிற்க முடியாமல் தள்ளாடிய கண்மணியும் அவனைப் பிடித்துக் கொண்டபடியே… மிச்சம் மீதியையும் வெளியே எடுத்து முடித்திருக்க… மனைவியை கவனிப்பது இப்போது கணவனின் முறையானது…
“ஓகேவா… இப்போ எப்படி இருக்கு” அவளை அழைத்து வந்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தபடி தண்ணீரைக் கொடுத்தபடியே ரிஷி கேட்க…
ஏதோ பேச வாயெடுத்தவள்… அது முடியாமல் மீண்டும் குளியலறைக்கு ஓடி இருக்க… சற்றுமுன் குடித்த தண்ணீரும் மொத்தமுமாக வெளியே வந்திருக்க…
“ப்ச்ச்… ஏண்டி… உள்ள போறதை எல்லாம் இப்படி வெளிய எடுத்தேன்னா… என்ன அர்த்தம்… எப்படித்தான் குழந்தைக்குச் சாரும்” இப்படி வாந்தி எடுக்கின்றாளே என்ற கோபம்… அதே நேரம் ரிஷி தந்தையாக மாறி இருக்க…
அவ்வளவுதான்… கண்மணி பத்ரகாளி ஆகி விட்டாள்
”அப்போ நான் முக்கியம் இல்லை… அப்படித்தானே” தளர்ந்து நின்றிருந்தாலும்… குரலில் அத்தனை கோபம்… ரிஷியின் அக்கறை அவளுக்கானது மட்டும் அல்ல என்ற பொறாமைக் கோபம்… அதோடு விட்டாளா என்ன
“எல்லாம் உன்னாலதாண்டா… வந்துட்டான் அக்கறையா கேட்கிறதுக்கு” தலையில் கை வைத்தபடி கண்மணி அங்கேயே அமர்ந்து விட்டிருக்க
“ஹ்ம்ம்.. இந்தக் கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை… எல்லாம் என்னாலதான்… யார் இல்லேன்னு சொன்னா… அப்போ என் கூட இருந்து என்னோட சண்டை போடு… தினம் சண்டை போடு… வாமிட் எடுக்கிற ஓவ்வொரு டைமும் சண்டை போடு…. சட்டையைப் பிடிச்சுக் கேளு… எல்லாம் உன்னாலதாண்டான்னு” இயல்பாகச் சொன்னபடியே அவள் திமிறிய போதும் அவளைத் தூக்கிக் கொள்ள…
“நீ ஃபர்ஸ்ட் இந்த சட்டையைக் கழட்டுடா… இல்லை இன்னைக்கு ஃபுல்லா நான் வாமிட் எடுத்துட்டுத்தான் இருப்பேன்… என்னை விடுடா” கண்மணி பொறுக்க முடியாமல் கத்த ஆரம்பித்திருக்க…. அதில் ஒருமையும் உரிமையுடன் வந்திருந்தது அவளையுமறியாமல்… அந்தரங்க நிமிடங்களில் மட்டுமே கண்மணி ரிஷியை அப்படி அழைப்பாள்… இன்று உச்சக்கட்ட கோபத்தில் அவளை மறந்த நிலையில் அவள் உரிமையின் எல்லை மீறி இருக்க
“சாரி சாரி… 2 மினிட்ஸ்” என்றபடியே அவளை படுக்கையில் அமர வைத்தவன்.. அடுத்த சில நிமிடத்தில் தன் மேல் தண்ணீரை ஊற்றி… உடை மாற்றி அவள் அருகே வந்திருக்க…
“ஹ்ம்ம்… வேண்டாம் தாத்தா… தெரு முனைக்கு வந்ததும் கால் பண்ணச் சொல்லுங்க… நான் வந்துறேன்” அலைபேசியில் பேசி கொண்டிருந்த போதே… அவளின் போனைப் பறித்தவன் கண்களில் அப்படி ஒரு கோப வெறி
“யார்ட்ட்டடி பேசிட்டு இருக்க”
“ரிஷி… கோபப்பட வேண்டியது நான்… நான் போகனும் விடுங்க” என்றபடியே எழுந்தவளிடம்…
”விட முடியாது… “ என்றவன்… அவளை தன்னோடு சேர்த்து அணைத்த படியே
“நான் உன்னை விட முடியாதுடி… நீ இல்லாமல் என்னால இருக்கவே முடியலடி… ஒவ்வொரு நிமிசமும் நரக வேதனையா இருக்குடி…”
“ரிஷி…” அவனை விட்டு விலக முயன்றாள்தான் அவளாலும் விலக முடியவில்லை… அவன் மூர்க்கத்தனமாக அவளை பிடித்து வைத்திருக்க… மூச்சுக்கே திணற ஆரம்பித்திருந்தாள் கண்மணி
“ஏண்டி இல்லாததை எல்லாம்… நடக்காததை எல்லாம் கற்பனை பண்ணிக்கிற… ப்ளீஸ்டி… நம்ம அழகான நிகழ்காலத்தை அழிச்சுட்டு இருக்கடி”
“ரிஷி… நான் போகனும்…” என்றவளை ரிஷி விட்டால்தானே… கண்மணி அவனோடும்… கூடவே தன் நிலையோடும் போராடிக் கொண்டிருக்க… அப்போது மாடி அறைக்கதவு தட்டப்பட… ரிஷியோ இன்னும் மூர்க்கனாக மாறிக் கொண்டிருந்தான்
“நான் திறக்க மாட்டேன்… அது யாரா இருந்தாலும் பரவாயில்லை… உன்னை என்னை விட்டுப் போக விட மாட்டேன்” ரிஷி அவளை தனக்குள் வலுக்கட்டாயமாக வசப்படுத்துவதிலேயே குறியாக இருக்க
“ரிஷி…” நட்ராஜின் குரல் கேட்டது…
ரிஷிக்கும் இப்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை… கண்மணியுமே பதில் சொல்லாமல் அமைதியாக அவனிடம் திமிறிக் கொண்டிருக்க
”ரிஷி… கண்மணிகிட்ட பேசனும்… கதவைத் திற…” நட்ராஜின் குரலில் கொஞ்சம் கோபமும் கலந்திருக்க
“காலைல பேசிக்கங்க…. நீங்க இப்போ போகலாம்” ரிஷி இப்போது பதில் கொடுத்திருக்க
“ரிஷி… கதவைத் திறங்கன்னா… திறங்க… மணி… மணிடா… நீ சொல்லுடா நான் போகட்டா ” நட்ராஜின் குரல் பதட்டத்துடன் வந்ததோடு மட்டுமல்லாமல் கண்மணியை அழைத்து அவளிடம் பேச ஆரம்பித்திருக்க…
“ஏய்… மாமாவைப் போகச் சொல்லுடி… ஒண்ணும் இல்லைனு சொல்லி போகச் சொல்டி… நான் உன்னை என்ன பண்ணிருவேன்னு இப்படி பதறுறாரு… எல்லார்கிட்டயும் எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கிற” ரிஷியின் குரலில் தடுமாற்றமும் அதே நேரம் ஆவேசமும் வந்திருந்தது…
”ரிஷி… உன் கோபத்தையோ… பிடிவாதத்தையோ… முரட்டுத்தனத்தையோ காட்ற நேரம் இது இல்லை…. அவ தனியாள் இல்லை ரிஷி… புரிஞ்சுக்கோ ரிஷி… கதவைத் திற ரிஷி… நீயும் நிதானத்தில இல்லை…. கதவைத் திற முதல்ல ”
கண்மணி நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவளாக… தன் தந்தையையை கீழே போகச் சொல்ல நினைத்தவளாக…
“அப்பா…” என ஆரம்பித்த போதே… ரிஷியின் கண்களில் அப்படி ஒரு உக்கிரம்… ருத்ர தாண்டவம் ஆடாத குறைதான்… தன்னைப் பற்றித் தவறாகச் சொல்லப் போகிறாளோ என்ற பதட்டத்தில்… கண்மணியைத் தவறாகப் புரிந்து கொண்டவனாக… சட்டென்று அவள் வாயை மூடியவன்…
“நான் உன்னை என்னடி பண்ணேன்… அப்பான்னு கதறுர..” அவன் கண்மணியிடம் சீற ஆரம்பித்திருக்க… நட்ராஜோ இப்போது கதவை உடைக்க ஆரம்பித்திருக்க… இப்போது இலட்சுமி… ரிதன்யா… ரித்விகா என அனைவரும் மேலே வந்திருக்க… ஏன் குடித்தனக்காரர்கள் கூட வெளியில் வந்திருக்க…
“மணி…. வாமிட் எடுத்தது போலம்மா… ரிஷித் தம்பி கூட ஏதோ சத்தமா கோபமா பேசிக்கினே இருந்துச்சும்மா…” மாடிக்கு ஏறப் போகும் போதே இலட்சுமியின் காதில் கீழ் வீட்டுக் குடித்தனக்காரர்களும் போட்டு கொடுத்திருக்க…. இலட்சுமி பதட்டத்துடன் வந்திருந்த போதே கண்மணி கதவைத் திறந்திருந்தாள் இப்போது… ஆனால் ரிஷியோ தான் நின்ற இடத்தை விட்டு நகராமல் அப்படியே கல் போல் சமைந்து நிற்க….
கண்மணியோ… ஒன்றும் காட்டிக் கொள்ளாமல்
“நான் கிளம்புறேன்… எல்லோரும் கிளம்புங்க” என்றவாறு வெளியே வர முயல… கண்மணியின் புடவையில் இருந்த ஈரத்தைப் பார்த்த இலட்சுமி… பதட்டத்துடன்… அவளை மேலும் கீழும் பார்வையால் அலசி இருக்க… கண்மணியும் அவர் பார்வை புரிந்தவராக
“வாமிட் எடுத்துட்டேன் அத்தை… அதுதான்…” என்றபோதே… அங்கிருந்த மொத்த நபர்களின் பார்வையும் அறைக்குள் விழ… தரையில் அவர்களின் படுக்கையும்… அதன் மெத்தையில் இருந்த இதய வடிவிலான ரோஜா இதழ் அலங்காரமும்… அவர்கள் பார்வையில் நிறைந்திருந்தது
கண்மணி இப்போது திரும்பி ரிஷியைக் கோபப் பார்வை பார்த்து விட்டு… மற்றவர்களின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தர்மசங்கடமாக தலையைக் குனிய… ரிஷியோ அப்படி எல்லாம் இல்லை… அனைவரையும் நேர்ப் பார்வை பார்த்தவனாக
“இப்போ என்ன ஆச்சுனு… .எல்லோரும் இவ்ளோ பதறி வர்றீங்க…” ரிஷி பேச ஆரம்பித்த போதே
“டேய்… உன்னை… என்ன நினச்சுட்டு இருக்க..” இலட்சுமி கோபத்துடன் கத்த ஆரம்பித்திருக்க…
“என்ன … என்ன… எல்லோரும் ட்ராமா பண்றீங்களா… “
“யார் நீயா நாங்களா… புள்ளத்தாச்சி புள்ளைனு கூடப் பார்க்காமல் அவள சுத்த விட்டுட்டு இருக்க… ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனால் என்னடா பண்ணுவ…”
“என் பொண்டாட்டிக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும்… நீங்க கெளம்புங்க” ரிஷி அவன் தாய்க்கு பதிலடி கொடுக்க
“டேய் குடிச்சுட்டு ஆட்டம் போட்டுட்டு… நீ அவளைப் பார்த்துக்குவியா… உன்னை” எனும் போதே…
“அத்தை அவர் குடிக்கலை…” கண்மணி வேகமாகச் சொல்ல…
“இந்த நாடகம் வேறா” என்பது போல இலட்சுமி மகனை ஆயாசமாகப் பார்த்த போதே
“அண்ணே… அப்போ நீ குடிக்கலையா…” ரித்விகாவின் குரலில் அவ்வளவு சந்தோசம்… தன் அண்ணன் குடிக்கவில்லை என்பது மட்டுமே அவளுக்கு அத்தனை சந்தோசத்தையும் கொடுத்திருக்க… அது அவள் குரலிலும் வந்திருக்க
“செம்ம.. செம்ம.. சூப்பர்னா” என்றபடி அவனது மெத்தையைக் காட்டி யாருக்கும் தெரியாமல் தன் அண்ணனுக்கு பாராட்டு மழையை சைகையால் கொடுக்க
“ஷ் ஷ்…” தன் தங்கையை யாருக்கும் தெரியாமல் அடக்கிக் கொண்டிருந்தான் ரிஷி… அதுமட்டுமல்லாமல்…. மீண்டும் கண்மணியைத் தன் அருகே இழுத்து வைத்துக் கொண்டவன்…
“சரி சரி… கெளம்புங்க… வந்தீங்கள்ள.. பார்த்தீங்கள்ள.. பேசுனீங்கள்ள… இனி என்ன கிளம்புங்க…” சாதாரணமாக அவர்களைப் பார்த்துச் சொன்னவன்… தன் மனைவியின் காதிலோ
“உனக்கு இருக்குடி… என்னை வில்லன் மாதிரி அத்தனை பேர் முன்னாடியும் நிற்க வச்சுட்டதானே… அதுக்கு தனி மண்டகப்படி இருக்கு” சொன்னபடியே… அவளை முறைத்துக் கொண்டிருந்த போதே… அவனின் கோபத்தீக்கு இன்னும் எண்ணெய் விட்டாற் போல…நாராயணனும்… அர்ஜூனும் கண்மணி இல்லத்துக்குள் வந்திருந்தனர்…
“என்னாச்சு… என்னாச்சு… ஏன் எல்லோரும் கூட்டமா நிக்கிறீங்க…” வரும் போதே நாராயணன் பதறியபடி மூச்சிறைத்தபடி பதட்டத்துடன் மாடி ஏறி வந்தவர்… பேத்தியைப் பார்த்ததும் தான் நிம்மதி ஆனார்… பேத்திக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்து கொண்டதில் அவர் முகத்தில் இருந்த பதட்டமும் மறைந்திருந்தது….
“ஷ்ஷ்…. ஷப்பா… அடுத்த பஞ்சாயத்தா…. ரிஷி உனக்கு வந்த சோதனை… ஒரு கல்யாண நாளை நிம்மதியா பொண்டாட்டியோட கொண்டாட விட்றாங்களா…” தனக்குள் முணங்கிய போதே… அர்ஜூன் அவன் முன் வந்து நின்றவன்… ரிஷியிடம் பேசாமல்
“என்னாச்சு கண்மணி…“ கண்மணியிடம் கேட்ட போதே அவன் பார்வை அறைக்குள் சென்றிருக்க… அந்த அறையின் கோலத்தையும்… ரிஷியையும் ஒரு சேர அவன் பார்வை எரித்திருக்க… ரிஷி அதற்கு மேல் சும்மா இருப்பானா… பொங்கி விட்டான்…
“ஆமா… என்ன நினச்சுட்டு இருக்கீங்க எல்லோரும்… என்னமோ குற்றவாளிக் கூண்டுல நிறுத்தி வச்சு ஆளாளுக்கு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க… நான் கேட்கனும் உங்களை எல்லாம்…”
“உங்க எல்லாருக்கும் புருசன் பொண்டாட்டி ரூம் முன்னால என்ன வேலை… எங்க தனிமையைக் கெடுக்க உங்க எல்லோருக்கும் யார் ரைட்ஸ் கொடுத்தது…”
“என் பொண்டாட்டி… என்னோட கல்யாண நாள்… என்ன நடக்கும் எங்களுக்குள்ள… வந்துட்டாங்க… இதுல ஆயிரத்தெட்டு கேள்வி வேற… ஒவ்வொருத்தவங்களும் தனியா… டிஸ்கஸ்ட்டிங் டிஸ்டர்பிங் “
இலட்சுமி இப்போது…
“என்னடா வாய் ரொம்ப நீளுது… உன் பொண்டாட்டிதான் யார் இல்லேன்னு சொன்னா… அவ முழுகாம இருக்காள்ள…”
“ரிஷி… அவ உன் கூட சண்டை போட்டுட்டு இருக்கிற சூழ்நிலைல… இதெல்லாம் தேவையா…” நட்ராஜ் தன்மையாகச் சொன்னார்…. இலட்சுமிக்கு மாறாக…
”சண்டைனு தெரியுதுதானே… புருசனா என் பொண்டாட்டிய எப்படி சமாதானப்படுத்தனுமோ அந்த வழில அவகிட்ட பேசிட்டு இருந்தேன்… சமாதானப்படுத்திட்டு இருந்தேன்… ஆமால் நீங்க எதுக்கு கதவைத் தட்டுனீங்க… உங்க பொண்ணை என்கிட்ட இருந்து காப்பாத்த வந்தீங்களா… உங்க பாசத்தையும் உங்க டைமிங்கயும் நெனச்சு எனக்கு புல்லரிக்குது மாமா… எல்லாம் என் நேரம்” நெற்றியில் அடித்துக் கொண்டபடியே… அப்படி ஒரு ஆத்திரத்துடன் பேசியவன்… தன் தாயிடம் திரும்பி
“அம்மா… எனக்குத் தெரியாதா என் பொண்டாட்டி முழுகாம இருக்கான்னு… அவகிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியாது பாருங்க…… என் பொண்டாட்டி மேல… என் குழந்தை மேல எனக்கு இல்லாத அக்கறையா உங்களுக்கு எல்லாம் வந்துரும்…”
இலட்சுமியிடம் ரிஷி பேசிக் கொண்டிருக்கும் போதே
“அதுதான் பார்த்தோமோ… உன் அக்கறை எல்லாம்… அர்த்த ராத்திரில அவள ஓடி வர வச்சு… இதோ இங்கயும் அவளைக் கூட்டிட்டு வந்து…. இந்தக் கருமம் வேற..” அர்ஜூன் அவனது அறையைச் சுட்டிக் காட்ட
இப்போது அவன் முன்னே வந்த ரிஷியின் கண்களின் கோபச் சிவப்பு அர்ஜூனை எரித்து விடும் அளவுக்கு ஆக்ரோஷமாக மாறி இருக்க
“என்ன கருமம்… அப்படி என்ன பண்ணிட்டேன்… என் பொண்டாட்டி… எங்க ஃபர்ஸ்ட் அனிவெர்சரி… என் பொண்டாட்டி அவ என்கிட்ட கேட்டதை நான் பண்ணியிருக்கேன்… இதுல என்ன எனக்கு அசிங்கம்… இல்லை இதுல நீங்க என்ன அசிங்கத்தைப் பார்த்துட்டீங்க… சொல்லப் போனால் நீங்க எல்லோரும் தான் அசிங்கப்படனும்… வெட்கப்படனும்… புருசன் பொண்டாட்டி தனியா இருக்கிற ரூம்ல அதுவும் இந்த நேரத்துல வந்து கதவைத் தட்டினதுக்கு… இப்படி அவங்க ரூம் முன்னாடி நிக்கிறதுக்கு…” உச்சஸ்தாயில் கத்தியவன்… அடுத்த நொடியே
“சரி சரி கெளம்புங்க… எங்க ரெண்டு பேருக்குமே ஏகப்பட்ட பஞ்சாயத்து தீர்க்க வேண்டியது இருக்கு… டைம் இப்போவே மணி 1 ஆகிருச்சு… எல்லாம் பேசித் தீர்க்கனும்… அப்புறம் உங்க பேத்தி இனிமேல் உங்க வீட்டுக்குலாம் வர மாட்டா… அதெல்லாம் நான் இன்னைக்கு நைட்டுக்குள்ள எங்க சண்டை எல்லாம் முடிச்சு சமாதானமாயிருவோம்… சோ எல்லோரும் கிளம்புறீங்களா… அட்லீஸ்ட் ஃபிஃப்டி கேண்டிலாவது ஏத்தனும்…” ரிஷி அலட்சியமாகச் சொன்னவன்
தன் மனைவியை அணைத்துக் கொண்டபடி….
“எல்லோரும் தள்றீங்களா… கதவை மூடனும்” என்று சொல்ல… கண்மணியோ இப்போது நிலை மீண்டவளாக வேகமாக அவனை விட்டு விலக முயல…
”டேய் அவதான் சங்கடப்பட்றாள்ளடா… ஏண்டா அவகிட்ட வம்பு பண்ற…” இலட்சுமியின் குரலில் கலக்கமும்… தாயாக வருத்தமும் வந்திருக்க
“அம்மா… அவ என் பொண்டாட்டி… அவகிட்ட நான் வம்பு பண்ணாமல் வேற யார் பண்ணுவா… கலகம் பிறந்தால்தான் நன்மை கிடைக்கும்… இல்லை இப்போ என்ன நடந்திரும்னு இவ்ளோ பதறுறீங்க… பெரியவங்களா இருக்கீங்கன்னு பொறுமையா பேசிட்டு இருக்கேன்… நான் பார்த்துக்கிறேன் போங்க…” விலகிய தன்னவளிடம் தன் அணைப்பை இறுக்கியபடியே
“ஏய் ரிது… ரித்வி… கெளம்புங்க… கீழ போங்க” தங்கைகளை அதட்டி அவர்களை கீழே போகச் சொல்ல… அவர்கள் அங்கிருந்து போகும் வரை பொறுமையாக இருந்தவன்…
“உங்களுக்கு எல்லாம் தனியா சொல்லனுமா… சின்னப் புள்ளைங்க…. அவங்களை அதட்டி அனுப்பிட்டேன்… உங்க எல்லோருக்கும் எப்படி சொன்னா புரிஞ்சுக்குவீங்கன்னு தெரியலையே” ரிஷி கடுப்பும் அலட்சியமுமாக பேசிய போதே…
“தாத்தா வாங்க போகலாம்” கண்மணி அவனிடமிருந்து விலகி… நாராயணனிடம் வர எத்தனிக்க…
“அம்மு… பேசிட்டு இருக்கேன்ல… நீ எங்க போற” அவளை எட்டிப் பிடித்தவன் மீண்டும் தன்னுடன் நிறுத்தி வைத்திருக்க முயற்சிக்க
“ரிஷி எல்லை மீறி போயிட்டு இருக்க… அவளுக்குத்தான் பிடிக்கலைனு விலகுறாள்ள… விட்றா அவளை” அர்ஜூன் அவன் முன் வந்திருக்க
“பிடிக்கலைனு உன்கிட்ட வந்து சொன்னாளா… என்னைப் பிடிக்கலைனு… இந்த ரிஷியை… அவளோட ரிஷிக்கண்ணாவைப் பிடிக்கலைனு உன்கிட்ட வந்து சொன்னாளா... நான் ஏன் உன்னைப் பைத்தியக்காரன்னு சொல்றேன்னு புரியுதா” என்று கோபத்தில் சொன்னவன் எள்ளலில் முடித்தபடியே… கண்மணியிடம் திரும்பியவனாக
”ஏன் அம்மு அப்படியா சொன்ன… நீ பிடிக்கலைனு ஸ்டார்ட்டிங்க்ல சொல்வேன்னு தெரியதுல்ல இவனுக்கு” தன் மனைவியின் மீதான தன் உரிமையின் உச்சக்கட்டத்தை அர்ஜூனிடம் காட்டி ஆக வேண்டும் என்ற ஒரே பிடிவாதத்தில் ரிஷி எல்லை மீறி வார்த்தைகளை விட்டிருக்க… கண்மணி அவனை பார்வையால் எரித்த போதே… அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்
“இப்போ நான் டெமோ காட்டவா… அவளுக்கு என்னைப் பிடிக்குமா பிடிக்காதான்னு… பார்க்குறியா” என்றபடி கண்மணியிடம் ரிஷி நெருங்கிய போதே… இலட்சுமி வேகமாக மகனைப் பிடித்து தடுத்து நிறுத்தியவர்
“விட்றா அவளை” ரிஷியைக் கண்டிக்கும் குரலில் மிரட்ட
“ம்மா… அவன் ஒரு பைத்தியக்காரன் அவன் தான் அப்படி பேசுறான்னா…. நீங்க வேற… கெளம்புங்க… நீ வா அம்மு…” என்றபடியே கண்மணியைப் பார்த்தவன்…. அப்போதுதான் கண்மணி பேசாமலேயே இருப்பதையே உணர்ந்தவனாக
“ஏய் சொல்லுடி… எல்லாரும் என்னை நிக்க வச்சு கேள்வி கேட்கிறாங்க… நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன்… என்னமோ ஒண்ணுமே தெரியாத… உலகமே அறியாத அப்பாவி மாதிரி நின்னுட்டு இருக்க… உனக்கு என்னமோ பேசவே தெரியாத மாதிரி இவங்க எல்லோரும் உனக்காகப் பேசுறாங்க… உனக்கு என்னைப் பிடிக்கலைனு வேற சொல்றாங்க” கண்மணியை உலுக்க… அப்போதும் அவள் பதில் பேசாமல் நின்றிருக்க… அவளின் மௌனத்தில் அவன் உச்சக்கட்ட கோபத்திற்கு செல்ல ஆரம்பித்திருந்தான்
“என்னடி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற… சொல்லுடி… நான் உன் உயிர்னு…” கண்மணியிடம் உச்சஸ்தாயில் கத்த… கண்மணியோ அவன் நிலைக்கு மாறாக… வெகு அமைதியாக இருக்க
“சும்மா இருந்தவன் கிட்ட… ரிஷிகண்ணா… ரிஷிச் செல்லம்… ரிஷிடான்னு பேசிப் பேசியே பைத்தியக்காரனா மாத்திட்டு…
”நானாடி பிரம்மச்சாரி சம்சாரி கதைலாம் சொன்னேன்… ஜோசியம் பார்த்தேன்… பத்து பிள்ளை… ரெண்டு பிள்ளை கதை சொன்னேன்”
“நீ சிரிக்கனும்… பழைய ரிஷியாகனும்னு…. அதுமட்டும் எனக்குப் போதும்னு… அழகழகா வாய மூடாமல் பேசிட்டு… ஒண்ணுமே பேசாமல் இருந்தா என்னடி… இப்படி என்னை புலம்ப வச்சுட்டு நீ மட்டும் அமைதியா இருந்தால் என்னடி அர்த்தம்… சொல்லுடி இவங்ககிட்டலாம் நான் இல்லேன்னா நீ இல்லேன்னு சொல்லு… நீ எம்மேல எவ்ளோ காதல் வச்சுருக்கேன்னு சொல்லுடி… ”
“பேசுடி… உனக்காகத்தான் இதெல்லாம் பண்ணியிருக்கேன்னு சொல்லுடி… நீ என்கிட்ட கேட்டதுனாலதான் இதெல்லாம் நான் பண்ணேன்னு சொல்லுடி இவங்ககிட்ட…”
தன் அறையைச் சுட்டிக் காட்டியவன்
”இதெல்லாம் நீ என்கிட்ட கேட்டியா இல்லையா… இன்னும் என்னென்ன இன்னைக்கு வேணும்னு கேட்டேன்னு பட்டியல் போடவா…. சென்சாரே இல்லாமல் சொல்வேண்டி… என் அம்மா… உன் அப்பா… உன் தாத்தா இருக்காங்கன்னு கூட பார்க்க மாட்டேன்…” என்று முடிக்கவில்லை…. ரிஷியின் கன்னங்களில் பளாரென்ற அறை அவன் அன்னையின் கைகளினால் கிடைத்திருக்க… ரிஷியின் அத்தனை ஆக்ரோஷ வார்த்தைகளும் அந்த நொடியே நின்றிருக்க… கண்மணியின் உடலும் விறைத்திருந்தது…
“என்னடா… நானும் பார்த்துட்டே இருக்கேன்… வரம்பு மீறி பேசிட்டு போயிட்டே இருக்க… அவ உன் பொண்டாட்டினா… இஷ்டத்துக்கு பேசுவியா… இவ்ளோ பேசுறேல… உன் பொண்டாட்டி பொண்ட்டாட்டினு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றதானே.. அவளை விட்றா… உன் பொண்டாட்டிக்கு உன் கூட இருக்க இஷ்டம்னா… அவளை விட்டு தள்ளி நில்லு… அவ போகாமல் உன் கூட நிற்கட்டும்… அப்புறமா நீ என்ன பேசுனாலும் நான் கேட்கிறேன்…” இலட்சுமியும் ஆவேசத்துடன் கேட்க…
ரிஷி அப்போதும் அவளை விட மனமில்லாமல் நின்றவனின் கைகளை இலட்சுமிதான் கண்மணியிடமிருந்து பறித்து அவளைத் தள்ளி நிறுத்தி இருக்க… அடுத்த நிமிடம் கண்மணி… அவனை விட்டு விலகி வேகமாக எட்டுக்கள் வைக்க… ரிஷி வேகமாக அவளை நோக்கி நகர முயன்ற போதே…. தன் மகனை இலட்சுமி பிடித்துக் கொண்டார்
“அம்மா… அவ போறாம்மா… என்னை விடுங்கம்மா“ ரிஷியின் குரல் உடைந்திருக்க… கண்மணி திரும்பி… ரிஷியைப் அவன் கைகளை… இலட்சுமியிடம் சிக்கிக் கொண்ட அவன் கைகளை மட்டுமே பார்க்க…
ரிஷி அவன் தாயின் கரங்களின் கட்டுப்பாட்டில் நின்று கொண்டிருக்க… முதன் முதலாக கண்மணிக்குள் ஒரு நிம்மதி… அதன் பின் ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை… வேகமாக இறங்கி… அவன் பார்வையில் இருந்து மறைந்திருந்தாள்…
ரிஷி எத்தனை நிமிடங்கள் தன் அன்னையின் கைப்பிடிக்குள் கட்டுப்பட்டு நின்றானோ அவனுக்கே தெரியவில்லை… தன் நிலை உணர்ந்து மீண்டு வந்தவன்… வெறி கொண்டவனாக…. தன் தாயின் கைகளை உதறி விட்டு… வேக வேகமாக இறங்க ஆரம்பித்திருக்க…
“ரிஷி…” நட்ராஜ் அவன் பின்னே ஓட ஆரம்பித்திருக்க… இலட்சுமியோ தன் மகனை… அவன் நிலையைப் பார்த்து வெறித்தபடி அப்படியே நின்றிருந்தார்…
---
வேகமாக கீழே இறங்கி வந்தவன்… கண்மணி இல்லத்தின் வெளியே வந்து நின்றவன்… கண்மணியைக் காணாமல் அந்தத் தெருவின் முனைக்கு சென்று பார்க்க… நாராயணனின் கார் அப்போதுதான் புறப்படத் தயாராகி இருக்க
“கண்மணி… கண்மணி…” ரிஷி அழைத்த போதே… கண்மணி அமர்ந்திருந்த வாகனமும் வேகத்தோடு கிளம்பியிருந்தது….. ரிஷியின் குரலும் காற்றோடு மட்டுமே கலந்தது…
“டேய் அர்ஜூன்… உன்னைச் சாகடிச்சுருவேண்டா… உன்னை… நிறுத்துடா காரை…” காரின் பின் ஓட முயற்சித்தவனை…. நட்ராஜ் உடும்புப் பிடியாக பிடித்து மடக்கியிருக்க… ரிஷி அப்படியே தளர்ந்து அமர்ந்து விட்டிருக்க…. நட்ராஜ் இப்போது அவனைப் பிடித்து எழும்ப முயற்சித்த போதே
“விடுய்யா… எல்லாம் உன்னால தான்… நீ ஒழுங்கா இருந்திருந்தேன்னா எனக்கு இந்த நிலைமையே இன்னைக்கு வந்திருக்காது…. உன் பொண்டாட்டி இல்லைனா நீ பைத்தியக்காரனா மாறனுமா என்ன… என்னை விட்டுட்டு போயிட்டா… எல்லாம் உன்னாலதான்…” ரிஷி கண்மணி போன திசையையே பார்த்தபடியே புலம்ப ஆரம்பித்திருந்தவன்… அப்படியே நட்ராஜின் மேல் சாய்ந்தும் விட்டான்…
---------
கிருத்திகா இல்லம்…
”எல்லாரும் எனக்கு அட்வைஸ் பண்றீங்க…. ஏன் அவளுக்குப் பண்ண மாட்றீங்க… என்கூட போய் வாழுன்னு ஏன் அட்வைஸ் பண்ண மாட்றீங்க…” ரிஷியின் குரல் கிருத்திகா இல்லத்தின் வாசல் கதவைத் தாண்டி கேட்டது… நட்ராஜும்… இலட்சுமியும் கிருத்திகாவின் முகத்தையே பார்த்திருந்தனர் கவலை தோய்ந்த முகத்தோடு.
”இங்க பாருங்க ஆண்ட்டி… இந்த நானும் என் புருசனும்… பிரிஞ்சுதான் இருக்கோம்… மனசு ஒண்ணா இருந்தா எவ்ளோ தூரம் பிரிஞ்சு இருந்தாலும்… அது ஒரு பிரச்சனையே இல்லை… இந்த அரதப்பழசான தத்துவமெல்லாம் எனக்கு வேண்டாம்… என் கண்மணி எனக்கு வேணும்… என் கூட அவ வந்து இருக்கனும்…”
”சரி அவகிட்டயே போய்ச் சொல்லிக் கூட்டிட்டு வந்துக்கோ” கிருத்திகா நிதானமாக…. அமைதியாகச் சொல்ல
“எங்க… அங்க போனா… அந்தக் குடும்பம் அவகூட பேசுறதுக்கே மெஷர்மெண்ட் வச்சு … கேமரா ஆங்கிள்ள நிக்க வச்சு பேசச் சொல்றாங்க… இவங்க என்னடான்ன…. என்னமோ நான் அவளை… வில்லன் மாதிரி எனக்கு அட்வைஸ் பண்றாங்க” ரிஷியின் குரல் மூச்சு வாங்கி இருக்க
”மத்தவங்க எல்லாம் ஏன் அப்படி நடக்கிறாங்க…” கிருத்திகா கேட்க
ரிஷி அமைதியாக இருக்க
“எல்லாத்துக்கும் காரணம் யாரு… உன் பொண்டாட்டிதானே… அவ பிடிவாதத்தை யாரால மாத்த முடியும்… அவளை உன்னாலேயே மாத்த முடியலையே…
“ரிஷி அன்னைக்கே சொன்னேனே… அவ அப்படி இருக்கான்னா நீதான் பார்த்து நடந்துக்கனும்னு… அவ மனசை… அவ பிடிவாதத்தை உன்னால மட்டும் தான் மாத்த முடியும்னு உனக்கு புரியுதா இல்லையா… ஏன்னா அவ உனக்கு மட்டும் தான் கட்டுப்படுவா…”
”ஆனால் இப்போ… நீ சொன்னால் மட்டும் தான் கேட்டுட்டு இருந்தா… இப்போது அதுவும் போச்சு…”
“அவளை மாதிரியா நீ… அம்மா…. அப்பா… தங்கை… சொந்தம்னு… எல்லாம் பார்த்து வளர்ந்தவன் நீ… நீ சொன்னால் கேட்பியா… காட்டு மரம் மாதிரி யாருமே இல்லாமல் வளர்ந்தவ… அவ கேட்பாளா… நாங்க யாருக்கு அட்வைஸ் பண்ணுவோம்… கேட்கிற உன்கிட்ட தானே… நீ அவளைப் பார்த்துப்பேன்னுதானே… ஏன் இது உனக்குப் புரிய மாட்டேங்குது… “
“போன தடவை அவ்ளோ சொல்லி அனுப்பினேன்… எல்லாம் கேட்டுட்டு அவகிட்ட ஏன் அப்படி நடந்துக்கிட்ட”
கிருத்திகா பேசும் வரை ரிஷி தலை குனிந்தபடியே இருந்தவன்… இப்போது கிருத்திகாவைப் பார்த்து…
“ஏன்னா… என்னால முடியலை… அவ இல்லாம இருக்க முடியலை … அவளப் பார்த்துட்டு யாரோ மாதிரி என்னால போக முடியலை… பைத்தியம் பிடிக்குது எனக்கு… மத்தவங்க முன்னால காட்டிக்க முடியலை… ஆனா அவ முன்னால என்னால என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியலை… என் கூட வந்து கூட இருக்க வேண்டாம்… அவ அப்பா வீட்ல இருக்கட்டும்… நான் அவ வீட்ல வாடகைக்கு இருந்த ரிஷி மாதிரி என்னை நினைச்சுக்கட்டும்… என் கூட பேச வேண்டாம்… ஆனா அவ குரலாச்சும் என்னைச் சுத்தி இருக்கனும்னு நினைக்கிறேன்… அது தப்பா…. ஒரு வருசம் இல்லை… ரெண்டு வருசம் இல்லை… ஆறு… ஆறு… வருசமா அவ குரல் என்னைக் கட்டிப் போட்ருக்கு ஆன்ட்டி… அது போதும் எனக்கு நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்துக்கிறேன் ஆன்ட்டி… எதுக்குமே ஒத்து வர மாட்டேன்னா… நான் என்ன பண்றது… “
“நான் இருக்கேன் உனக்கு…. நான் மட்டும்தான் உனக்குனு இருக்கேன் சொல்லி சொல்லி… என்னை இப்படி இந்த நிலைமைல கொண்டு வந்து விட்ருக்கா… அவ இல்லாமல் எத்தனை பேர் இருந்தாலும் அனாதை மாதிரி ஃபீல் பண்றேன் நான்… இது அவளுக்குத் தெரியுதா… இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறாளா”
கிருத்திகா அவனை பேசவிட்டு பார்த்துக் கொண்டிருந்தவர்
“இதுதான் இந்தப் பயம் தான் கண்மணி உன்னை விட்டு விலகி இருக்கக் காரணம்… ராஜ்ஜோட நிலைமைக்கு காரணம் பவி மட்டும் இல்லை… அவருக்குனு நெருங்கிய சொந்தம் ஏதும் இல்லை… அம்மா அப்பா இருந்தும் அவரை அரவணைச்சு போற பக்குவம் அவங்களுக்கு இல்லை… ஆனால் உனக்கு அப்படியா ரிஷி… உன் அம்மா… தங்கைங்க ஃப்ரெண்ட்… வெல்விஷர்னு ஆயிரம் பேர் இருக்காங்க… “
“அப்புறம் ஏன் … அப்புறம் ஏன் அவளுக்கு இந்த பயம்… எனக்கென்ன ஆகப் போகுது… நான் ஏன் பைத்தியக்காரன் ஆகப் போறேன்….” ரிஷி தாங்காமல் கேட்க
“ஆனால் அவங்களை எல்லாம் விட்டு… கண்மணினு ஒருத்திகிட்ட வந்து சேர்ந்துட்ட… அவங்களை விட்டு ரொம்ப தூரத்துக்கு உன் கண்மணி அவகிட்ட இழுத்துட்டா… இப்போ அவங்க கிட்ட உன்னைச் சேர்க்கனும்னு நினைக்கிறா…”
“அவ இல்லைனாலும்… அவங்க வார்த்தைகள் உன்னை கட்டுப்படுத்தனும்னு எதிர்பார்க்கிறா ரிஷி… “
தலையைப் பிடித்துக் கொண்டு ரிஷி மேஜையில் சாய்ந்து விட…
“கொஞ்சம் மெச்சூர்டா பிஹேவ் பண்ணு ரிஷி… அவகிட்ட எங்களால பேச முடியாது… பேசினாலும் கேட்க மாட்டேங்கிறா… நீ தான் உன் கைலதான் எல்லாம் இருக்கு… நல்லது நடக்கும்… அவளைக் கண்டுக்காமல் உன் வேலைகளை வழக்கம் போலப் பாரு… அவளை எமோஷனலா துரத்தாத… அவளே வருவா… கண்டிப்பா அது நடக்கும் ரிஷி… உன்னால அவளை விட்டு எப்படி இருக்க முடியாதோ… அதே தான் அவ நிலையும்… இருந்தாலும் ஏன் இப்படி இருக்கா…உனக்காகத்தானே.. நீ ஏன் அதையே அவளுக்குத் திருப்பிக் காட்டக் கூடாது… கண்டிப்பா அப்போ அவளுக்குப் புரியும்… அவளே தானா உன்கிட்ட வந்து நிப்பா… “
ரிஷி பதில் சொல்லாமல்… அமர்ந்திருக்க… அருகில் அமர்ந்திருந்த நட்ராஜ் அவன் தோளில் ஆறுதலாக அணைக்க… விலக்கி விட்டு எழுந்தவன்… வீட்டுக்கு வந்தான் தான்… ஆனால் வீட்டிலேயே முடங்கி விட… யாராலுமே அவனை மீட்டெடுக்க முடியவில்லை… எது நடக்க கூடாது என்று கண்மணி அவனை விட்டு தள்ளி விலகி இருந்தாளோ… அது நடக்க ஆரம்பித்திருந்தது…. அனைவரையும் விட்டு விலக ஆரம்பித்தான் ரிஷி… மீண்டும் கண்மனி வீட்டு மாடி அறையில் தன்னந்தனியே தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டான் ரிஷி……
இதற்கிடையே பார்த்திபன் யமுனா திருமண நிகழ்வும் வந்திருக்க… பார்த்திபன் – யமுனா வரவேற்பிற்கு கூட செல்லாமல்… தனது குடும்பத்தை மட்டுமே அனுப்பினான்…
அதே போல் கண்மணியும் யமுனா-பார்த்திபன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லாமல் தவிர்த்திருந்தாள்…
யமுனா-பார்த்திபன் வரவேற்பும் விமரிசையாக முடிந்திருக்க… அதே நாள் நள்ளிரவு… ரிஷியின் அலைபேசிக்கு யமுனா தொடர்பு கொண்டிருந்தாள் பதட்டத்தோடு… பயத்தோடு
அவள் பேசியைதை எல்லாம் கேட்டுக் கொண்டவன்…
“யமுனா…. பயப்படாத… பார்த்திபன்கிட்ட நீ எதையும் மறைக்கலைதானே… அப்புறம் ஏன் இவ்ளோ பதட்டம் உனக்கு.. ” ரிஷி அவளுக்கு ஆறுதல் சொல்லிய போதே
“மேரேஜே நடக்க விடமாட்டேன்னு சொன்னான் அந்த ரஞ்சித்… என்னால பார்த்திக்கும் அவமானம்…” யமுனா அழ ஆரம்பித்திருக்க
“நீ… பர்ஸ்ட் அழறதை நிறுத்துறியா… அந்த ரஞ்சித் வரமாட்டான்… நான் சொல்றேன்.. நீ நாளைக்கு கல்யாணத்துக்கு ரெடி ஆகு… சந்தோஷமா.. புரிஞ்சதா… நான் பார்த்துக்கிறேன்…” என்றபடி வைக்கப் போன ரிஷி…
“பார்த்திக்கிட்ட சொல்லி அவனையும் கன்ஃப்யூஸ் பண்ணாத…. ரஞ்சித்ன்ற ஒருத்தவன் இனி உன் வாழ்க்கைல எப்போதுமே வர மாட்டான்… அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ” என்றபடி வைத்தவன்… அடுத்த நொடியே சத்யாவிக்கு அழைத்திருந்தான்
“சத்யா… அந்த ரஞ்சித்க்கு ஆசிட் தண்டனை பத்தலை போல… யமுனாவை மிரட்டியிருக்கான்…”
--
“ஆமாம்… கல்யாணத்தை நிறுத்துவேன்னு… சொல்லி மிரட்டி இருக்கான்”
“நான் ஆரம்பிச்சு வச்சது… நானேதான் முடிச்சும் வைக்கனும் சத்யா… நான் வந்தால் தான் சரியா இருக்கும்… யமுனாவோட வாழ்க்கைல ரஞ்சித்னால பிரச்சனைனா இந்த ஜென்மம் மட்டும் இல்லை… ஏழேழு ஜென்மத்துக்கும் அந்தப் பாவத்தை நான் துடைக்க முடியாது… அவன் இனி யமுனா வாழ்க்கைல தொல்லையே கொடுக்கக் கூடாது” ரிஷி கோபமாகச் சொன்ன போதே…
“ரிஷி… அவன் எங்க இருந்து போன் பண்ணினான்னு ஏதாவது ஐடியா இருக்கா”
“யமுனா மேரேஜ்… எங்க ஏரியா முருகன் கோவில்லதான் நடக்குது… சோ இங்கதான் சுத்திட்டு இருக்கனும் சத்யா… நீங்க வந்திருங்க…” என்றபடி… கிளம்பிச் சென்றிருந்தான் ரிஷி…
----
கிட்டத்தட்ட இரண்டு மணி அளவில்… நித்திரையில் இருந்த கண்மணிக்கு திடிரென்று தூக்கம் கலைந்து முழிப்பு வந்திருக்க… மனமெங்கும் படபடப்பு…. வேகமாக மணியைப் பார்த்தவள்… தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுக்கையில் படுக்க அவளுக்கு உறக்கமே வரவில்லை…
வேகமாக அலைபேசியை எடுத்தவள்… எதற்காகவும் யோசிக்கவில்லை… உடனடியாக ரிஷியின் அலைபேசிக்கு அழைக்க ஆரம்பித்திருக்க… பல அழைப்புகள் முழுவதும் சென்றும் ரிஷி எடுக்காமல் இருக்க… கண்மணியின் இதயத்துடிப்பு வேகத்தைக் கூட்டியிருக்க…
ரிஷியிடம் பேசியே ஆக வேண்டும்… இல்லையென்றால் ரிஷியைப் பற்றியாவது அவளுக்குத் தெரியவேண்டும்..
இந்த நேரத்திற்கு யாருக்குமே போன் செய்ய முடியாது… ஒன்று மட்டும் நிச்சயமாகத் தோன்றியது…
ரிஷி இப்போது ’கண்மணி’ இல்லத்தில் இல்லை… ரிஷிக்கு ஆபத்து… இல்லை ரிஷியால் யாருக்கோ ஆபத்து… துரையின் விசயத்தில் நடந்தது போல இன்னொரு முறை நடக்கக் கூடாது…
ரிஷிக்கு மீண்டும் அழைக்க… மறுபடியும் எடுக்கப்படாமலேயே இருக்க…
கண்மணி முகமெங்கும் வியர்வை முத்துக்கள்… எப்போதுமே சத்யாவை தங்கள் இடையே கொண்டு வரமாட்டாள் கண்மணி… ஆனால் ரிஷி எங்கிருக்கிருக்கின்றான் என்ன செய்கிறான் கண்மணியை விட சத்யாவுக்குத்தான் அத்துபடி… கண்மணிக்கு அது பிடிக்காது என்றாலும் அதுதான் உண்மை… இன்றுமே சத்யாவிடம் ரிஷியைப் பற்றி விசாரிக்க பிடிக்கவில்லைதான்… ஆனால் வேறு வழி இல்லாமல் சத்யாவுக்கு தொடர்பு கொள்ள… சத்யாவின் அலைபேசியிலும் அவளது அழைப்பு முழுமையாகச் சென்று அடங்கியிருக்க… அவளின் பதட்டம் அதிகரிக்க ஆரம்பித்திருந்த போதே… அதைக் குறைப்பது போல… அடுத்த சில நிமிடங்களில் ரிஷியின் எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது…
Waiting for the next