/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
கிட்டத்தட்ட FB எல்லாம் லேப்டாப்ல வச்சுட்டேன்... நீங்க எப்படி படிக்க பயப்பட்றீங்களோ அதே மாதிரி எழுதவும் எனக்கு மைண்ட் செட் ஆகல... டிவிஸ்ட்டுனு கதைக்காக சீன்ஸ் வச்சாலும்... நெகட்டிவிட்டியா எழுத மனசு வரமாட்டேங்குது.... அது மட்டும் பென்டிங்... எனி வே
அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து FB முடிச்சுட்டு கரண்டுக்கு வந்துருவேன்... எவ்வளவுக்கெவ்வளவு லைட்டா கொடுக்க முடியுமோ அவ்ளோ கொடுக்க ட்ரை பண்றேன்... ஆனாலும் பிடிக்காதவங்க படிக்காதீங்க...
தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் சப்போர்ட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்..
நன்றி
பிரவீணா விஜய் */
/* Disclaimer:
இந்தக் கதையில் வரும் கோவில் சம்பவங்கள்.. அதில் வரும் வாக்குகள் அனைத்தும் கதைக்கான வெறும் கற்பனைக்காக மட்டுமே... மூட நம்பிக்கையை ஊக்குவிக்கவில்லை... ஆதரிக்கவில்லை.... */
அத்தியாயம் 94 -1
அதிகாலை 5 மணிக்கெல்லாம் கோவிலில் வந்து சேர்ந்து விட்டாள் கண்மணி… மருது தினமும் அந்தக் கோவிலுக்கு வருவான் என்று தெரியும் ஆனால் எந்த நேரத்திற்கு என்று தெரியாது… மாலையிலா… காலையிலா… அது தெரியாது… ஏதோ ஒரு நம்பிக்கையில் அவனை நம்பி வந்துவிட்டாள்… இந்த ஏரியாவில் அவளுக்கு சொல்லக் கூடிய தெரிந்த இடம் என்று சொன்னால்… இந்தக் கோவில், தன் அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனை அடுத்து ’பவித்ர விகாஸ்’… இதில் மற்ற இடங்கள் தெரிந்திருந்தும் போக முடியாது…
அவளின் மனம் மொத்தமும் அவள் அறியா தந்தையின் முகம் மட்டுமே… அவளின் கற்பனையைக் கூட எல்லை மீற வைக்க முடியவில்லை… கருப்போ சிவப்போ… நெட்டையோ குட்டையோ… நல்லவரோ கெட்டவரோ… அவர் எப்படி இருந்தாலும் என் அப்பா… அந்தத் தந்தையையை… அவர் முகத்தைப் முதன் முதலாகப் பார்க்கப் போகிறோம்… அதுமட்டுமல்லாமல் இனிமேல் தன் அப்பாவுடன் தான் இருக்கப் போகிறோம்…
நினைக்கும் போதே அந்த உணர்வு அப்படி ஒரு துள்ளல்… மகிழ்ச்சியைத் தர… இது மாதிரியான சந்தோசத்தை இதுவரை அவள் அனுபவித்ததே இல்லை…
எப்போதுடா இந்த மருது வருவான்… வீட்டுக்குச் செல்வோம்… அப்பாவைப் பார்ப்போம்… இந்த நினைவு மட்டுமே… கண்மணிக்குள்… மற்ற ஏதுமே அவள் நினைவில் இல்லை…
ஏன் முந்தைய இரவு தான் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு தப்பி வந்தது கூட அவளுக்கு பெரிய விசயமாகவேப் படவில்லை… அதுவே பெரிய விசயமாகப் படவில்லை எனும் போது அப்போது சில மணி நேரங்கள் பார்த்த ரிஷி அவளுக்கு பெரிய விசயமாகப் படுவான… அவன் முகத்தைக் கூட ஞாபகத்திற்கு கொண்டு வர பிரயத்தனப்படவில்லை… சொல்லப் போனால் அவனை நினைத்துப் பார்க்கும் அளவுக்கு அவன் அவளைக் கவரவில்லை என்பதே அதில் முக்கியமான விசயம்… அந்த நிகழ்வை அவள் அப்படியே கடந்தும் விட்டிருந்தாள்…
காலை 9 மணிக்கு மேல் ஆகியிருக்க… அவளது வயிறும் சரியாக மணி அடித்திருக்க… கண்மணிக்கு பசிக்க ஆரம்பித்திருக்க… அந்தக் கோவில் வளாகத்தை சுற்றி முற்றி பார்க்க ஆரம்பித்திருந்தாள்….
”இந்தக் கோவில்ல பொங்கல்… சுண்டல்னு இப்படி பிரசாதம்லாம் கொடுக்க மாட்டாங்களா…” ஏக்கமாக அம்மன் கோவிலில் உட்கார்ந்து அம்மனைப் பார்த்தபடி இருக்க… மக்களும் வந்தனர்… அம்மனை தரிசித்தனர்.. அர்ச்சனை செய்தனரே தவிர… அன்னதானம் அந்த மாதிரியெல்லாம் ஏதும் செய்யவில்லை…
இவள் அருகில் உட்கார்ந்திருந்த சிலர்… கண்மணிக்கு வாழைப்பழமும்… அர்ச்சனை செய்த தேங்காய்ப் பத்தைகளைக் கொடுக்க… அதை வைத்து ஓரளவுக்கு பசியை அடக்கியிருந்தாள்…
ஆனாலும் அவளுக்குப் பசி அடங்குமா… முதன் முதலாக கந்தம்மாளின் ஞாபகம் வந்தது.. இவளைப் பிடிக்கின்றதோ இல்லையோ… திட்டினாலும்… அடித்தாலும் இவள் வயிற்றைக் காயப் போட்டதில்லை அவள் பாட்டி… அவளைப் பொறுத்தவரை சூனியக்கார கிழவி..
ஏதாவது அவளுக்கு கிடைத்து விடும்… கஞ்சியோ கூழோ…. இவளுக்குப் பிடித்ததோ பிடிக்காததோ பசியை அடக்கி விடுவாள் கந்தம்மாள்…
அதே போல இவள் கந்தம்மாளிடம் அடி வாங்கினாலும்… திட்டு வாங்கினாலும்… அந்தத் தெருவில் கந்தம்மாளின் பேத்தி என்பதால் அவ்வளவு சீக்கிரம் இவளிடம் வம்பு வளர்க்க மாட்டார்கள்… நெருங்க மாட்டார்கள்
“அப்படியே அந்தக் கந்தம்மா மாதிரியே அவ பேத்தியும்… அதே வாய் இவகிட்டயும்… இவ கிட்ட யாரும் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்காதீங்கடா…” கண்மணியைப் பார்த்து ஒதுங்கிப் போனவர்கள்தான் அநேகர்… ஆக மொத்தம் பாதுகாப்பைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட்டதில்லை…
இன்று எல்லாம் சேர்ந்து கந்தம்மாளை ஞாபகப்படுத்த…
“கெழவி… உன்னைப் பிடிக்கலைனாலும் நினைக்க வைக்கிற…” மனதுக்குள் செல்லமாக தன் பாட்டியை நினைத்த போதே… கந்தம்மாளின் தேள் கொடுக்காக கொட்டும் வார்த்தைகளும் ஞாபகத்துக்கு வர
”ஆனாலும் உனக்கு விசம் வைக்காம விட மாட்டேன்” அடுத்த நொடியே வாய் சொன்னாலும்… மனம் கந்தம்மாளை நினைத்து ஏங்கத்தான் செய்தது… நினைவு தெரிந்தது முதல் கந்தம்மாள்தான் அவளுக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தது… பழக்கியது…
கந்தம்மாள் பாட்டியை நினைத்துக் கொண்டிருந்தபோதே…. கோவிலில் திடீரென பரபரப்பு…
“எல்லோரும் தள்ளிப் போங்க… வைதேகி அம்மா வர்றாங்க… அவங்க வர்றப்போ யாரும் சன்னிதானத்துக்குப் பக்கத்துல இருக்க வேண்டாம்” என்று அனைவரையும் அங்கிருந்து கிளம்பச் சொல்ல… கண்மணியும் எழுந்தாள்…
“நல்ல வேளை கோவில விட்டுப் போகச் சொல்லல…” எனத் சலித்தவாறு திரும்ப… அன்று பவித்ரா விகாஸில் பார்த்த நடுத்தர வயது பெண்… வயதானவர் என்றெல்லாம் சொல்ல முடியாது… அன்று கூட ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை… இன்று கண்மணி நன்றாகப் பார்த்தாள்… அவள் பார்க்கும் போதே… வைதேகியும் கண்மணியைப் பார்த்து விட…
கண்மணிக்குள் உள்ளுக்குள் உதறியது…
“ஐயையோ அந்த ராட்சசன் வந்திருக்கானா… கூடவே நாய் ஏதாவது இருக்கா” கண்கள் நாராயணனைத் தேட ஆரம்பித்திருக்க… அங்கு அவர் இல்லாமல் போக அவளுக்குள் நிம்மதி வந்திருக்க வைதேகியைப் பார்க்க ஆரம்பித்தாள்…
வைதேகி அன்று போல இன்று உணர்ச்சி வசப்படவெல்லாம் இல்லை… கண்மணியைக் கடந்து சென்று விட… கண்மணியோ தூணில் மறைந்து நின்றபடி அவரையேப் பார்த்தபடி நின்றிருந்தாள் கண்மணி….
அருகில் இருந்த இன்னொரு பெண்… அவரை வழி நடத்திக் கொண்டிருந்தாள்…
“சாமி கும்பிடுங்க…”
“பிரசாதம் வாங்கிக்கங்கோ…”
“பிரகாரம் சுத்தலமா”
அருகில் இருந்த இளம் பெண்ணின் வார்த்தைகளுக்கு மட்டும் வைதேகி செயல்பட்டுக் கொண்டிருக்க… கண்மணியோ அவரைப் பாவமாகப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள்…
அன்று இவளைப் பார்த்தவுடன் அவர் கண்களில் வந்திருந்த ஒளி… இப்போது சுத்தமாக இல்லை…
வைதேகி எல்லாம் முடித்து… கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு… கிளம்ப ஆரம்பித்திருக்க… கண்மணியும் விலகி வேறு புறம் செல்ல ஆரம்பித்திருக்க… அப்போது… வைதேகியோ… கலவரத்தை ஆரம்பித்திருந்தார்….
“நான் வரமாட்டேன்… நான் வர மாட்டேன்…. என் பொண்ணு இங்க இருக்கா… அவ கூட நானும் இருக்கப் போறேன்… இங்கதான்… இப்போ பார்த்தேன்… அவளக் காணோம்… எங்க…” கத்த ஆரம்பித்து பிடிவாதம் பிடித்திருக்க… அவரோடு வந்த இளம்பெண்… கூட வந்திருந்த பாதுகாவலர்கள் யாராலும் வைதேகியைக் கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் போக… வைதேகியோ மண்ணில் புரள ஆரம்பித்திருந்தார்… அதுவரை சற்று தள்ளி நின்று மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த கண்மணியால் அதைப் பார்த்த பின் மனம் தாளவே முடியவில்லை…
அனைத்தையும் மறந்து… அவள் முன் வந்து நின்றிருக்க… அவ்வளவுதான் வைதேகிக்கு எங்கிருந்துதான் அமைதி வந்ததோ… கண்மணியைப் பார்த்தவாறு… வேகமாக எழுந்து அமர…
“இங்க இல்ல… வாங்க அங்க போகலாம்… இப்படி மண்ல உட்கார்ந்திருக்கலாமா எழுந்திருங்க” கண்மணி கையைப் பிடித்து வைதேகியை எழ வைக்க… யாராலும் அடக்க முடியாத வைதேகியை நிமிடத்தில் தன் வார்த்தையில் அடக்கி இருக்க…. கண்மணி சொன்னது போலவே… எழுந்தவர்… கண்மணி உட்காரச் சொன்ன இடத்தில் அமர…
அவர் அருகில் கண்மணியும் அமர்ந்தாள் தான்… ஆனால்
”நான் உங்க பொண்ணு இல்லை…” கண்மணி பட்டென்று சொல்ல… அவ்வளவுதான் வைதேகி உடைந்து அழ ஆரம்பித்திருக்க… அதே நேரம்
“ஆமாம்… என் பொண்ணுதான் என்னை விட்டுப் போயிட்டாளே…” வைதேகி கண்களில் கண்ணீர் கடல் உடைந்து வெளியேறி இருக்க… கண்மணி பயந்து அருகில் இருந்த செவிலிப்பெண்ணைப் பார்க்க… அவரோ பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல கண்மணிக்கு சைகை கொடுக்க… கண்மணியும் நிம்மதி ஆகி இருக்க
“என்னைப் பார்த்தால் உங்க பொண்ணு மாதிரி தெரியறேன்னா” கண்மணி கேட்க… அழுது கொண்டிருந்த வைதேகி… அழுதபடியே தலையை ஆட்ட…
”அழுதுட்டே சொன்னா எப்படி… அழாமல் சொல்லுங்க” கண்மணி கைகளால் அவர் கண்ணீரைத் துடைத்து விட… கண்மணியை வைதேகி தன் கரங்களால் அவர் முகத்தைத் தொட ஆரம்பித்தவர்… அவளது முகத்தையேப் பார்க்க ஆரம்பித்தவர்…
“என் பொண்ணுதான் என்னை விட்டுப் போயிட்டாளே...” கண்களில் மீண்டும் கண்ணீர் வந்திருக்க
“தெரியுதுதானே… அவங்க விட்டுப் போயிட்டாங்கன்னு… இறந்துட்டாங்கன்னு” கண்மணிக்கே இப்போது அழுகை வரும் போல இருக்க… குரல் தடுமாறினாலும்… தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளாக
”என்னைப் பார்த்தா உங்க பொண்ணு ஞாபகம் வருதுனா… என்னை வந்து பாருங்க… என் கூடப் பேசுங்க… நான் இந்தக் கோவிலுக்கு தினமும் வருவேன்… நானும் உங்களப் பார்க்கிறேன்” கண்மணி சொல்ல… அதில் வைதேகியின் முகம் சந்தோசத்தில் விரிந்திருக்க… அதே வேகத்தில்
”என் கூட வந்துறியா” வைதேகி வேகமாகக் கேட்க… கண்மணி சிரித்தபடி
“என் அம்மா அப்பாக்கு நான் வேண்டாமா… உங்க பொண்ணை மிஸ் பண்ற மாதிரி அவங்க மிஸ் பண்ண மாட்டாங்களா…”
“ஆமால்ல… “
“நீங்க கோவிலுக்கு வந்தா நாம பார்க்கலாம்… பேசலாம்… சரியா…. நான் சொல்றதை நீங்க கேட்டால்… தினம் இங்க வருவேன்… உங்களப் பார்ப்பேன்… கேட்பீங்களா மாட்டீங்களா” என்றவளிடம்
“உண்மையாவா… சரி சரி… என்ன பண்ணனும் இப்போ… சொல்லு” வைதேகி அவளிடம் அடங்கி பேச ஆரம்பித்திருக்க
“இப்போ வீட்டுக்குப் போகனும்… ஒழுங்கா சாப்பிடனும்.. உங்க வேலையை எல்லாம் நீங்களே பார்க்கனும்… உங்க பொண்ணு இருந்தால் எப்படி இருப்பீங்க அதே மாதிரி இருக்கனும்… நாளைக்கு என்னைப் பார்க்க வரும்போது இவங்ககிட்ட நான் கேட்பேன் நான்…” கண்மணி கொஞ்சம் செல்லமாகவும் மிரட்டலாகவும் சொல்ல… வைதேகியும் அதைக் கேட்டவராக காரை நோக்கிப் போக…
இப்போது செவிலி வந்தார்… கண்மணியிடம்
“பாப்பா” எனும் போதே
“கண்மணி… என் பேரு என்ன சொல்லுங்க” கண்மணியின் இந்தக் குரலில் ஒரு நிமிடம் நாராயணின் முகம் தான் அந்தப் பெண்ணுக்கு வந்து போக..
“கண்மணி… ஒரே ஒரு உதவி… மேடம்கிட்ட வந்து சொல்லுங்க…. அவங்களே அவங்க தேவையைக் கேட்கனும்னு… சொல்லிப் பாருங்க… அவங்க கேட்கறாங்களான்னு பார்ப்போம்…” கண்மணியை இப்படிச் சொல்லி அழைக்க… கண்மணியும் மறுக்க முடியாமல் வாகனத்தை நோக்கி கோவில் வெளியே சென்றிருக்க… அதே நேரம் மருது கோவிலுக்குள் நுழைந்திருந்தான்…
---
கண்மணி பவித்ரா விகாஸினுள் வாகனம் நிறுத்தும் இடத்தில் இறங்கியிருக்க… வைதேகியும் அவள் அருகே…
காரியதரிசிப் பெண் சொன்னதற்க்காக… வைதேகியின் தேவைகளை அவரே கேட்கவேண்டும் கண்மணி வைதேகியிடம் சொல்ல… வைதேகி கேட்டதோ… உடனே இதைத்தான்
“நீயும் என்கூட வா… உன் பேர் என்ன… உன் வீட்ல கொண்டு போய் விட்றேன்”
“நீயும் வா கண்மணி…. உன் வீட்ல கொண்டு போய் விட்றேன்… உன் வீட்டைப் பார்த்தால் நானே உன்னைப் பார்க்க வருவேன்” வைதேகி சொல்ல
கண்மணியோ திரு திருவென்று விழித்தாள்…
”என் வீடு அட்ரெஸ் தெரிந்தால் நான் ஏன் இங்க நிற்கி்றேன்” யோசித்த போதே வைதேகிக்கு மகள் வீடு தெரிந்திருக்கும் தானே… கேட்கலாமா … அதை நினைத்த போதே… அப்பா இப்போதும் அதே வீட்டில் தான் இருக்கப் போகிறாரா… பத்து வருடமாக அதே வீட்டிலா இருக்கப் போகிறார்… அது மட்டுமல்லாமல்… தன் அப்பாவைப் பார்த்தால் இவர் எந்த மாதிரி உணர்ச்சி வயப்படுவாரோ…. தன் எண்ணத்தைக் கைவிட்டவளாக
”நான் வேணும்னா உங்க வீட்ல வந்து உங்கள விட்டுட்டு போறேன்… எனக்கு இங்க பக்கம் தான் வீடு… என் அம்மா அப்பா வீட்ல இல்லை… ரெண்டு மணி நேரம் கழிச்சுதான் வீட்டுக்கு வரச் சொல்லிருக்காங்க…” எப்படியோ சமாளித்து பவித்ராவிகாஸுக்கு வைதேகியை அழைத்து வந்திருக்க… அங்கு அவளுக்கு என்ன பரிசா கிடைத்திருக்கும்…
நாராயணனும் வீட்டில் தான் இருந்தார்… இவளைத் திட்ட ஆரம்பித்திருக்க… ஆனால் நாராயணன் ஆரம்பிக்கும் முன்பே…
“இங்க பாருங்க… அவங்களுக்காகத்தான் வந்தேன்… நான் யார்னு கூட அவங்ககிட்ட சொல்லல” கண்மணி எடுத்த எடுப்பிலேயே நாராயணணிடம் அதிரடியாகப் பேச ஆரம்பித்திருக்க..
நாராயணனே வாயடைத்துப் போய் நின்றிருந்தார்… அவளது தெனாவெட்டான தொணியில்… அதிலும் நான் யார்னு கூட சொல்லல… என்ற வார்த்தைகளில் இன்னுமே அதிர்ந்து நின்றிருக்க
“உங்க திமிரை என்கிட்ட காட்டினா நான் என் திமிரை உங்ககிட்ட காட்ட வேண்டியதா இருக்கும்… அதாவது தாத்தான்னு கூப்பிடாதவரை தான் உங்க திமிர்… பார்த்துக்கங்க… என்னை மாதிரி ஒருத்தி உங்களை தாத்தான்னு கூப்பிடறதா வேண்டாமான்னு முடிவு பண்ணிக்கங்க… அசிங்கப்பட்றதுக்கு தயார்னா சொல்லுங்க… இப்போவே தாத்தான்னு சொல்ல ரெடி… ரெண்டாவது உங்ககிட்ட சண்டை போட்ற மூட்லயும் நான் இல்லை… எனக்கு என் அப்பாவைப் பார்க்கனும்… இப்போ போறேன்… சப்போஸ் என் அப்பாவோட அட்ரஸ் கிடைக்கலேன்னா உங்ககிட்ட தான் வரனும்… ” நாராயணனுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தவளாக
“சாரி சாரி… உங்ககிட்டனா… உங்க வீட்டுக்கு இல்லை… நீங்களா கூப்பிட்டால் கூட இந்த வீட்டுக்குள்ள வரமாட்டேன்… என் அப்பாவோட அட்ரஸ் தெரிஞ்சா சொல்லுங்க.. இல்லை தெரியலேன்னா யார்கிட்டயாவது விசாரிச்சு வைங்க… என்ன” சொல்லி விட்டு அவரைப் பார்க்க…
அந்த மிரட்டல்… திமிர்… தெனாவெட்டு அனைத்துமே அவரின் வாரிசு அவரின் இரத்தம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்க.. நாராயணானால் தன் கண்களையே நம்ப முடியவில்லை… கண்களால் சொன்னாலும் அதை மனம் ஏற்றுக் கொள்ள வேண்டுமே… ஏற்க மறுத்ததே…
குப்பென்று அவருக்கு வியர்த்திருக்க… அடுத்த நொடியே நெஞ்சில் கை வைத்தபடி அப்படியே அமர்ந்து விட…
கண்மணி அடுத்த நிமிடம் பதறிப் போய் அவர் அருகில் போக…
“ப்போ… வெளிய போ… என் கண்ணு முன்னால நிக்காத “ கண்மணியை விரட்டாத குறையாகச் சொன்னார்
எங்கு இவள் தன் கண் முன் நிற்க நிற்க… தானே இவளை பேத்தி என்று கொண்டாடி விடுவோமோ இதுவே அவளைத் துரத்தச் சொல்லியிருக்க…அது அவரின் இரத்தக் கொதிப்பையும் உயர்த்தி இருந்தது…
அதன் பின் அங்கிருந்த ஆட்கள் எல்லாம் கண்மணியைத் வீட்டை விட்டு துரத்த ஆரம்பித்திருக்க
“யாரும் ஒண்ணும் பண்ணாதீங்க… ஒண்ணும் சொல்லாதீங்க “ நாராயணன் அவரையுமறியாமல் மற்றவர்களைத் தடுத்திருந்தார்..
“ஏய் உன்னைப் போகச் சொன்னேன்… ப்போ” நாராயணன் கத்த…. கண்மணியும் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்… மீண்டும் கோவிலிலேயே காத்திருக்க ஆரம்பித்திருந்தாள்… மருதுவுக்காக….
மருதுதான் காலையிலேயே வந்து விட்டு போய்விட்ட்டானே…. பிறகு எப்படி மீண்டும் வருவான்… காத்திருந்தாள்… காத்திருந்தாள்… மாலையும் வந்திருந்தது.. ஆனாலும் அவளுக்கு பயம் இல்லை… அவளுக்கு அவள் தந்தையைச் சந்தித்து விடுவோம் என்பதில் சந்தேகமே இல்லை… மருதுவின் மூலம் எப்படியாவது பார்க்க வேண்டும்… என்பதுதான் அவள் முதல் திட்டம்…
அப்படி இல்லை என்றால்… அவள் தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குப் போய்… அந்த காவலாளி தாத்தாவைப் பிடித்து எப்படியாவது தன் தந்தையின் முகவரியைக் கண்டுபிடிக்க வேண்டும்… அப்படி அதுவும் சரி வரவில்லை என்றால்… மீண்டும் பவித்ர விகாஸுக்கு போய் நாராயணனிடமே அவள் அப்பாவின் முகவரியைக் கேட்க வேண்டும்… எங்கு அவரது மாளிகையில் தான் தங்கி விடுவோமோ என்று பயந்தே கிழவன் சொல்லி விடுவார்…. இப்படி யோசித்தபடியே இருந்த போதே மாலையும் வந்திருக்க… இருட்டவும் ஆரம்பித்திருந்தது…
இரண்டு வேளை வயிற்றுக்கு சரியான ஆகாரம் இல்லை… பசிதான் இப்போதைய பெரிய பிரச்சனை ஆகி இருக்க… யோசனையுடன் இருந்தவளின் முன் அந்த தங்கக் கைக்காப்பு கண்ணை உறுத்தியது…
”இது என்ன நம்மளோடதா…. வித்துட்டு காசா வாங்கி வச்சுக்கலாம்… சரியான ஏமாந்தவனா இருப்பான் போல… இதுல வள்ளல் பரம்பரைனு பெருமை பீத்தல் வேற… இந்த மாதிரி 4 பேர் நமக்கு கிடச்சா போதும்… இவங்கள வச்சே நாம ஓஹோன்னு வாழ்ந்துரலாம் போல…” எனக் கையைப் பார்த்தவள்…
“ஆர் கே…” அந்த எழுத்துக்களைப் பார்த்தவள்…
“என்ன பேரா இருக்கும்… நாமளும் கேட்கல… அவனும் சொல்லல… ஆர் கே வா… அப்படினா கண்ணா…. “ ஆர் ஐ விட்டு விட்டு கேவை வைத்தே யோசிக்க ஆரம்பித்திருக்க… அடுத்த நொடியே
“அவன் பேர் என்னவா இருந்தால் நமக்கென்ன.. நமக்கு அதுவா முக்கியம்… சாப்பாடுதான் முக்கியம்… அட்ரஸுக்கு வேணும்னா கையேந்துவா கண்மணி… ஆனால் சாப்பாட்டுக்கு யார்கிட்டயும் பிச்சை கேட்க மாட்டா… அடுத்த வேளை சாப்பாடு இதை வித்துதான்… விருந்து சாப்பாடுதான் பால் பாயாசத்தோட…” என ப்ரேஸ்லெட்டுக்கு முத்தம் வைத்தவளாக மீண்டும் மருதுவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்திருக்க.. ஒரு கட்டத்தில் மருதுவுக்கான அவள் தேடலுக்கு முடிவு கட்டியவள்… வயிற்றுப் பசிக்கும் முடிவு கட்ட தீர்மானித்தவளாக…
“ஏதாவது கடைக்குப் போய் சாப்பிட்டுட்டு… இந்த ப்ரேஸ்லெட்டை அடமானம் வச்சுரலாம்” என எழுந்தபடி கோவிலை விட்டு வெளியே சென்றவள்… அவள் போட்டிருந்த துப்பட்டா காற்றில் பறந்திருக்க… அதை நோக்கி ஓட ஆரம்பித்திருக்க… பறந்த துப்பட்ட அங்கிருந்த சாமியார் ஒருவரின் கையில் கிடைத்திருக்க… கண்மணியும் அவர் அருகே சென்றிருந்தாள்…
அந்த துப்பட்டாவையே… அதில் இருந்த இரத்தக் கறைகளையே வெறித்தபடியே… கண்மணியிடம் நீட்டியவர்…
“இந்த இரத்ததில… பாவம் கலக்காம பார்த்துக்கோ… இதோட புண்ணியம் எல்லாம் உனக்கானது… அது உன்னை மட்டும் தான் காப்பாத்தும்… அவனைக் காப்பாத்தாது… இதோட பாவம் அவனைக் காவு வாங்கக் காத்திருக்கு… காப்பாத்திருவியா” என்றவரை முகம் சுருக்கி கண்மணி பார்க்க
“இவகிட்ட அவனத் தேடி வர வைப்பா…” என அம்மனைக் காட்டியபடி அவளைக் கடந்து சென்று விட… கண்மணியும் நடக்க ஆரம்பித்தாள் தான்… ஆனால் ஏனோ திடீரென்று மனதில் சஞ்சலம்… சட்டென கால்கள் பின்னிக் கொண்டார் போல உணர்வு… எப்படியோ சமாளித்து அங்கிருந்து நடந்து போக…மீண்டும் தந்தையின் நினைவு மட்டுமே அவளுக்கு…
மைதானத்தைத் தாண்டிச் செல்ல… நான்கு தூண்கள் மட்டுமே சூழப்பட்ட உயரமான மண்டபம் தென்பட…
”ஒரு வேளை அப்பாவைப் பார்க்காவிட்டால்… இரவு படுப்பதற்கு இடம் கிடைத்து விட்டது… சீக்கிரம் வந்து இடத்தை பிடிச்சுறனும்” தனக்குள் யோசித்தபடி நடந்த போதே
கண்மணியின் கண்களில் அந்தப் பெண் பட்டாள்.. கண்ணீரும் கம்பலையுமாக அவள் முன்னால் நின்றிருந்த இளைஞனுடன் பேசிக் கொண்டிருக்க… அவர்களைப் பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தாள்
அந்தப் பெண்… இப்போது விருட்டென்று வெளியேறி இருக்க… அந்த இளைஞனைப் பார்க்க… அவனோ வாசு…
“வாசுண்ணா…” இவள் கூவி அழைத்த போதே வாசுவும் அவளைப் பார்க்க… சற்று முன் தோன்றிய சஞ்சலமெல்லாம் மறந்தவளாக… சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக… வேகமாக அவனை நோக்கி ஓடியவள்
“அண்ணா.. அண்ணா… நான் கண்மணி…. உங்க முதலாளி நட்ராஜோட பொண்ணூ ஞாபகம் இருக்கா…. அன்னைக்கு நான் வந்தேனே… நீங்க கூட மருதுவோட என்னை பஸ் ஏத்தி விடச் சொன்னீங்களே…” வாசுவுக்கு அவளைப் பார்த்த உடன் சட்டென்று ஞாபகம் வரவில்லைதான்… அவன் இருந்த சூழ்நிலை அப்படி…. ஆனால் கண்மணி இவ்வளவு சொன்ன பின்னால் ஞாபகம் வராமல் இருக்குமா…
“அப்பா வீடு தெரியுமான்னா உங்களுக்கு… என்னைக் கொண்டு போய் விடறீங்களா… காலையிலருந்து சாப்பிடலண்ணா…” பரிதாபமாக இருந்தது வாசுவுக்கு அவளைப் பார்த்து..
இவனது அம்மா பவித்ராவுக்கு அவ்வப்போது உதவி செய்வதற்கென்று …
“பவித்ராம்மா ஒரு தங்கம்… நட்ராஜ் ஐயா கொடுத்து வச்சுருக்கனும்… இப்படி தங்கத்தை பொண்டாட்டியா அடஞ்சதுக்கு..” சொல்லி சொல்லி மாய்வார்…
“அப்படிப்பட்ட பவித்ரா பெற்ற பெண்…” மனம் தாங்கவில்லைதான்… இருந்தாலும் நட்ராஜை நினைத்தும் ஒரு புறம் பயம் இருக்கத்தான் செய்தது
“ஏய் நீ இங்க எப்புடி… நான் இன்னைக்கு வேலைக்கு வேற போகல… நீ வர்றது அண்ணனுக்கு தெரியுமா..” கேள்விகளைக் கேட்டபடியே வாசு அவளைக் கையில் பத்திரமாகப் பிடித்துக் கொண்டவனாக அங்கிருந்த ஆட்டோ ஒன்றைப் பிடித்தவன்… நேராக கம்பெனி இருந்த ஏரியாவுக்குச் சென்றவன்… கம்பெனிக்குள் போகாமல்… அருகில் இருந்த கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவனை விட்டு மருதுவை அழைத்து வரச் சொல்ல…
மருதுவும் வந்தான்…. கொஞ்சம் பதட்டமும் அவன் முகத்தில் இருந்தது போல உணர்ந்தான் வாசு.…
கண்மணியைக் கடையிலேயே விட்டு விட்டு… அவன் மட்டும் மருதுவைப் பார்க்க வந்திருந்தான்… ஆனால் வாசு ஆரம்பிக்கும் முன்னரே
“அண்ணே…. நம்ம அண்ணன் பொண்ணு கண்மணி நேத்து நைட்ல இருந்து காணாமாம்… அண்ணனைத் தேடித்தான் வந்துருக்கும்னு அண்ணனோட அம்மா போன் பண்ணுச்சு…. அண்ணன் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வந்துட்டாரு… ஆனால் ரொம்ப டென்ஷனா இருக்காரு… எனக்கு அவர் பக்கத்துல போகவே பயமாருக்கு” என்று படபடத்தவனிடம் வாசு கண்மணியைப் பற்றி இப்போது சொல்ல..
”இங்கதான் இருக்காளா… அண்ணாகிட்ட சொல்வோமா…” தயங்கியபடி பார்த்தவனின் கண்கள் கண்மணியையும் தேட… அதே நேரம் அவள் கண் முன் கண்மணியும் வந்து நின்றவளாக…
“உன்னை நம்பி வந்தேன் பாரு… டெய்லி கோவிலுக்கு வருவேன்னு தானே சொன்ன… இன்னைக்கு ஏன் வரலை” எனக் கோபித்துக் கொள்ள… வாசு… மருதுவை முறைத்தான்… எல்லாம் உன்னால் தானா என்பது போல…
“இல்லண்ணா… அண்ணன் தான் அப்பானு தெரியாமல் கூட வீட்டுக்கு திரும்புச்சா…. அதான்… மனசு தாங்காம சொல்லிட்டேன்… ஆனா இப்படி கிளம்பி வருமுன்னு நினைக்கல” மருது கவலையோடு சொல்ல… வேறு வழியில்லை இனி… நட்ராஜிடம் சொல்லித்தான் ஆக வேண்டும்… இருவருமாக முடிவு செய்து கம்பெனியை நோக்கிச் சென்றனர்…
---
கந்தம்மாள் நட்ராஜிடம் சொன்ன உடனேயே நட்ராஜ் அடைந்த பதட்டத்திற்கு அளவே இல்லை…
ஆனால் நட்ராஜ் பதறியது மருதுவுக்கே புதிதாகத்தான் இருந்தது… அவளைப் பார்த்தது கூட இல்லை…ஏன் மகள் என்று நினைக்கவில்லை… பிறகு ஏன் இவ்வளவு பதட்டம்… கவலை… மகள் என்ற உணர்வு எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கப் போய்த்தானே இவ்வளவு கவலை அவருக்கு
அதனால் கண்மணியை கூட்டிப் போய்… இப்போது அவர் முன் நிறுத்தினால் சந்தோசம் தானே படுவார்… இப்படித்தான் மருது யோசித்தான்… அதை வாசுவிடமும் சொல்ல… வாசுவும் சம்மதிக்க. மூவருமாக நட்ராஜின் கம்பெனிக்குள் சென்றனர்
“எங்கப்பாவையா பார்க்கப் போறோம்… எங்க அப்பா உங்க ரெண்டு பேருக்கும் முதலாளியா… எப்டி இருப்பார்… அந்த நாராயணன் மாதிரி கோட் சூட்லாம் போட்ருப்பாங்களா இல்லை… உங்கள மாதிரி ட்ரெஸ் போட்ருப்பாங்களா” கண்மணி தொண தொணவென்று பேசியபடியே வந்தவள்… அப்படியே நின்றுவிட்டாள்…
வாட்ட சாட்டமாக… உயரமாக இருந்தாலும்… எந்த கம்பீரமும் இல்லாமல் அழுக்குப் பனியன் பேண்டோடு… கலைந்த முடியோடும்… சவரம் செய்யப்படாத நரைத்த தாடியோடு… தளர்வாக அங்கு உட்கார்ந்திருந்தவர்தான் அவள் அப்பாவா நம்பவே முடியவில்லை…
இப்படி ஒருவரை அவள் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை…. அவள் அம்மா கற்பனையில் நினைத்து வைத்திருந்ததை விட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பேரழகாக நிஜத்தில் அவளைப் பிரமிக்க வைத்திருக்க.. அவள் அப்பாவோ அதற்கு மாறாக…
அப்படியே திகைத்து நின்றிருந்தாள் கண்மணி..
தன் தாயையும் தன் தந்தையையும் சேர்த்துக் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை அவளால்….
தயங்கி நின்றவளாக மருதுவின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள…
“அண்ணே” மருது தயங்கிக் கூப்பிட்டான் நட்ராஜை…
நட்ராஜ் திரும்ப… அவளை உருத்து விழித்த அந்தக் கண்களே சொன்னது… அவன் ஒரு முழு நேர போதையில் இருப்பவன் என்பதை… கண்மணி இன்னும் மருதுவிடம் ஒன்ற ஆரம்பித்திருக்க…
நட்ராஜும் அவளைப் பார்த்தான்… அந்தக் கண்களில் எங்குமே பாசமோ… அதிர்ச்சியோ இல்லை
“எங்க பார்த்தீங்க” எழுந்து வந்த நட்ராஜின் கண்களில் ஆக்ரோஷம் மட்டுமே இருக்க… அவன் பேசும் போதே தாடியை மீறி அவனது தாடை இறுகி இருக்க…
”கோவில்லண்ணா… “
“சரி… நான் போலிஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளெயிண்ட்டை திருப்பி வாங்கிட்டு வர்றேன்… என் அம்மா வந்துட்டு இருக்கு…. அனுப்பி வச்சுருங்க” அவ்வளவுதான் என்பது போல நட்ராஜ் அவர்களைக் கடந்து செல்ல…
”நான் போக மாட்டேன்… இங்கதான் இருப்பேன்” கண்மணி இப்போது மருதுவை விட்டு தள்ளி நின்று நட்ராஜைப் பார்த்து சொல்ல…
நட்ராஜ் மெதுவாக அவள் புறம் திரும்ப… இன்னும் வேகமாக கண்மணி பேச ஆரம்பித்தாள்…
“இங்கேன்னா… உங்க கூட… என் அ…ப்” எனும் போதே அடுத்த நொடி… நட்ராஜ் விட்ட ஒரே அறையில் கண்மணி கீழே விழுந்து கிடக்க…
“என் அப்பா கூடத்தான்… இருப்ப்…” அடுத்த வார்த்தை சொல்ல முடியவில்லை… தேம்ப ஆரம்பித்திருக்க…
“நா…. போ … மா… ட்டென்…” வார்த்தைகள் ஒன்றாகச் சேராமல் விம்மியபடி சொன்னளின் தேகம் நடுங்க ஆரம்பித்திருக்க
“எவ்ளோ திமிர் இருந்தால்… நட்ட நடு ராத்திரில தனியா வந்துருப்ப… அவ்ளோ தைரியமா உனக்கு…. நீ அடங்காம ஆடுறேன்னு அம்மா சொன்னப்போலாம் எக்கேடு கெட்டுப் போகட்டும்னு இருந்தேன்… கடைசியில உன் திமிரை என்கிட்டயே காட்றியா… சாவடி அடிச்சே கொன்னுருவேன்… ஒழுங்கா போயிரு… என் கண்ணு முன்னால நிக்காம” மருதுவும் வாசுவும் வார்த்தையே இன்றி நட்ராஜையும் கண்மணியையும் பார்த்தபடி உறைந்து நின்றிருக்க
“கொன்னு போடுங்க.. ஆனால் இங்கதான் இருப்பேன்… உங்க கூடத்தான் இருப்பேன்” கண்மணிக்கு இப்போது குரலில் அழுகை எல்லாம் இல்லை… வீராப்பு மட்டுமே இருக்க… நட்ராஜ்… சுற்றி முற்றி பார்க்க… அருகில் இருந்த பப்பாளி மரத்தின் கிளையை முறித்து அதில் இருந்த இலைப்பக்கம் பிடித்துக் கொண்டு கண்மணியை நோக்கி வர… வாசு வேகமாக நட்ராஜை… அவர் கையைப் பிடித்துக் கொண்டபடி… அவரைத் தடுத்து நிறுத்த முயல… மருது கண்மணியை நோக்கி ஓடியவனாக
“மணி… சொல்றதைக் கேளு… வா…. உங்க பாட்டி இருக்கிற ஏரியால கொண்டு போய் நான் விட்றேன்… வா” அவளை இழுக்க… கண்மணி திமிறியபடி… அவன் கையை உதறியவளாக…
“நான் இங்கதான் இருப்பேன்… இங்கதான் இருப்பேன்… இங்கதான் இருப்பேன்… என் அப்பா கூடத்தான் இருப்பேன்” அகங்காரமாகக் கத்த ஆரம்பித்திருக்க…. சட்டென்று வார்த்தைகள் நின்றிருந்தன முதுகில் ஏற்பட்ட சுளிரேன்ற வலி…
“அப்பா” கண்மணி சுருண்டு விழுந்திருக்க… பச்சைப் பப்பாளித் தண்டின் தடம் அவள் அணிந்திருந்த உடையையும் மீறி அவள் முதுகில் தடத்தைப் பதித்திருந்தது…
அப்போதும் கண்மணி அடங்காமல்…
“அப்பா அப்பா… அப்பா” வேண்டுமென்றே சொல்ல… அவள் சொன்ன வார்த்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப அடி இரு மடங்காக விழுந்திருக்க… கண்மணி அப்போதும் திமிராக நட்ராஜைப் பார்க்க…
“கூட்டிட்டுப் போங்கடா.. அடிச்சே கொன்னாலும் கொண்ட்ருவேன் போல …” நட்ராஜ் கையில் இருந்த கம்பை கீழே போட்டபடி சொன்ன போதே… அவன் காலைப் பிடித்துக் கொண்டவளாக
“நான் போக மாட்டேன்ப்பா… எனக்கு உங்க கூட இருக்கனும்னு ஆசைப்பா…” சொன்ன போதே… வெடுக்கென்று காலை எடுத்தவர்… ஒற்றைக் கையால் அவளைத் தூக்கி… கம்பெனியை விட்டு வெளியே இழுத்து வர… கண்மணியோ அவள் தந்தையையின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டாள்… அவனை விடவே மாட்டேன் என்பது போல…
இதற்கிடையே… அருகில் இருந்த கடைகளில் இருந்தவர்கள் எல்லாம் வந்திருக்க… அனைவரும் நட்ராஜைத் திட்ட ஆரம்பித்திருக்க…
அதில் சிலர்
‘ஏம்மா அவன் தான் உன்னை உன் பாட்டிகிட்ட இருன்னு தானே சொல்றான்… கேட்டால் என்ன”
“நான் அவர்கிட்டதான் இருப்பேன்… நான் அவர் பொண்ணுதானே… அவர்கூடத்தானே இருக்கனும்… நான் ஏன் போகனும்” தேம்பல் பாதி… அழுகை பாதி… தெனாவெட்டு பாதி என கண்மணி பதில் கொடுக்க…
“இவ்வளவு அடி வாங்கியும் இந்தப் புள்ளைக்கு இருக்கிற வாயைப் பாரு… அப்போ அடிக்கத்தானே செய்வான் அவன்…” கூட்டத்தில் இப்படியும் பேச ஆரம்பித்திருக்க…
”யார் என்ன சொன்னாலும்… நான் போக மாட்டேன்… “ நடந்தபடி அந்தக் கம்பெனியின் வாசலில் போய் உட்கார்ந்து கொண்டவள்… அருகில் இருந்த குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து டம்ளர் டம்ளராகக் குடிக்க ஆரம்பித்திருக்க…அவளின் பிடிவாதத்தைப் பார்த்த கூட்டம் இப்போது நட்ராஜுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்திருக்க…
“அதான் பெரிய பொண்ணா இருக்கே… வெவரம்லாம் தெரிய ஆரம்பிச்சதுனால தானே இங்க வந்துருக்கு…. என்ன பெருசா பண்ணப் போற… நீ சாப்பிடற சாப்பாட்டுல ஒரு கைப்பிடி கொடுக்கப் போற” எனும் போதே
“நான் அவ்ளோ கம்மியாலாம் சாப்ட மாட்டேன்… அவரை விட அதிகமா சாப்பிடுவேன்… நீங்க பாட்டுக்கு கைப்பிடின்னு சொல்லிட்டு… அவர் எனக்கு அவ்ளோதான் போடப் போறாரு” கண்மணி அவ்வளவு அழுகையிலும்… போராட்டத்திலும் தனக்குச் சாதகமாகப் பேசியவரின் வார்த்தைகளைத் திருத்த
மருது கண்மணியை முறைத்தான் இப்போது… வாசுவுக்கோ
“என்ன பெண் இவள்… என்ன நடந்துட்டு இருக்கு… என்ன பேசிட்டு இருக்கா ”என்று தோன்றியதுதான் உண்மை…
நட்ராஜ்… இப்போது கண்மணியின் அதிகப்பிரசிங்கித்தனமாக வார்த்தைகளில் மீண்டும் வேகமாக அவளை நோக்கி வர… கண்மணியோ இப்போது கொஞ்சம் கூடத் தயங்காமல் அவரை நிமிர்ந்து பார்க்க… நட்ராஜ் அடிப்பதற்கு கை ஓங்கியபோதே
மருது வேகமாக நட்ராஜ் முன் வந்து நின்றவனாக…
“அண்ணா… நீ என்னன்னே பண்ணப் போற… சமைக்கிறது நான்தானே… மணி அது அது பாட்டுக்கு இருக்கட்டும்…. நான் பார்த்துக்கிறேன்… பாப்பா உன்னை எப்பவும் தொல்லை பண்ணாமல் நான் பார்த்துகிறேன்… அடிக்காதன்னா…. தயவு செஞ்சுனா…. நான் தான் உண்மையைச் சொன்னேன்… அடிக்கனும்னா என்னை அடின்னா….” மருது குற்ற உணர்வு தாங்க முடியாமல் மருதுவிடம் மண்டியிட்டவன்… நட்ராஜின் அமைதியைப் சாதகமாக்கிக் கொண்டவனாக
“மணிப் பாப்பா… வா… வீட்டுக்குப் போகலாம்… அண்ணே ஒண்ணும் சொல்ல மாட்டாரு… நான் உன்னைப் பார்த்துக்கிறேன் “ என அவளை இழுத்துக் கொண்டு நடக்க… கண்மணி நட்ராஜை ஒரு நிமிடம் பார்த்து விட்டு… மருதுவைப் பார்க்க ஆரம்பித்தவள்… இப்போது அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்…
”யார் இவன்… எனக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறான்… அன்று அந்த நாராயணனிடமிருந்து காப்பாற்றினான்… இன்று தன் அப்பாவின் முன் எனக்காக மண்டியிடுகிறான்… இதோ தான் ஆசைப்பட்டபடி என்னை என் அப்பாவின் வீட்டுக்கே கூட்டிச் செல்கிறான்” தன்னைப் பற்றியிருந்த அவன் கரங்களின் இறுக்கத்தை உணர்ந்தபடியே அவனை நினைக்க ஆரம்பித்தாள் கண்மணி…
மருது அவள் வாழ்க்கையில்… அனைவரையும் விட… முக்கியமான… முதலாவது நபராக மாறிய தருணம் அந்தத் தருணம் தான்…
முதலில் வந்த போது… அவனைச் சந்தித்த போது கூட மருது அவள் வாழ்க்கையில் சந்தித்த எத்தனையோ வழிப்போக்கர்களில் ஒருவனாத்தான் இருந்தான்… ஆனால் இன்று… அவன் தான் இனி எல்லாமே தனக்கு… அவள் மனது நிச்சயமாகச் சொல்ல.. தன்னைப் பிடித்திருந்த அவன் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள் உரிமையோடு…
---
அன்றைய இரவு….
கந்தம்மாள் வந்து பார்த்து… கண்மணியை எப்படி எப்படியெல்லாமோ அழைத்துப் பார்த்தார்…
கெஞ்சிப் பார்த்தார்… திட்டிப் பார்த்தார்… மிரட்டிப் பார்த்தார்… எதற்கும் மசியவில்லை… கிளம்பிவிட்டிருக்க…. கண்மணிக்கு அப்போதுதான் உண்மையிலேயே நிம்மதி வந்திருந்தது… ஆக இனி அங்கு போக மாட்டோம்..
வேகமாக மருதுவிடம் ஓடி வந்தவள்…
“என்ன சாப்பாடு… இன்னைக்கு….”
மருது அவளை முறைத்தபடி
“தோசை… “ எனும் போதே
“அப்போ வொயிட் சட்னி செஞ்சு தர்றியா… நாலு… அஞ்சு…ஆறு… பத்து… போதும் எனக்கு…. சட்னினா கம்மியாத்தான் சாப்பிடுவேன்… சாம்பார்னா… இன்னும் அஞ்சு எக்ஸ்ட்ரா… நீ பாவம்னுதான் சட்னி கேட்டேன்…”
மருது அவளிடம் இன்னும் அதிகமாக முறைத்தான் தான்… அந்த முறைப்பெல்லாம் சட்னி செய்வதில் காட்டாமல் சாம்பார் செய்வதில் காட்டியிருக்க… கண்மணிக்கு முகமெல்லாம் புன்னகை…
”முறச்சுக்கிட்டே எனக்குப் பிடிச்ச சாம்பார் செஞ்சுட்ட…”
“ஆமா… உனக்கு ஏன் என்னை இவ்ளோ பிடிக்குது…” சாப்பிட்டபடியே பேச ஆரம்பித்திருந்தாள்
மருது ஏதும் பேசாமல் தன் தட்டில் கவனம் வைத்திருக்க...
“எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும்ரொம்ம்ப….. ரொம்ப… ரொம்ப….” என்று கையை விரித்துக் காட்டியவள்…
“இதை விட… அந்த வானத்தை விட அதிகமான தூரத்துக்கு பிடிக்கும் உன்னை” எனும் போதே… மருது சிரித்தபடி…
”சரி தூங்கு… தூங்கலாமா” எனும் போதே… நேற்று இரவு தூங்காததே அப்போதுதான் கண்மணிக்கு ஞாபகம் வந்திருக்க… உடனடியாகத் தூக்கமும் வந்திருக்க… கூடவே நேற்றைய இரவும்… அந்த இரவில் சந்தித்த ரிஷியின் ஞாபகமும் வந்திருந்தது…
“அந்தப் பையன் அவன் வீட்டுக்கு போயிருப்பானா… ” என்ற யோசனையோடே கீழே வெறும் தரையில் படுத்தவள்... அடுத்த நொடியே உறங்கியும் இருக்க… பாத்திரங்களை எல்லாம் வைத்துவிட்டு திரும்பிய மருதுவோ… பதறியவனாக… வேகமாக அவளை எழுப்ப… தூக்க கலக்கத்துடன் எழும்பி அவனைப் பார்க்க…
“இங்க இல்ல… உங்க வீட்ல… போலாமா” எனச் சொல்ல… கண்மணி அவனைப் புரியாத பார்வை பார்க்க
”அதானே இனி உன் வீடு.. உன் அப்பா வீடு அதானே… “ என்ற போதே கண்மணி வேகமாகத் தலை ஆட்டியபடி மீண்டும் தூங்க ஆரம்பித்திருக்க… அவளைத் தூக்கிக் கொண்டு நட்ராஜின் வீட்டுக்குச் சென்றான் மருது…
---
இரவு பதினொரு மணி…
விழிப்பு வந்திருந்தது… சும்மாவெல்லாம் வரவில்லை… யாரோ புலம்பிய குரல் அவள் காதில் விழுந்து கொண்டே இருக்க… அதில் தான் எழும்பியதே அவள்…
பாயில் படுத்திருந்தாள்….. எங்கே இருக்கிறோம் என்று கூடத் தெரியவில்லை…
விடிவிளக்கின் உதவியால் எப்படியோ அந்த வீட்டுக்கு பழக ஆரம்பித்தவளாக ஸ்விட்ச் போர்டைக் கண்டுபிடித்து விளக்கை உயிர்ப்பிக்க… நட்ராஜ் படுத்திருந்தான்…
தன் தந்தையையைப் பார்த்தபடியே அவன் அருகில் அமர்ந்தவளுக்கு… மாலையில் அவன் மேல் இருந்த பயமெல்லாம் இல்லை… தன் தந்தையின் கேசத்தை சரி செய்து அவனையே பார்த்தபடி இருந்தவளின் பார்வையில் எதிரில் இருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த தன் தந்தை தாய்ப் புகைப்படம் கண்ணில் பட… எழுந்து அருகில் போய்ப் பார்க்க.. அப்போதும் அவர்களுக்குப் பொருத்தம் இல்லைதான்… ஆனாலும் ஏதோ ஒரு பொருத்தம் அவர்களை அழகாகக் காட்ட… அந்தப் புகைப்படத்தில் பவித்ராவின் அருகில் இருந்த நட்ராஜுக்கும் இப்போது கீழே முழுப் போதையில் புலம்பியடி படுத்திருந்த தன் தந்தைக்கும் உள்ள ஒப்புமையைக் காண முயன்றவளுக்கு கண்ணீரே விடையாகக் கிடைக்க… மீண்டும் தன் தந்தையிடமே வந்து அமர்ந்தவள் அவர் அருகே பார்க்க… சாப்பாடு பாதி சாப்பிட்டும் சாப்பிடாமலும் தட்டு அப்படியே இருக்க… அனைத்தையும் சரி செய்து விட்டு… மீண்டும் அவர் அருகே வந்தவள் தன் தாய் பவித்ராவையே வெறிக்க ஆரம்பித்திருந்தாள்….
”இவள் என்ன அப்படி முக்கியம் இவர்களுக்கு எல்லாம்… தாய் சித்த பிரமையில்… தந்தை இவள் மேல் உள்ள பாசத்தில் உச்சக்கட்ட கோபத்தில்… கணவனோ… இப்படி தன்னை மறந்த போதையில்…” கண்மணியின் ஒட்டு மொத்த கோபமும் பவித்ராவிடம் திரும்பியிருந்தது… நேற்று வரை தன் தாய் என்று மனதில் வரைந்து வைத்திருந்த ஓவியம் எல்லாம் மறைந்து போயிருக்க
”எனக்கு நீங்க இல்லைன்றது பெரிய வருத்தமே இல்லை… செத்துப் போனதுதான் போனீங்க… இவங்க யாருக்கும் வருத்தம் கொடுக்காமல் செத்துப் போயிருக்க வேண்டியதுதானே…”
“எனக்கு அம்மா வேண்டாம்… அவங்க இல்லை… அமெரிக்காலயும் இல்லை… ஆப்ரிக்காலயும் இல்ல… நரகத்துல தான் நீங்க இருக்கீங்க…
ஏதேதோ திட்ட ஆரம்பித்திருந்தாள்… அப்படியும் மனம் ஆறவில்லை…
“நீங்க செத்துப் போனா என்ன… என் அப்பாக்கு நான் இருக்கேன்.. உங்கள மாதிரி நான் என் அப்பாவை விட்டுட்டு போக மாட்டேன்” நினைத்த போதே
அமுதினியின் ஞாபகம் வர…
“அவள மாதிரியும் நான் என் அப்பாவை நான் விட்டுட்டு போக மாட்டேன்… நான் சாகவே மாட்டேன்… என் அப்பாக்காக… எப்டினாலும் சாமிகிட்ட கேட்டு என் அப்பாக்காக வாழுவேன்…” என தன் தந்தையைக் கட்டிக் கொண்டவள்…. தன் தந்தையின் கன்னத்தில் முத்தத்தை மாறி மாறி பதித்திருக்க… நட்ராஜோ அதெல்லாம் அறியாமல்
“பவி… அந்தக் கண்மணி வந்தா… பத்து வயசுல நம்ம பொண்ணு எப்படி இருப்பான்னு வரஞ்சு வச்சிருந்தியோ அப்படி இல்லடி அவ… நாம கற்பனை பண்ணின பொண்ணா இல்லடி… எனக்கு அவளைப் பிடிக்கல… உன்னை மாதிரி இல்லடி அவ… ”
“நான் அவங்கள மாதிரி இல்லதான்… அவங்கள மாதிரி எப்போதுமே இருக்க மாட்டேன்… எனக்கும் அவங்களைப் பிடிக்கலை… “ கண்மணி தனக்குள் சொல்லிக் கொண்ட போதே
“ஆனா… பொம்பளப் புள்ளையா போயிட்டாளே… அவ இங்க இருந்தால் அவளுக்கு பாதுகாப்பு இல்லையே… அவளை என் அம்மாகிட்ட போகச் சொன்னா போக மாட்டேங்கிறாளே ” புலம்பிக் கொண்டிருக்க… கண்மணி எழுந்து வெளியே வந்திருக்க… நள்ளிரவு… கும்மிருட்டு அவளுக்குத்தான் இரவு, இருட்டு இந்த பயம் என்பது இல்லையே எப்போதுமே… இன்றுமே… இதையெல்லாம் மீறி ஆனால் முதன் முதலாக அவளுக்கு கண்ணுக்குத் தெரியாத மரணத்தின் மீது பயம் வர ஆரம்பித்திருந்தது…
அமுதினியின் மரணம் அவளை அவள் குணத்தை மாற்றியது… ஆனால் அவள் தாயின் மரணமோ வேறொரு உணர்வைக் கொடுத்தது… ஒரு மரணம் சுற்றி இருப்பர்களை இவ்வளவு பாதிக்குமா… முதன் முதலாக உணர்ந்தாள் கண்மணி…
Pavi oda pidivatham ponnu kita apdiye