ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
சாரி சாரி... அப்டேட் எழுதி வச்சுட்டு போஸ்ட் போட முடியல... பெர்சனல் கமிட்மெண்ட்ஸ் ஆக்குபை பண்ணுது... அண்ட்... படிச்சுட்டு சொல்லுங்க...
அடுத்த பதிவு கண்மணி என் கண்ணின் மணி 103-2 நாளை இல்லை சில மணி நேர இடைவேளையில்...
நன்றி
பிரவீணா...
அத்தியாயம் 103-1:
/*ஜோடிநிலவே பாதி உயிரே
சோகம்ஏனடா?
தேம்பும்மனதை தாங்கும் மடியில்
சாய்ந்துகொல்லடா!
காலம்கடந்துபோகும்
உந்தன்காயம்பழகிபோகும்
மண்ணில்விழுந்தபூவும்
சிறுகாற்றில்பறக்ககூடும்...*/
“இரண்டு குழந்தைகள்… ஆனால் இரட்டைக் குழந்தைகள் இல்லை… ”
“கண்மணியின் முக்கியமான வளர் பருவத்தில் தொடர்ந்து கொடுக்கப்பட்ட வீரியமிகுந்த போதை மருந்துகள்”
“அதனால் ஹார்மோன் இம்பேலன்ஸ்… அதன் விளைவு அரிதான சூப்பர் ஃபெட்டஸ் கருத்தரிப்பு…”
“பிறப்பிலேயே அவளுக்கு இருந்த சுவாசப்பிரச்சனை… அன்று குழந்தையாக காப்பாற்றப்பட்டவளுக்கு… குழந்தையை பிரசவில்கும் காலத்தில் மிகப்பெரிய சவாலாக மாறியிருந்தது ”
“ப்ரீக்ளாம்ஷியா.. ”
“வஜினல் டெலிவரி சாத்தியமே இல்லை… “
“சிசேரியன் என்றாலும்… ஒரு குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடியும்… அதுவுமே நிச்சயமற்ற நிலைதான்… “
“கண்மணி… “ என்ற அவனின் கேள்விக்கு… மருத்துவரின் மௌனமே பதிலைச் சொல்லிவிட்டிருக்க…
ரிஷியின் தலைக்குள் ஒன்றல்ல இரண்டல்ல… இலட்சோப இலட்ச அணு வெடிப்புகள் ஒரே நேரத்தில்…
கதறல்களுக்கு கூட இடமில்லாமல் அவன் மூளையில் இருந்த அணுக்கள் வற்றிப் போயிருக்க… மிகப்பெரும் துக்கம் தந்த வேதனையின் முடிவு… செயலற்ற தாக்கமே…
இதயத்தின் ஓசை மட்டுமே அவனிடம்… எங்கு இருக்கின்றோம்… என்ன செய்கின்றோம்… எதுவுமே அவன் எண்ணங்களில் இல்லை… அவனைப் பற்றியும் யோசிக்கவில்லை… கண்மணியைப் பற்றியும் யோசிக்கவில்லை…
“அவ்வளவுதானா… என்னால் ஏதும் செய்யமுடியாதா… என் கைகளை மீறிய நிகழ்வா இது…”
“எதையும் சாதித்து விடுவேன்… என் காலடியில் கொண்டு வந்து போடுவேன்… நினைத்ததை சாதித்து விட்டேன்… இன்னும் சாதிப்பேன்” என்று சிகரத்தில் ஏறி நின்றவன்… ஒரே அடியாக பாதாளத்தில் விழுந்த நிலை அன்றுதான்…
ரிஷியின் எண்ணங்கள் எல்லாம்…
“என்ன செய்யலாம்… எப்படி காப்பாற்றலாம்… யாரிடம் உதவியை நாடலாம்…” இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன…
“நான் காப்பாற்றுவேன்… என் கண்மணியைக் காப்பாற்றுவேன்” அவனுக்குள் உறுதி எடுத்துக் கொண்டபோதே… அவனின் துக்கம் எந்த அளவுக்கு வந்ததோ அதே அளவு இந்த உலகத்தின் மீதும்…
அவன் உலகமாக கருதிய அவன் மனைவியின் மீது… கோபம் கோபம் மட்டுமே
“என்னை ஏமாற்றி விட்டாள்… வழக்கம் போல என்னிடம் ஏதும் சொல்லாமல் என்னை ஏமாற்றி விட்டாள்… ”
கணவனாக அவன் மீதும் கோபம்…
“அவள் நம்பிக்கையையும் காதலையும் கடைசி வரை நான் வாங்கவே இல்லையே” கண்கள் சிறுத்து சிவந்தவனின் மொத்த கோபமும் அணை கடந்து கரை உடைத்து இலட்சோபம் இலட்சோபம் மடங்காக பெருக ஆரம்பித்திருக்க…
கோபத்தின் உச்சக்கட்டம்…. துக்கத்தின் உச்சகட்டம்… ஏமாற்றத்தின் உச்சக்கட்டம்…. அனைத்தும் ஒரு புள்ளியில் அழுத்தம் பெற்று அவனை நிலைப்படுத்தி இருக்க… அப்படியே அமர்ந்து விட்டான் ரிஷி… வெளி உலக இயக்கங்களின் வினைகள் அவனிடம் வினை ஆற்றும் திறனை தற்காலிகமாக இழந்திருந்தன்…
---
தன் மனைவி புகைப்படத்தின் முன் கண்கள் பனிக்க நின்றிருந்தார் நட்ராஜ்…
“பவி… நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்…” என்றவர் தன் மனைவியைப் பார்த்தபடியே
“மாப்பிள்ளையும் நம்ம பொண்ணும் பிரிஞ்சு இருக்காங்க… இப்போ என்ன சந்தோசம்னு கேட்கிறியா…”
“என் பொண்ணைப் பற்றி எனக்குத் தெரியும் பவி… என் பொண்ணு பிரிஞ்சு இருக்கான்னா அதுக்கு கண்டிப்பா காரணம் இருக்கும்… இதுவும் கடந்து போகும்…”
“அவ நம்ம மாப்பிள்ளையோட அவ குழந்தையோட சந்தோஷமா வாழனும்… வாழுவா… நாம வாழாத நாட்களையும் அவங்களுக்கு நாம கொடுக்கனும்டி… அதுக்கு உன்னோட ஆசிர்வாதம் வேணும்…” என்றபடியே…
பூஜை அறையில் இருந்த தன் மனைவியின் கைவளையல்கள் சிலவற்றை கையில் எடுத்துக் கொண்டவராக…
“உன்னோட ஆசிர்வாதம் அவ கூடவே எப்போதும் இருக்கும்னு தெரியும்… அவ்ளோ பெரிய ஆபத்துல அவ மாட்டினப்போ… நான் பக்கத்துல இருந்தும் அவளுக்கு உதவி பண்ணாதப்போ… நீ இந்த வளையல் ரூபத்துல அவளைச் சுத்திட்டு இருந்தேன்னு தெரியும்… இப்போதும்… அதே பாதுகாப்புக் கவசத்தைக் கொடு…” என்ற போதே கண்கலங்கியவர்…
“என்னமோ தெரியலை பவி… நம்ம பொண்ணை ஏழு மாத கர்ப்பிணியா பார்க்கும் போது மனசுல உன் ஞாபகமும்… நீ என்னை விட்டுட்டுப் போன ஞாபகமும் அலை மோதுது… ஆனாலும் எனக்குத் தெரியும்… என் பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாது… நான் கும்பிடற கடவுள் என்னை உன் விசயத்துல கைவிட்ட மாதிரி… என் பொண்ணு விசயத்துல கைவிடாது… ஏன்னா அந்த தெய்வத்தோட பக்கத்துல நீயும் இருக்கேன்னு மனசு நம்புதுடி” தன் மனைவியிடம் மனம் உருக வேண்டியபடி சில நிமிடங்கள் நின்றவர்… வெளியே வர.. வந்தவரோ அப்படியே ஆணி அடித்தார் போல வாசலிலேயே திகைத்து நின்றிருந்தார்…
அவரின் திகைப்புக்கு காரணம்… அங்கு பரிதாபமான நிலையில் கண்கள் கலங்கி அமர்ந்திருந்த நாராயணன்… மாமரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தவர், தரையில் பார்வை பதித்து அமர்ந்திருக்க… நட்ராஜுக்கு ஒன்றுமே புரியவில்லை…
“இவர் ஏன் இங்கு வந்திருக்கின்றார்…. ஏன் இப்படி அமர்ந்திருக்கின்றார்… அங்கு விசேஷம் நடக்க இங்கு எதற்க்காக வந்திருக்கின்றார்… யாருக்காக காத்திருக்கின்றார்…” அவரையே பார்த்துக் கொண்டிருந்த நட்ராஜ்… பின்…
“கண்டிப்பாக தன்னைப் பார்க்க வரவில்லை… தன்னிடம் பேச வரவில்லை என்பது சர்வ நிச்சயம்… ரிஷிக்காக வந்திருப்பாரோ…. “ எதுவாக இருந்தாலும்… என்ன காரணமாக இருந்தாலும்… ஏன் அவர் இவனிடம் சண்டையே போட்டாலும்… தான் அமைதியாக இருக்க வேண்டும் நட்ராஜ் இப்படி யோசித்த போதே
“ஒரு வேளை கண்மணியின் வளைகாப்புக்கு என் மகளின் வளைகாப்புக்கு என்னை வரக்கூடாதென்று சொல்ல வந்திருப்பாரோ..” நட்ராஜின் உடல் இறுகியதுதான்… ஆனாலும் சமாளித்தபடியே.. நடந்து வந்தவர்… நாராயண குருக்களின் அருகில் சென்ற போது… ஒரு நொடி தயங்கி நின்று பின் அவரைக் கடந்தும் சென்றார் தான்…
அப்போதும் நாராயண குருக்கள் கலங்கி அமர்ந்திருந்தவராக நிமிரவில்லை… அவரை விட்டு சில அடிகள் கடந்த நட்ராஜ் இப்போது நின்றிருந்தார்… மனதில் அவர் மருமகன் தான் வந்து போனான்…
இப்படி தான் அமர்ந்திருந்தால் ரிஷி தன்னைத்தாண்டிச் செல்வானா… அப்படியே விட்டுச் சென்று விடுவானா… அன்று அவன் மனைவியின் கடந்த காலத்தைக் கேட்டபின்னால் என் மேல் அவ்வளவு கோபம் இருந்தும் என்னை தவிக்க விடவில்லையே… அந்த குணம் எனக்கு மட்டும் ஏன் இல்லை…
”பவியோடு வாழ்ந்த போது கூட… மாமனார் என்ற மரியாதையை நான் அவருக்கு கொடுக்கவில்லையே…” மனம் நட்ராஜையே கேள்விகளால் சுட ஆரம்பித்திருக்க… நட்ராஜ் தன் மாமனாரை நோக்கித் திரும்பினார்…
---
”ஏய் மணி…. யார் வந்திருக்கான்னு பாரு” கந்தம்மாள் கண்மணியை அழைத்தபடியே அவர் அருகில் வந்திருக்க… அவரின் அருகில் ஒரு இளைஞன்… கண்மணிக்கு வந்தவன் யாரென்றே தெரியவில்லை… கந்தம்மாள் கைப்பிடித்து அழைத்து வந்த இளைஞனுமே கண்மணியை அறிமுகமில்லாப் பார்வைதான் பார்த்தான்
கண்மணிக்குத்தான் இப்போது அவஸ்தையான நிலை… தன் பாட்டியை வழக்கம் போல முறைத்து வைத்தவள்…
”இந்தக் கெழவிக்கு விவஸ்தையே இல்லை… திடீர்னு கூட்டிட்டு வந்து… யார்னு கேட்டா.. யார்னு கூடத் தெரியலையே…” என்று தன் நினைவடுக்குகளில் யோசிக்க ஆரம்பித்திருக்க
“அடியேய்… யாருனு தெரியலையா… நம்ம டாக்டரரு ஐயா மகன்… முருகேசு…” எனும் போதே கண்மணி ஆச்சரியமாகப் பார்க்க… அந்த முருகேசுக்கோ இன்னும் தர்மசங்கடமான நிலை…
“வா.. முரு… சாரி சாரி வாங்க முருகேஷ்…” கண்மணி சட்டென்று ஞாபகப்படுத்தி அவனை அழைக்க…
“ஹாய்…” என்றவன்
“ரிஷிகேஷ்” என்று தயக்கத்தோடு அவளிடம் பேசியபடியே ரிஷியைத் தேட ஆரம்பித்திருக்க… கண்மணி ஆச்சரியமாக விழி விரித்துப் பார்க்க
“ரிஷி மாப்பிள்ளை இவரை எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு நேர்லயே கூப்பிட்டுட்டு வந்துச்சாம்… ” கந்தம்மாள் அவளிடம் சொன்னபடியே..
“எனக்கு கையும் ஓடலை… காலும் ஓடலை… கீழ பாரு… டாக்டர் ஐயாவும்.. அம்மாவும் கூட வந்திருக்காங்க… இன்னும் நம்ம ஏரியால இருக்கிறவங்க எல்லாம் வந்திருக்காங்க… எல்லார்கிட்டயும் பேசு… உன் ராங்கித்தனத்தை எல்லாம் அவங்க கிட்ட காட்டாத… நம்ம ஜனம் எல்லாரும்… சரியா… உனக்காகத்தான் வந்திருக்காங்க…” என்றபடியே தன் பேத்தியை நெட்டி முறித்தவர் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தார்…
பெரும்பாலானோர் தன் ஏரியா மக்கள்… சட்டென்று ஏனோ கந்தம்மாளுக்கு பொறுப்பு கூடியது போல… தன் வீட்டு விசேசம்… தான் வளர்த்த பேத்தியின் வளைகாப்பு….
கந்தம்மாள் சுறுசுறுப்புடன் வளைய ஆரம்பித்தார்… அந்த சந்தோசத்தை தன் பேத்தியிடம் காட்டியிருக்க
”சரி கெழவி… ” என்ற கண்மணி சிரித்தபடியே…
“இன்னைக்காவது நான் சொல்றதைக் கேளு… ஆடின ஆட்டம்லாம் போதும்” என்ற போதே…
கண்மணியின் கண்கள் சட்டென்று கலங்கிவிட… கந்தம்மாள் அப்போது…
“இப்போ இன்னாத்துக்கு கண்ணு கலங்குது உனக்கு…. உன் அப்பன்கிட்ட போட்டுக் கொடுத்துறாத… எனக்கெதுக்கு வம்பு… எனக்குத் தேவையா இது” என்ற கந்தம்மாளிடம்…
சட்டென்று மாறியவள்…
”நான் ஒண்ணும் அழலை…நம்ம ஆளுங்களைப் பார்த்த சந்தோசத்துல நீ ரொம்ப ஆடாத… அதைத்தான் சொல்ல வந்தேன்… “ வழக்கமான கந்தம்மாளின் பேத்தியாக மாறி கந்தம்மாளை வம்பிழுக்கவும் தவறவில்லை…
இப்போது முருகேஷ் …
“கண்மணி” என அவளை அழைக்க… இருவருமே அப்போதுதான் அவன் இருப்பதையே உணர்ந்தவர்களாக அவனைப் பார்க்க
“சொல்லுங்க முருகேஷ்..” என்றவளிடம்
“சாரி… கண்மணி… நான் இதை இங்க சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… உண்மையிலேயே ரிஷி வந்தப்போ… உங்களப் பற்றி சொன்னப்போ… எனக்கு உங்களைப் பற்றி ஞாபகமே வரலை… அம்மாதான் சொன்னாங்க… அப்போ கூட எனக்கு ஞாபகம் வரலை… ஏன் சண்டை போட்டோம்னு கூட எனக்குத் தெரியலை…. சாரி தப்பா எடுத்துக்காதீங்க… நீங்க அவ்ளோ ஞாபகம் வச்சு என்னைப் பற்றி சொல்லியிருக்கீங்க… ஆனால் எனக்கு ” என்று தர்மசங்கடமாக முருகேஷ் சொல்ல..
“ஹையோ… உண்மையிலேயே நான் தான் சாரி கேட்கனும்… நீங்க ரொம்ப நல்லவங்களா இருந்ததுனாலதான்… நான் கல்லை விட்டு எறிந்ததைக் கூட மறந்துட்டீங்க… இதுவே நானா இருந்தா கடைசி வரை ஞாபகம் வச்சுட்டு பழி வாங்கி இருப்பேன்… இதுல தப்பா எடுத்துக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை… அவங்கவங்க லைஃப்ல ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு பிரையாரிட்டிஸ் இருக்கு… என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கதான் முதன் முதல் ஃப்ரெண்டுனு அறிமுகமானது… அந்த வகையிலஎனக்கு நீங்க மறக்க முடியாதவங்க… ஆனால் உங்களுக்கு அப்படி இல்லைல…” கண்மணி படபடவென்று பதில் சொல்ல… முருகேஷ் சிரித்தவனாக
“நான் தான் உங்க ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட்ட்னு உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லிருப்பீங்க போல… அதுனால அவரே நேர்ல வந்து உங்களப் பார்த்தால் அவ சந்தோசப் படுவா… கண்டிப்பா வரணும்னு சொன்னாரு… ஏனோ அவருக்காக வரனும்னு தோணுச்சு” என்றவனிடம் ரிஷியைத் தவிர்த்தவளாக
“ரொம்ப சந்தோசம் முருகேஷ்.. முருகேசு…” கண்மணி கண் சிமிட்ட… சிரித்த முருகேஷ்…
“நியுரோ சர்ஷன்… இப்போதான் பிஜி முடிச்சுருக்கேன்… நல்ல ஹாஸ்பிட்டலா பார்த்துட்டு இருக்கேன்… தென் ரிஷிகேஷ் சார் என்னோட ப்ரொஃபைல் வாங்கி இருக்காரு…” என்றவனிடம் முகமெங்கும் சந்தோசமாக இருக்க… கண்மணியும் அவனை நிறைவாகப் பார்த்தாள்…
அதன் பின் முருகேஷ் கீழே இறங்கிச் சென்று அங்கு இருக்கையில் அமர்ந்து விட்டான்…
கண்மணிக்குத்தான் ஒரே ஆச்சரியம்… என்னுடைய முதல் தோழன்… இந்த வார்த்தைகளுக்காக… இந்த அளவுக்குச் செய்வான் ரிஷியை எதிர்பார்க்கவில்லை….
“விஜி அக்கா… அவளது பள்ளிக்கூட நண்பர்கள்… பிரபா மேடம்… என இவர்கள் வந்தது சந்தோசமே என்றாலும்… இவர்களை எல்லாம் கண்டுபிடிப்பது சுலபம்… ஆனால் இவனை இந்த முருகேஷ எப்படி தன் கணவன் கண்டுபிடித்தான்…” நினைத்த போதே
“நல்ல வேளை… அந்தக் கடத்தல்காரங்க நம்மைக் கடத்துனப்ப பார்த்த பையனைப் பற்றி ரிஷிக்கிட்ட சொல்லல… “ அவளாக யோசித்துக் கொண்ட போதே… முருகேஷின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்து போயின…
“தான் முருகேஷை ஞாபகம் வைத்திருந்த அளவுக்கு அவனுக்கு என் ஞாபகம் இல்லை… அது போலவே அந்த இரவில் பார்த்த அந்த சிறுவனும் பெரிதாக தன்னைப் பாதிக்கவில்லை… அவன் முகமும் ஞாபகம் இல்லை… ஆனால் அவன் கையில் இருந்த அந்தக் கைக்காப்பு மட்டுமே அவன் நினைவுகளைத் தந்து போகின்றது அது கூட அவளை அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற உதவியதால் மட்டுமே… ” நினைத்த போதே…
“அதே போல் அவனுக்கு தன்னைப் பற்றி ஞாபகம் இருக்குமா… இல்லை என்னை மாதிரியே அவனும் பெரிதாக நினைக்காமல் விட்டிருப்பானா”
“ஒவ்வொருவருக்கும், தாங்கள் பார்க்கும், பழகும்… சந்திக்கும் நபர்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம்… ஞாபகங்கள்… ஒரு ஒரு விதத்தில் வேறுபடுகிறது…” முருகேஷின் மூலம் உணர்ந்து கொண்டாள் கண்மணி…
நமக்கும் முக்கியம் என்று நினைக்கும் நபர்களின் எண்ணங்களில் நாம் முக்கியமான நபராக… ஏன் நினைவுகளின் புள்ளியில் கூட இல்லை…. மனித மனங்களுக்கு இடையேயான தொடர்பு வித்தியாசமானதுதான் போல…
முருகேஷ் … அன்று ஒரே ஒரு நாள் இரவில் சந்தித்த அந்த சிறுவன்… மருது…. அர்ஜூன்… சுற்றி வந்து நின்றவளின் ஞாபகப்புள்ளி… கடைசியில் முதன் முதலாகப் பார்த்த தன் கணவனின் நினைவலைகளைச் சுமந்து நின்றிருக்க... இத்தனை பேர்கள் இருக்க… ரிஷி மட்டும் அவளின் ஜென்ம பந்தமாக அவளை உணர வைத்தது எப்படி…
ஜென்ம பந்தம் நினைத்த போதே அந்தப் ஜென்ம பந்தத்தின் ஆயுள் ஏன் கேள்விக் குறியாக ஆனது? மனம் தவிக்க ஆரம்பித்த போதே
“இதெல்லாம் இப்போ தேவையா கண்மணி… ரிஷி எங்க ரொம்ப நேரமா காணோம்… டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போட்டதுலருந்தே அவர் முகம் மாறிருச்சு…”
”முதன் முதலின் பார்த்த அவனின் சிரித்த முகமும்… சில மணி நேரத்துக்கு முன் அவள் நீட்டிய விவாகரத்துப் பத்திரத்தில் அவன் கையெழுத்து போட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்த அவனின் முகமும் வந்து போக… கண்கள் கலங்கிய போதே… அவளுக்கு உரித்தான பழக்கமான தானாக கண்ணீரையும் நிறுத்தம் செய்யும் விந்தையும் கூடவே வந்து அவளை நிலைப்படுத்தி இருந்தது…
யோசனைகள் எங்கெங்கோ போய் மீண்டும் மீண்டும் ரிஷியிடமே வந்து நின்றது… அப்போது… வெளியே வாசலில் பரப்பரப்பாக அனைவரும் செயல்பட ஆரம்பித்திருக்க… அந்தப் பரபரப்பு அவர்கள் இருந்த சபை வரை நீண்டது…
“கலெக்டர் வர்றாராம் கண்மணி…” சத்யா போன் பண்ணினார்…. இலட்சுமி கண்மணிக்கு தகவல் சொல்லிவிட்டு வேகமாக வாசலை விட்டு வெளியேற… கண்மணியின் புருவங்கள் நெறிந்திருந்தன…
---
நாராயண குருக்களின் அருகே வந்திருந்தார் நட்ராஜ்… அருகே வந்தார் தான் ஆனாலும் என்ன பேச… எப்படி பேச… தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டது போல உணர்வு…
தயக்கத்துடன்… அவரைப் பார்த்தபடியே…
“அ… அங்க கண்மணி வளைகாப்பு போட ஆரம்பிச்சுருப்பாங்க… எ.. எல்லாரும் தேடுவாங்க… ” எப்படியோ நட்ராஜ் தன் மாமனாரிடம் சொல்லி முடித்த போதே… நாராயணன் உடல் குலுங்க ஆரம்பித்திருக்க… அதே நேரம் அவர் கைகள் நட்ராஜின் கைகளைப் பற்றியிருக்க
நட்ராஜுக்கு இனம் புரியாத உணர்ச்சிப் பெருக்கு…
“சா… சார்… ஏ..ன் .. என்னாச்சு” இப்போது நட்ராஜின் குரல் தடுமாறி வந்திருக்க… சந்தோசமும்… ஆச்சரியமும்… நட்ராஜையும் அறியாமல் அவரது கண்களில் கண்ணீர்
“என்னை மன்னிச்சுருங்க மாப்பிள்ளை…” நட்ராஜின் கரங்களில் முகம் புதைத்து நாராயணன் கேவி கேவி அழ ஆரம்பித்திருக்க
நட்ராஜுக்கு வார்த்தைகளற்ற நிலை… சட்டென்று வேகமாக தன் மாமனாரின் அருகே அமர்ந்தவர்… சில நிமிடங்கள் அப்படியே சிலையென தானும் அமர்ந்திருந்தவர்… இப்போது
“சார்… நாராயணன்னா கம்பீரமா இருக்கனும்… அதுதான் அழகு… இப்படி பார்க்கிறதுக்கு நல்லாவே இல்லை…” நட்ராஜ் சொல்ல
நாராயணன் நிமிர்ந்தார்… கண்ணீரோடு
“என்ன ஆச்சு….” நட்ராஜ் கலக்கத்தோடு கேட்க…
“நான் தப்பு பண்ணிட்டேன் மாப்பிள்ளை… அது தப்புனு புரியும்தான்…. தெரியும் தான்… ஆனால் அதை விட்டு விலகி வர மனசில்லை… என் பொண்ணை பறி கொடுத்த பின்னால கூட என்னோட அந்தஸ்து வெறி அடங்கலை… “
“நேத்து வரை அப்படித்தானே… இருந்தது…” நட்ராஜ் இந்த வார்த்தைகளைச் சொல்லத் தயங்கவும் இல்லை…
“ப்ச்ச்… அப்படிலாம் இல்லை மாப்பிள்ளை… பத்து வயசுல என் பேத்தியை ஹாஸ்பிட்டல்ல பார்த்தேனே… அப்போவே அதெல்லாம் அடங்கிருச்சு… அந்த வெறிலாம் போயிருச்சு… அதுக்கப்புறம் உங்க மேல மட்டும் இல்லை என் மேலேயே எனக்கும் கோபம்…”
“என் பேத்தி உங்கிட்ட இருக்கக் கூடாதுன்ற வெறிதான் அப்புறம்…” என்ற போது… அன்றைய ஞாபகங்களில் நட்ராஜ் தன் தலையைக் கவிழ்ந்திருக்க… அவர் கண்களிலும் கண்ணீர்
அடுத்த சில நிமிடங்கள் அமைதியான நிமிடங்களாக கழிந்திருக்க… நாராயணன் தான் பேச ஆரம்பித்தார்
”எனக்கு பயமாருக்கு மாப்பிளை…. என் பேத்திக்கு ஏதும் ஆயிருமோன்னு….” நாராயணனின் குரல் முற்றிலும் உடைந்திருக்க… நட்ராஜ் அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க
“நான்… என்னோட கோபம்… என்னோட சாபம்லாம் பலிச்சிருமோன்னு…” அவரது குரல் இறுகி இருக்க… நட்ராஜின் பார்வை கோபமா… பதட்டமா… பயமா என்று பிரித்தறியாதபடி தன் மாமனாரைச் சூழ ஆரம்பித்திருக்க
“நான் ஒரு கேடு கெட்டவன் மாப்பிளை… உங்களுக்கு சாபம் கொடுக்கிறேன்னு… எனக்கே சாபம் விட்ருக்கேன்... என் பேத்தியையே அந்த வார்த்தை சொல்லிருக்கேனே” நட்ராஜ் இப்போதும் புரியாமல் பார்க்க
“நம்ம பவி இறந்த அன்னைக்கு… நான் சொன்னேனே… என்னை மாதிரியே உனக்கும் இது நடக்கனும்னு…” அதற்க்கு மேல் அவரால் பேச முடியாமல் அழ ஆரம்பித்தவராக
“பயமா இருக்கு மாப்பிள்ளை… என் பேத்திக்கு இந்த பாவி வார்த்தை ஏதும் பலிச்சுருமோன்னு….” சொன்னவர்
“நேத்து பவி என் கனவுல வந்தா… என் பொண்ணு ஆசைப்பட்டதை நீங்க அவளுக்கு கொடுக்கலை… என் ராஜும் கொடுக்கலை… நான் ஆசைப்பட்டதும் நடக்கல… என் பொண்ணை நானே எடுத்துக்கறேன்னு சொன்னா….” சொன்னவரின் கன்னங்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட… நட்ராஜ் அதிர்ச்சியுடன் பார்க்க… நாராயணன் பேசிக் கொண்டே இருந்தார்
”ஏன்ப்பா ராஜ்க்கு சாபம் விட்டீங்கன்னு அழுதா மாப்பிள்ளை…”
”இவ்ளோ நாள் வராத என் பொண்ணூ… நேத்து ஏன் வந்தா… அதுவும் என் பேத்திக்கு வளைகாப்பு வைக்கும் போது வரணும்…. மனசெல்லாம் பதறுது மாப்பிள்ளை… அதுவும் நானே என் பொண்ணை எடுத்துக்கிறேன்னு சொன்னப்போ… எனக்கு என் இருதயமே நின்றுச்சு மாப்பிள்ளை… என் பேத்திக்கு ஒண்ணுனா… என்னால தாங்கவே முடியாது… எனக்கு அவதான் மாப்பிள்ளை எல்லாமே… அவ எனக்கு வேண்டும்… அதுக்கு நான் யார் கால்லயும் விழுவேன்… உங்க கால்ல விழறதுக்கென்ன… என்னை மன்னிச்சுக்கங்க மாப்பிள்ளை…. என் வார்த்தையெல்லாம் மன்னிச்சு என்னை ஏத்துக்கங்க மாப்பிள்ளை…” என்றவர் சட்டென்று நட்ராஜின் காலை நோக்கி குனியப் போக… பதறி எழுந்தார் நட்ராஜ்… தன் மாமனாரை இறுக்கமான அணைத்துக் கொள்ள…
“என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க மாப்பிள்ளை… அப்போதான் என் சாபம்லாம் மண்ணாப் போகும்… ” தன்னையே தலையில் அடித்துக் கொண்டு அடித்தவரின் கைகளைப் பிடித்துக் கொண்டார் நட்ராஜ்… அப்போதும் அவர் நிறுத்தவில்லை… அப்போதும் நாராயணன் நிறுத்த வில்லை…
“நீங்க சொன்ன வார்த்தையால, சாபத்தால எல்லாம் என் பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாது… நல்லா இருப்பான்னு சொல்லுங்க மாப்பிள்ளை… இதை நான் உங்க வாயால கேட்கனும் மாப்பிள்ளை” கண்ணீர் மல்க உணர்ச்சி வசப்பட்டவரை… அமைதியாகப் பார்த்த நட்ராஜ்… …
“கண்மணிக்கு ஒண்ணும் ஆகாது…” நிச்சயமான… உறுதியான குரலில் சொல்ல
நாராயணன் கண்களில் அப்படி ஒரு சந்தோசம்….
“மாப்பிள்ளை…” என தழுதழுத்த போதே
“என் மருமகன் ரிஷி இருக்கிற வரை… கண்மணிக்கு ஒண்ணும் ஆகாது”
நாராயணனோ இப்போது கண்களில் வலியுடன்…
“நான் இவ்ளோ தடவை மாப்பிள்ளை மாப்பிள்ளைனு சொல்றேன்… நீங்க ஒரு தடவை கூட மாமான்னு சொல்ல மாட்டேன்றேன்றேளே…” சொன்ன போதே
‘மாமா’ என்று அழைக்கவில்லை… மாறாக அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்ட நட்ராஜ்…
“கவலைப்படாதீங்க… நம்ம கண்மணி… பவியோட பொண்ணா… இந்த பாவி நட்ராஜோட மகளா… சீமான் நாராயணனோட பேத்தியா மட்டுமா இருந்திருந்தால்… பவியோட கவலை… உங்களோட சாபம் இதெல்லாம் பற்றி நான் கவலைப்பட்டிருப்பேன்… ஆனால் இப்போ எனக்கு அந்தக் கவலை இல்லை… ஏன்னா அவ ரிஷியோட கண்மணி மாமா… அதுனால எனக்கு எப்போதுமே கண்மணியைப் பற்றி கவலை இல்லை “
“எப்படி மாப்பிள்ளை… அவதான் அவனை வெறுக்கிறாளே… அவனைப் பற்றியே பேச மாட்டேங்கிறாளே… ரிஷியைப் பற்றி யாருமே அவகிட்ட பேசக் கூடாதுன்னு சொல்றாளே” நாராயணனின் கண்களில் மீண்டும் நம்பிக்கையின்மை வந்திருக்க
“அவ ரிஷியை வெறுக்கிறாளா…” சிரித்த நட்ராஜ்…
”இந்த உலகத்தில… என்னை விட…உங்களை விட.. அத்தையை விட… ஏன் அவளை விட அவ அதிகமா நேசிக்கிறது ரிஷியைத்தான் மாமா… அந்த அளவுக்கு அதிகமான பாசம் தான் அவனை விட்டு அவ விலகி நிற்கிறதுக்கும் காரணம்” நட்ராஜ் வார்த்தைகளில் நிதானம் மட்டுமே…
“இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா…” இப்போது அவர் கண்களில் வலி மட்டுமே…
“நானும் பவியும் தான்… நாங்க வாழ்ந்த வாழ்க்கைதான்… எங்க வாழ்க்கைல நடந்த நிகழ்வுகள் தான்… தெரிந்தோ தெரியாமலோ பவி நம்ம எல்லோருடைய வாழ்க்கைலயும் சில விசயங்களை பதிச்சு வச்சுட்டு போயிருக்கா… என்னோட நிலைமை… அத்தையோட மனவியாதி… அர்ஜூனோட அத்தை பாசம்… நீங்க இன்னைக்கு உங்க பேத்திய பற்றி நினைச்சு புலம்புற வேதனை… இது எல்லாத்துக்குமே காரணம் பவியோட நினைவுகள் தந்த வலிகள்… அவள் மரணம் தந்த வேதனை… அவளோட நினைவுகளும்… அவளோட தவிர்க்க முடியாத மரணமும்… நம்மைத் துரத்திக்கிட்டே இருக்கு… நமக்கே இப்படினா… கண்மணிக்கு… அவ சின்ன வயசுல இருந்து பாதிக்கப்பட்டவ… அவ சொல்லிட்டு இருக்காளே… எனக்கு அம்மா பிடிக்காது … நான் அம்மா மாதிரி இல்லைனு சொல்றதை நீங்க எல்லோரும் நம்பலாம்… ஆனால் எனக்கு மட்டுமே தெரியும்… அவ அம்மாவை அவ எப்படி மிஸ் பண்றான்னு… இதோ அங்க இருக்கே உங்க பொண்ணு போட்டோ… பவி முன்னால அவ உட்கார்ந்திருக்கும் போதெல்லாம் அவ வேதனை யாருமே அறிய முடியாத வேதனை… “
“அவ அம்மாவோட மரணம்… அவ அப்பாவோட வேதனை… அதுனால அவ பட்ட கஷ்டம் இது மூணுமே அவ மனசுல ஆழப் பதிஞ்ச ஒண்ணு மாமா… அதுதான் இன்னைக்கு அவ ரிஷியை விட்டு பிரிஞ்சிருக்கிற காரணம்… ரிஷி மேல அவளுக்கு இருக்கிறது காதல் மட்டும் இல்லை… அதுக்கும் மேல… அவளால அவனை விட்டு தள்ளி இருக்கவே முடியாது மாமா…”
“எனக்கு நம்பிக்கையே இல்லை ராஜ்…” கண்களில் கலக்கத்துடன் சொல்ல
நட்ராஜ் தன் மாமனாரின் கைகளை மென்மையாக அழுத்தியவனாக…
‘நீங்க எங்க மேல வைக்காத நம்பிக்கையை… நான் என் மருமகன் , மகள் மேல நான் வச்சுருக்கேன் மாமா… அது எல்லாம் விட அவங்க ரெண்டு பேருக்கும் நம்ம எல்லோரோட ஆசிர்வாதமும் இருக்கு… ரிஷின்னா தலைல வச்சு கொண்டாட்ற எத்தனையோ பேரை அவன் சம்பாரிச்சு வச்சுருக்கான்… அவன் நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்களை விட அவன் நல்லா இருக்கனும்னு நினைக்கிறவங்க ஆயிரம் மடங்கு அதிகம் மாமா… அப்படிப்பட்டவன் என் மருமகன்… தன் குடும்பம் மட்டுமில்லை… தன் அப்பா காப்பாத்துன மக்கள்… அவங்களும் நல்லா இருக்கனும்னு… துறவு வாழ்க்கை வாழந்தவன் மாமா… அவங்க அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்காக… சொந்தக் குடும்பம் மட்டுமில்லாமல்… வேலை பார்த்த ஆயிரம் குடும்பங்களோட வாழ்க்கையையும் தன் கடமையா ஏத்துகிட்டு… அவங்க வாழ்க்கைல ஒளி ஏற்றியும் வைத்தவன் என் மருமகன்… அப்படிபட்டவனுக்கு ஒரு கெட்டது நடக்குமா மாமா… நடக்கவே நடக்காது… நல்லது மட்டும் தான் நடக்கும்… அவனோட பொண்டாட்டி என் பொண்ணு… உங்க பேத்தி… அவளுக்கு என்ன ஆகும் சொல்லுங்க… ஒரு துன்பமும் நெருங்காது மாமா… அப்படியே அவளுக்கு ஒரு கஷ்டம் வந்தால் கூட என் பொண்ணா இருக்கிறதுனால… உங்க பேத்தியா இருக்கிறதுனால மட்டும் தான்… அப்படியே வந்தாலும் அவ ரிஷியோட கண்மணியா இருக்கிற வரை அதெல்லாம் அவளை நெருங்க கூட முடியாது மாமா…”
நாராயணம் தன் மருமகனைப் பார்த்தபடி இருக்க… நட்ராஜ் கேள்வியாக தன் மாமனாரை நோக்க
“இந்த நம்பிக்கையை நான் உங்க மேல வச்சுருந்தா… என் பொண்ணு உயிரோட இருந்துருப்பாதானே….” நாராயணன் கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிய…
நட்ராஜ் வலியுடன் சிரித்தவராக
“நடந்தது எதையும் மாற்ற முடியாது மாமா… பவி இப்பவும் என் கூட இருக்கா… என் மனசுல அப்டியேதான் இருக்கா… உங்க பொண்ணும் உங்க கூடவே தான் இருக்கா…”
நாராயணன் சமாதானமாகவில்லை என்பது அவர் அமர்ந்திருந்த விதத்திலேயே தெரிய…
நட்ராஜ் அவரிடம் அடுத்து பேசப் போன போதே… அவரின் அலைபேசி அடிக்க… எடுத்துப் பார்க்க ரித்விகாதான் அழைத்திருந்தாள்…
“மாமா… எங்க இருக்கீங்க… எல்லோரும் உங்களத் தேடிட்டு இருக்காங்க… அண்ணாவும் இங்க இல்லை… சீக்கிரம் வாங்க…” என்ற போதே
“மாமா இதோ வந்துட்டேண்டா … அங்க ஏற்பாடெல்லாம் பண்ணச் சொல்லு… அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேண்டா… ” எனும் போதே… நாராயணன் அலைபேசிக்கும் அர்ஜூனிடமிருந்து அழைப்பு வந்திருக்க… அவரும் அவனுக்கு பதில் சொல்லியபடியே எழுந்தார்…
“மாமா… கார்ல வந்தீங்களா…” நட்ராஜ் கேட்க
“ஆமாம்… ஆனால் இபோ நீங்க என்னைக் கூட்டிட்டுப் போங்க” என்ற போதே… நட்ராஜ் வேகமாக தலை ஆட்டினார்..
“மாமா… பவிக்கு பிடிச்ச பைக்… அதை எடுத்துட்டு வர்றேன்” என்றபடி தன் மருமகனிடம் கொடுத்திருந்த பைக்கை எடுத்து வந்தவர்… சந்தோசமாக தன் மாமனாரை அதில் அமர வைத்து… ரிஷியின் இல்லம் நோக்கிச் சென்றார் நட்ராஜ்…
---
Such a drsatic change .. Narayanan's.. Couldn't expect but really one dream can change anything.. I agree with it jii...
Wow super
Lovely update
Emotional epi sis waiting for next part
Very emotional epic and please kanmani, RK a pirissitathinka 🥺
So nice sis very emotional. Waiting for Rishi kanmani
narayanan sir Raj pa emotions 👌sis
kanmani Rishi ku waiting siss
One of the heaviest episodes💔
Athum Natraj-Narayanan united. Rishi broken rendum....kanneer varuthu🥺
Waiting for the next
அடுத்த பதிவிற்கு waiting...