ஹாய் ஃப்ரென்ண்ட்ஸ்...
இந்த எபிசோட் நீங்க எப்படி ஃபீல் பண்றீங்கன்னு தெரியலை.... கண்மணி வாழ்க்கைல இவ்ளோ கஷ்டம் ஏன்னு நீங்க ஏற்கனவே திட்டிட்டீங்க... இருந்தாலும்... ஹீரோயின் அவ தானே....
ஸ்டோரி பிடிக்காத நெகட்டிவ் ஷேட்ல போற மாதிரி இருக்கும்... சாரி... தவிர்க்க முடியலை... ஓரளவுக்கு காட்சிகளை விவரிக்காமல்... படிக்கிறவங்களோட எண்ணப் போக்குல விட்டுட்டேன்... அதுதான் சரின்னு தோணுச்சு... கண்மணி இப்போ திருமணமான பெண்... சோ... ஆதவனோட அவளோட போராட்டம்லாம் காட்சியா வைக்க நினைக்கலை....
அடுத்த எபில கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிருவீங்க... இப்போ பை பை....
நன்றி
பிரவீணா...
அத்தியாயம் 100-2
/*பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
நதி எங்கு சொல்லும்
கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்ததது விதியானால்
நீ எந்தன் உயிர் அன்றோ..*/
ரஞ்சித் ரிஷியின் கஷ்டடியில் வைக்கப்பட்டிருக்க… யமுனா பயந்தபடி ஏதும் நடக்காமல்…. பார்த்திபன் – யமுனா திருமணம் எந்த ஒரு பிரச்சனையுமின்றி நல்லபடியாக நடந்து முடிந்திருந்தது… ரிஷி மட்டும் தான் வரவில்லை… மற்றபடி அனைவரும் வந்திருந்தனர் அவர்களின் திருமணம் நடந்த கோவிலுக்கு…
ஜாமினில் வெளிவந்திருந்த ஆதவன் கூட வந்திருந்தான் அவன் அன்னையோடு…
ஆதவனின் அன்னை இலட்சுமியிடம் பேசிக் கொண்டிருந்தார்…
”இனிமேல் என் பையன் என்னைப் புரிஞ்சு நல்லா நடந்துக்கிறேன்னு சொல்லியிருக்கான் இலட்சுமி… சீக்கிரமா அவனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டா போதும்… குடும்பஸ்தனா மாறிட்டா அவன் புத்தியும் மாறும்… இந்த பிஸ்னஸ்… வெற்றி… அது இதுன்னு வெறியா அலைய மாட்டான்…”
எனும் போதே இலட்சுமியும்…
“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை… என் மருமகள் வந்த பின்னாலதான் இவனுமே ஓரளவு சரியானான்…” ரிஷியின் அன்னையாக… ஆதவனின் அன்னைக்கு உத்திரவாதம் அளித்துக் கொண்டிருக்க…
அதே நேரம் ஆதவனின் திமிரான பார்வை… சற்று தூரத்தில் தள்ளி தனித்து அமர்ந்திருந்த கண்மணியிடம் சென்று திரும்பியதை யாரும் அறியவில்லை… அதுமட்டுமல்ல… வந்ததில் இருந்தே அவன் பார்வை கண்மணியிடம் மட்டுமே மையம் கொண்டிருந்ததையும் யாரும் கவனிக்க வில்லை
ஒருவேளை அர்ஜூன் அங்கு இருந்திருந்தால் கண்டு கொண்டிருப்பானோ இல்லையோ…. அவனோ வேறு ஒரு முக்கியமான நபரிடம் மாட்டிக் கொண்டிருந்தான்… அந்த முக்கியமான நபர் வேறு யாருமல்ல நிவேதா…
“நீ எப்போ வந்த… எப்படி வந்த… என்கிட்ட கூட சொல்லல… அதுவும் பார்த்திபன் யமுனா மேரேஜுக்கு வந்து நிற்கிற… பார்த்தி இல்ல யமுனா உனக்குத் தெரிந்தவங்களா” அர்ஜூன் ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருக்க
“விக்கிக்குத் தெரிஞ்சவங்க… கூடவே உனக்கும் தெரிஞ்சவங்க… சோ வந்துட்டேன்… மத்தபடி பார்த்தி யமுனா இவங்களாம் யார்னே தெரியாது… இப்போதான் பார்க்கிறேன்…” நிவேதா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னவள்…
“யூ நோ… கூப்பிடாத கல்யாணத்துக்கு வந்தா… வந்தவங்களுக்கு கல்யாணமும் கூப்பிடாமல் கூடுமாம்… “ நிவேதா அர்ஜூனைப் பார்த்து போலி வெட்கத்துடன் சொல்ல…
“இது நிவேதா பழமொழியா இது… அதைவிட இது கொடுமையா இருக்கு” அவள் கால் கட்டை விரலால் தரையில் கோலம் போட்டுக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டி அர்ஜூன் நக்கலாகச் சொல்ல… நிவேதாவோ பதிலுக்கு கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள்…
எவ்வளவு அவளை விட்டுத் தள்ளிச் சென்றாலும்… அவனைச் சுற்றி சுற்றி வரும் நிவேதாவை அர்ஜூனும் தன்னை விட்டு தள்ளி நிறுத்தவே விரும்பினான்… விரும்பினான் என்பதை விட இருவருக்குமே அது நல்லது என்று நினைத்தான்… அதன் காரணமாக
“அப்போ எங்களுக்கெல்லாம் சீக்கிரம் கல்யாணச் சாப்பாடுதானா நிவேதா” அர்ஜூன் அவளைச் சீண்டும் விதமாகக் கேட்க
“ஹ்ம்ம்… ஆனால் அது முதல்லன்னு தெரியல… அதாவது கல்யாணச் சாப்பாடா இல்லை நேரா வளைகாப்பு சாப்பாடான்னு… பையன் மேரேஜுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறான்… அதான்… இப்படி போய் அப்படி வர்றதுக்கு அப்படி போய் இப்படி வரலாம்னு” நிவேதாவும் அர்ஜூனுக்குப் பதிலடி கொடுக்க
அர்ஜூன் முறைத்த போதே
“உன் மனசை மாற்றி… நாள் பார்த்து… மண்டபம் பார்த்து… அப்புறம் தாலி கட்டி… எக்சட்ரா… எக்சட்ரா…. போய்… பிள்ளை பெக்குறதுக்குள்ள எனக்கு நாக்கு மூக்கு தள்ளிரும் போல… சொல்லபோனால்… எனக்கு இப்போ முப்பது ஸ்டார்ட்டிங்… உனக்கென்ன… வயசானாலும் ராஜா மாதிரி இருப்பீங்க.. கவலையெல்லாம் எனக்குத்தான்… வயதானால் பிரசவம் கஷ்டம்… அதுதான் யோசிக்கிறேன்… நாம பேசாமல் புள்ள பெத்துக்குவோம்… அப்புறமா நீங்க யோசிச்சு யோசிச்சு ஒரு முடிவைச் சொல்லுங்க… வயசு 100 ஆனால் கூட பரவாயில்ல…”
”உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன… என்னை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற… உன்னோட தொல்லை இல்லாமல் நிம்மதியா இருந்தேன்… ” அர்ஜூன் குரல் உயர்ந்ததில் நிவேதா அமைதியாக இருக்க…
“இங்க பாரு… நீ என்ன வேனும்னாலும் பேசலாம்…. என் வயது கூட போகலாம்… ஆனால் நான் எப்போதுமே இப்படித்தான்… எனக்கு என் அத்தை பொண்ணுதான் முக்கியம்…” அர்ஜூன் எப்போதும் அவளிடம் சொல்லும் வார்த்தைகளை இப்போதும் நிதானமாகச் சொல்ல
“கண்மணிதான்… அவ வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சுட்டாளே அர்ஜூன்… இன்னும் என்ன அவ முக்கியம்.. அவ வாழ்க்கைல இன்னொருத்தன் அவளுக்கு முக்கியமாகிட்டான்… அவங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சியா இப்போ குழந்தையும் இதுக்கு மேல இன்னும் என்ன அவ வாழ்க்கையைப் பற்றி நீங்க யோசிக்கனும்… ” நிவேதா எரிச்சலுடன் கேட்க
“அவ வாழ்க்கைல… நான் மட்டுமே நிரந்தரம் நிவேதா… “
“யோசிச்சுப் பாருங்க அர்ஜூன் நீங்க பைத்தியமா இல்லை நான் பைத்தியமா… சொல்லப் போனால் நான் பைத்தியம்னா நீங்களும் அதேதான்… நான் உங்களுக்காக காத்துட்டு இருக்கிறது தப்புனா… நீங்க அவளுக்காக காத்துட்டு இருக்கிறதும் தப்புதான்… இல்லை நீங்க அவளுக்காக காத்துட்டு இருக்கிறது சரினா… நான் உங்களுக்காக காத்துட்டு இருக்கிறதும் சரிதான்…” நிவேதாவின் குரலில் அனலடித்துதான்… அதே நேரம் அர்ஜூன் முகத்தைப் பார்க்க… அவன் முகம் சலனமின்றி இருக்க…
”ரிஷி கூட அவ சேர்ந்து இல்லைன்றதுனால இன்னும் இப்டி பேசிட்டு இருக்கீங்களா அர்ஜூன்…” நிவேதாவின் குரலில் இப்போது தடுமாற்றம்…
“இல்லை இது நடக்கும்னு முன்னரே தெரியும்… எத்தனை பேர் அவ வாழ்க்கைல வந்தாலும்… போனாலும் அவங்க எல்லோருமே கானல் நீர் தான்… கூடிய சீக்கிரம் இதைப் புரிஞ்சுப்பீங்க… கருவுல இருந்தபோதே தொடங்கியது எங்க உறவு… ரிஷி எப்போ வந்தான்… நேத்து வந்தான்… இதோ இன்னைக்கு காணாமல் போயிட்டான்தானே… நான் அன்னைக்கு இருந்தேன்… இன்னைக்கும் இருக்கிறேன்… நாளைக்கும் இருப்பேன்… ஜஸ்ட் ஒன் இயர்… இதோ அவன் சாயம் வெளுத்துருச்சே… என் அத்தை என்னை நம்பி விட்டுட்டு போயிருக்காங்க… அதை நான் எப்போதுமே காப்பாத்துவேன்” என்றவனை நிவேதா அதிர்ச்சியுடன் பார்த்தவளாக…
“இப்போ யாரும் கண்மணியை விட்டு விலகி வரச் சொல்லலையே… உங்க அத்தை பொண்ணா தூக்கி வச்சு கொண்டாடுங்கன்னுதான் சொல்றோம்… ஆனால் அதே நேரம் உங்களுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு… அதையும் பார்க்க் “ நிவேதா ஆரம்பித்த போதே
”நிவேதா உன்கிட்ட ஆயிரம் முறை சொல்லிட்டேன்… என் பாதை வேற உன் பாதை வேறன்னு” அர்ஜூன் தன் முடிவில் அப்போதும் மாறாமல் இருப்பதை அவளுக்கு உணர்த்த… நிவேதா இப்போது உணர்ச்சி வசப்படவில்லை மாறாக
“ப்ச்ச்… அர்ஜுன்… இந்த உலகத்துல… நாம நினச்சவங்களுக்கு கல்யாணம் ஆகி… அவங்களுக்குனு தனியா வாழ்க்கைத்துணை… குடும்பம் குழந்தைனு ஆன பின்னாலும்… டெஸ்டினி அது இதுன்னு பேசுற உங்க காதலை விட… என்னோட காதலுக்கு பெரிய ரிஸ்க் இல்லை… லாஜிக் இல்லாத எதிர்காலமே இல்லாத உங்க காதலுக்கு நீங்களே இவ்ளோ தூரம் போராடுற போது… எனக்கென்ன… என் காதலுக்கென்ன…. பார்த்துக்கலாம்…. யார் வின் பண்றாங்கன்னு…” நிவேதா கூலாகச் சொல்லியபடி
”ஹான் திடீர்னு என்ன இந்தியா விஸிட்னு கேட்டிங்கள்ள… அதுக்கு பதில் சொல்றேன்… இந்த மந்த் விக்கி-ரிதன்யா மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிருந்தாங்க… கூடவே நம்ம மேரேஜும் தான்… ”நிவேதா சொன்ன போதே அர்ஜூன் முறைக்க
”விடுங்க… அதுதான் நடக்கலையே… முறைக்காதீங்க… சொல்றதைக் கேளுங்க… எல்லாம் பிளான் பண்ணி அட்வான்ஸா போட்டு வச்ச ட்ரிப்… கொஞ்சம் சொதப்பல் ஆகிருச்சு… வர இஷ்டம் இல்லைதான்… ஆனாலும் வந்துட்டேன்… ரொம்ப நாளா உங்களையும் மிஸ் பண்ணின மாதிரி ஃபீல்… நல்லா பாரு… ஒரு சுத்து இளச்சுட்டேன்”
“கிளம்புறியா…” அர்ஜூன் அதற்கும் மேல் பொறுக்க முடியாமல் நிவேதாவிடம் கோப முகத்தைக் காட்ட
“சரி சரி கோபப்படாதீங்க அர்ஜூன்… வந்த முதல் நாளே இப்படி கோபப்பட்டால் என்ன பண்றது… ஒன் மன்த்… இங்கதான் ஹால்ட்… நான் வந்துட்டேன்னு…. நீங்க அமெரிக்கா போயிறாதிங்க… ஓகே நான் எல்லாரையும் மீட் பண்ணனும்… முக்கியமா உங்க அத்தை மக ரத்தினத்தை… கண்மணியை… ஒரு இரண்டு தடவை போன்ல பேசிருக்கோம்… ” என்றபடி உள்ளே வந்தவளை… விக்கி அனைவருக்கும் அறிமுகப்படுத்த… நிவேதா மிகவும் கலகலப்பான பெண் என்பதால்… பெரிதாக அறிமுகம் எல்லாம் தேவைப்படவில்லை பார்த்த உடனேயே… பேசிய உடனேயே… அனைவரிடமும் சட்டென்று ஒட்டிக் கொண்டு விட்டாள்… அது அவள் சுபாவம்… ஆகா…. ரிதன்யா… ரித்விகா… இலட்சுமி… கண்மணி… ஏன் மணப்பெண் யமுனா முதற்கொண்டு அனைவரிடமும் சுலபமாக பழகியிருக்க… சில நிமிடங்களில் நிவேதா குரல் மட்டுமே அங்கு ஒலித்துக் கொண்டிருந்தது…
ரித்விகாவும் ரிதன்யாவும் நிவேதாவை ’அண்ணி’ என்ற உறவு முறையில் பார்த்த நிமிடத்தில் அழைக்க பழகியிருக்க… நிவேதாவும் முகமலர்ந்த சந்தோசத்துடன் அதை ஏற்றுக் கொண்டாள்…
“ரிஷி ஏன் வரலைடா… அவனையும் பார்க்கலாம்னு நினைத்தேன்… வீடியோ கால் போடு… இல்லை அவனை வரச்சொல்லு… நாம எல்லோரும் இங்க இருக்கும் போது அவனுக்கு மட்டும் என்ன… நான் வந்துருக்கேன்னு சொல்லு… கண்டிப்பா வருவான்” விக்கியிடம் நிவேதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே… கண்மணியின் பார்வையில் சிறு நக்கல்…
“அவன்லாம் லைனுக்கு வர மாட்டான்… சார் நீ பார்த்த பழைய ரிஷி கிடையாது இப்போ…” எனக் கண்மணியைப் பார்த்தபடியே விக்கி நிவேதாவிடம் சொன்னபோதே…
யமுனா… மண மேடையில் இருந்து கண்மணியை நோக்கி வந்தவள்…
“ஹர்ஷித்… உங்க அண்ணிகிட்ட… வந்துட்டேன்…” என்றபடி… கண்மணியிடம் யமுனா வர….
கண்மணி… அருகில் அமர்ந்திருந்த இலட்சுமி, ரிது ரித்விகாவைப் பார்த்தாள்தான்…. அதே நேரம் ஹர்ஷித்தை தவிர்க்க முடியாமல்… புன்னகை முகமாக ஹர்ஷித்துக்கு ஹாய் சொல்லி அவனை வீடியோவில் பார்த்த… அடுத்த நிமிடம் அவள் முகம் மாறினாலும்… யாருக்கும் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை…
காரணம் அது கான்ஃப்ரென்ஸ் அழைப்பு… ரிஷியும் அதில் இருந்தான்… ரிஷியே இதை எதிர்பார்க்கவில்லை… யமுனா இப்படி கண்மணியிடம் செல்வாள் என்று… ரிஷியும் அவளைக் கண்டுகொள்ளாமல் வேண்டுமென்றே தவிர்த்தான்… அதே போல ஹர்ஷித்தோடு யமுனாவை இந்தத் தருணத்தில் பேச வைத்த தன் முட்டாள் தனத்தை நினைத்து ரிஷி தனக்குள் நொந்து கொண்டிருக்க…
அதே நேரம்
“யார்னு தெரியலை… தம்பி தம்பினு உயிரை விடுறா…” யமுனாவின் தாய் இலட்சுமியிடம் சொல்லிக் கொண்டிருக்க…
”ஃபேபியோவோட வளர்ப்பு பையன்…” இலட்சுமி,ரிதன்யா.. ரித்விகாவுக்கு இப்படித்தான் ஹர்ஷித்தை தெரியும்… யமுனாவின் தாயிடமும் தனக்குத் தெரிந்த விசயத்தை சொன்னாலும் ஆனால் யமுனாவுக்கு ஹர்ஷித் எப்படி நெருக்கம்… இலட்சுமி குழப்பமாகத்தான் இருந்தது… ஆனால் மிகப்பெரிய குழப்பம் எல்லாம் இல்லை… ரிஷியிடம் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்…
கண்மணி ஹர்ஷித் உடன் மட்டுமே பேசியபடி இருந்தாள்… அதுவும் இலட்சுமியை மனதில் வைத்துக் கொண்டு… வார்த்தைகளை யோசித்து யோசித்து பேசிக் கொண்டிருக்க… ரிஷியுமே கவனமாகத்தான் உரையாடிக் கொண்டிருக்க… ஹர்ஷித்துமே இப்போது உணர்ந்து கொண்டான் ரிஷியின் நிலையை… ஆனால் யமுனா தான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிக் கொண்டிருக்க… கண்மணிக்குத்தான் இப்போது பயம் வந்திருந்தது… இப்படியே போனால்… தன் அத்தைக்கு ஹர்ஷித்தைப் பற்றி ஏதாவது சந்தேகம் வந்து விடுமோ என்று… யமுனா அப்படித்தான் நடந்து கொண்டிருந்தாள்…
நல்லவேளையாக… நிவேதா அவர்களுக்கு வர… யமுனாவும் இப்போது அமைதி ஆகி இருந்தாள்… ஹர்ஷித்தும் விடைபெற்று கிளம்பியிருக்க… கண்மணிக்கும் ரிஷிக்கும் இப்போது நிம்மதி வந்திருக்க… இருவரின் முகமுமே அதைப் பிரதிபலித்திருந்தது.…
“ஹாய் ரிஷி… ”
“ஏய் நிவேக்கா… நீ எப்படி இங்க… வாட் அ சர்ப்ரைஸ்… “ ரிஷியும் நிவேதாவைப் பார்த்து அதே உற்சாகக் குரலில் பேசியவனின் முகம்… அவளைப் பார்த்த அதிர்ச்சியையும்… சந்தோசத்தையும் சரிவிகிதத்தில் காட்டியிருந்தது
“டேய் ரிஷி… என்னடா இப்படி பண்ணிட்ட… உன்னை நேர்ல பார்த்து உன்கிட்ட பேசி பல ஐடியா கேட்டு… என் ஆளைக் கவுக்கலாம்னு வந்தா… நீ ஆளையேக் காணோம்… ” நிவேதா ரிஷியிடம் சரளமாகப் பேசினாள்…
அவள் அப்படி பேசியத்ற்கும் காரணம் எல்லாம் இல்லாமல் இல்லை… விக்கி வீட்டு திருமணத்தில் வந்திருந்த இரண்டு ஜோடிகளின் வாழ்க்கையில் இவன் கொடுத்த ஐடியாக்களால் காதல் மலர்ந்து இன்று அவர்கள் குடும்பம் குழந்தைகள் என இருக்க… நிவேதா அதைக் காரணம் காட்டி ரிஷியிடன் அப்படிக் கேட்டாள்… நிவேதாவைப் பொறுத்தவரை… அவள் அன்று பார்த்த ரிஷியாக மட்டுமே நினைத்து இப்போதும் அவனிடம் பேசிக் கொண்டிருக்க… ரிஷியும் அன்றைய ரிஷி போலத்தான் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்…
“ஐயோ அக்கா… சும்மா லைட்டா டிப்ஸ் கொடுத்தேன்… பசங்க சும்மா கில்லி மாதிரி பெர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டாங்க… இதுல நான் என்ன பண்ணினேன்… ஆமாம் அவங்களாம் எப்படி இருக்காங்க… இந்த விக்கிப் பய அதெல்லாம் சொல்ல மாட்டான்…” என்றவன் தொடர்ந்து
“ஓய்… நிவேக்க்கா… என்னைலாம் உங்க மிலிட்டரி தாத்தாகிட்ட இருந்து காப்பாத்தி விட்டவ நீ… ரெண்டு தடவை உங்க வீட்டுக்கு வந்து நான் பட்ட பாடு இருக்கே… அன்னைக்கு நீ மட்டும் இல்லை அவ்ளோதான்…. அந்த டெர்ரர் மிலிட்டெரி பீஸ் என்னை என்ன பண்ணியிருந்திருக்குமோ… அவ்ளோ ஜகஜாலக் கில்லாடி… நீ என்கிட்ட ஐடியா கேட்கிறியா”
“அப்புறம் சொல்லுக்கா… விக்கி என்ன சொல்றான்… என் தங்கையைப் பற்றி ஏதாவது சொல்றானா… எனக்குத்தான் இங்க ரத்தம் வழியுது… தங்கை ஃப்ரெண்டுனு ரெண்டு சைடும்… “ ரிஷி ஆரம்பிக்க… நிவேதாவும் அவனோடு கலகலபோடு பேச ஆரம்பித்திருக்க
கண்மணி எரிச்சலோடு மட்டுமே அமர்ந்திருக்க முடிந்திருந்தது… அதே நேரம் இந்த ரிஷியைத்தானே அவள் மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கின்றாள்… வேறு வழி அமைதியாக வேறு புறம் திரும்பி அமர்ந்திர்க்க… அவனைத் தவிர்த்தாலும் அவன் குரலைத் தவிர்க்க முடியுமா…
“நான் ஒன் மந்த் இங்கதான் இருப்பேன்… நாம கண்டிப்பா மீட் பண்றோம்…”
“என்ன சொல்றாரு உங்க மிஸ்ஸ்ட்ட்டர் அர்ஜூன்… மிஸ்ஸாகிட்டே இருக்காரா… என்ன நிவேக்கா…. உன் வித்தை எல்லாம் டெர்ரர் மிலிட்டரிகிட்டதானா… ” அர்ஜூன் அருகில் இருக்கின்றான் என்று தெரிந்தே ரிஷி நிவேதாவிடம் வம்பிழுக்க
“டேய்… ரொம்பப் பேசாத… “ நிவேதா பேச்சு தொடர ஆரம்பித்திருக்க… ரிதன்யா … ரித்விகா… கார்லா ஹர்ஷித் என அது நீளவும் செய்திருக்க
கண்மணி அந்த கூட்டத்தில் தனித்திருந்த போதெல்லாம் தனிமையை உணரவில்லை… ஆனால் இப்போது.. ரிஷியின் குரல் ஒலித்த போது… அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருவருடனும் அவன் பேசிய போது… ஒரு கட்டத்தில் அவளையே அடக்க முடியாமல்… வேகமாக எழுந்தவள்…
“நான் கிளம்புறேன் அர்ஜூன்” என்ற போதே கண்மணியோடு அர்ஜூனும் எழுந்திருக்க… நிவேதாவோ அவனை விடவில்லை… வேக வேகமாக மற்றவர்களிடம் தன் பேச்சைக் கத்தறித்தவளாக
”கண்மணிதான் தாத்தா, பாட்டி கூட போறாளே…. நீங்க இருங்க… ரிதன்யாவும் விக்கியும் வெளில போக ப்ளான் பண்ணிருக்காங்க… சோ நீங்கதான் என்னைக் கூட்டிட்டுப் போகனும்” அர்ஜூனினி கையைப் பிடித்து நிறுத்தி இருக்க
நாராயணனும்…
“கண்மணியை நாங்க கூட்டிட்டுப் போறோம்… நீ நிவேதாவை நம்ம வீட்டுக்கும் கூட்டிட்டு வா…” என்றபடி கண்மணியை அழைத்துக் கொண்டு சொல்ல… அர்ஜூன் வேறு வழி இல்லாமல் நிவேதாவை முறைத்தபடி மீண்டும் அமர்ந்தான்…
நிவேதா கள்ளப் புன்னகையுடன் அர்ஜூன் கோப முகத்தைப் பார்த்தபடியே ஒன்றும் அறியாத பிள்ளை போல அருகில் அமர்ந்தாள்…
---
கிட்டத்தட்ட வாரம் இரண்டு கடந்திருக்க… ரிஷி கண்மணி வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை… அன்று கண்மணி பேசியதுதான்… அதன் பிறகு அவள் ரிஷியைத் தொடரவில்லை… அதே போல் ரிஷியின் கோபமும் குறையவில்லை… கோபத்தின் அளவு அதிகரித்திருக்க… வீட்டுக்குள் தன்னை முடக்கிக் கொண்டிருந்ததை விட்டு… மீண்டும் தன்னைத் தொழிலில் மூழ்கடித்துக் கொண்டவன்… வீட்டுக்கு வருவதையே அரிதாக்கி இருந்தான்…
அன்று திருமணத்தில் மற்றவர்களோடு கலகலப்பாக பேசிய போதே கண்மணி முகத்தில் இருந்த பாவங்களைப் பார்த்தவன்…
“உன் கண்ணு முன்னாடியே… ராட்டினமா சுத்துறேன்… கண்டிப்பா உன்னால அது தாங்க முடியாதுடி… நான் உன்னைத் தவிர மத்த எல்லோர்கிட்டயும் பேசுனா நீயா என் வழிக்கு வருவ” என ரிஷியும் பம்பரமாகச் சுழல… கண்மணி தன் திட்டத்தில் மெல்ல மெல்ல வெற்றிப்படிகளை தாண்ட ஆரம்பித்திருந்தாள்…
இப்படியாகப் போய்க்கொண்டிருந்த நாட்களின் ஒரு மாலைப் பொழுதில்… ரிஷி கம்பெனியில் இருந்த போது… ரித்விகாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்க… ரிஷி அதை எடுத்து ஹலோ என்று கூட சொல்லவில்லை… அதற்கு முன்னதாகவே ரித்விகாவின் அழுகைக் குரல் அவனை வந்தடைய…
“ரித்விமா… பாப்பு… என்னடா.. என்னாச்சு” என்ற ரிஷிக்குள்ளும் பதற்றம் தொற்ற ஆரம்பித்திருக்க… அவனின் குரலைக் கேட்டவள்…
“அண்ணா… ” வேறொன்றும் சொல்லாமல் இன்னும் வேகமாக அழுதபடியே தேம்பியவளை… எப்படியோ தேற்றி ரிஷி பேசச் சொல்ல
“நான் வழக்கம்போல அண்ணி வீட்டுக்கு பாடம் படிக்க போனேன்…” என ரித்விகா ஆரம்பித்திருக்க
”என்ன ஆச்சுனு அதை மட்டும் சொல்றியா…” ரிஷி சட்டென்று தங்கையை அதட்டினான்… அவளிடம் கதை கேட்கும் பொறுமை எல்லாமல்இல்லாமல்
“ஹ்ம்ம்.. அக்கா என்னைக் கூட்டிட்டு போக வந்தாள்… நானும் அக்காவும் வர்ற வழில… அக்காவை யாரோ கடத்திட்டு போய்ட்டாங்கண்ணா”
ரிஷிக்குத் தூக்கி வாறிப் போட… வேகமாக எழுந்தவன்..
“அவளை கடத்திட்டாங்கன்னா… உன்னை விட்டுட்டு போய்ட்டாங்களா…”
“ஹ்ம்ம்… உங்க அண்ணாவை நாங்க இருக்கிற இடத்துக்கு வரச் சொல்லுனு…சொன்னாங்க”
ரிஷிக்கு குழப்பம் அதிகமாக ஆரம்பித்தது…
“எங்க வரச் சொன்னாங்க… “
“சரி அட்ரஸ் சொல்லு” ரிஷி படபடவென்று கேட்க ஆரம்பித்திருக்க
“அண்ணா… “ ரித்விகாவின் அழுகை இப்போது இன்னும் அதிகரித்திருக்க
“அக்காவை கடத்தி ஒரு மணி நேரம் ஆச்சு” எனும் போதே ரிஷிக்கு கோபம் உயர்ந்திருக்க… அதே கடுப்போடு பேச ஆரம்பித்தான்
“ஏன் பாப்பா… இவ்ளோ நேரம் ஆச்சு… சொல்லாமல் நேரத்தைக் கடத்திட்டு இருந்திருக்க… சரி எங்க இருக்கச் சொல்லு… நான் வர்றேன்… அவங்க எங்க வரச் சொன்னாங்க…” என்றபடி.. பைக் கீயை எடுத்தபடியே…. ரிஷி நடந்து வர ஆரம்பித்திருக்க
“அண்ணா… என்னைத் திட்ட மாட்டதானே…” இப்போது ரித்விகா தயங்கினாள் ரிஷியிடம் பேசவே பயப்படும் தொணியில் அவள் குரல் மாறி இருக்க… இன்னும் விசயத்தை முழுதாக அவள் சொல்லி முடிக்கவில்லை… என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது ரிஷிக்கு இப்போது…
“இன்னும் என்ன… என்ன பண்ணி வச்சுருக்கீங்க… சொல்றியா இல்லை” ரிஷியின் கோபமான ஒரே அதட்டலில்
“அண்ணா திட்டாதண்ணா…. சொல்லிட்றேண்ணா... அவங்க அக்காவை வச்சு உன்னை வர வச்சு… உன்னைக் கொல்லப் போறேன்னு சொன்னாங்கண்ணா… எனக்கு பயமாகிருச்சுண்ணா… உன்கிட்ட சொன்னா… நீ அங்க போனால் அவங்க உன்னைக் கொன்றுவாங்களோன்னு…” ரித்விகா தயக்கத்தோடு சொல்லி நிறுத்திய போதே… ரிஷியின் கால்கள் சட்டென்று வேலை நிறுத்தம் செய்தது… ரித்விகா என்ன செய்திருப்பாள் என்பதை உணர்ந்தவனாக…
“உன் அண்ணிகிட்ட சொன்னியா…” ரிஷி அழுத்தமான குரலில் கேட்டாலும்… அவன் குரலே உள்ளே போயிருந்தது… இதுவரை இருந்த அவன் குரலில் இருந்தது ஆக்ரோஷம் கோபம் மட்டுமே… இப்போது அதில் நடுக்கமும் இருந்ததோ எனும்படி அவன் குரல் மாறி இருக்க…
“ஹ்ம்ம்… விக்கி அத்தான்கிட்டயும்… ரெண்டு பேர்கிட்டயும்”
“போனை வை…” என்றவன் அடுத்து ஏதும் பேசவில்லை… வேலனையும் தினகரையும் தன் ஆட்களோடு அனுப்பி வைத்து ரித்விகாவை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகச் சொன்னவன்… கடத்திய ஆட்கள் அவனை வரச் சொன்ன இடத்தை ரித்விகாவிடம் கேட்டு அந்த இடத்தை நோக்கி விரைந்தான் ரிஷி…
அங்கு போன போதோ… அவனுக்கு முன்னதாகவே… அர்ஜூன் .. நட்ராஜ்… நாராயணகுருக்கள், விக்கி என அனைவரும் வந்திருக்க… ரிதன்யாவும் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் விக்கியின் அருகில் இருக்க… கண்மணி மட்டுமே அங்கு இல்லை…
அதை விட… மருது மற்றும் அர்ஜூன் இருவருக்கும் குண்டடி பட்டிருக்க… ரிஷி அதிர்ச்சியோடும் பதட்டத்தோடும் மட்டுமே நின்றிருந்தான்
எப்படி நடந்தது… தனக்கு முன் இவர்கள் அத்தனை பேரும் எப்படி எங்கு வந்தனர்… யோசனையோடு வந்தவனிடம்
நட்ராஜ் வேகமாக ஓடி வந்தவராக…
“ரிஷி அந்த ஆதவன்… நம்ம மணியை எங்க கண்ணு முன்னாடியே கூட்டிட்டுப் போயிட்டான் ரிஷி… “
ரிஷி புரியாமல் பார்க்க…
“அவன் மணியை மேரேஜ் பண்ணிக்கப் போறேன்னு பைத்தியம் மாதிரி சொல்றான்ப்பா… ”
“அவன் அப்பா சொத்தை மீட்டெடுத்துட்டான்னா அவன் ஜெயிச்சுட்டான்னு நினைப்பா… இப்போ என்ன பண்ண போறான்… அவனோட உரிமை இந்தக் கண்மணி... இனி அவள் என்னோட உரிமை… அதை யாரும் தடுக்க முடியாதுன்னு…” இப்படி சவால் விட்டுட்டுப் போறான்பா…” – இப்போது நாராயண குருக்கள்…
“கண்மணியை காப்பாத்துற முயற்சில… அர்ஜூனுக்கு இப்படி ஆகிருச்சு…” நாராயணன் படபடப்போடு தழுதழுத்திருக்க…
”ரிஷி… அவன் சைக்கோ மாதிரி ப்ஹேவ் பண்றான் ரிஷி… ரிதன்யா அவனோட குறி இல்லை… கண்மணிதான்…. அவ கண்ணைக் கட்டி… “ விக்கி சொல்ல ஆரம்பித்த போதே ரிஷி அவனைப் பேசவிடாமல் நிறுத்தியவன்… மருதுவை மட்டுமே பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்…
அதே நேரம்…. ரிஷிக்கோ முகமெங்கும் வியர்த்து கொட்டியிருக்க… இருந்தும் முகத்தில் பதட்டத்தைக் காட்டாமல்…
சத்யாவை அழைத்தவன்…
“நீங்க இவங்க எல்லோரையும் பார்த்துக்கங்க… அர்ஜூன் மருதுவை உடனே ஹாஸ்பிட்டல்ல சேருங்க… அம்பகம் ஹாஸ்பிட்டலுக்கு கால் பண்ணிருங்க…” என்றபடி… வேறு யாரிடமும் ஏதும் பேசாமல் மருதுவிடம் வேகமாக ஓடியவன்…
அவனைத் தட்டி எழுப்ப… மருதுவோ முணங்கினானே தவிர… பேச முடியவில்லை… அரை உயிரோடு போராடிக் கொண்டிருந்தவனிடம் ரிஷி இப்போதும் பரிதாபம் காட்டவில்லை…
“டேய்… உன்னை அன்னைக்கே சாகடிக்காம விட்டதுக்கு…. உன்னை நம்பினதுக்கு… பச்சைத் துரோகம் பண்ணிட்டதானே…”
“ம…ணி…. ஆதவன்… அம்மா…” எனும் போதே
“உன் பொண்டா… கா… ப்ப்ப்…. பாத்து ரி….ஷி…” என்ற போதே… அவனது உயிர் அவனிடம் இருந்து பிரிந்திருக்க…
ரிஷி வெறித்தபடி அவனை தரையில் விட்டவன்…. வேகமாக அர்ஜூனிடம் ஓட… ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது அவனருகில்… நாராயணன் பேரன் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்க….
“அர்ஜூன்… அர்ஜூன்… என்னைப் பாருங்க ப்ளீஸ்… “ அர்ஜூன் கண்களையே திறக்கவில்லை… ஆனால் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க…. நேரத்தை வீணாக்காமல் அர்ஜூன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்…
என்ன நடந்தது… விசாரிக்கக் கூட ரிஷிக்கு அவகாசம் இல்லாமல் தவிப்பாக நின்றிருக்க…
“ரிஷி… ஆதவனோட இல்லீகல் விசயமெல்லாம்… ஐ மீன்… சாரிடா… சொல்றேனு தப்பா எடுத்துக்காதடா… பொண்ணுங்க விசயமெல்லாம் அவனோட ஈ சி ஆர் பங்களாவில தான் நடக்கும்… நம்ம கண்மணியையையும் அங்கதான் கூட்டிட்டு போயிருக்கனும்…” விக்கி ரிஷியிடம் சொல்ல…
“உனக்கு அந்த இடம் தெரியுமா…” என்றவனிடம் விக்கி தலையை ஆட்டி முடிக்கவில்லை…
அவனருகில் பைக்கோடு வந்தவன்…
”ஏறு…” என்றபடி…
“மாமா… ரிதன்யாவை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க… கவலைப்படாதீங்க… “ என்றபடி… நாராயண குருக்களைப் பார்த்தவன்…
“நீங்களும் தான்… அர்ஜூனைப் பாருங்க….” என்றவன்… விருட்டென்று பைக்கை எடுத்திருக்க… சில நிமிடங்களில்… ஆதவனின் ஈசிஆர் பங்களாவை அடைந்திருக்க… அங்கிருந்த அடி ஆட்களை எல்லாம் சமாளித்து… உள்ளே சென்று பார்க்க… அங்கு எங்கு தேடியும் கண்மணியும் ஆதவனும் அவர்கள் கண்ணில் சிக்கவில்லை…
விக்கி ரிஷியைக் கவலையுடன் பார்த்தபடி… அவன் இருளடைந்த முகத்தைப் பார்த்தபடியே
“ஆர் யூ ஓகே… பதட்டப்படாதடா… “ எனும் போதே…
”நான் ஏண்டா பதட்டப்படனும்… பயப்படனும்... கண்மணியைக் கடத்திட்டு போனவன் தான் பயப்படனும்… அவனுக்கு அழிவு காலம் ஆரம்பிச்சுருச்சுனு…” சொன்னபடியே… யோசித்தவன்…
“டேய்… மருது ஆதவன்… அம்மான்னு சொன்னான்… ஒரு வேளை அவன் அம்மா வீட்டுக்கு ஆதவன் கூட்டிட்டுப் போயிருப்பானா…”
“ஏண்டா… எப்படிடா… அவங்க அம்மாவுக்கு ஏற்கனவே இவன் மேல நல்ல அபிப்ப்ராயம் இல்லை… இப்போ இந்த மாதிரினா… அவனை முழுசா வெறுக்க மாட்டாங்க… கண்டிப்பா அங்க போயிருக்க மாட்டான்… எனக்கென்ன கவலைனா… அவன் சென்னைல இருக்கானா… இல்லை வேறெங்காவது போயிட்டானோ… ப்ச்ச்… கண்மணி கர்ப்பமாக இருக்கிற நிலைமைல… அதுதான் பயமாயிருக்கு” எனும் போதே
“வண்டில ஏறு… அவன் வீட்டுக்கு போகலாம்” ரிஷி விக்கி சொன்னதை எல்லாம் காதில் வாங்காதவன் போல விக்கியை அழைக்க… விக்கி அவனை யோசனை பாவத்தோடு பார்க்க… ரிஷி அவனை எல்லாம் கண்டு கொண்டால் தானே… அடுத்து அவன் சென்றது ஆதவனின் இல்லத்துக்குத்தான்….
ரிஷி நினைத்தது சரி என்பது போல… அவனால் அங்கு உள்ளேயே போக முடியவில்லை…
ஈசி ஆர் வீட்டில் இருந்தவர்களைச் சமாளித்தது போல இவர்கள் அனைவரையும் சமாளிக்க முடியவில்லை… கோட்டை போல ஒன்றாக நின்று இவர்களை உள்ளே போக விடாமல் தடுத்துக் கொண்டிருக்க… ரிஷி திணற ஆரம்பித்திருக்க… விக்கியும் முடிந்த அளவு போராடிக் கொண்டிருந்த போதே… சத்யாவை ரிஷி அழைத்து விசயத்தைச் சொல்ல… சத்யாவும்… அங்கு ஆட்களோடு விரைந்தான்…
சத்யாவிடம் பேசிவிட்டு ரிஷி திரும்பிய போதே… ரிஷியை நோக்கி ஒருவன் ஓடி வர… சற்று ரிஷியும் கவனமும் சிதறியிருக்க… ஆதவனின் அடி ஆள்… ரிஷியின் கழுத்தை நோக்கி கத்தியை வீசி இருக்க… ரிஷி விலகினான்தான்… கைகளால் தடுத்தான் தான்… ஆனாலும் கத்தி அவனைக் குறி பார்த்திருந்தது…. நல்லவேளை அவனை கழுத்துக்குப் பதிலாக… முழங்கைக்கு மேலே பட்டு கீறலை ஏற்படுத்தி இருந்தது…
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது… என்பது போல அவனுக்கு வந்த ஆபத்திலிருந்து ரிஷி தப்பித்தவனான… சமாளித்துக் கொண்டிருக்க… இப்போது ரிஷியின் ஆட்களும் வந்திருக்க… நிலைமை ரிஷிக்கு சாதமாக மீண்டும் மாறி இருக்க… ரிஷி வேகமாக விக்கியோடு வீட்டுக்குள் சென்றிருக்க… வீட்டுக்குள் அடி ஆட்கள் நடமாட்டமே இல்லை… அந்த ஆதவன் அடி ஆட்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு வெளியில் மட்டுமே நிறுத்தியிருந்தான் போல…
உள்ளே சென்று வரவேற்பறையில் நின்றிருந்த ரிஷிக்கோ… அங்கு யாருமே இல்லாதது போல எண்ணமே… ஆனால் அடுத்த நிமிடமே அவன் கண்ட காட்சி அந்த எண்ணம் தவறு என்பதை உணர்த்த வேகமாக மாடியைப் பார்க்க…
அதே நேரம் விக்கி
“இங்கயும் இல்லை போலவேடா…” எனும் போதே… ரிஷி மாடிப்படி அருகில் தரையைக் காட்ட… விக்கியும் அங்கு நோக்கினான்…
அங்கு மாங்கல்யம் அனாதையாக கிடக்க… விக்கி ரிஷியைத் திகில் பார்வை பார்த்தான்
ரிஷியோ… உணர்ச்சியே இல்லாமல்… தரையில் கிடந்த கண்மணியின் மாங்கல்யத்தை எடுத்து தன் கைகளில் வைத்துக் கொண்டபடி… மாடிப்படியில் வேகமாக ஏற…
விக்கி இப்போது சுதாரித்து… ரிஷியைத் போக விடாமல் தடுத்த நினைத்தவனாக
”டேய் ரிஷி… நீ வேண்டாம்டா… நான் கண்மணியைக் கூட்டிட்டு வர்றேன்… நீ இருக்கிற கோபத்துக்கு விபரீதம் ஏதாவது ஆகிறப் போகுது” என அவனை விக்கி தடுக்கப் பார்க்க… ரிஷியோ அவனைப் பார்க்காமல்… அவன் கையைத் தட்டி விட்டவன்…. வேக வேகமாக மாடிப்படி ஏற… அவன் ஏறிய வேகமே அவன் கோபத்தின் அளவை… விக்கிக்கு சொல்ல… இவனும் ரிஷி பின்னாடியே செல்ல… அங்கே மாடி வரவேற்பறையில் இருந்த சோபாவில் கண்மணி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்க… அவள் முகமெங்கும் இரத்தச் சிதறல்கள்…
ரிஷியும் விக்கியும் அவளைப் பார்த்தபடியே அவள் பார்வை சென்ற இடத்தைப் பார்க்க…
அங்கு...
ஆதவன் உயிரற்ற நிலையில் கிடக்க… ஆதவனின் அன்னை அவன் அருகே அமர்ந்திருந்தார்…. சத்தமின்றி வழிந்தது அவர் கண்களில் கண்ணீர்….
அதே நேரம் நாராயணன் செல்வாக்கால் காவல் துறையினரும் வந்திருக்க… கண்மணி இப்போதும் ஒரே திசையில் பார்த்து அமர்ந்திருக்க...ரிஷி அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்…
அவள் ஆதவனைக் கொலை செய்து விட்டாளோ இல்லையோ அதெல்லாம் அவன் கவலை இல்லை… அவள் கொலை செய்திருந்தாலும் தண்டனையின் பிடியில் இருந்து அவளைக் காப்பாற்றுவது எல்லாம் பெரிய விசயமே இல்லை அவனுக்கு… அவன் கவலை எல்லாம் வேறு… கணவனாக மட்டுமே அவன் கவலை … கணவன் என்ற பந்தத்தின் கேள்விக் குறியே அவன் கவலையாக மாறி இருந்தது…
காரணம் இந்தச் சூழ்நிலையில் கூட… அவன் மனைவி அவனை தள்ளி நிறுத்தியிருந்த விதம்… இப்போது கூட தன் கணவன் வந்து விட்டான் என அவனை நோக்கி அவள் ஓடி வர வில்லை… தன் ஒட்டு மொத்த துக்கத்தையும் அவன் மார்பில் சாய்ந்து அவனிடம் கொட்டத் துடிக்கவில்லை…. ரிஷி கணவனாக தோற்ற நொடிகள் அந்த நொடிகள்… இதுவரை அவளோடு அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போன நொடிகளாக ரிஷி உணர்ந்த நொடி அந்த நொடிகள்…
நீ வேண்டாம் என்று சொல்லி விட்டு கண்மணி இல்லத்தை விட்டு அர்ஜூனோடு சென்றாளே அதை விட…
அவனுக்கும் அவளுக்குமான உறவின் சந்தோசமான அவர்களின் வாரிசு அவள் வயிற்றில் வளர்ந்ததை அவனிடம் பகிராமல்… மறைத்தது தெரிந்த தினத்தை விட
முதல் திருமண நாளில் மற்றவர்கள் முன்பு தன்னையே அவமானப்படுத்திக் கொண்டதை விட...
இன்றைய அவளின் இறுக்கம் தான் ரிஷியை மிக மிக தாக்கியது… அன்றுதான் முதன் முதலாக உணர்ந்தான்… தன்னில் சரிபாதியாக அவளை நினைத்து இதுவரை அவன் மட்டுமே அவளிடம் தன் சுகம், சோகம், சந்தோசம் துக்கம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டிருந்ததை…
அவள் அப்படி அவனை ஒரு நொடி கூட நினைக்கவில்லை என்ற உண்மை உணர்ந்த போது… கண்களில் வலியோடு தன் கையில் இருந்த மாங்கல்யத்தோடு சிலையாக நின்றிருக்க…
கண்மணி அவனை அப்போதும் நிமிர்ந்து பார்க்கவில்லை… கண்மணி அவனை விட்டு வெகு தூரம் சென்றது போல உணர்வுகளால் ரிஷி தாக்கப்பட்டிருக்க… காவல் துறையினரும் உள்ளே நுழைந்திருந்தனர்…
----------------
Very nice