ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
நூறாவது அத்தியாயம்... பெரிய கதைனு தெரியும்... இவ்ளோ பெரிய கதையா வரும்னு நான் நினைக்கலை.... புத்தகமா இதைப் போடுவது எவ்வளவு சாத்தியம்னும் தெரியலை.... எனிவே ட்ரை பண்றேன்.... நன்றி நன்றி... ரிஷி-கண்மணி ... அவங்க வாழ்க்கைப் பயணம் இவ்ளோ தூரம் வெற்றிகரமா வந்ததுக்கு காரணம் உங்க அனைவரோட ஆதரவும்... உங்க கமெண்ட்ஸும் தான்...
வழக்கம் போல என்னோட ஒரே வார்த்தை வேற என்ன....
நன்றி!!!... நன்றி!!!... நன்றி... 💗💗💗
இப்படிக்கு...
உங்கள் பிரவீணா
அத்தியாயம் 100-1
ரிஷியும் சத்யாவும் வழக்கமாக ஆட்களை கடத்தி வைத்து மிரட்டும் அதே இடத்தில் இன்று ரஞ்சித்… ஒரு காலத்தில் ரிஷியின் கட்டளைக்கு உட்பட்டு யமுனாவை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றியவன்… ரிஷியின் காலடியின் கீழ் விழுந்து கதறிக் கொண்டிருந்தான்…
”ஆர் கே நான் சொல்றதைக் கேளுங்க ஆர் கே…. சத்தியமா நான் நடிக்கத்தான் போனேன்… ஆனால் ஒரு கட்டத்துல என்னையும் அறியாமல் அவளை லவ் பண்ணிட்டேன்… என்னால அவளை மறக்க முடியலை… என்னைப் புரிஞ்சுக்கங்க…. அவ இல்லாமல் நான் இல்லை… அவ இல்லைனா என்ன ஆவேன்னு எனக்கே தெரியலை…” எனும் போதே ரிஷி அவனைத் தூக்கி நிறுத்தியவன்… அதே வேகத்தில் அவன் கன்னத்தில் அறைந்தவனாக…
“காசு வாங்குனது எதுக்கு… நடிக்கிறதுக்குதானே… அப்புறம் என்னடா… லவ், உயிர்னு… கதை சொல்ற”
“எனக்குத் தெரியலை… அது ஏன்னு தெரியல… ஆனால் நான் எப்படி மாறினேன்னு தெரியலை… அவள விட்டு விலகுன்னு சொன்னப்போதான் எனக்கு அது புரிஞ்சது… யமுனாவால நான் ஏமாத்துனது தாங்க முடியலை… ஏன்னா அவ என்னை உண்மையா லவ் பண்ணா ஆர் கே… அது புரிந்த பின்னால என்னால அவளை மறக்க முடியல…. ப்ளீஸ் ஆர் கே… ஒரு தடவை அவளை அவளை என்கூட பேச வைங்க… போன்ல கூட… ஓகே தான்… அப்படி நான் பேசினா… அவ கண்டிப்பா என்கூட வந்துருவா…”
ரிஷி இப்போது அவனை தன்னை விட்டு தள்ளி நிறுத்தியவனாக… சத்யாவைப் பார்த்து புருவம் உயர்த்தியவன்… மீண்டும் ரஞ்சித்திடம் திரும்பி
“ஹ்ம்ம்.. அப்டியா… அவ்ளோ நம்பிக்கையா உன் காதல் மேல…” ரிஷி ஏளனம் செய்ய…
“ஆமாம்… என்னோடது உண்மைக் காதல் … கண்டிப்பா அது ஜெயிக்கும் அது ஜெயிக்கனும்…” ரஞ்சித் ரிஷியிடம் தோரணையான குரலில் பேச
“ஓ… ஒ…… இது என்னடா உண்மைக் காதலுக்கு வந்த சோதனை…“ என்ற ரிஷியின் குரலில் அப்படி ஒரு நக்கல்…
”சவாலா கூட எடுத்துக்கங்க… என் கூட ஒரு பத்து நிமிசம் பேச வைங்க… அப்போ தெரியும்… இந்த ரஞ்சித் யமுனா மனசுல எந்த இடத்துல இருக்கான்னு” ரிஷியின் நக்கலில் ரஞ்சித்தின் குரலிலோ இப்போது திமிரான பாவனை வந்தி்ருந்தது…. தன்னுடைய காதலின் வலிமையை எப்படியாவது ரிஷிக்கு புரிய வைத்துவிட வேண்டுமென்ற தீவிரம் மட்டுமே அவனிடம் இப்போது இருந்தது…
“வரே வாவ்… என்ன சத்யா இப்படி ஒரு காவியக் காதல்… வசனம்லாம் செமையா பேசுறான்…” என்றபடியே ரஞ்சித்திடம்
“நீ என்னைக்கு யமுனாகிட்ட நெருங்கிப் பழகி ஆரம்பிச்சியோ… அன்னைக்கே உன்னை அவகிட்ட இருந்து விலகச்சொன்னேன்… கேட்கலை… அதுக்கு தண்டனை… என்ன கிடைத்தது” என்று திராவகத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட…. ரஞ்சித்தின் கைகளைப் பார்க்க
“நீ என் உயிரைக் கூட எடுத்துக்கோ… ஆனால் ப்ளீஸ் என் யமுனாவை என்னால இன்னொருத்தனுக்கு பொண்டாட்டியா நினைச்சுப் பார்க்க முடியலை… “ என்ற போதே… ரிஷிக்கு கோபம் எல்லை மீற… ஒரு உதை விட… சுருண்டிருந்தான் ரஞ்சித்
“சத்யா இவன் பேசுறதைப் பாருங்க சத்யா… என்ன ஒரு தைரியம்… இவன் யாரு.. எங்க இருந்தான்…… எப்படி யமுனாவை அப்ரோச் பண்ணினான்னு யோசிக்கச் சொல்லுங்க… இவனும்… பார்த்தியும் ஒன்ணா… “ ரிஷி பேசிக் கொண்டிருக்கும் போதே
“எவனா இருந்தா எனக்கென்னடா… என் யமுனா மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்… இருப்பேன்… தைரியம் இருந்தா அவளை என்கிட்ட பேசச் சொல்லு… நான் போன் பண்ணாலே ஏன் எடுக்க மாட்டேங்கிறா… என் குரல் கேட்டாலே ஏன் நடுங்குறா… அது பயத்துலயா… இல்லை… என் மேல அவளுக்கு இருக்கிற காதல்னால தான்…” ரஞ்சித்தும் அடங்கவில்லை… தன் காதலுக்காகப் போராடிக் கொண்டிருக்க..
“இவனை எல்லாம்… இவனை எல்லாம் உயிரோடவே விடக்கூடாது சத்யா… உத்தமன் மாதிரி எப்படி தெனாவெட்டா பேசுறான் ராஸ்கல்… உனக்கு யமுனா வேணுமா…” என்றபடியே அவனருகில் வேகமாகச் சென்ற ரிஷி அவன் கழுத்தில் கத்தியை வைத்த போதே…
ரிஷியின் அலைபேசி அடிக்க… நின்றிருந்தான் ரிஷி
அவனை நேரம் காலம் பார்க்காமல் அழைக்கும் ஒரே நபர் சத்யா… அவனும் இவன் அருகில் இருக்க…
“இந்த நேரத்தில் வேறு யார்… ” ரிஷி தயங்கி நின்றபடி அலைபேசியைப் பார்த்தவனின் புருவங்கள் கேள்விக் குறியால் சுருங்கிய போதும்… அந்தப் புருவ முடிச்சில் கோபமும் சேர்ந்திருக்க… வேண்டுமென்றே அலைபேசியை எடுக்காமல் அதை தள்ளி வைத்து விட்டு… மீண்டும் ரஞ்சித்திடம் கவனம் வைக்கப் போக… மீண்டும் அலைபேசி அடிக்க… இப்போது சத்யா ரிஷியின் அலைபேசியைப் பார்க்க… அழைப்பு கண்மணியிடம் இருந்து மீண்டும் வந்திருக்க…
ரிஷியை சத்யா கேள்விக் குறியோடு பார்க்க….
“தேவையில்லாத கால்… விடுங்க… ” சொன்னவன் முகமெங்கும் கோபமும் ஆத்திரமும் மட்டுமே… அன்று அவனை அத்தனை பேர் முன்னிலையில் அவமானப்படுத்திச் சென்று விட்டு இப்போது என்ன அழைப்பு வேண்டிக் கிடக்கிறது… நினைத்த போதே அவன் முகம் சிவக்க ஆரம்பித்திருக்க…
“மணியைப் பாருங்க… இப்போ மேடம் கால் பண்றாங்கன்னா… எடுத்துப் பேசு ஆர் கே” எனும் போதே… ரிஷி யார் மீது இருந்த கோபத்தையோ யார் மீதோ காட்டுவது போல ரஞ்சித்தை அடிக்க ஆரம்பித்திருக்க… அவனது அலைபேசியும் விடாமல் அடிக்க ஆரம்பித்திருக்க…
கண்மணியின் ஒவ்வொரு அழைப்பும் ரஞ்சித்துக்குத்தான தண்டனையின் அளவை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது…
பல அழைப்புகளுக்கு பின் ரிஷியின் அலைபேசி மௌனம் ஆகி இருக்க… அந்த கோபத்துக்கும் ரஞ்சித் பலிகடா ஆகியிருந்தான்…
மீண்டும் அலைபேசி ஒலித்தது…. ஆனால் ரிஷியின் அலைபேசி அல்ல… சத்யாவின் அலைபேசி…
கண்மணி ரிஷிக்கு அழைக்காமல், சத்யாவுக்கு அழைத்திருக்க… சத்யா தயக்கத்தோடு அவனைப் பார்த்து
“எடுக்கவா ஆர் கே… எதுக்காக கால் பண்றாங்கன்னு தெரியலை…. முக்கியமான விசயமா கூட இருக்கலாம்… இப்போ உங்க பிடிவாதத்தைக் காட்டனுமா…” எனும் போதே
“அவ பிடிச்சா அது பிடிவாதம் இல்லை… அதுவே நான் பண்ணினா மட்டும் அட்வைஸ் ஆணியை எல்லோரும் தூக்கிட்டு வந்துருங்க” என்று பல்லைக் கடித்த ரிஷி….
”அவ என்ன எனக்கு போன் பண்றது… நான் எடுக்கிறது… நான் இப்போ பண்றேன்… அவ போனை எடுத்தாள்னா பேசுறேன்… நீங்க அவ போனை எடுக்காதீங்க… வேண்டாம்…” ரிஷியின் கோபம் கண்மணியின் மீது எவ்வளவு என்பது சத்யாவுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியிருக்க… ஏதும் பேசாமல் அமைதியாக நிற்க…
“எத்தனை போன் பண்ணியிருப்பேன்… ஒண்ணையாவது மதிச்சு எடுத்திருப்பாளா… அவ திமிரை மத்தவங்க கிட்ட காட்டலாம்… என்கிட்ட… நெவர்… இப்போ நான்தான் போன் பண்ணுவேன்… அவ எடுக்கனும்” என்ற போது சத்யாவுக்கு ரிஷியைப் பார்த்து ஒரு புறம் பாவமாக இருந்தாலும்… இன்னொரு புறம் புன்சிரிப்பும் வரத்தான் செய்தது…. ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை…
இப்போது ரிஷி கண்மணிக்கு அழைக்க… உடனே கண்மணியும் எடுத்திருக்க… ரிஷி அழைத்தான் தான் ஆனால் மௌனம் சாதித்தான்… கண்மணியின் தவிப்பை அறியாமல்…
“ரிஷி..” என்று மெல்லிய குரலில் கண்மணியே முதலில் அழைக்க…. அப்போதும் ரிஷி மௌனமாகவே இருந்தான்… அன்று அவன் திருமண நாளின் போது பைத்தியக்காரன் போல் தன்னைத் தெருவில் விட்டுப் போனது இன்று கூட வலியைக் கொடுக்க… அதன் விளைவாக வந்த கோபத்தை காட்டிக் கொண்டிருந்தான்…
”ரிஷி… நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்… கேட்குதா கேட்கலையா…”
”ஏன் உனக்கு மட்டும் இவ்ளோ நாள் நான் பேசினது கேட்டதா… அது மாதிரிதான்… உனக்கு மட்டும்த்தான்… கோபம் இருக்கனுமா… பிடிவாதம் இருக்கனுமா… “ ரிஷி பட்டென கேட்க… அதில் கோபம் கோபம் மட்டுமே
இந்தப்பக்கமோ… ரிஷியின் கோப வார்த்தைகளைக் கேட்ட கண்மணிக்க்கோ பெருத்த நிம்மதி வந்திருந்தது… அவன் குரலைக் கேட்டு விட்டாள்… அது கோபத்தோடு இருந்தால் என்ன… எப்படி இருந்தால் என்ன… அவளைப் பொறுத்தவரை அவன் நன்றாக இருக்கிறான்… அது… அது மட்டுமே போதும் அவளுக்கு…
இருந்தாலும் இப்போது உடனே போனை வைக்க முடியுமா…. அதனால் பேச ஆரம்பித்தாள் கண்மணி…
“ரிஷி உங்ககிட்ட ஒரு விசயம் பேசனும்… ஃப்ரியா இருந்தீங்கன்னா பேசலாம்” அடுத்து அவன் எங்கு இருக்கிறான்… என்ற தகவலும் அவளுக்குத் தேவைப்பட
“எங்க இருக்கீங்க ரிஷி…” கண்மணி கேட்க
“கண்மணி மேடம்… நீங்க தூக்கத்துல கனவுல இருக்கீங்கன்னு நினைக்கிறேன்… என்கிட்டலாம் பேசிட்டு இருக்கீங்க… ஐ மீன் என் பொண்டாட்டியா பேசிட்டு இருக்கீங்க… கொஞ்சம் உங்களையே கிள்ளிப் பார்த்துட்டு… நனவுலகத்துக்கு வந்துட்டு… அப்புறம் என்கிட்ட பேசுங்களேன்… ” நக்கல் பாதி கோபம் பாதி… என ரிஷி கலந்த கலவையான பாவத்தோடு சொல்ல
“ரிஷி… நான் சொல்ல வர்றதை மட்டும் கேட்கறீங்களா…” கண்மணி பல்லைக் கடித்துப் பேசுவதை இந்த முனையில் ரிஷி உணர்ந்தான்… இருந்தும்…
“ஏண்டி… நீ என்னதான் நெனச்சுட்டு இருக்க மனசுல… நீ பேசுனா மட்டும் நான் பேசனும்… நீ சொல்றதை மட்டும் கேட்கனும்… நீ சிரிச்சா மட்டும் நான் சிரிக்கனும்… நீ போன்னு சொன்னா… நான் அப்டியே போயிறனும்… என்ன நான் என்ன உங்க வீட்டு நாயா…” ரிஷி பட்டென்று கேட்க
“எனக்கு நாய்னா அலர்ஜி… “ கண்மணி அவளையுமறியாமல் ரிஷியின் கண்மணியாக மாறிச் சொல்ல... அதைக் கவனிக்கும் நிலையில் ரிஷிதான் இல்லை
“ஹ்ம்ம்… அடேங்கப்பா… அந்த நாலு கால் நாய் பிடிக்காதுன்னு எனக்கும் தெரியும்… பிடிக்கும் பிடிக்கும்னு கொஞ்சி இந்த ரெண்டு கால் நாயை ஏங்க வச்சுட்டு போய்ட்டியே.. ” ரிஷிக்குமே குரல் இப்போது தடுமாறி இருக்க… இருந்தும் சமாளித்தவன்
”இருக்கிற ஆத்திரத்தில… ஏதாவது சொல்லிறபோறேன்… என்ன சொல்ல வந்தியோ சொல்லிட்டு வைக்கிறியா… என்னைக் கொல்றதுக்கு இன்னும் ஏதாவது மிச்சம் வச்சுருக்கியா என்ன…”
கண்மணி மௌனமாக இருக்க…
”பேசுடி… “ ரிஷியின் குரல் இப்போது தணிந்திருக்க… கண்மணிக்குத்தான் என்ன பேசுவதென்று தெரியாமல் யோசனை பாவனையில் இருந்தாள்… அது ரிஷிக்கு தெரிய வாய்ப்பும் இல்லாமல் போக
“ஹலோ… ஹலோ…” என்று ரிஷி கத்த ஆரம்பித்திருக்க
”பேசுறதுக்கு முன்னாடி ரிஷி போனை எடுத்தா என்ன பேசனும்னு யோசிச்சிட்டு பேசி இருக்கனுமோ… இப்படி சொதப்பிட்டேனே… ரிஷி குரலைக் கேட்டா போதும்னு போன் போட்டுட்டு… இப்போ என்ன பேசுறது… கண்மணி ஞானசூனியம்… உன் புத்தியை எல்லாம் எங்க அடமானம் வச்ச” தன்னையே திட்டிக் கொண்டிருந்த கண்மணிக்கு யமுனா பார்த்திபன் திருமணம் ஞாபகத்துக்கு வந்திருக்க… வேகமாக
“இல்லை… நீங்க நேத்து யமுனா ரிஷப்ஷனுக்கு போகல போல… பாட்டி சொன்னாங்க… ஏன் போகலை”
“இதைக் கேட்கத்தான் போன்.. அதுவும் 3 மணிக்கு போன்… எந்த உரிமைல மேடம் போன் பண்றீங்கன்னு சொல்லிட்டா பதில் சொல்லவும் வசதியா இருக்கும்… மூணு மணிக்கு போன் போட்டுட்டு… எங்க இருக்கேன்னு கேட்கிற… ஏன் கல்யாணத்துக்குப் போகலைனு கேட்கிற… என்ன தைரியத்துல உனக்கு நான் பதில் சொல்வேன்னு எதிர்பார்த்து போன் பேசுற… இதெல்லாம் கேட்கிற... நீ யார் எனக்கு... நான் உனக்கு ஏன் பதில் சொல்லனும்... வைடி போனை…”
“ப்ச்ச்… எனக்கு உங்க பதில் ஏதும் வேண்டாம்… சாரி உங்களைக் கேள்வி கேட்டதுக்கும்… ஆனால் ஒண்ணு மட்டும் சொல்லனும்னு தோணுச்சு…. யமுனா மேரேஜுக்கு நீங்க போங்க… நான் வருவேன்னு நினைத்து நீங்க வராமல் இருக்கீங்களோன்னு தோணுச்சு… அதுனாலதான் போன் பண்ணினேன்…. நான் வரமாட்டேன்… நான் அவங்க மேரேஜுக்கு போறதை விட… நீங்க அவங்க மேரேஜுக்கு போகனும்… உங்க வாழ்த்து அவங்களுக்கு கிடைக்கனும்… நீ என்ன பண்ணினாலும் என் வாழ்க்கை அதுனால கெட்டுப் போகலை… எனக்கான நல்ல வாழ்க்கை அமைஞ்சுருச்சுனு உங்களை நிமிர்ந்த பார்வை யமுனா பார்த்தால் போதும்… அதுவே அவங்களுக்கு பெரிய சந்தோசமா இருக்கும் ரிஷி… உங்களை ஜெயிச்ச கர்வம் அவங்களுக்கு கிடைக்கும் ரிஷி…. இதுதான் நீங்க அவங்க பண்ணின பாவத்துக்கு விமோச்சனம்... அதுக்காகவாச்சும் போங்க” என்ற போதே
“மேடம் சொல்லிட்டீங்கள்ள… இன்னும் வேற ஏதாவது இருக்கா எனக்கான பாவ மன்னிப்பு லிஸ்ட்ல…” ரிஷி இப்போதும் நக்கல் குறையாமல் சொல்ல
”வைக்கிறேன்” என்ற கண்மணியிடம்…
“மேடம் மேடம் இருங்க… நீங்க பேசுனீங்க நான் கேட்டேன்ல… அதே மாதிரி நானும் இப்போ பேசனும்… சும்மா ஒரு பத்து நிமிசம்தான்” ரிஷியின் குரலில் நக்கலோடு கலந்த மென்மை வந்திருக்க…
“எ… எ… என்ன விசயம்…” கண்மணி குரலில் தடுமாற்றம் வந்திருக்க
“என்ன விசயமா… அட என்ன மேடம் நீங்க…. ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் க்கு இடையில வேற என்ன விசயம் இருக்கும்… ஸ்வீட் நத்திங்க்ஸ் தான்… பேசலாமா” எனும் போதே… அடுத்த முனை சத்தமின்றி அமைதியாக மாறி இருக்க… அலைபேசியை பாக்கெட்டில் போட்டவன்… சத்யாவிடம் திரும்பியவனாக
“பார்த்தீங்கள்ள… வச்சுட்டா… திமிர் உடம்பு பூரா திமிரு… அதைக் கடைசியில என்கிட்டயும் காமிச்சுட்டா… “
“இப்போ எதுக்கு கால் பண்ணினா… அவ பைத்தியமா… இல்லை நான் பைத்தியமா… இல்லை எங்களுக்கு இடையில மாட்டின நீங்க எல்லாமான்னு தெரியலை…” சத்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தவனை சத்யா சில நிமிடங்கள் புலம்ப விட்டவன்… பின்
”ஆர் கே… இப்போ இவனை என்ன பண்றது… யமுனாவை பேசச் சொல்வோமா… அவளே இவனைப் பிடிக்கலைன்னு நேரடியா சொல்ல வைப்போமா… அப்போவாது இவன் அவ வழில இருந்து போவானான்னு பார்க்கலாமா…
ரிஷி தன் மனைவியின் நினைவுகளிலிருந்து விடுபட்டவனாக யமுனாவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தவன்….
பின் சத்யா கேட்ட கேள்விக்குப் பதிலாக…
“வேண்டாம்” என்பது போல… தலையை இடவலமாக ஆட்டினான்… சத்யா ’ஏன்’ என்பது போல கேள்வியாகப் பார்க்க…
“எப்டி பேசினான் பார்த்தீங்கள்ள… ஒரு நிமிசம் எனக்கே அவன் காதல் உண்மையா இருக்குமோன்னு தடுமாறினேன் சத்யா”
“அவன் காதல் உண்மைனு தோணலையா ரிஷி…” சத்யா ஒரு மாதிரியான பாவனையில் கேட்க
“இருக்கட்டுமே… உண்மையாக காதலாவே இருக்கட்டுமே… ஆனால் அதுனால யாருக்கு என்ன புண்ணியம்… நன்மை… பாசம்… காதல்… திருமணம் எல்லாமே கால்குலேஷன் தான் சத்யா… ” ரிஷி எதையோ நினைத்து பேசியபடியே…
”அதை விடுங்க… இவன்கிட்ட காசை நீட்டினோம்… நடிச்சான்… அந்த நடிப்பை காதல்னு ஏமாந்த யமுனாவை இன்னும் ஏமாத்த மாட்டான்னு என்ன நிச்சயம்… யமுனா காதல்னு நம்பினது இவனோட உண்மையான காதலைப் பார்த்து இல்லை... இவனோட நடிப்பைத்தான்… சோ எதுவுமே உண்மை இல்லை… அதைவிட அவ போட்டோஸை வச்சு மிரட்டி இருக்கான்… இப்போதும் மிரட்டுறான்… இந்தக் காதல்ல எப்படி உண்மை இருக்கு சத்யா…. மிரட்டி பணிய வைக்கிறது காதலா சத்யா” என்றவன்
“சரி அவன் காதல் உண்மையாவே இருக்கட்டும்… அது முடிஞ்சு போச்சு… அவ்வளவுதான்… யமுனாவை எல்லாம் இவன்கிட்ட பேச விட முடியாது… அவ இயல்பிலேயே குழப்பமான பொண்ணு… பாவம் அந்தப் பொண்ணு… இவன் பேசி…அவளை குற்ற உணர்ச்சியில குழம்ப வச்சுருவான்… வேண்டாம் சத்யா… அவ நல்லா இருக்கனும்… நாம…ப்ச்ச்… நான் பண்ணின குழப்பம்… இல்லைனா அவ இவனைப் பார்த்திருப்பாளா… “
“பார்த்தி அவளை நல்லா வச்சுப்பான்… யமுனா நல்லா இருக்கனும்… அவ்ளோதான் எனக்கு வேண்டும்”
“இவன் இன்னைக்கு கெஞ்சுறான்னு பரிதாபப்படவெல்லாம் முடியாது… இங்க உண்மை பொய் காதல் எதுவுமே கிடையாது… எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலைதான்….” என்றவன்
“இவனை இப்போதைக்கு வெளிய விட வேண்டாம்… நம்ம கஷ்டடியிலேயே இருக்கட்டும்… பார்த்தி- யமுனா ஹனிமூனுக்கு நெக்ஸ்ட் வீக் ஆஸ்திரேலியா போவாங்க… அப்போ சொல்றேன்… அதுக்கப்புறம் வெளிய விடுங்க…”
ரஞ்சித்தை வைத்துக் கொண்டு… அவன் முன்னால் தான் பேசினான் ரிஷி… கேட்டுக் கொண்டிருந்த ரஞ்சித்
“டேய்… யமுனாக்கு மாமா வேலையாடா பார்க்கிற… உன்னை… உன்னைக் கொல்லாமல் விட மாட்டேண்டா…” ரஞ்சித் திமிறியபடி ரிஷியைப் பார்த்துக் கத்த…
“ஐ திங் உன்கிட்ட தான் அந்த வேலை பார்த்தேன் ப்ரோ… இப்போ நான் ஒரு அண்ணனா என் தங்கைக்கான நல்ல வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதைத்தான் பண்றேன்… “ என்றபடி… அங்கிருந்து வெளியேறியவன்… அடுத்த நாள் யமுனா திருமணத்துக்கும் செல்லவில்லை…
ரிஷி வரவேற்புக்கு வரவில்லை என்பதால் பெரிதாகக் கேள்விகள் எழ வில்லை… ஆனால் கண்மணி முந்தைய நாள் திருமண வரவேற்புக்கு வராமல் இருக்க… பார்த்திபனின் அம்மா இராஜம் கண்மணியை நேரில் சென்று அழைக்க… அதுவும் மகன் திருமணத்தை காலையில் வைத்துக் கொண்டு கண்மணியை அதிகாலையில் சென்று பார்த்திருக்க…
அவ்வளவு பெரிய மனுசி… எந்த ஒரு பந்தாவும் இல்லாமல்… அவர் வயதையும் பொருட்படுத்தாமல்… தன்னைத் தேடி வந்து திருமணத்திற்கு அழைத்த அவரின் மனதைக் கஷ்டப்படுத்த இயலாமல் கண்மணியும் திருமணத்துக்குச் சென்றிருந்தாள்…
----
Super
Nice ud jii..
Lovely update pravee
Thanks for the update. Congratulations
Nice
Nice update
Thanks for the ud sis..
Vazhthukkal 100th epi kku. Rishi Kanmani pechu arumai.
Congrats பிரவீனா.செஞ்சுரி அடிச்சீட்டீங்க.but குட்டி எபியா போட்டுட்டீங்க. it's ok.ரிஷி கண்மணி conversation இருந்துச்சு இல்ல அது போதும்.
Congrats for 100th ud sis... Inum 100ud kanmani Rishi vanthalum engaluku avlo pidikum😁😁
100th ud kanmani &rishi Congratulation sis
ரிஷி யமுனாவிற்கு முன்பு செய்தது மன்னிக்க முடியாத குற்றம்…ரிஷியின் புலம்பல் கவலையைக் கொடுத்தாலும் கொஞ்சம் சிரி்க்கவும் வைக்கிறது.
அழகான இயல்பான வார்த்தை நடைகள்…உங்களுக்கு இது piece of Cake பிரவீணா!
வாழ்த்துக்கள்👏👏👏
நூறைத் தொட்டாலும் எங்களை ரிஷியும் கண்மணியும் இன்னமும் ஈர்த்துக் கொண்டிருப்பதற்கு👍
nice siss